எழுதியவர்: டாக்டர் உ.வே.சாமிநாதய்யர்
தட்டச்சு செய்து அளித்தவர்: திரு வடிவேலு கன்னியப்பன்
_______________________________________________________________________________________________________
தமிழ்நாட்டிலுள்ள சைவ மடங்கள் பல.அவை பண்டைக் காலந் தொட்டே மேன்மேலும் விருத்தியாகிக் கொண்டு வந்தன. பல இடங்களில் நிலங்களையும், கிளை மடங் களையும் பெற்ற ஸ்தாபனங்கள் பல உண்டு. அவ்வக் காலத்தே மடங்களில் தலைமை வகித்தவர்களுடைய பேராற்றலாலும் அவர்கள்பால் உபதேசம் முதலியன பெற்றுக்கொண்ட துறவிகளாலும் மடங்களுக்கு நிலங்களும் பலவகை பொருள் வருவாய்களும் சேர்ந்தன.தங்கள் தங்கள் ஞானாசிரியரிடத்தில் உள்ள பக்திப் பெருக்கால் தமிழ்நாட்டிலும், பிறவிடங்களிலும் உள்ளவர் களைத் தம்முடைய கல்வியாற்றல் முதலியவற்றால் வசப்படுத்திப் பொருள் பெற்றுத்தம் ஆசிரியர்களுடைய திருவடியில் அர்ப்பணஞ்செய்த தம் நலங்கருதாத தம்பிரான்கள் பலருடைய முயற்சியால் அம்மடங்கள் வளம் பெற்ற வரலாறுகள் பல உண்டு.
திருவாவடுதுறை யாதீனத்தைத் தமிழுலகம் நன்கு அறியும். அவ்வா தீனத்திற்கு அடியாராக இருந்த தம்பிரான்கள் பலர் மேற்சொன்ன முறையில் நிலங்கள் முதலியன பெற்று அவற்றை ஆதீனத்திற்கு அர்ப்பணம் செய்துள்ளார்கள். ஸ்ரீ சிவஞான யோகிகளும், ஸ்ரீ கச்சியப்ப சுவாமிகளும் சென்னை காஞ்சீபுரம் முதலிய இடங்களில் தாம் பெற்ற பொருள்களை இங்ஙனமே ஆசிரியர்களுக்கே உரியனவாகக் கொடுத்து விட்டார்கள்.
சற்றேறக்குறைய இருநூறு வருஷங்களுக்குமுன் நிகழ்ந்த வராலா றொன்று இத்தகைய தம்பிரான் ஒருவரது செயலை விளக்குகிறது. அவருடைய பெயரேனும் அவர் காலத்திலிருந்த ஆதீனத் தலைவ ருடைய பெயரேனும் இப்பொழுது தெரியவில்லை.
அத்தம்பிரான் தமிழ்க்கல்வியிற்றேந்தவர்; இனிய செய்யுட்களை அழகிய கற்பனை அமையப் பாடும் வன்மையுடையவர்; வடமொழியறிவும், இசைப்பயிற்சியும் உள்ளவர்; ஞானாசிரியர்பால் அளவிறந்த பக்தியும் திருவாவடு துறையாதீனத்தின் அபிவிருத்திக்குரியவற்றைச் செய்வதில் ஊக்கம் நிரம்பியவர்; சிவபூஜாதுரந்தரர்; தோற்றப் பொலிவும் துற வொழுக்கந் தவறாத தூய்மையும் அவருடைய சிறப்புக்குத் தனிக் காரணங்களாக விளங்கின.
