அழைத்த காரணம்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

எழுதியவர்:உ.வே.சாமிநாதய்யர்

தட்டச்சு செய்து அளித்தவர்: திருமதி கீதா சாம்பசிவம்



திருவாவடு துறை மடத்தில் 16-ம் பட்டத்தில் ஆதீனகர்த்தராக இருந்த ஸ்ரீ மேலகரம் சுப்பிரமணிய தேசிகரவர்களைப் பற்றிய பல விஷயங்களை நான் இதற்கு முன்பு வெவ்வேறு இடங்களில் எழுதியிருப்பதை அன்பர்கள் அறிந்திருக்கலாம். என்னுடைய தமிழ் ஆசிரியர்களில் அவரும் ஒருவர். திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீமீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்கள் காலத்திற்குப் பின்பு ஸ்ரீசுப்பிரமணிய தேசிகரிடத்திலே சில நூல்களை நான் பாடங்கேட்டும் மடத்திலிருந்த சிலருக்குத் தமிழ்ப்பாடஞ்சொல்லியும் வந்தேன்.


வித்துவான்களுடைய மனத்திற்கு உவந்த செயல்களை அறிந்து செய்வதில் ஸ்ரீசுப்பிரமணிய தேசிகர் மிகத் தேர்ந்தவர். கல்வி, கேள்வி மிக்கவராகிய அவர் வித்துவான்களுடைய புலமையை அளவெடுத்து அறிந்து இன்புறுபவர். அவருடைய ஆதரவினால் இளம்புலவர்கள் ஊக்கங்கொண்டு மேன்மேலும் அறிவாற்றல்களைப் பெற்றுப் பெரும்புலவர் ஆவார்கள்.


தம்மிடம் வந்தவரை உபசரித்து அவரவர்களுக்குத் தெரிந்த வித்தையைப் பற்றி உசாவி அறிந்து அவரவர்களுக்கேற்றவண்ணம் வெகுமதியளித்து அனுப்புவார். ஒருவருக்கேனும் இல்லையென்பது அவர்பால் இல்லை. அவரிடம் பெறும் பரிசுகள் சிறிதளவாக இருப்பினும், தங்கள் தங்களுடைய கல்வியின் ஆழத்தை அறிந்து உவந்து அளிக்கப்படுதலின் அவற்றை மிகப் பெரியனவாகவே வித்துவான்கள் எண்ணிப்பெற்று மகிழ்வார்கள். ஒரு வருஷம் வந்தவர் சுப்பிரமணிய தேசிகருடைய ஆதரவான இன்மொழிகளில் ஈடுபட்டு, மறுவருஷம் வரும்போது புதிதாக ஒன்றைக்கற்றுவருவார். இதனால் அவரிடம் வந்தவர்களுடைய கல்வியறிவு வரவர வளர்ச்சி பெற்று விளங்கும்.


கல்வியறிவுள்ளவர்களைத் தாமே உபசரித்துப் பரிசளிப்பதோடு தம்மைச் சேர்ந்தவர்களும் அவர்களிடம் மதிப்பு வைத்து ஒழுகவேண்டுமென்று அவர் விரும்புவார்; தம்மிடம் பாடங்கேட்கும் மாணாக்கர்களிடம் தாயைப் போன்ற அன்புடையவராக அவர் விளங்கினார்.


இன்றைக்கு 62 வருஷங்களுக்கு முன்பு நிகழ்ந்த செய்தியொன்று இன்னும் என் மனத்தில் மங்காது தங்கியிருக்கின்றது. அப்பொழுது எனக்கு 23 பிராயம். ஒருநாள் மாலையில் மடத்திலுள்ள பன்னீர்க்கட்டு என்னுமிடத்தில் சங்கீத சிங்கமாகிய ஸ்ரீமகாவைத்தியநாதையரவர்களது பாட்டு நடைபெற்றது. அவர் வந்திருப்பதை யறிந்து வெளியூரிலிருந்து பலர் வந்திருந்தார்கள். அத்தகைய சமயங்களில் தேசிகரே அயலூர்களுக்குச் சங்கீதம் நடைபெறும் செய்தியைச் சொல்லியனுப்புவது வழக்கம். "தாம் இன்புறுவது உலகின் புறக் கண்டு காமுறுபவர்" ஆகையால் பலரோடும் சேர்ந்து இசைவிருந்து நுகரவேண்டுமென்பது அவருடைய எண்ணம்.


