பகுப்பு:உ.வே.சா

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

  • தமிழ்த் தாத்தா உ.வே.சா.அவர்களின் நினைவு மஞ்சரி முதற்பாகம்
  • 1. கடல் கடந்து வந்த தமிழ்
  • சீவக சிந்தாமணியை நான் முதன்முதல் 1887-ம் வருஷம் பதிப்பித்தபோது தமிழிலக்கியங்களில் அபிமானமுடையவர்கள் பலருடைய அன்பும் ஆதரவும் எனக்குக் கிடைக்கலாயின. எதிர்பாராத இடங்களிலிருந்து வாழ்த்துரைகள் பல வந்தன. தமிழுலகத்தில் அந்த் அநூல் உண்டாக்கிய இன்பக் கிளர்ச்சிக்கு அடையாலமாகப் பல கடிதங்கள் என்னிடம் உள்ளன. அதனால் எனக்குத் தமிழ்நூலாராய்ச்சியில் தீவிரமான ஊக்கம் உண்டாயிற்று.
  • அயல்நாட்டிலிருந்து 1891-ம் வருஷம் ஏப்ரில் மாதத்தில் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் பாரிஸ் என்ற முத்திரை இருந்தது. அதன் மேல்விலாசம் தமிழிலும் இங்கிலீஷிலும் எழுதப் பட்டிருந்தது. பாரிஸிலிருந்து தமிழெழுத்து வந்தது என்றால் யாருக்குத் தான் இயப்பு உண்டாகாது? அந்தக் கடிதத்தை ஆவலுடன் பிரித்துப் பார்த்தேன். கடிதம் முழுவதும் தமிழாக இருந்தது; எனக்கு மேலும் ஆச்சரியம் உண்டாயிற்று. கடிதத்தின் தலைப்பில் ஒரு புதிய செய்யுள் இருந்தது; அதைப் பார்த்தபோது எனக்கு உண்டான ஆச்சரியம் அளவு கடந்தது. அக்கடிதம் வருமாறு;-
  • SOCIETE HISTORIQUE
    CERCLE St.SIMON Paris la April 3d 1891.
  • மஹாஸ்ரீ சாமிநாதையரென்னும் பெரும்புகழ் பொருந்திய தமிழாசிரியராம் மகா சிறப்பிற் புலவர் தமக்கு நாம் பாரிசு மாநகரத்தில் தமிழாசிரியர் எழுதுபவையாவன;-
  • "சிந்தாமணியாஞ் சிறப்புடைய காப்பியமே
    பொன்றாதின் மாலை பொருந்திவரக் - கண்டேன்
    சிலப்பதிகாரமுதற் சீர் நூல்கள் நான்கு
    மளித்தலா மென்ம ரறைந்து."
  • நீர் 1887-ம் ஆண்டில் அச்சிற் பதிப்பித்த சிந்தாமணியைக் கண்டு மிகவு மதிசயமா யிருந்தோமென்ரும் நீர் செய்த உலகோருக்குப் பெரியவுபகார மறிந்தோமென்றும் இன்னம் பழைய புத்தகங்களச்சிற் பதிப்பித்தற்குரியவாயுண்டென்றும் உமக்கு நாமெழுதவேண்டுமென்றென்னிக்கொண்டு வருகிறோமாதலால் மிகவும் களி கூர்ந்து வாழ்வோ மெப்போதென்றால் சிலப்பதிகாரம், மணிமேகலை குண்டலகேசி வளையாபதி யென்னும் வேறு நாற்பெருங் காப்பியங்கள் பரிசோதித்துக் கொடுத்த வப்போதே சொல்லுவோம்.
