மணி ஐயர் தொடர்ச்சி 4 உ.வே.சா.

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 உ.வே.சா. நினைவு மஞ்சரி

முதல் பாகம்

9. மணி ஐயர்



பரோபகாரமும் இரக்கமும்:


சென்னைக்கு வந்த பிறகு அடிக்கடி அப்பெரியவரைச் சந்தித்துப் பழகும் பாக்கியம் எனக்கு வாய்த்தது. நான் செல்லும் காலங்களிலெல்லாம் நான் என்ன புத்தகம் ஆராய்ந்து கொண்டிருக்கிறேனென்று விசாரிப்பார். அவ்வப்போது பொருளுதவியும் செய்வார். “என் நண்பர்களிடம் சொல்லி உங்களுடைய வேலைக்கு உபகாரம் செய்யச் சொல்லுகிறேன். எவ்வளவு பணம் வேண்டும்? சொல்லுங்கள்.” என்று வெகு வேகமாகக் கடிதம் எழுதத் தொடங்குவார். நான் இடைமறித்து, “பணத்தை முதலில் வாங்கி வைத்துக்கொண்டால் வேலை ஓடாது. செய்ய வேண்டியதைச் சித்தப்படுத்திக்கொண்டு அப்பால் பணம் பெறுவதுதான் நேர்மையானது.” என்று சொல்லுவேன். அவருடைய கட்டளைக்குப் பணிந்து எனக்கு உதவி செய்ய முன்வருபவர்களுக்கு என்பால் நேரே அன்பு இருக்குமென்று நான் எங்ஙனம் கருதுவேன்? அவர்களிடமிருந்து பெறும் பணத்தை விட அன்புடைய மணி ஐயர் வார்த்தைகளே அதிக மதிப்புள்ளனவாகத் தோன்றின.


நான் புதிய நூலைப் பதிப்பிக்கத் தொடங்கும்போதெல்லாம் மணி ஐயர் உதவி புரிந்து வந்தார். “பணம் இல்லாமல் என்ன காரியம் நடக்கும்? நீங்கள் பணம் வேண்டாமென்று சொல்வது தப்பு. பணக்காரர்கள் உங்களுக்குக் கொடுப்பதனால் அவர்களுக்கும் கியாதி; உங்களுக்கும் அனுகூலம்.” என்று பலமுறை அவர் வற்புறுத்தியதுண்டு. அவர் தம்முடைய பெருந்தன்மையினால் அவ்வாறு கூறினாராயினும், அவருடைய தூண்டுதலால் பிறர் செய்யும் உதவிகளை முயற்சி செய்து பெறுவதற்கு என் மனம் துணியவே இல்லை.


மணி ஐயர் ஏழைகளிடத்தில் அதிக இரக்கமுடையவர். தம்மிடம் வந்து யாசிப்பவர்களுக்கு இல்லை யென்னாமல் கொடுத்து வந்தார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பல பேர்கள் அவரிடம் வந்து பணம் பெற்றுப் போவார்கள். அவரிடம் சம்பளம் பெற்றுப் படித்த மாணாக்கர் பலர்; உணவுக்காகப் பணம் பெற்றுப் படித்து முன்னுக்கு வந்தோர் பலர். சிறு குடும்பங்களில் ஆதாரமாக இருந்த ஒருவர் இறந்து போனால் குடும்பத்தாரனைவரும் ஜீவனோபாயத்திற்கு வழியில்லாமல் தவிப்பார்கள். அத்தகையவர்களிற் பலர் மணி ஐயரிடம் வந்து முறையிடுவார்கள். அவ்வுபகாரி அவர்களுக்குத் தக்க தொகையளித்து உதவி புரிவார். அவர்களுக்கு நூற்றுக்கணக்காகக் கொடுத்ததும் உண்டு. இவ்வளவு செய்தும் அச்செயல்கள் பிரசித்தப்படலாகாதென்று அடக்கி வைத்திருப்பது அவர் இயல்பு.