திருவாலங்காடு, சாத்தனூர் முதலிய ஊர்களிலிருந்து பல வித்துவான்களும் வேறு பல ஊர்களிலிருந்து பல அறிஞர்களும் செல்வர்களும் வந்திருந்தனர். சற்றேறக்குறைய ஆயிரம் ஜனங்கள் வரையில் கூடியிருந்தனர். மடத்தைச் சார்ந்த தம்பிரான்களும் உத்தியோகஸ்தர்களும் வேலையாட்களும் பிற பணியாளர்களும் தங்கள் தங்கள் நிலைமைக்கேற்றபடி அங்கங்கே இருந்தும் நின்றும் சங்கீதத்தைக் கேட்டு மகிழ்ந்திருந்தனர்.


அக்கூட்டத்தினிடையே சுப்பிரமணிய தேசிகர் புன்முறுவல் பூத்த முகத்தோடு அமர்ந்திருந்தார். அவருக்கருகில் பெரிய தம்பிரான்களும் செல்வர்களும் இருந்தனர்.


பாட்டு நடைபெற்றுக்கொண்டிருந்தது. நான் ஏதோ சில காரியங்களை முன்னிட்டு இங்கும் அங்கும் போய்க்கொண்டிருந்தேன். அப்பொழுது, "சாமிநாதையர்!" என்று கம்பீரமான தொனியோடு தேசிகர் என்னை அழைத்தார். அவ்வளவு பெருங்கூட்டத்தினிடையே தேசிகர் என்னை அழைத்தது அவருடைய அன்புடைமையைக் காட்டிலும் எனக்குச் சிறிது அச்சத்தை விளைவித்தது. அவரருகிலே சென்றேன். "இப்படி இரும்!" என்று தமக்கருகிலே உட்காரும்படி குறிப்பித்தனர். அவருக்கருகில் நான் உட்காருதல் சிறிதும் தகாத செயலென்பதை எண்ணி நான் மயங்கினேன். "சும்மா உட்காரும்!" என்று அன்பு கனிந்த குரலில் அவர் மீண்டும் கூறியபோது என்னால் மறுக்கமுடியாமல் உட்கார்ந்தேன். எனக்குப் பின்புறம் பல பெரிய மனிதர்கள் உட்கார்ந்திருப்பதைக் கண்டேன். அவர்களைக் கண்டபோது ஒதுங்கி உட்காரவேண்டுமென்று தோற்றியது. ஒதுங்குவதற்கோ இடமில்லை. என்னைச் சுற்றிலும் மதிப்பு வாய்ந்த பலர் இருந்தனர். வீணாக ஒதுங்குவதற்கு முயன்று உடம்பை அசைத்ததைத் தவிர வேறு ஒன்றும் என்னாற் செய்யமுடியவில்லை. அங்கே உட்காருவதற்கு என் மனம் இடங்கொடுக்கவில்லை. பயந்து கொண்டே இருந்தேன். சங்கீதத்திற்கூட என்மனம் பூரணமாகச் செல்லவில்லை. ஒன்றும் தெரியாதவனைத் திடீரென்று சிங்காதனத்தில் தூக்கி வைத்தால் அவன் யாதும் விளங்காமல் விழிப்பது போன்ற நிலையில் நான் இருந்தேன்.


ஒருவாறு பாட்டு முடிவு பெற்றது. மற்ற நாட்களிலெல்லாம் மகாவைத்தியநாதையரவர்களுடைய இன்னிசை அமுதத்தை ஆவலோடு பருகிப் பருகி, "இன்னும் நீண்ட நேரம் பாடிக்கொண்டே இருக்கமாட்டாரா!" என்று எண்ணும் யான் அன்றைத் தினத்திலோ "இவர் விரைவிலே நிறுத்தமாட்டாரா?" என்று எண்ணினேன். ஆதலால் அவர் பாடத் தொடங்கிய சமயத்தை விட நிறுத்திய சமயத்தில் எனக்கு மிக்க இன்பம் உண்டாயிற்று. நான் ஒரு சங்கடமான நிலையினின்றும் விடுதலை பெற்றேன்.