  • சிலப்பதிகாரமோ வென்றால் சென்னப்பட்டணத்தில் முன் 1885-ஆம் வருஷத்தில் அதின் முதற்காண்டம் உரையின்றிக் கொடுத்தார்களென்றறிகின்றோமானாலிரண்டாமும் மூன்றாமும் தருகவென்று பல விசேடமா யறவிய மனத்தரெல்லாருங்கேட்போர்.
  • மணிமேகலையோவென்றால் நங்கட்கண் ஒரு கையெழுத்துப் பிரதியுண்டு. ஆனாலந்தப் பிரதியெழுதியவன் பழையவெழுத்துக்கள றியாதபடியினாலே சில கவிகளும் வார்த்தைகளுமெழுதாமல் விடான். ஆதலினாலந்தப் பிரதி படித்தற்குரியதல்லது.
  • சிறப்புப் பொருந்திய நூலவைகளச்சிற் பதிப்பித்தலைன்றி விட்டாற் கையெழுத்துப் பிரதிகளடைக்கலாமோ வென்று கேட்கிறோம். இங்குதான் பாரிசு மாநகரத்தில் printiing type உண்டு. இதுவுமல்லாமல் French பாடைக்குத் திருப்பி யாவர்க்கும் பயன்செய்ய அளிக்கக் கூடுமென்று முமக்கு நாமெழுதுகின்றோம்.
  • எம்முடைய புன்றமிழை உம்முடைய தயையினாலேயே வாசித்துக்கொண்டால் ஒரு காகிதமெமக்கு மறுபடியனுப்பினால் மிகவும் சந்தோடமாயிருப்போம்.
  • சுவாமியுடைய கிருபையெல்லாம் உம்மேல் வருகவென்று உங்கள் colleague and servant ஆயிருக்கிறோம்.
  • Prof. J. Vinson.
  • பிரான்சு தேசத்தில் உள்ள ஒருவரிடம் தமிழன்பு எவ்வளவு ஊறியுள்ளதென்பதை அக்கடிதம் நன்றாக வெளிக்காட்டியது. அவர் சீவக சிந்தாமணியைப் படித்து மிக்க இன்பத்தை அடைந்திருந்தார். அதனோடு ஒருங்கு வைத்து எண்ணப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி என்னும் நான்கும் வெளிவந்தால்தான் பூரணமான திருப்தி உண்டாகுமென்று அக்கடிதத்திலே குறிப்பிட்டிருந்தார்.
  • அதனை எழுதிய ஜூலியன் வின்ஸோனென்பவரை முன்பு நான் அறியேன். அவராக வலிந்து பாராட்டி எழுதினார். அவருடைய கடிஅதத்தில் உள்ள அன்புரைகள் என் உள்ளத்தைக் குளிர்வித்தன. பாரிஸிலும் தமிழ்ச் சுவடிகள் உள்ளன என்பதை அதிற் கண்டேன். உடனே அவருடைய கடிதத்திற்குப் பதில் எழுதினேன். அந்நகரத்தில் என்ன என்ன ஏட்டுச் சுவடிகள் உண்டென்று விசாரித்திருந்தேன். அவர் எவ்வாறு தமிழ் படித்தாரென்பதையும் எழுதும்படி வேண்டினேன்.
  • அவர் எழுதிய மற்றொரு கடிதத்தால் பாரிஸ் நகரத்திலுள்ள பெரிய புத்தகசாலையில் தமிழ்க் கையெழுத்துப் பிரதிகள் ஆயிரம் இருப்பதாகத் தெரிய வந்தது. தமிழானது கடல் கடந்து சென்று அங்கும் அன்பர்களைப் பெற்றிருப்பதை நினைந்து மகிழ்ச்சியுற்றேன்.

