செண்டலங்காரர்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

எழுதியவர்:உ.வே.சாமிநாதய்யர்

தட்டச்சு செய்து அளித்தவர்: திருமதி கீதா சாம்பசிவம்



வில்லிபுத்தூரார் பாரதம் தமிழிலே சுவையுடையவர்களுக்கு இனிமை தரும் காவியங்களில் ஒன்று. சங்க காலத்திலே பாரதம் ஒன்று இருந்தது. ஆனால் உரையாசிரியர்களால் மேற்கோளாகக் காட்டப்பெற்றமையின் சில செய்யுட்கள் மாத்திரம் இப்போது உயிர் தரித்து நிற்கின்றன. அதற்குப் பிறகு தெள்ளாறெறிந்த நந்திவர்ம பல்லவன் காலத்தில் இயற்றப்பெற்ற பாரதம் ஒன்று உண்டு. அது முற்றும் கிடைக்கவில்லை. அதைப்படித்து இன்புறுவார் மிக அரியர். பிற்காலத்தில் வில்லிபுத்தூரார் இயற்றிய பாரதம் தமிழர்களுடைய உள்ளத்தைக் கவர்ந்ததுபோல வேறு எந்தப் பாரதமும் கவரவில்லை. இப்பொழுதும் தமிழ்நாட்டுக் கிராமங்களிலே தமிழறிந்தோர் வில்லிபாரதப் பிரசங்கம் செய்வதைக் காணலாம். தமிழ் நூலை முறையாகப் பாடங்கேட்டவர்கள் வில்லிபாரதத்தைத் தவறாமற் கேட்பது வழக்கம்.


நான் இளமையிலே அந்நூலைப் படித்தகாலத்தில் அதிலுள்ள சந்த அமைப்பைக் கண்டு வியந்தேன். அந்நூலின் நடையிலே ஒரு தனியான கம்பீரம் உள்ளது. இடத்துக்கேற்ற சந்தங்கள் அதில் மிக அழகாக அமைந்திருக்கின்றன. குதிரையின் கதியொலியும், தேரின் கடகடவோசையும் யானையின் முழக்கமும் அந்தச் சந்தங்களிலேயே ஒலிக்கும். வடமொழிச்சொற்களையும் தொடர்களையும் வில்லிபுத்தூரார் தடையின்றி மிகுதியாக எடுத்து ஆளுகின்றார்.


சபாபருவத்திலே சூதுபோர்ச் சருக்கத்தில் தரும புத்திரர் சகுனியுடன் சூதாடித் தோற்ற வரலாறு சொல்லப் படுகிறது. சூதாட்டம் முடிந்த பிறகு துரியோதனன் அரசவைக்குத் திரெளபதியை அழைத்து வரும்வண்ணம் தன் தம்பி துச்சாதனனுக்குக் கட்டளையிடுகிறான். காந்தாரியோடு இருந்த திரெளபதியை அவன் வலியப் பிடித்து இழுத்து வருகின்றான்.

"தண்டால் விடலை தாயுரைப்பத்
தாய்முன்னணுகித் தாமரைக்கைச்
செண்டால் அவள் பைங் குழல்பற்றித்
தீண்டா னாகிச் செல்கின்றான்
வண்டார் குழலு முடன் குலைய
மானங் குலைய மனங்குலையக்
கொண்டா ரிருப்ப ரென்று நெறிக்
கொண்டாளந்தோ கொடியாளே"

என்ற செய்யுளில் அவன் திரெளபதியைப் பற்றி இழுத்துச் செல்லும் செய்தி கூறப்படுகின்றது. "தன்னுடைய தாயாகிய காந்தாரி, "நீ போய் வா" என்று கூற, துச்சாதனன் அன்னை போன்ற திரெளபதியின் முன் சென்று தன் கையிலுள்ள செண்டால் அவளது கூந்தலைப் பற்றிச் செல்லலானான். கொடி போன்ற திரெளபதி, அந்தோ! தன் குழல் குலைய மானங் குலைய மனங்குலையத் தான் செல்லுமிடத்தே தன் கணவர் இருப்பர் என்ற தைரியத்தோடு சென்றாள்" என்பது இச்செய்யுளின் பொருள்.


