எழுதியவர் : உ. வே. சாமிநாதய்யர்
தட்டச்சு செய்து அளித்தவர் : திருமதி.கீதா சாம்பசிவம்
தமிழ்மகள் களிநடம்புரிந்த காலத்தில் அவளுடைய சிலம்பொலி எழுந்து தமிழரின் உள்ளத்தைக் கவர்ந்தது. இற்றைக்கு 1800 வருஷங்களுக்கு முன் இளங்கோவடிகளென்னும் புலவர் பிரான் இயற்றிய சிலப்பதிகார மென்னும் நூல் தமிழ்மகளின் சிலம்பாகவே கருதத் தகும். இவ்வளவு நாட்களாகியும் அக்காவியம் என்றும் புதிய சுவையோடு விளங்குகின்றது.
தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்குச் சிலப்பதிகாரம் செய்யும் உதவி மிகவும் சிறந்தது. கடைச்சங்க காலத்தை அறிவதற்கு முக்கிய காரணமாக இருப்பது அதுவே. இறந்துபட்ட இசைத் தமிழ், நாடகத் தமிழின் சில பகுதிகளையுடையதாகிப் பழந்தமிழ் வழக்கை வெளிப்படுத்திக்கொண்டு விளங்கும் அந்நூலுக்கு இணையாக வேறொன்றும் இல்லை.
அதை நான் முதன்முதலில் ஏட்டுச் சுவடியிலே படித்த போது பல அற்புதங்கள் நிறைந்த புதிய உலகத்திற்குச் சென்றது போலே தோற்றியது. மூலத்தைக் காட்டிலும் அடியார்க்கு நல்லார் உரையினால் அறிந்துகொள்ளும் செய்திகள் அளவிறந்தன. இசைத் தமிழ், நாடகத் தமிழ் களைப் பற்றி நாம் இக்காலத்தில் அறிந்து கொள்ளும் செய்திகளிற் பல அடியார்க்கு நல்லார் இட்ட பிச்சையென்றே சொல்லவேண்டும். எத்தனை நூல்கள்! எத்தனை கலைகள்! எத்தனை மேற்கோள்கள்!
சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதின அடியார்க்கு நல்லார் பிற்காலத்தவர். அவர் உரைக்கு முன்பு ஓர் உரை அதற்கு உண்டு. அவ்வுரை அரும்பதவுரை எனப்படும். அடியார்க்கு நல்லார் உரையெழுதுவதற்கு அவ்வரும்பதவுரை பெரிதும் துணை செய்தது. அவ்வா றெனின் அரும்பதவுரையின் சிறப்பை நான் எப்படித் தெரிவிக்க முடியும்??
ஆனால் என்னுடைய துரதிர்ஷ்டம்: அரும்பத வுரையுள்ள ஏட்டுப்பிரதி ஒன்றே எனக்குக் கிடைத்தது. அப்பிரதியும் தமிழ் பிற்காலத்தில் போன போக்கையும், அடைந்த அலங்கோலத்தையும் நிதரிசனமாகக் காட்டியது. பிழைகள் மலிந்தும் முன்பின் மாறியும் இடையிடையே விட்டும் அப்பிரதியில் விஷயங்கள் எழுதப் பட்டிருந்தன. அதனை முற்றும் படித்தறிவதே கஷ்டமாக இருந்தது. உரைப்பகுதிகள் வெவ்வேறு இடங்களில் மாறிக் கலந்திருந்தமையின் 'மூலத்தில் எந்தப் பகுதிக்கு எது பொருள்?' என்று தேடிப் பொருத்திப் பார்ப்பதற்குள் சிலப்பதிகாரம் முழுவதற்குமே உரை யெழுதிவிடலாமென்று தோற்றியது. இத்தகைய பிரதியை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது?
சிலப்பதிகாரத்தை ஆராய்ச்சி செய்து வந்தேன். அரும்பதவுரையின் பிரதிகள் வேறு எங்கேனும் கிடைக்குமோவென்று தேடிப் பார்த்தேன்; காத்திருந்தேன்; பயனில்லை. 1891-ம் ஆண்டு சிலப்பதிகாரத்தை அடியார்க்கு நல்லார் உரையோடு பதிப்பிக்கத் தொடங்கினேன். அக்காலத்தில் நான் கும்ப கோணத்தில் இருந்தேன். பதிப்பு வேலை சென்னையில் வெ.நா. ஜூபிலி அச்சுக்கூடத்தில் நடைபெற்று வந்தது.