ஜூலியன் வின்ஸோனுடைய தந்தையார் காரைக்காலில் ஜட்ஜாக இருந்தாரென்றும் அக்காலத்தில் வின்ஸோன் தமிழ் படித்தாரென்றும் தெரிய வ்ந்தது. வின்ஸோன் பாரிஸ் ஸர்வகலாசாலையில் கீழ்நாட்டுப் பாஷைகளுக்கு ஆசிரியராக இருந்து விளங்கினார்.

நான் சிலப்பதிகாரத்ஹையும் மணிமேகலையையும் அச்சிடும்பொருட்டு ஆராய்ச்சி செய்து வந்தேன். அநூல்களின் உரைச்சுவடிகள் பாரிஸில் கிடைக்குமாவென்ரு கேட்டிருந்தேன். அதற்கு அவர் எழுதிய பதில் வருமாறு:

Paris la May 7th 1891.

எனதன்பிற்குரிய மகாசாஸ்திரிகளே,

நாம் போன மாசமுமக்கெழுதின காகிதம் உங்கிட்ட வந்ததுக்கு முன்னே நீர் எமக்கனுப்பிய காகிதமடைந்தது. அதில் நீர் சிலப்பதிகார மச்சிற் பதிப்பித்தற்குரிய தென்றும், அதைப் பரிசோதித்துக் கொண்டு வருகிறேனென்றும், கண்ட பிரதிகளில் உரை தப்பியிருக்கிறதென்றும், இங்கு பெரிய புத்தகசாலையிற் சிலப்பதிகாரத்த்ஹொரு கையெழுத்துப் பிரதியுண்டாவென்றும் கேட்கிறீர்.

அதற்கு உத்தரங் கொடுக்க வருகிறோம்.

Bibliothique Nationale என்கிற பெரிய புத்தகசாலையிலிருக்கின்ற ஓராயிரந் தமிழ்க் கையெழுத்துப் புத்தகங்களெமக்கு நன்றாய்த் தெரியும். அவைகளின் list or cataloque பண்ணினோமானால் அவற்றுள் சிலப்பதிகாரம் இல்லை.

பழைய புத்தகங்களோ வென்ரால் அந்தச் சாலையிலே மணிமேகலை ஒரு கையெழுத்துப் பிரதியுண்டு. ஆனால் நாம் போன மாசம் எழுதிய காகிதத்திற் சொன்னபடி அந்தப் பிரதியில் பர்பல கவியும் வார்த்தையு மெழுதாமல் விட்டிருக்கின்றது. அந்தப் பிரதியிலும் மூலமாத்திர முரையின்றி வருகின்றது. அது ஓலைப் பிரதியாக்கும். நாம் அதைக் கடுதாசியிலெழுதினோம், நங்கட் சிறுபுத்தகசாலையிலே வைக்க. ஆதலால் நீரதைப் பார்க்க வேண்டுமெல்ல் அந்தக் கடுதாசிப் பிரதியனுப்புவோம். நீரதைக் கண்டு மில்லாத கவிகலும் வார்த்தைகளும் போட்டுத் திருப்பி யனுப்பலாம்.

நாமிங்குத் தமிழைப் படித்தோமல்ல். நாம் பிள்ளையாயிருக்கும்போது எங்கடகப்பனார் காரைக்காலிலே French Judge ஆயிருந்தாரப்போதே தமிழைப் பேசவுமெழுதவும் படித்தோம். இங்கு நாம் செய்த சில கவகளுமக்கு அனுப்புகின்றோம்.

இங்ஙனம்,
அன்புடையவன்
Julien Vinson

உரை குறையதாயினுஞ் சிலப்பதிகார மச்சிற் பதிக்க வேண்டும்.!!

அக்கடிதத்தைக் கண்டவுடன் மணிமேகலயிற் சில பகுதிகள் எழுதியனுப்ப வேண்டுமென்று அவருக்கு எழுதினேன். அவர் மிகுந்த ஊக்கத்தோடு அந்நூலிலுள்ள பதிகத்தை மாத்திரம் எழுதியனுப்பினார். முற்றும் எழுதி அனுப்ப அவர் சித்தமாக இருந்தார். பார்த்தவரையில் அந்தப் பிரதி என் ஆராய்ச்சிக்கு உதவியாக இராதென்று தோற்றியதால் அவரை மேலும் சிரமப் படுத்தவேண்டாமென்று நிறுத்திக்கொண்டேன். அவர் அனுப்பிய பாட்டுக்கள் இலக்கணப் பிழையின்றி இருந்தன.

அப்பால் அவர் எனக்கு எழுதியகடிதங்கள் பல. ஒவ்வொரு கடிதத்திலும் பழைய தமிழ் நூல்கள் வெளிவரவேண்டுமென்பதில் அவருக்கிருந்த ஆவலைப் புலப்படுத்துவார். பிரெஞ்சு பாஷையில் அவைகளை மொழி பெயர்க்க வேண்டுமென்பது அவருடைய விருப்பம்.