திரெளபதி அக்காலத்தில் தீண்டாத நிலையில் இருந்தாளென்று தெரிகின்றது. பின்னே ஓரிடத்தில், "தீண்டாத கற்புடைய செழுந்திருவை" என்று அந்நூலாசிரியரே குறிப்பிக்கின்றார். அதனால் தான் துச்சாதனன் அவளைக் கையாற் பற்றாமல் செண்டாற் பற்றிச் சென்றானென்று ஆசிரியர் கூறினார். இவ்விஷயங்களை யான் பலரிடத்தில் என் இளமையிலே கேட்டிருக்கிறேன்.


"கைச்செண்டால் அவள் பைங்குழல் பற்றி" என்ற இடத்தில் குறிக்கப்பெற்ற செண்டு என்பதற்குப் பூச்செண்டு என்றே பொருள் செய்து வந்தனர். துச்சாதனன் கையில் பூச்செண்டு ஏது? திரெளபதி கூந்தலில் அணிந்திருந்த மாலையைப் பிடித்து இழுத்தான் என்று சொல்லலாமா? பாட்டில் தெளிவாகக் கைச்செண்டாலென்று சொல்லப்பட்டிருக்கிறதே. தீண்டாத நிலையில் உள்ள அவள் கூந்தலில் மாலை அணிவதும், கையில் செண்டு வைத்திருப்பதும் இயல்பல்லவே? செண்டென்பதற்குப் பந்தென்று ஒரு பொருள் உண்டு. அதை அமைத்துப் பார்க்கலாமா? பந்துக்கு இங்கே என்ன சம்பந்தம்? என்று இவ்வாறெல்லாம் எனக்கு அடிக்கடி ஐயங்கள் தோன்றிக்கொண்டே இருந்தன.


திருவிளையாடற்புராணத்தில் சோமசுந்தரக்கடவுள் உக்கிரகுமாரருக்கு வேல்., வளை, செண்டு வழங்கியதாக ஒரு திருவிளையாடல் இருக்கிறது. அங்கே கூறப்படும் செண்டு எது? அந்தச் செண்டைக் கொண்டு அவர் மேருவை எறிந்ததாகப் புராணம் கூறுகின்றது. பலர் அதற்குப் பந்தென்றும், பூச்செண்டு போன்ற ஆயுதமென்றும் பொருள் கூறினர். ஐயனார் திருக்கரத்தில் செண்டு இருக்கிறதென்றும், கரிகாற்சோழன் இமயமலையைச் செண்டாலடித்துத் திரித்தானென்றும் சில செய்திகள் நூல்களால் தெரிந்தன. அந்தச் செண்டுகள் யாவை? பந்தா? மலர்ச்செண்டா? செண்டு போன்ற ஆயுதமா? எல்லாம் சந்தேகமாகவே இருந்தன. நான் பலரைக் கேட்டுப் பார்த்தேன். சமயம் போல அவர்கள் விடை பகர்ந்தார்கள்.