அவர் ஆதீனத்திலுள்ள அபிமான மிகுதியினால் அங்கே நடைபெறும் சிவபூஜை, மகேசுரபூஜை முதலியன சிறப்பாக நடைபெற வேண்டு மென்னும் எண்ணங்கொண்டு பல இடங்களிற்சென்று தம்முடைய பலவகை ஆற்றலினால் அங்கங்கே உள்ள ஜமீன்தார்களையும், செல்வர்களையும் நட்பினராக்கி அவர்கள் மனங் கனிந்து கொடுப்பனவற்றை ஏற்று ஆதீனத்திற் சேர்த்து வந்தார். சென்ற இடங்களிற் அவருடைய கல்வி யாற்றலும், கவிவன்மையும் யாவரையும் கவர்ந்தன.அவரது தோற்றப் பொலிவு கல்லாரையும் அவர்பால் ஈடுபடச் செய்தது. திருவாவடு துறையாதீனம் சைவப் பயிர் தழையும் இடமென்று அவர் வாயிலாக அறிந்த மக்களுக்கு அவ்வாதீனத்திற் பக்தி மிகுவதாயிற்று. இந்தத் தவமுனிவரே சிவகணத்துள் ஒருவரைப்போலத் தோன்றும் போது இவரைப் போன்ற பலரும் அவர்களுக்கெல்லாம் ஆசிரியராக ஒரு ஞானதேசிகரும் இருந்துவிளங்கும் திருவாவடுதுறை இந்த உலகத்தில் வந்த கைலாஸம் போலத்--Dev 18:27, 31 மார்ச் 2010 (UTC)--Dev 18:27, 31 மார்ச் 2010 (UTC)--Dev 18:27, 31 மார்ச் 2010 (UTC)--Dev 18:27, 31 மார்ச் 2010 (UTC)--Dev 18:27, 31 மார்ச் 2010 (UTC)தான் இருக்கவேண்டும் என்று ஜனங்கள் எண்ணினார்கள். பலர் திருவாவடுதுறை சென்று ஞானாசிரியரைத் தரிசித்து அங்குள்ள காட்சிகளைக் கண்டு களித்து மீண்டு வந்து தம்முடைய விம்மிதத்தைப் பிறருக்கும் தெரிவிக்கலானார்கள். இங்ஙனம் தம்பிரானுடைய முயற்சி பல்கி நலம் பயப்பதாயிற்று.
திருவனந்தபுரத்தில் அக்காலத்தில் இருந்த அரசர் கல்வியாளர் களி டத்தில் பேரன்பு பூண்டு அவர்களுக்கு வரையாது வழங்கும் வள்ளல் என்று அத்தம்பிரான் கேள்வியுற்றார். அவர்பாற்சென்று பழகி வர வேண்டுமென்றெண்ணித் திருவனந்தபுரம் போய்ச்சேர்ந்தார்.அவருடைய வரவையறிந்து அங்கே இருந்த சைவச் செல்வர்கள் சிலர் வணங்கி உபசரித்தார்கள். அவர்கள் மூலமாக அந்த ஸம்ஸ்தானாதிபதி
வட மொழியிலும், இசையிலுமே விருப்பமுடையவரென்றும் தமிழ் வித்வான்களை அவர் பார்த்தலரி தென்றும் தம்பிரான் அறிந்தார். ஆயினும் சிவகிருபையினால் எவ்வாறேனும் அவ்வரசரைப் பார்த்து விட்டுத்தான் செல்லவேண்டுமென்ற உறுதி பூண்டார். எவ்விதமாகப் பார்க்கலாமென்று யோசிக்கலானார். அங்குள்ளவர்கள் அது நிறைவேறுவதரிதென்று சொல்லிவிட்டார்கள்.
இங்ஙனம் சிலகாலம் திருவநந்தபுரத்திலேயே காத்துக் கொண்டிருந்தார். சைவர்கள் அவரை மிக்க பயபக்தியோடு ஆதரித்து வந்தனர். ஒருநாள் அரசர் தம்முடைய குலதெய்வமாகிய ஸ்ரீ பத்மநாப ஸ்வாமியைத் தரிசிக்கும் பொருட்டுப் புறப்பட்டார். அவருடைய வரவை முன்னரே அறிந்த தம்பிரான் அன்று எவ்வாறேனும் மன்னரைக் காணவேண்டு மென்ற துணிவு கொண்டு அவர் வரும் வழியில் தக்க கையுறை களுடன் நின்றனர். அரசர் அவ்வழியே வரும்போது அவருக்குமுன் வரும் சேவகர்கள் தம்ம்பிரானைக் கண்டார்கள்; அவருடைய நெற்றி யிலும் மேனியிலும் உள்ள திருநீறும், காதிலிருந்த ஆறுகட்டி சுந்தர வேடமும் மார்பில் விளங்கிய கௌரீசங்கரத்தோடுகூடிய ருத்ராட்ச மாலையும் ஜடாபாரமும் நீண்டதாடியும் வீசையும் கடுங்காவி உடையும் அவர்களை அஞ்சச் செய்தன. வழக்கமாக வழியிலுள்ளவர்களை விலக்குவதுபோல அவரை விலக்கப் பயந்தார்கள்.