சிந்தாமணியின் சுருக்கமொன்றைப் பிரெஞ்சு பாஷையில் எழுதியிருந்தார். அப்புத்தகத்தை அவர் எனக்கு அனுப்பினார். அதை நான் ஆங்கிலப் புத்தகமென்றெண்ணிக் கும்பகோணம் காலேஜில் முதல் ஆசிரியராக இருந்த ஸ்ரீமான் ராவ் பகதூர் ஸாது சேஷையரிடம் காட்டினேன். அவர் அது பிரஞ்சு பாஷையென்றும் பிரின்ஸிபாலுக்குக் காட்டினால் படித்துச் சொல்லுவாரென்றும் கூறினார்.

அப்போது பிரின்ஸிபாலாக இருந்த ஸ்ரீமான் ஜே,பி.பில்டர்பெக் துரையவர்களிடம் அதை உடனே காட்டினேன். அவர் அதில் வின்ஸோன் துரை என்னை விசேஷமாகப் பாராட்டி யுள்ளாரென்று எடுத்துக் கூறி, "உங்களால் இந்தக் காலேஜுக்கு ஒரு கெளரவம்" என்றார். தமிழ்நாட்டிலே பிறந்து தமிழ்க் கல்வியுடையாரோடு பழகித் தமிழாராய்ச்சி செய்து வருவதில் எனக்கு ஆச்சரியம் ஒன்றும் புலப்படவில்லை. அயல் நாட்டில் ஒரு துணையுமின்றித் தமிழ் ஆராய்ச்சி செய்து வரும் ஜூலியன் வின்ஸோனுடைய தமிழன்பு தான் எனக்கு மிகவும் சிறந்ததாகத் தோற்றியது.

என்னுடைய நூற்பதிப்புக்களை மிக்க அன்போடு வின்ஸோன் எதிர்பார்த்துக்கொண்டே இருந்தார். அடிக்கடி என்ன வேலை நடந்து வருகிறதென்று விசாரித்து எழுதுவார். நான் அனுப்பும் புதிய புத்தகங்களை உடனே ஆழ்ந்து படித்து மகிழ்ந்து என் முயற்சியைப் பாராட்டி வரிஅவார். இன்ன இன்ன விஷயங்களை நூதனமாக அறிந்து கொண்டேனென்று அறிவிப்பார்.

சிலப்பதிகாரப் புத்தகம் எப்பொழுது வெளிவருமென்று அடிக்கடி கேட்டு வந்தார். அது வெளி வந்தவுடன் அவருக்கு அனுப்பினேன். அதைக் கண்டு அவர் அடைந்த இன்பத்துக்கு எல்லையில்லை. என்னைப் பாராட்டி அகவலாக ஒரு கடிதம் எழுதினார். அது வருமாறு:-

குருவே துணை

(ஆசிரியப்பா)

இளங்கதிர் ஞாயிறிருடொறு நீக்கியபின்
விளங்கிடைச் சங்கேறி வெண்டிரைக்கடல்சூழ்
மாநில மதனில்வாழ் மறைமிகு சோழப்
பூநிலத் தலர்ந்த புகார்நக ரத்துக்
கோவலன் கண்ணகி தங் கூறரு மன்போடு
பாவல முடையாட்குப் பர்பொருட் பரத்ஹலும்
ஆங்கவன் றுயருமு மணிகிளர் சிலம்பு
வாங்குபு போயது மதுரை யிற்கொலைப்
படலு முதலிய பறை தருஞ் சரிதை
அடல்வினைப்பயனெறி யமைபொருளின்பம்
வேடெனயாந் தெளிவுற வின்மொழிக்காப்பியம்
சிலப்பதிகாரஞ் சிறந்த பெயரால்
உலகெலா மறிய வொளிதரு சென்னைக் கன்
அச்சிட வளர்த்தீ ரடைந்த பெரும்புகழ்
மாசிலா நாம கண் மதி தெரிந் திசைக்கும்
ஒருபே ரகத்திய னுருக்கொண்டு
மருளுடை மண்மிசை வந்து தோன்றினானென.