சற்றேறக் குறைய நாற்பது வருஷங்களுக்கு முன், வழக்கமாக நான் செய்துவரும் தமிழ் யாத்திரையில் ஒரு முறை பொறையாறு முதலிய இடங்களுக்குப் போக நேர்ந்தது. என்னோடு இருந்து தமிழ்ப்பணிக்கு உதவி புரிந்து வந்த திருமானூர்க் கிருஷ்ணையரென்பவருடன் அம்முறை புறப்பட்டேன். மாயூரத்தைக் கடந்து ஆறுமைல் தூரத்திலுள்ள ஆறுபாதி என்னும் ஊருக்கருகில் சென்று கொண்டிருந்தோம். அங்கே வழியில் கீழ்மேல் அக்கிரஹாரத்துக்குப் பின்பக்கமாக வடபுறமுள்ள குளத்தின் கீழ்க்கரையில் ஒரு பெருமாள் கோயில் இருந்தது. அக்கோயிலின் வாசலில் அதனுடைய தர்மகர்த்தாவும் வேறு சிலரும் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் இருந்த நிலையைப் பார்த்தபோது யாரோ பெரிய உத்தியோகஸ்தர் ஒருவருடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டு நிற்பதாகத் தோற்றியது. எங்களைக்கண்டவுடன் தர்மகர்த்தா என்னை அவ்வுத்தியோகஸ்தராக எண்ணிக்கொண்டாரென்று ஊகித்தேன். அக்காலத்தில் உத்தியோகஸ்தராக இருந்தாலும் கோவிலுக்குப் போகும்போது வைதிகக் கோலத்தோடுதான் போவது வழக்கம். ஆதலின் நான் மிகவும் சாதாரண உடையணிந்து செல்வதைக் கண்டும் அவர் என்னையே உத்தியோகஸ்தராக எண்ணிவிட்டார்:"வாருங்கள், வாருங்கள்" என்று உபசரித்து வரவேற்றார்.


யாரோ ஓர் உத்தியோகஸ்தர் அவ்வாலயத்தைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருந்தாராம். அதற்காகப் பெருமாளுக்கு அலங்காரம் செவ்வையாகச் செய்திருந்தார்கள். தர்மகர்த்தாவும் நல்ல உடைகளை உடுத்து அலங்காரம் செய்துகொண்டு நின்றனர். பிரசாதங்களும் பெருமாளுக்கு நிவேதனம் செய்த வியாஜமாக உத்தியோகஸ்தரின் பொருட்டு சித்தமாக வைத்திருந்தனர். அவர்கள் நெடுநேரம் காத்திருந்தார்கள். உத்தியோகஸ்தர் வரவில்லை, அந்த நிலையிலே என்னைக் கண்டவுடன் அவரென்றோ அவரால் அனுப்பப் பட்டவரென்றோதான் தீர்மானித்திருக்கவேண்டும்.


தர்மகர்த்தா எங்களை உள்ளே அழைத்துச் சென்றார். பெருமாளைத் தரிசனம் செய்து வைத்தார். அவர் எதிர்பார்த்தவர் நான் அல்லவென்று உடனிருந்தவரால் அறிந்து ஏமாந்து போனார். ஆனாலும் அவர் அதைக்காட்டிக் கொள்ளவில்லை. கும்பகோணத்தில் நான் வேலையில் உள்ளவனென்று தெரிந்தவுடன் தம்முடைய பெருமை அங்கே பரவட்டுமென்று எண்ணியிருந்தாலும் இருக்கலாம். எப்படியாயினும் எங்களுக்கு எதிர்பாராதபடி திவ்ய தரிசனமும் வயிறார இனிய பிரசாதங்களும் கிடைத்தன.


தரிசனம் செய்தபோது பெருமாள் திருநாமம் ராஜகோபாலப் பெருமாளென்று அறிந்தேன். அவர் திருக்கரத்தில் பிரம்பைப் போல் ஒன்று காணப்பட்டது. அதன் தலைப்பிலே இரண்டு வளைவுகள் இருந்தன. நான் அதுகாறும் பெருமாள் திருக்கரத்தில் அத்தகைய ஒன்றைக்கண்டதில்லை. ஆதலால் தர்மகர்த்தாவை நோக்கி, "இது புதிதாயிருக்கிறதே;என்ன?" என்று கேட்டேன். "அதுதான் செண்டு" என்றுஅவர் கூறினார்."செண்டா" என்று சொல்லி அப்படியே நின்றுவிட்டேன். "எங்கே, அதை நன்றாகக் காட்டச் சொல்லுங்கள்" என்று வேண்டினேன்.