அவர் சென்னையில் ஜட்ஜாக வந்த காலத்தில் ஹைகோர்ட்டில் பங்கா இழுக்கும் கிழவன் ஒருவன் இருந்தான். அவன் பெரிய குடும்பி. நல்ல உடைகளை அணிந்து கொள்ள அவனுக்கு வருவாய் போதவில்லை. சில சமயங்களில் அழுக்கான உடை அணிந்து வருவான். அதுகண்ட மற்றொரு ஜட்ஜ் அவன் கிழவனாகிவிட்டமையால் வேலைக்கு உதவமாட்டானென்று கூறி வேலையினின்றும் அவனை நீக்கிவிடும்படி ரிஜிஸ்ட்ராருக்கு எழுதிவிட்டார். அதனை அறிந்த அக்கிழவன் அடைந்த வருத்தத்துக்கு அளவில்லை. மணி ஐயரிடம் வந்து அவன் முறையிட்டான். அவர் உடனே அவனைத் தமக்குப் பங்கா இழுக்கும்படி ஏற்பாடு செய்துவிட்டார்; “இவன் கிழவன், வேலை செய்ய இயலாதவனென்றால், நான் இவனை விடப் பிராயத்தில் முதிர்ந்தவன். ஏழு ரூபாய் சம்பளம் வாங்கும் இவன் வேலை செய்ய உபயோகமற்றவனென்றால், ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் நான் இவனைக் காட்டிலும் உபயோகம் இல்லாதவனே.” என்று கூறினார்.


கிழவன் மணி ஐயரால் தன் வேலை நிலைத்ததை அறிந்து கொண்டு அவரை வாயார வாழ்த்தினான்.


வேலைத்திறமை:


கவர்ன்மென்டு வக்கீலாகவும், ஜட்ஜாகவும் வேலை பார்த்த காலங்களில் அவருடைய அறிவின் திறமை மிகவும் பிரகாசித்தது. ஶ்ரீ முத்துசாமி ஐயருக்குப் பிறகு ஹைகோர்ட்டு ஜட்ஜ் பதவியை வகித்துப் பெருமை யடைவதென்றால் அதற்கேற்ற அறிவும் ஆற்றலும் இருக்க வேண்டுமல்லவா? மணி ஐயர் அவ்வப்போது அளித்து வந்த தீர்ப்புக்களை உலகமுழுவதும் பாராட்டியது. சட்ட நிபுணர்களுக்கு அவருடைய தீர்ப்புக்கள் மிகவும் பயன்பட்டன.


எந்தக் காரியத்தையும் விரைவாகவும் திருத்தமாகவும் செய்து முடிக்கும் திறமையையுடையவர் அவர். அவர் தாம் எழுதும் தீர்ப்புக்களை ஹைகோர்ட்டில் ரிஜிஸ்ட்ராராக இருந்த ஓர் ஐரோப்பியரிடம் காட்டுவாராம். “ஆனைக்கும் அடி சறுக்கும்.” ஆதலின் தாம் எழுதுவதில் குற்றம் இருக்கக் கூடுமென்றெண்ணி அங்ஙனம் செய்து வந்தார். அதனை அவர் ஒரு குறைவாகக் கருதவில்லை. செய்வதைத் திருந்தச் செய்ய வேண்டுமென்பதே அவரது நோக்கம்.


இங்ஙனம் அவர் தம் தீர்ப்புக்களை ரிஜிஸ்ட்ராரைக் கொண்டு பார்க்கச் செய்வதைச் சிலர் விரும்பவில்லை; “இவ்வளவு சிறந்த அறிவாளியாகிய இவர் எழுதுவதில் என்ன பிழை இருக்கப் போகிறது? அவரிடம் காட்டுவது கெளரவக் குறைவன்றோ?” என்று முணுமுணுத்தார்கள். அதனை உணர்ந்த மணி ஐயர் ஒரு சமயம் பல நண்பர்கள் கூடியிருந்த கூட்டத்தில் இந்த விஷயத்தை எடுத்துக் கூறி, “நாம் வருந்தி உழைத்துக் கற்றுக்கொண்ட இந்தப் பாஷையில் நாம் தவறு செய்தல் இயல்பே. இதையே தம் தாய்ப் பாஷையாகக் கொண்டவருக்கு ஏதேனும் குறை தோற்றலாம். அந்தக் குறையை நாம் நிவர்த்தி செய்து கொள்ளுவதனால் நமக்கு அகெளரவம் உண்டாகாது. குறையைத் தெரிந்து கொள்ளாமலே விட்டுவிட்டால், குறை குறையாகவே நிலை பெற்று என்றும் மாறாத இழிவை உண்டாக்கும். ஆகையால்தான் நான் இந்த முறையை மேற்கொண்டேன்.” என்று தம் கொள்கையை விளக்கினார்.