அரும்பதவுரைப்பிரதி வேறு கிடைத்தால் பரிசோதித்துச் சிலப்பதிகாரப் பதிப்பில் சேர்க்கலாமென்று எண்ணியிருந்தேன். என் எண்ணம் நிறைவேறவில்லை. ஒரு சமயம் சென்னைக்கு வந்திருந்தபோது திருத்தணிகைச் சரவணப் பெருமாளையர் பரம்பரையினராகிய குருசாமி ஐயரென்பவ்ர் வீட்டில் சில ஒற்றையேடுகள் கிடைத்தன. அவற்றுள் சிலவற்றில் அரும்பதவுரையின் பகுதிகள் காணப்பட்டன. அவற்றைக் கொண்டு என் பிரதியில் சில திருத்தங்கள் செய்து கொண்டேன். அந்தத் திருத்தங்களால் பழைய நிலையில் பெரிய மாறுபாடு ஒன்றும் உண்டாகவில்லை.
'இதை வெளியிடாமலே விட்டுவிடலாம். அடியார்க்கு நல்லார் உரை விரிவாக இருக்கும்போது இந்த உரை எதற்கு?' என்று நினைத்தேன்.'அடியார்க்கு நல்லார் உரை இல்லாதவிடங்களில் இந்த உரையின் துணுக்குகள் உபயோகப்படுமே' என்று வேறோர் எண்ணம் உண்டாயிற்று.
'இதில் உள்ள துணுக்குகளின் உதவியைக் கொண்டு நாமே ஒரு குறிப்புரை அப்பகுதிகளுக்கு எழுதி விடலாமே' என்று அடுத்தபடி நினைத்தேன். சில பகுதிகளுக்கு அங்ஙனமே குறிப்புரையெழுதிப் பதிப்பித்து வந்தேன். 'அரும்பதவுரையை விட்டுவிட வேண்டியதுதான்' என்ற முடிவுக்கும் வந்தேன். ஆனால் என் மனம் உறுத்திக்கொண்டே இருந்தது; 'கைக் கெட்டியும் வாய்க்கெட்டவில்லையே! பிரதி கிடைத்தும் நன்றாக இல்லையே!' என்று வருந்தினேன். 'தமிழ்நாட்டின் தவக்குறைவோ, நம்முடைய தவக்குறைவோ, ஏதானாலும் நாம் ஓர் அரிய பொருளை இழந்து விட்டோம் என்பது மட்டும் நிச்சயம்' என்று எண்ணி எண்ணி நைந்தேன்.
என் மனம் இப்படி ஊசலாடிக்கொண்டிருக்கையில் என்னுடைய அரிய நண்பர்களும் தமிழ்ச்சுவையறிந்து இன்புறுபவர்களுமாகிய சிலர், "எப்படியிருந்தால் என்ன? பழைய பொருளை அழியாமல் காப்பாற்ற வேண்டும். இருக்கிறபடியே போட்டுவிடுங்கள்" என்று அறிவுறுத்தினார்கள்.
அவர்கள் கூறியது பொருத்தமாகத் தோற்றியது. 'பழைய மாளிகைகளின் சின்னங்களைப் பழமையை நினைத்துப் பாதுகாப்பதில்லையா?? அழகிற் குறைந்தன வென்று அவற்றை யார் புறக்கணிக்கிறார்கள்? நமக்குத் தெரிந்தவரையில் செப்பஞ்செய்து தனியே பதிப்பித்துச் சிலப்பதிகாரத்தின் பின்னே சேர்த்து விடுவோம்' என்று தீர்மானம் செய்து கொண்டேன்.