கோயில் அர்ச்சகர் கற்பூர தீபத்தால் அந்தச் செண்டை நான் நன்றாகப் பார்க்கும்படி காட்டினார். நான் அதைக் கவனித்துப் பார்த்தேன். என் மனக்கண்முன் அப்போது திரெளபதியின் உருவம் வந்து நின்றது. துச்சாதனன் தலைப்பு வளைந்த பிரம்பு போன்ற ஒரு கருவியில் அவள் கூந்தலைப் பற்றி யிழுக்கும் காட்சி வந்தது. அடுத்தபடியாக உக்கிர குமாரர் மேருமலையை அந்தக் கருவியால் எறிந்து திரித்த தோற்றம் தோற்றியது. அவர் மறைந்தார். கரிகாலன் கையில் செண்டாயுதத்தோடு நின்றான். ஐயனாரும் நின்றார். அவர்கள் கைகளில் எல்லாம் தலைப்பு வளைந்த பிரம்பு போன்ற கருவியைக் கண்டேன். சில நிமிஷங்கள் வரையில் இந்த அகக்காட்சிகளால் புறவுலகத்தை மறந்திருந்தேன்.


அந்த அர்ச்சகர் காட்டிய கற்பூர தீபம் பெருமாள் திருக்கரத்திலிருந்த ஆயுதத்தை எனக்குத் தெளிவாகக் காட்டியது. அதனோடு நெடுங்காலமாக என் மனத்திலிருந்த சந்தேக இருளை அகற்றித் துச்சாதனன், உக்கிர குமாரர், கரிகாலன், ஐயனரென்பவர்கள் கையில் உள்ள கருவி இன்னதுதானென்று அறியும்படியும் செய்தது.


"ஐயா, நீங்கள் எனக்குப் பெரிய உபகாரம் செய்தீர்கள், பெருமாளின் தரிசனத்தால் எனக்கு ஒரு பெரிய லாபம் கிடைத்தது.; என் மனம் சந்தோஷம் அடைந்தது. இதுவரையிலும் இந்தச் செண்டை நான் பார்த்ததில்லை. உங்கள் தயையால் இதைப் பார்த்தேன்," என்று தர்மகர்த்தாவை நோக்கிக் கூறினேன்.


"இந்தப் பெருமாளும் மன்னார்குடியில் எழுந்தருளியிருக்கும் பெருமாளும் ஒரே அச்சு. அங்கும் பெருமாளின் திருக்கையில் செண்டு உண்டு. செண்டலங்காரப் பெருமாள் என்றும் அவரது திருநாமம் வழங்கும்" என்று அவர் கூறினார்.


"சந்தோஷம். தங்களுக்கு மிகவும் வந்தனம்." என்று கூறி விடை பெற்றுக் கொண்டேன்.


அன்று முதல் என் சந்தேகம் பறந்து போய்விட்டது. பிறகு ஆராய்ச்சி செய்யச் செய்யத் தமிழ் இலக்கியத்தில் பல செண்டுகள் கிடைத்தன. அவற்றை நான் மிகவும் தெளிவாக அறிந்து கொண்டேன். மன்னார்குடிப் பெருமாளுக்கும் செண்டலங்காரப் பெருமாளென்னும் திருநாமம் உண்டென்று தர்மகர்த்தா கூறியதை இலக்கிய வாயிலாகவும் நான் உறுதி செய்து கொண்டேன். "செண்டலங்காரப் பெருமாள் வண்ணம்" என்ற பிரபந்த மொன்றை நான் படித்தபோது அந்த நினைவு எனக்கு வந்தது. சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கரத்தில் உள்ள செண்டும் ஓர் ஆயுதமென்று தெரிந்து கொண்டேன். பெருமாள் தரிசனத்தின் பயன் கைமேல் கிடைத்தது.

பங்களிப்பாளர்கள்

Ksubashini மற்றும் Dev

"https://marabuwiki.org/index.php?title=செண்டலங்காரர்&oldid=1744" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 18 பெப்ரவரி 2010, 18:48 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,211 முறைகள் அணுகப்பட்டது.