மணி ஐயர் 3 - தொடர்ச்சி

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

உ.வே.சா. நினைவு மஞ்சரி

முதல் பாகம்

9. மணி ஐயர்

பிரசங்கங்கள்

ஒரு முறை கும்பகோணம் 'போர்ட்டர் டவுன் ஹாலி'ல் அவர் ஓர் உபந்யாசம் செய்தார். திரளான ஜனங்கள் வந்திருந்தனர். அன்று பிரசங்கத்தில் அவர் மடங்களின் நிலையைப் பற்றிச் சில விஷயங்கள் சொன்னார். "மடங்கள் தம்முடைய நிலைமாறி வழக்குகளிலும் வியவகாரங்களிலும் ஈடுபட்டிருக்கின்றன. அவைகளிலே அதிகமான பணத்தைச் செலவிடுகிறார்கள். அவை வக்கீல்களின் பணப்பெட்டிகளாக இருக்கின்றன" என்று அவர் கூறினார். அவர் அப்போது ஒரு மடத்து வக்கீலாக வந்திருந்தார். அவர் இவ்வாறு பேசியபோது கூட்டத்தில் இருந்த வக்கீல்கள் தமக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள். அதைக் கவனித்த மணி ஐயர், " நீங்கள் இன்ன விஷயம் இப்போது பேசுகிறீர்களென்பது எனக்குத் தெரியும். நான் ஒரு மடத்து வக்கீலாக இருந்து கொண்டு மடத்து வக்கீல்களைக் குறை கூறுவது சரியன்றென்று நீங்கள் எண்ணுகிறீர்கள். மடங்களின் பழக்கம் ஏற்பட்டதனால் உண்மைகளை உணர்ந்து குறைகளை நீக்கிக் கொள்ளவேண்டும் என்றெண்ணியேதான் இதைச் சொல்கிறேன். மடங்கள் அறிவை விருத்தி செய்யும் விஷயங்களிலே பணத்தைச் செலவிடுவது தான் நியாயம்." என்று கூறினார்.


வேறொரு முறை அவர் தமிழில் ஒரு பிரசங்கம் செய்தார். பெரிய வக்கீலும் சிறந்த அறிவாளியுமாகிய ஒருவர் தமிழிலே பேசுவதென்றால் அந்தக்காலத்திலேயே பெரிய அற்புதச் செயலாகும். கூட்டத்திற்குப் பலர் வந்திருந்தனர். மணி ஐயர் பேசத் தொடங்கினார். தமிழிலே பேசிப் பழக வேண்டியதன் அவசியத்தை அவர் முதலில் வற்புறுத்தினர். "நம்மவர்கள் இங்கிலீஷ்ப் பாஷையைப் படித்துப் படித்து அந்தப் பாஷையிலேயே நினைப்பதற்கும் பேசுவதற்கும் பழக்கம் செய்து கொண்டுவிட்டார்கள். நம்முடைய தாய்ப் பாஷையிலே விஷயங்களை நினைக்க முடிவதில்லை. தமிழிலே பேசுவதை அகெளரவமாக நினைத்துக்கொள்ளுகிறார்கள். அது மிகவும் தப்பான எண்ணம். நான் கூட இங்கிலீஷ் அப்பியாசம் செய்த தோஷத்தினால் சில சில வாக்கியங்களை இங்கிலீஷில் நினைத்து அப்பால் தமிழிலே பேசுகிறேன். என் கையில் வைத்திருக்கும் குறிப்பு இங்கிலீஷில் தான் இருக்கிறது. ஆனாலும் என்னால் இயன்றவரையில் தமிழிலேயும் பேசுவதை விடுவதில்லை." என்றார்.


அவரது பிரசங்கம் நன்றாக இருந்தது. எளிய தமிழ்நடையில் பேசினார். விஷயங்களை மிகவும் தெளிவாக எடுத்துரைத்தார். இடையிடையே குறள் முதலிய தமிழ் நூல்களிலிருந்து சிலபாடல்களையும் சில பாடல்களின் கருத்தையும் கூறினார். அந்தப் பிரசங்கம் நடந்தபோதுதான் மணி ஐயருக்குத் தமிழ்ப் பாஷையின்பாலுள்ள பேரன்பை ஒருவாறு நான் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு வேறு பல சமயங்களில் அவர் தமிழிலே பிரசங்கம் செய்வதையும் கேட்டிருக்கிறேன். தமிழ் சம்பந்தமான சபைகளிலே தமிழிலேதான் பேசுவார்; அப்போதெல்லாம் அவர் சில தமிழ்ச் செய்யுட்களை இடையே சொல்லுவதில் தவறுவதே இல்லை. அவ்வாறு சொல்வதைத் தாம் ஒரு விரதமாகக் கொண்டிருப்பதாக அவரே ஒரு முறை என்னிடம் சொல்லியிருக்கிறார். இஙிலீஷில் பிரசங்கம் செய்யும்போது பெரும்பாலான சமயங்களில் தமிழ்ச் செய்யுட்களின் கருத்தை அவர் கூறுவதுண்டென்று சொல்லுவார்கள்.