புறநானூற்றைப் பார்த்து அதன் முகவுரையில் எட்டுத் தொகைகளைப்பற்றி நான் கொடுத்திருந்த செய்திகளைப் படித்து வியப்புற்றார். அதுகாறும் எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய செய்தி ஒருவருக்கும் விளக்கமாகத் தெரியாமல் இருந்தது. அவற்றில் ஒன்றாகிய பரிபாடலைப் பதிப்பிக்கும் செல்வைத் தாமே ஏற்றுக்கொள்வதாக அவர் எழுதினார்.

கடல் கடந்து சென்ற தமிழ்ச் சுவடிகளிலே அரிய நூல்கள் எவையேனும் இருக்குமென்பது என் கருத்து. ஆயிரம் பிரதிகளில் என்ன என்ன நூல்கள் உள்ளனவோவென்ரு சிந்தித்தேன். என் பிரஞ்சு நண்பர் சில நூல்களின் பெயர்களை எழுதி அனுப்பினார். வில்லைப்புராணம் என்று ஒன்று இருப்பதாக ஒருமுறை எழுதினார். நான் அதைப் பற்றிப் பின்னும் விசாரித்தேன். அவர் அது 494 செய்யுட்களை யுடையதென்றும் இன்ன இன்ன சருக்கங்களையுடையதென்றும் எழுதி யிருந்தார். அது மட்டுமா? அந்தப் புத்தகத்தைப் பற்றி நான் கேட்டு எழுதியிருந்த வாக்கியங்களால் எனக்கிருந்த் ஆர்வத்தை அறிந்து தம் கைப்பட அந்நூல் முழுவதையுமே எழுதி அனுப்பிவிட்டார்.


ஏட்டுச் சுவடியைப் பார்த்து எழுதுவது எவ்வளவு சிரமமென்பது எனக்கு நன்றாகத் தெரியு. தமிழ்நாட்டில் அங்ஙனம் எழுதக் கூடியவர்கள் மிகச் சிலரே. தம்ழிநூல்களைச் சிரத்தையோடு படிப்பவர்களே அதிகமாக இல்லாதபோது ஏட்டுச் சுவடியைப் படிப்பதாவது! பார்த்து எழுதுவதாவது!

இந்த நிலையில் பாரிஸிலிருந்து கடல் கடந்து வந்த வில்லைப் புராணத்தை நான் புதையலெடுத்த தனம் போலவே கருதினேன். என் நண்பர் அதை எத்தனை சிரத்தையோடு எழுதியிருந்தார்! அதன் தலைப்பில் சிவலிங்கத்தின் உருவௌம் நந்தியுருவமும் வரைந்திருந்தார். அப்பால் அந்தப் பிரதியைக் கொண்டு வேறொரு பிரதி எழுதச் செய்து வின்ஸோன் துரைக்கே அவரது பிரதியை அனுப்பி விட்டேன்.

வில்லைப் புராணத்தை அதுகாறும் நான் படித்ததில்லை; கேட்டதுமில்லை. அப்புராண ஏடுகளும் எனக்குக் கிடைக்கவில்லை. படித்துப் பார்த்தபோது அது வில்வவனமென்னும் தலத்தின் புராணமாக அது காணப்பட்டது. வில்வமென்பது வில்லமென வழங்கும். வில்வவனமென்பது வில்லவனம் என்று ஆகி அது மருவி வில்லையாயிற்றென்று தேர்ந்தேன். தமிழ்நாட்டில் எவ்வளவோ வில்வவனஸ்தலங்கள் இருக்கின்றன. எந்த வில்வவனத்தைப் பர்றிப் பாராட்டுவது அந்நூலென்று எனக்கு விளங்கவில்லை. மேலும் மேலும் விசாரித்துக்கொண்டே இருந்தேன்.