வந்த கனவான்கள் தாம்பூலம் பெற்றுக்கொண்டு தங்கள் தங்கள் இருப்பிடம் சென்றார்கள். மடத்துப்பணியாளர்கள் தங்கள் தங்கள் வேலையைக் கவனிக்கச் சென்றனர்.


அன்று இரவில் ஆகாரம் செய்தபிறகு நான் வழக்கம்போலச் சண்பகக் குற்றாலக் கவிராயரென்னும் அன்பரோடு ஸ்ரீசுப்பிரமணிய தேசிகரிடம் பாடங்கேட்கச் சென்றேன். அப்பொழுது நாங்கள் திருக்குறள் பரிமேலழகருரை பாடங்கேட்டு வந்தோம்.


நாங்கள் தேசிகரை அணுகினோம். அவர் என்னைக் கண்டவுடன் புன்னகையரும்பி, "என்ன??? சாமிநாதையர்! சாயங்காலம் பாட்டுக் கச்சேரி நடக்கும்போது உம்மை அழைத்தோமே; அதற்குக் காரணம் தெரியுமா?" என்று கேட்டார்.


நான்: எனக்கு ஒன்றும் தெரியவில்லை. என்னைக் கூப்பிட்டவுடன் நான் திகைத்துப் போனேன். அவ்விடத்து உத்தரவுக்கு அஞ்சி நான் இருந்தேன். அவ்விடத்துக்கு அருகில் துணிச்சலாகவும், அவ்வளவு பெரிய மனுஷர்களுக்கு முன்னால் மரியாதையின்றியும் மற்ற ஸமயங்களிலே உட்கார நான் துணிய மாட்டேன்."


தேசிகர்: நீர் இந்த மடத்தில் இருக்கிறீர். உம்மைப் பற்றி நமக்கு நன்றாகத் தெரியும். உமக்கு வேண்டியதை அவ்வப்போது அளித்து வருவோம். ஆனால் மடத்தில் ஒவ்வொரு காரியத்திற்கும் தனித்தனியே ஒவ்வோர் அதிகாரி இருக்கிறார். அவர்களிடம் உமக்கு ஏதாவது வேண்டுமென்றால் அவர்களுக்கும் உம்முடைய அருமை தெரிந்தால்தானே அதைப்பெறலாம். ஒவ்வொருவருக்கும் தனித்தனியே சொல்வதென்பது இயலாத காரியம்; அநுசிதமாகவும் இருக்கும். நமக்குப் பிரியமானவர் நீர் என்பதை மடத்திலுள்ள யாவரும் அறிந்து கொள்வதற்காகத் தான் நாம் அப்படி அழைத்து அருகிலே இருக்கச் செய்தோம். இப்பொழுது மடத்திலுள்ள தம்பிரான்கள், காரியஸ்தர்கள். கணக்குப்பிள்ளைகள், சேவகர்கள், வண்டிக்காரர்கள் எல்லோருக்கும் உம்மைப் பற்றித் தெரிந்திருக்கும். இன்மேல் யாதொரு தடையும் இல்லாமல் அவர்களுடைய உதவியை நீர் பெறலாம். இதுதான் நாம் உம்மை அழைத்ததன் காரணம். நீர் வேறுவிதமாக நினைக்க்கூடுமென்றெண்ணி இதை இப்போது தெரிவித்தோம்.


அதைக் கேட்ட எனக்கு வியப்பும் நன்றியறிவும் மாறி மாறி உண்டாயின. "அவ்விடத்து அன்பு எனக்குப் பலவகையிலும் தெரிந்திருப்பினும் என்னை அழைத்தது என் நன்மையைக் கருதியென்பது அப்போது தெரியவில்லை; இப்பொழுதுதான் தெளிவாகத் தெரிந்தது" என்றேன். இயல்பாகவே மடத்திலிருந்த யாவரும் என்னிடம் அன்பு பாராட்டினார்களாயினும், அன்று முதல் பண்டார ஸந்நிதியவர்களுக்கு மிக வேண்டியவர் என்று எண்ணிப்பின்னும் அதிகமாக என்னை ஆதரிக்கத் தொடங்கினர்.

பங்களிப்பாளர்கள்

Ksubashini

"https://marabuwiki.org/index.php?title=அழைத்த_காரணம்&oldid=1254" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 4 பெப்ரவரி 2010, 17:09 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,834 முறைகள் அணுகப்பட்டது.