பிறருக்குக் கிடைத்தற்கரிய ஹைகோர்ட்டு முதல் ஜட்ஜ் பதவி அவருக்குக் கிடைத்தது. அந்தப் பதவியில் அவர் மிக்க கெளரவம் பெற்றார். திடீரென்று ஒருநாள், அவர் தம் வேலையை ராஜீநாமாச் செய்துவிட்டாரென்ற செய்தியை யாவரும் அறிந்தனர். 1907-ஆம் ௵ நவம்பர் மாதம் 13-ஆம் தேதி முதல் அவர் உத்தியோகத்திலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டார். தேக அசெளக்கியம் காரணமாக அவர் ராஜீநாமாச் செய்தாரென்று பத்திரிகைகள் கூறின. அவர் பின்னும் சில மாதங்கள் வேலை பார்த்திருந்தால் வருஷத்திற்கு 1200 பவுன் பென்ஷன் கிடைத்திருக்கும்; முன்னதாக விலகிவிட்டமையால் 880 பவுன்களே கிடைத்தன.


முதல்நாள் இரவு பத்திரிகையில் அவரது உத்தியோகத்துறவைப் பற்றிய செய்தியை நான் பார்த்தேன். மறுநாட்காலையில் அவரது ஜாகைக்குப் போனேன். அப்பொழுது அவர் அனுஷ்டானம் செய்துவிட்டு வழக்கம்போல் வந்து உட்கார்ந்தார்.


“நேற்று ராத்திரிதான் பத்திரிகையில் பார்த்தேன்.” என்று ஆரம்பித்தேன்.


“அதுவா? ஆமாம். நான் இப்போது பந்தத்திலிருந்து விடுபட்டு விட்டேன். இவ்வளவு நாள் பராதீனனாக இருந்தேன். இப்போது என் இஷ்டப்படி நல்ல காரியங்களைச் செய்து கொண்டும் இஷ்டர்களோடு பேசிக்கொண்டும் சுகமாக இருக்கலாம்.”


“இன்னும் சில மாதங்கள் இருந்தால் அதிகப் பென்ஷன் கிடைக்குமென்று சொல்லுகிறார்களே?”


“அவ்வளவு மாதங்கள் நிர்ப்பந்தத்திற்கு அடங்கியிராமல் விடுதலை பெற்றதுதான் எனக்கு ஸந்தோஷம். இனிமேல் ஈசுவரத் தியானம் செய்து கொண்டு இருக்கலாம். பணத்திற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? “பரோபகார: புண்யாய பாபாய பரபீடனம்.” பரோபகாரம் செய்வதற்கு முடியாமல் நிர்ப்பந்தங்களில் அகப்பட்டுக்கொண்டு இருப்பதைவிடச் சீக்கிரமே விலகிவிடுவது நல்லதல்லவா? இனிமேல் நான் சர்வ சுதந்திரன். பட்டினத்துப் பிள்ளையார் கதையை நீங்கள் கேட்டிருப்பீர்களே. அவர் வர்த்தகராக இருக்கும் வரையில் ராஜாவுக்கு அடங்கி யிருந்தார். துறவியானவுடன் ராஜா சொல்லியனுப்பினார். அவர் போகவில்லை. ராஜாவே அவரைத் தேடிக்கொண்டு சென்றார். பட்டினத்துப் பிள்ளையார் கடற்கரையில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தபடியே இருந்தார். “இப்போது என்ன நன்மையை அடைந்து விட்டீர்கள்?” என்று ராஜா கேட்டார். “நீர் நிற்க நான் உட்கார்ந்தபடியே இருப்பது முதல் நன்மை.” என்று அவர் சொன்னார். அவருடைய சரித்திரம் எவ்வளவு அழகாக இருக்கிறது!” என்று அவர் கூறினார்; கூறும்போது அவருடைய கண்களில் ஒரு பிரகாசம் உண்டாயிற்று. பல நாட்களாகக் கட்டுக்குள் அகப்பட்டு வெளிவரவேண்டும், வெளிவரவேண்டும் என்று எப்பொழுதும் எண்ணி, அதற்குரிய சமயம் வந்தவுடன் விடுதலை பெற்றால் ஒருவருக்கு எத்தனை சந்தோஷம் இருக்குமோ அத்தனை சந்தோஷம் அவரிடம் உண்டாகி யிருந்தது. துறவு மார்க்கத்தில் அவர் மனம் பதிந்திருந்ததென்பதை அவர் கூறிய வரலாறு புலப்படுத்தியது. அவர் அன்று “பரோபகார: புண்யாய பாபாய பரபீடனம்” என்று கூறிய அரிய வாக்கியம் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.