1892-ம் ஆண்டு கோடை விடுமுறையில் நான் சென்னைக்கு வந்திருந்தேன். சிலப்பதிகாரப் பதிப்பு முற்றுப் பெறும் நிலையில் இருந்தது. நான் இரவும் பகலும் சோம்பலின்றி உழைத்துவந்தேன். எனக்கு உண்டான துன்பங்கள் பல. அதுகாறும் என்னுடன் இருந்து உதவிகள் புரிந்து வந்த ஒருவர் திடீரென்று பிணக்குற்று ஊர் போய்விட்டார். இத்தனை துன்பங் களுக்கிடையில் சிலப்பதிகாரம் மூலமும் அடியார்க்கு நல்லார் உரையும் பதிப்பிக்கப் பெற்றன. அரும் பதவுரையும் பதிப்பித்தாயிற்று. அதற்கு ஒரு சிறு முகவுரை எழுதிச் சேர்த்துச் சிலப்பதிகாரத்தை வெளியிடவேண்டும். அப்பொழுது என் மனம் பரம சந்தோஷத்தில் மூழ்கி யிருந்தது. முடிந்துவிடப் போகிறது என்ற எண்ணத்தினால் அதுகாறும் தெரியாத சிரமம் எனக்குத் தோற்றியது. நெடுந்தூரம் நடந்து செல்பவனுக்குத் தான் அடைய வேண்டிய இடம் நெருங்கும்போது கால்வலி அதிகமாகத் தோன்றுவது போல எனக்கு உழைப்பினால் உண்டான அயர்வு தோற்றியது.
அன்று வெள்ளிக்கிழமை. மறுநாள் சனிக்கிழமை அரும்பதவுரையின் முகவுரை அச்சாகி முடிய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை அச்சுக்கூடம் இல்லை; நானும் கும்பகோணம் போய்ச் சேரவேண்டியவன்.
அச்சுக்கூடத்திற்கு அப்போது பணம் கொடுக்க வேண்டியிருந்தது. என் கையில் பணம் இல்லை. திருவல்லிக்கேணியில் இருந்த விசுவநாத சாஸ்திரி யாரென்பவர் எனக்கு அத்தகைய சமயங்களில் உதவி செய்வார். சில சமயங்களில் அவரிடம் பணம் கடனாக வாங்கி ஊருக்குப் போனபிறகு திரும்ப அனுப்பி விடுவேன். அவர் பிரபல பாரிஸ்டரான நார்ட்டன் துரையினிடம் குமாஸ்தாவாக இருந்தவர்.
மாலையில் அச்சுநிலையத்திலிருந்து மிகவும் களைத்துப் போய்த் திருவல்லிக் கேணிக்குச் சென்றேன். ஸ்ரீபார்த்தஸாரதிப் பெருமாளைத் தரிசித்துக்கொண்டு விசுவநாத சாஸ்திரியார் வீட்டில் உணவுண்டு அன்றிரவு அங்கேயே தங்கினேன். அவர் நான் படுத்துக்கொள்ள வசதியான இடம் கொடுத்தார். நான் படுக்கப் போகும்போது மணி பத்து இருக்கும். அதற்குமேல் அரும்பதவுரைக்கு முகவுரை எழுதலா மென்று எண்ணிப் பேனாவைக் கையில் எடுத்தேன். கண் எரிந்தது. உடம்பில் என்னை அறியாமலே ஒரு சோர்வு இருந்தது. தலை சுழன்றது. உடம்பெல்லாம் வலியுண்டாயிற்று. 'இந்த நிலையில் நாம் என்ன எழுதப் போகிறோம்? விடியற்காலையில் எழுந்து எழுதிவிடலாம்' என்று எண்ணி ஒரு விளக்கும், நெருப்புப் பெட்டியும் வாங்கி வைத்துக்கொண்டு படுத்தேன். படுத்ததுதான் தாமதம்; தூக்கம் என்னை அமிழ்த்திக் கொண்டது. ஆனந்தமாகத் தூங்கினேன்.