திருவாவடுதுறை மடத்திற்கும் அவருக்கும் பழக்கம் இருந்து வந்தது. மேலகரம் ஶ்ரீ சுப்பிரமணிய தேசிகரும் அவரும் அடிக்கடி சந்தித்துப் பழகினர். பிற்காலத்தும் அந்த மடத்தின் அபிமானத்துக்கும் மதிப்புக்கும் உரியவராக மணி ஐயர் விளங்கினார்.


சென்னை வாசம்

மணி ஐயர் சென்னையில் வாசம் செய்யத் தொடங்கிய கால முதல் அவருடைய திறமை மிகவும் அதிகமாக வெளிப்பட்டது. பலர் அவருடைய பழக்கத்தால் நல்ல பயனை அடைந்தார்கள்.


அவர் சென்னைக்கு வந்த சமயம் ஒரு நாள் நான் ஒரு கனவானைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் பரம்பரைச் செல்வக் குடும்பமொன்றிற் பிறந்தவர்; தமிழபிமானம் மிக்கவர்; என்பால் அன்புடையவர். அக்கனவான் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தார். பிறகு அதை விட்டுவிட்டுச் சென்னைக்கு வந்து வக்கீல் தொழில் நடத்தத் தொடங்கினார். அத்தொழிலில் அவருக்குத் தக்க வருமானம் கிடைக்கவில்லை.


நான் அவரோடு பேசிக் கொண்டிருக்கையில் , "இப்பொழுது வழக்குகள் அதிகமாகத் தங்களிடம் வருகின்றனவா?" என்று கேட்டேன்.


அவர், "என் வருமானம் பழையபடியேதான் இருக்கிறது. ஆனால் இந்தத் தெருவில் கட்சிக்காரர்களின் போக்குவரவு சில காலமாக அதிகமாக இருக்கின்றது." என்றார்.


அவர் கூறியதன் கருத்து இன்னதென்று எனக்கு விளங்கவில்லை; "என்ன சமாசாரம்?" என்று சந்தேகத் தொனியோடு வினாவினேன்.


"சில காலமாக மணி ஐயரவர்கள் மேற்பக்கத்திலுள்ள ஒரு பங்களாவில் இருக்கிறார்கள். அவர்களைத் தேடிக் கொண்டு பல கட்சிக்காரர்கள் தினந்தோறும் வந்து போகிறார்கள்." என்று சொல்லி அவர் சிரித்தார்.


மணி ஐயர் சென்னைக்கு வந்தது முதல் அவருடைய வக்கீல் தொழில் மிகவும் விருத்தியடைந்தது. பலர் அவரிடம் 'ஜூனியர்'களாக இருக்க முயன்றனர். ஶ்ரீமான் வி. கிருஷ்ணசமி ஐயரவர்களும், ஶ்ரீமான் பி. சுந்தரம் ஐயரவர்களும், ஶ்ரீமான் பி.எஸ்.சிவசுவாமி ஐயரவர்களும் அவருடைய பழக்கத்தினால் மிக உயர்ந்த நிலைமைக்கு வந்தார்கள். அவர்களிடத்தில் மணி ஐயருக்கு இருந்த அபிமானம் அளவற்றது.


விடியற்காலையில் மணி ஐயர் எழுந்துவிடுவார். எழுந்து ஸ்நாநம் மந்த்ர ஜபம் முதலியவற்றை முடித்துக்கொள்வார். பிறகு எட்டு மணிக்கு உத்தியோக அறைக்கு வருவார். அவரைப் பார்ப்பதற்கும் அவரிடம் யோசனை கேட்பதற்கும் சட்ட புத்தகங்களை வாங்க்கிக் கொள்வதற்கும் பலர் காத்திருப்பார்கள். அவர்கள் யாவரையும் கண்டு பேசி அவரவர்களுக்கு ஆகவேண்டியவற்றை விரைவாகவும் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லி அனுப்பிவிடுவார்.


காலத்தை வரையறை செய்து கொண்டு அதன்படி நடக்கும் வழக்கத்தை அவரிடம் நான் கண்டு வியந்தேன். கடிகாரம் அவருக்கு நேரத்தைக் காட்டுகிறதா, அவர் வேலைகள் கடிகாரத்தை ஓட்டுகின்றனவா வென்ற சந்தேகங்கூட எனக்குச் சில சமயங்களில் உண்டாகிவிடும். கடிகாரத்தைப் போல நேரம் தவறாமல் செய்ததனால் அவர் பல அரிய காரியங்களைச் செய்ய முடிந்தது. எந்தக் காரியத்தையும் பல நாட்களுக்கு முன்பே ஆராய்ந்து முடிவு பண்ணி வைத்துவிடுவார்.