அப்புராணத்திலுள்ள கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஒன்றிலிருந்து (பாயிரம், 10) அங்கே எழுந்தருளியுள்ள அம்பிகையின் திருநாமம் குயிலம்மையென்று தெரியவந்தது. அப்போது,

"பக்குவமாகக் கவிநூறு செய்து பரிசுபெற
முக்கரணம்மெதிர் பல்காலும் போட்டு முயன்றிடினும்
அக்கட போவெனும் லோபரைப் பாடியலுத்து வந்த
குக்கலையாண்டருள் வில்வ வனத்துக் குயிலம்மையே!"

என்ற தனிப்பாடலும் ஞாபகத்துக்கு வந்தது. அந்தத் தனிப்பாடல் வில்லைப் புராணத்திற்குரிய தலத்தைப் பற்றியதென்று நிச்சயித்தேன். அப்பால் என்னுடைய நண்பர்கள் மூலமாக விசாரித்து வந்தேன். புதுச்சேரிக்கு அருகில் உள்ள வில்வநல்லூர் அம்பிகையின் பெயர் கோகிலாம்பிகை யென்று தெரிய வந்தது. அவ்வூர்ப் புராணம் கிடைக்குமாவென்று தேடச் செய்தேன். நல்லகாலமாகச் சில பிரதிகல் அவ்வூரிலிருந்து கிடைத்தன; அவற்றின் உதவியால், கடல் கடந்து வந்த பிரதியைச் செப்பம் செய்து கொண்டேன்.

அந்தப் புராணம் *வீரராகவரென்னும் பெயருடைய ஒரு புலவரால் இயர்றப் பெற்றது. நல்ல வாக்காக இருந்தது. ஒரு முறை புதுச்சேரிக்குச் சென்றபோது, அதனருகில் வில்வநல்லூர் இருப்பதை அறிந்து அங்கே சென்ரு ஆலய தரிசனம் செய்தேன். அது மிகப் பழைய தலமாக இருக்கவேண்டுமென்று தோற்றியது. அந்தத் தலத்தைப் பற்றி ஏதேனும் தெரியுமாவென்று பலரை விசாரித்தேன். ஒரு முதிய வீரசைவர், "இது மிகப் பழைய தலம். தேவாரத்தில் வரும் வில்வேச்சரமென்னும் வைப்புஸ்தலம் இதுதான்.: என்றார். நான் கேட்டு மிக்க மகிழ்ச்சியுற்றேன்.

வில்வவனத்தைப் பற்றி நான் அறிந்த விஷயங்களை வின்ஸோன் துரைக்குப் பிறகு எழுதினேன். அவர் மகிழ்ச்சியடைந்தார். அவர் தமிழ் இலக்கணமொன்று (Tamil Manual) எழுதினார். அதை எனக்கு அனுப்பினார்.

ஒரு முறை அவர் திருக்குறள், காமத்துப் பாலின் பிரெஞ்சுமொழிபெயர்ப்புப் புத்தகமொன்றை அனுப்பி, "இதனை என் மாணவர் ஒருவர் மொழி பெயர்த்தார். நான் முகவுரை எழுதியிருக்கிறேன்." என்று எழுதினார். தமிழாராய்ச்சியாளராக இருப்பதோடு தமிழ்ப் போதகாசிரியரகவும் அவர் இருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன். தம்முடைய மாணாக்கரொருவர் புதுச்சேரிக்கு வந்திருக்கிறாரென்றும் என்னைப் பார்க்க வருவாரென்றும் எழுதினார். அம்மாணாக்கர் பெயர் பொண்டெனூ (Marquis De Barrique Fontainieu) என்பது.


"உ.வே.சா" வகையில் உள்ள கட்டுரைகள்

இந்த வகையின் கீழ் உள்ள 52 பக்கங்களில் பின்வரும் 52 பக்கங்களும் உள்ளன.

ச தொடரும்.

ப தொடரும்.

"https://marabuwiki.org/index.php?title=பகுப்பு:உ.வே.சா&oldid=2294" இருந்து மீள்விக்கப்பட்டது