இடையில் விழித்துக்கொண்டேன். 'முகவுரை எழுத வேண்டுமே' என்ற கவலை முன்னால் வந்து நின்றது. உடனே விளக்கையேற்றி மணியைப் பார்த்தேன். அப்பொழுது சரியாக இரண்டு மணி. 'மறுபடியும் படுத்துக்கொண்டு விரைவில் விழித்துக்கொள்ளாமல் இருந்தால் காரியத்துக்குத் தடை ஏற்படும். இப்பொழுதே எழுதி விடுவோம்' என்ற ஒரு யோசனை தோற்றியது. பேனாவைக் கையிலெடுத்தேன். மனம்மட்டும் சோர்விலிருந்து மீளவில்லை. சிரமமும் நீங்கின பாடில்லை. தூக்கமும் விழிப்பும் இல்லாத ஒரு நிலையில் என்ன செய்யமுடியும்? என் மனத்துக்குள் ஒரு போராட்டம் நிகழ்ந்தது. எழுதலாமென்ற எண்ணத்தை அயர்ச்சி தடுத்தது.
மேலே நிமிர்ந்து பார்த்தேன். அங்கே ஒருவருடைய படம் இருந்தது. அவர் ஒரு வெள்ளைக்காரராகக் காணப்பட்டார். அவருடைய முகத்தில் ஒரு சுறுசுறுப்பும் அவர் பார்வையில் ஓர் ஊக்கமும் தோற்றின. என்னுடைய சோர்ந்த நிலைக்கு நேர்மாறாக இருந்தது அவர் நிலை. எனது உள்ளத்துள்ளே அந்தப் படத்தினால் ஓர் உணர்ச்சி உண்டாயிற்று. என் மனத்துக்குள் யாரோ என்னை இகழ்வதுபோல் இருந்தது. 'இவனல்லவா மனுஷன்! என்ன துடியாய் இருக்கிறான்! நம்மைப் போல் அழுது வழிந்து கொண்டிருந்தால் காரியம் எப்படி நடக்கும்?' என்ற எண்ணத்தோடு புதிய ஊக்கமொன்று உண்டாயிற்று. எழுந்தேன். கண்களை நன்றாகக் கழுவிக் கொண்டேன். படுக்கையிலேயே உட்கார்ந்து எழுதத் தொடங்கினேன்.
பக்கத்தில் புத்தகமும் இல்லை; குறிப்புமில்லை. எல்லாம் ஞாபகத்தில் இருந்தன. அரும்பதவுரை பிரதி கிடைத்தவரலாறு, அதன் இயல்பு, அதைப் பின்னே பதிப்பித்ததற்குக் காரணம், அதன் பெருமை முதலிய வற்றை எழுதி முகவுரையை முடித்தேன். மீட்டும் அதைப் படித்துச் செப்பஞ்செய்தேன். அப்பொழுது ஏதோ பெரிய பாரம் நீங்கியது போல் இருந்தது. எனக்கு ஊக்கத்தை உண்டாக்கிய அப்படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்து உளங்களித்தேன்.
விடிந்தது. நான் எழுதிய முகவுரையை அச்சுக் கூடத்துக்கு அனுப்பினேன். இரவில் நான் கண்ட அப்படம் யாருடையது என்று விசுவநாத சாஸ்திரியாரைக் கேட்டேன். "அவரே எங்கள் எஜமானாகிய நார்ட்டன் துரை" என்றார் அவர். "அவரை நான் நேரே அறியாவிட்டாலும் அவருடைய படத்தினால் நான் பெரிய லாபத்தை அடைந்தேன். அந்தப் படந்தான் எனக்குப் புதிய சக்தியை அளித்தது" என்று கூறி இரவில் நிகழ்ந்தவற்றைச் சொன்னேன்.
சனிக்கிழமையன்று சிலப்பதிகாரம் பதிப்பித்து நிறை வேறியது. ஞாயிறன்று அதைப் புத்தகவடிவத்தில் பார்த்து மகிழ்ந்து கும்பகோணம் சென்றேன். 1892-ம் வருஷத்திற்குப் பின் பலருடைய படங்களைப் பார்த்து இன்புற்றிருக்கிறேன். ஆனால் அன்றிரவு எனது தளர்ந்த உள்ளத்திற்கு முறுக்கேற்றிய அப்படத்தையே நான் சிறந்ததாக மதிக்கிறேன்.
சிலப்பதிகாரப் பதிப்பை நான் ஞாபகப்படுத்திக் கொள்ளும்போதெல்லாம் அந்தப்படக் காட்சியும் அதனால் விளைந்த பயனும் என் நினைவுக்கு வருகின்றன.