நான் பேசிக்கொண்டிருக்கும்போது அவருடைய பேரர் சங்கரையர் அங்கே வந்து நின்றார். அவரைக் கண்டவுடன், “நீ இன்ன விஷயமாக வந்தாயென்று தெரிகிறது. நான் ராஜீநாமாக் கொடுத்துவிட்டதைப் பற்றிக் கவலையுற்று விசாரிக்க வந்திருக்கிறாய். நான் இனிமேல் அடிக்கடி உன்னோடு பேசலாம். எல்லா விஷயங்களையும் நானே கவனிக்கலாம். பத்து மணியாய் விட்டதே, கோர்ட்டுக்குப் போகவேண்டுமே என்ற நிர்ப்பந்தமில்லை. நீயும் இங்கே எப்போதும் வரலாம்; எப்போதும் போகலாம்.” என்று சொல்லியனுப்பினார்.


பிறகு வெளியே புறப்பட்டார். அங்கே கோர்ட்டுச் சேவகன் நின்று கொண்டிருந்தான்; “இனிமேல் நீ இங்கே வந்து அலைய வேண்டாம். நான் வேலையிலிருந்து விலகி விட்டேன். ஆனாலும் அடிக்கடி வந்து பார். தீபாவளி, பொங்கலுக்கு இனாம் வாங்கிக் கொண்டு போ.” என்று அவனிடம் கூறினார்.


இப்படியே தம் வேலைக்காரர்களிடம் சொல்லி அனுப்பியதோடு அவரவர்களுக்குப் பொருளுதவியும் செய்தார். அக்காலமுதல் அவர் பரோபகார முயற்சிகளில் அதிகமாக ஈடுபடலானார்.


ஒரு முறை நான் மதுரைக்குப் போயிருந்தேன். அக்காலத்தில் மணி ஐயர் அங்கே வந்திருப்பதை அறிந்து அவரைப் பார்க்கச் சென்றேன், அவருடைய தமையனார் குமாரரும் பிரபல வக்கீலுமாகிய ஶ்ரீராமசுப்பையருடைய பங்களாவில் தங்கியிருந்தார். நான் மாலையில் சென்று பல விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அன்றிரவு அங்கே தம்முடன் போஜனம் செய்ய வேண்டுமென்று மணி ஐயர் சொன்னார்.


அன்று நண்பர்களும் சுற்றத்தார்களும் சேர்ந்த ஒரு சிறு கூட்டத்திற்கு விருந்து அளிக்கப் பெற்றது. வீட்டுத் தோட்டத்தில் அது நடைபெற்றது. நல்ல நிலா எறித்தது. மரங்களுக்குக் கீழ் இலை போட்டிருந்தார்கள். மணி ஐயர் ஓர் இலையில் உட்கார்ந்து கொண்டனர். அவருக்கு அப்பால் ஓர் இலை விட்டு அடுத்த இலையில் அவருடைய மூத்த குமாரராகிய சுப்புசாமி ஐயர் உட்கார்ந்தார். மணி ஐயர் என்னை அழைத்து மத்தியிலுள்ள இலையில் உட்காரச் சொன்னார். நான், “அப்படி உட்கார என் மனம் அஞ்சுகிறது. குமாரருக்கும் பிதாவுக்கும் மத்தியில் உட்காரக் கூடாதென்பார்கள்.” என்று மெல்லச் சொன்னேன். ; “நீங்களும் அப்படித்தானே? அவனுடைய ஸ்தானம் உங்களுக்கும் உண்டு; உட்காருங்கள்.” என்று பளிச் சென்று அவர் கூறினார். அந்த வார்த்தை என் காதில் விழுந்த போது, உடலில் மயிர்க்கூச்செறிந்தது. எனக்கு ஏதோ என்றும் கிடையாத ஒரு பாக்கியம் கிடைத்துவிட்டது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று.



தொடரும்.


--Geetha Sambasivam 23:10, 10 ஜனவரி 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 11 ஜனவரி 2012, 19:42 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,157 முறைகள் அணுகப்பட்டது.