இராமநாதபுரத்து ஶ்ரீ.பா. இராஜராஜேசுவர சேதுபதியவர்களோடு சென்னையில் ஒருமுறை நான் பேசிக் கொண்டிருந்த போது, தமிழ் நூல் ஆராய்ச்சியைப் பற்றிய பேச்சு வந்தது. செய்ய வேண்டிய காரியங்கள் எவ்வளவோ இருக்கின்றனவென்றேன்.  அப்பொழுது சேதுபதி அவர்கள், " மணி ஐயரவர்களை நினைத்துக்கொள்ளுங்கள். காலவரையறை செய்து கொண்டு வரிசையாக ஒவ்வொன்றாகக் கவனித்து வாருங்கள்." என்று சொன்னார்கள். என்னைப் போலவே அம்மன்னரும், மணி ஐயர் காலவரையறைப்படி வேலை செய்வதைக் கவனித்திருப்பதை அறிந்தபோது எனக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாயிற்று. மணி ஐயரே சிலமுறை காலத்தின் அருமையையும், காலத்துக்கேற்ப வேலைகளை ஒழுங்கு படுத்திக் கொள்ளும் முறையையும் பற்றி என்னிடம் சொல்லியிருக்கின்றார்.


கும்பகோணத்தில் நான் இருந்தபோது பல நண்பர்களின் ஆதரவும் மற்ற அனுகூலங்களும் மிகுதியாக இருந்தன. ஆதலின் சென்னைக்கு மாற்றலைப் பெற்று வந்த சிலவாரங்கள் வரையில் இந்நகர வாழ்க்கை என் மனத்துக்குப் பொருந்தவில்லை.


ஒருநாள் மணி ஐயரைக் காணச் சென்றேன். அவருடன் பேசிக் கொண்டிருந்த காலத்தில் அவர், "இந்த ஊர் எப்படி இருக்கிறது?" என்று என்னைக் கேட்டார்.


"கும்பகோணத்துக்கும் இதர்கு அஜகஜாந்தரமென்று தோற்றுகிறது. இங்கே படித்தவர்களுக்கும் படியாதவர்களுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. மனிதருக்கு மனிதர் விசுவாசம் வைப்பதில்லை. எல்லோரும் அயலார்களாக இருக்கிறார்கள். செலவும் அதிகம்." என்றேன். அக்காலத்தில் எனக்கு அறுபது ரூபாய் சம்பளம்.


"இந்த ஊரை அப்படி நினைக்கக் கூடாது. வரவர எல்லாம் செளகரியமாகப் போய்விடும். உங்களைப் போன்றவர்கள் நன்றாக இந்த நகரத்திலே பிரகாசிக்கலாம். நான் மதுரையை விட்டு வரும்போது முதலில் அப்படித்தான் இருந்தது. மதுரையிலுள்ள நண்பர்களையும் இடங்களையும் பிரிவது மிகவும் கஷ்டமாக இருந்தது. இங்கே வந்து பழகிய பிறகு இங்கும் பல நண்பர்கள் உண்டாகி விட்டார்கள். மதுரையை விட அதிகமான செளக்கியம் ஏற்பட்டது; உத்ஸாகமும் மிகுதியாயிற்று. இப்போது இந்த இடத்தை விட்டுப் பிரிவதென்றால் வருத்தமாக இருக்கும். நீங்களும் இனிமேல் நல்ல நிலைமைக்கு வருவீர்கள். உங்கள் தமிழ்ப்பணி நன்றாக நடைபெறும். இந்த ஊர் முழுவதும் உஙளுக்குப் பழக்கமாகிவிடும், பாருங்கள்" என்று அவர் தைரியம் கூறினார்.


எனக்கு அதனால் ஊக்கமுண்டாயிற்று. உண்மையில் அப்பெரியாருடைய வாக்குப் பலித்தது. கும்பகோணத்தில் செய்த தமிழ்த்தொண்டுகளை விடப் பன்மடங்கு அதிகமாகச் செய்யும் நிலை சென்னையில் எனக்கு வாய்த்தது. இன்றும் சென்னை வாழ்வைப் பற்றியும் இங்கே வந்த பிறகு செய்த வேலைகளைப் பற்றியும் எண்ணும்போதெல்லாம் தீர்க்கதரிசியாகிய மணி ஐயருடைய வார்த்தைகள் என் நினைவுக்கு வருகின்றன.


--Geetha Sambasivam 19:35, 3 நவம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

"https://marabuwiki.org/index.php?title=மணி_ஐயர்_3_-_தொடர்ச்சி&oldid=8638" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 3 நவம்பர் 2011, 19:35 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,896 முறைகள் அணுகப்பட்டது.