எழுதியவர்: உ.வே.சாமிநாதய்யர்
தட்டச்சு செய்து அளித்தவர்: தமிழ்த்தேனீ
”உங்களுடைய நோக்கம் என்ன?” என்று கேட்பது எளிது;
அதற்கு உண்மையாக விடையளிப்பது அரிது. “ உங்களுடைய நோக்கத்தைப் பற்றிச் சில வரிகள் எழுதுங்கள்” என்று கலைமகள் ஆசிரியர் விரும்பினார். ‘ என்னுடைய நோக்கத்தை அறிந்து உண்டாகும் பயன் என்ன? பெரியோர்களுடைய நோக்கத்தை அறிந்து அதன்படி நடக்க முயன்றால் பயன்படும்’ என்று எண்ணினேன்; ஆனாலும் அன்பினால் அவர் கேட்பதற்கு ஒருவகையாக விடையளிக்கத் துணிந்து சிலவற்றை எழுதலானேன்.
என்னுடைய வாழ்வின் நோக்கமெல்லாம் பெரும்பாலும் தமிழ்த்தொடர்புடையதுதான். தமிழ் நூல்களை ஆழ்ந்து பயில வேண்டும். பலமுறை பயின்றால்தான் உண்மை புலப்படும். முதலிலே கடினமாகத் தோற்றினாலும் பலகால் பயின்றால் வரவரத் தெளிவுண்டாகும். ஒரு நூலிலுள்ள சொற்சுவை பொருட்சுவைகளை அனுபவித்துப் படிக்க வேண்டும். அவற்றைப் பிறரும் அறியும் வண்ணம் எளிய நடையில் சொல்லவும் எழுதவும் வேண்டும்.
பழைய நூல்களையும் உரைகளையும் தெளிவாக ஆராய்ந்து உண்மைக் கருத்தை அறியவேண்டும். தெரியாதனவற்றை தெரிந்ததாகக் காட்டலாகாது. அவற்றைப் பாதுகாக்கவேண்டும். புதிய கருத்துக்களை அவற்றில் ஏற்றி விடலாகாது. அவசியமல்லாத கருத்துக்களை மேற்கொண்டு நூலையோ உரையையோ எழுதிப் பிறரை வற்புறுத்தி மகிழச்செய்தல் நலமன்று.
பழைய நூல்களிற் சொற்பொருட் குற்றம் இருப்பதாகத் தோன்றினால் அங்கனம் அமைத்ததற்கு காரணம் என்னவென்று ஆராயவேண்டும். நமக்கு விளங்காததனால் ஒன்றைக் குற்றமென்று துணிந்துவிடுவதால் பயன் இல்லை, நாமே நன்றாக அறிந்துவிட்டோமென்று மதித்து அயலாரை தாழ்வாக நினைத்தலும் பேசுதலும் கூடா. பிறர் எழுதியுள்ளவற்றை அவமதியாமல். குணமான பாகங்களை அறிந்து உபயோகித்துக் கொள்ளவேண்டும்.
கற்றவர்களிடத்தில் முறையாகப் பாடங்கேட்க வேண்டும்.கேட்டவற்றைச் சிந்தித்து முறையாகப் பாடஞ்சொல்ல வேண்டும். அதைவிடப் பெரிய உபகாரம் வேறு இல்லை. எப்பொழுதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
முன்னோர் ஒழுகிவந்த முறையைப் பெரும்பாலும் பின்பற்றுதலே மன ஒருமைக்கு வழியாகும். புதுக்கொள்கைகள்,புதிய மதங்கள்,புதிய தெய்வ வழிபாடு முதலியவற்றை ஆராய்ச்சியின்றி மேற்கொண்டு அவை நம் மன இயல்போடு பொருந்துவதற்கு பலகாலம் செல்லும்; ஜனங்களிடையே ஒற்றுமையும் கடைப்பிடியும் தவறிவிடும். பிறமதங்களையும் தெய்வங்களையும் தூஷித்தல் கூடாது. அயல்மதக் கொளகைகளையும் வேறு பாஷையிலுள்ள அரிய செய்திகளையும் அறிந்து வைத்தல் அறிவை விரிவுறச் செய்யும்.
எந்த சமையத்தாரோடும். எந்த தேசத்தாரோடும் சகோதர பாவத்துடன் ஒற்றுமையாயிருந்து காலங்கழிக்க வேண்டும்.
மேற்கொண்ட காரியத்தைச் சிறிது சிறிதாகப் பலநாள் ஆய்ந்து திருத்தமாக நிறைவேற்றவேண்டும். முயற்சியிடையே யாரேனும் அவமதிக்க நேர்ந்தால் அதைனைப் பொருட்படுத்தாமல் காரியத்தை செய்து வரவேண்டும். நம்முடைய நெஞ்சறிய நற்காரியத்தை மேற்கொண்டு கடமையைச் செய்து வந்தால் இறைவன் அருளால் முடிவில் நன்மையே கிடைக்கும் என்பதில் ஐய்யமில்லை. செய்யும் காரியத்தைப் பயனால் தெரிவிக்க வேண்டுமேயன்றித் தொடங்கியது முதல் இப்படிச் செய்தேன், அப்படிச் செய்தேன் என்று தாமே பாராட்டிப் பேசுதல் உயர்வன்று.
பிறர் செய்த குற்றத்தை மறந்து விடுதலும் பலரிடையே எடுத்துக் கூறாமையும் நன்மை பயக்கும். சிற்றுதவி செய்தாரையும் மறவாமல் என்றும் நன்றி பாராட்டுதலினின்றும் தவறலாகாது. மனிதனை மனிதனாகச் செய்வது நன்றியறிவேயாகும். முதியவர்கள் படியாதவர்களாயினும் அவர்களுடைய பழக்கம் நன்மைகளை உண்டாக்கும், திருவாவடுதுறை யாதீனகர்த்தராக விளங்கிய மேலகரம் ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிகரவர்கள் இதனை அடிக்கடி வற்புறுத்திக் கூறுவார்கள்.
நன்மையும் தீமையும் கடவுள் நம் வினைக்கேற்ப அமைப்பன வென்று எண்ணவேண்டும், ஆதலின் தீமை செய்தாரென்று நெஞ்சிற் பகையுற்று் யாரையும் கடிதல் ஆகாது.
தெய்வம் நன்மையையே உண்டாக்கும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். அது பலவிதமான இடையூறுகளை எளிதில் வெல்லும் வன்மையை அளிக்கும்.
பெரியோர்கள் வாயிலாகவும் அனுபவத்தினாலும் அமைந்த நோக்கங்கள் பலவற்றுள் இவை சில. இவற்றின்படி நடக்கவே நான் முயன்றுகொண்டு வருகிறேன்.
“ இன்பம் விழையான் வினை விழைவான் தன் கேளிர்
துன்பந் துடைத்தூன்றுந் தூண்”
இங்கனம்
வே சாமிநாதைய்யர்