அரசர் தம்பிரானைக் கண்டார்; தம்பிரானது தோற்றப் பொலிவில் ஈடு பட்டு நின்றார்; இதுதான் சமயமென்றெண்ணிய தம்பிரான் கையுறை களை மன்னரிடம் அளித்தார்; அரசர் எதிர்பாராத அவருடைய செயலுக்கு வியந்து அருகிலுள்ளவர்களைக்கொண்டு அவரை யாரென்று விசாரிக்கச் செய்தார். அப்பொழுது இசையோடு பின் வரும் பாடலைச் சொன்னார்.
(எழுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்)
மாறிடத் துலவு வேற்படை வஞ்சி
மன்னவ செந்தமிழ் மயில்யாம்
கூறு மூவேந்தர் திருமுடி துளங்கக்
குலவினோம் நின்குலத் தொருவன்
ஆறுசேர் சடையா னவைமுன நம்மை
அணிசெய்தா னாரியப் பொதுப்பெண்
சீறுமென் றுணர்ந்தாய் நீயிவன் மதியாய்
திருமுனி மலயமே குதுவே.
[ இதன் பொருள் : போரில் பகைவர்கள் கூட்டத்திடையே உலாவுகின்ற வேலாயுதத்தையுடைய வஞ்சி மாநகரத்துக்கு அரசே! நாம் செந் தமிழாகிய பெண்; முன்பு நாம் சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவரும் தம் தலை வணங்க மகிழ்ந்திருந்தோம்; அவர்களுள் உன்னுடைய குலத்தில் ஒருவராகிய சேரமான் பெருமாள் நாயனார் கங்கை சேர்ந்த சடைமுடியையுடைய சிவபெருமானது திரு முன்னர் அழைத்துச் சென்று நம்மை அழகு பெறச்செய்தார். இத்தகைய பெருமையும் உன்குலத்துக்கு உரிமையும் உடைய எம்மை, ஆரியமாகிய பொதுமகள்* கோபிப்பா ளென்று எண்ணி இங்கே எம்மை மதியாமலிருக்கின்றாய்; ஆதலின் இனி எம்மை வளர்த்த அகத்திய முனிவருக்குரிய பொதியின்மலைக்குப் போய் விடுகிறோம். திருமுடி துளங்க - சிரக்கம்பம் செய்யவென்றும் பொருள் கொள்ளலாம். அணி செய்தானென்றது கயிலைமலையில் சேரமான்பெருமாணாயனார் திருக்கயிலாய ஞானவுலாவை அரங்கேற்றியதைக் குறிப்பித்தவாறு.]
தனக்குரியவளாகிய மங்கை ஒருத்தியைப் புறக்கணித்துப் பொது மகளோடு நட்புப்பூண்ட ஒரு கணவனை நீங்கி அவள் தன் பிறந்தவீடு சென்று விடும் வழக்கத்தை நினைவிற் கொண்டு இச்செய்யுள் செய்யப் பட்டது. ஆரியத்தைப் பொதுமகளென்றது, பரத கண்டத்திலுள்ள நாடுகள் எல்லாவற்றிற்கும் அது பொதுவாகி வழங்கி வருதல் பற்றி. சொல்ல மைதியால் இழிவுடையது போலத்தோன்றினும் பொருளமை தியால் மிக்க வியாபகத்தையுடைமையைப் புலப்படுத்தி நின்றது.
தம்பிரான் பலநாளாகக் காத்திருப்பதைக் கூறிவிட்டு இச்செய்யுளின் பொருளை விரித்துரைத்தார்; அரசருக்குப் புலப்படும் வண்ணம் வட மொழித்தொடர்களாலும் விஷயங்களை விளக்கினார். செய்யுளின் பொருளை உணர்ந்த அரசர் தம்பிரானுடைய சாதுர்யத்தை அறிந்து மகிழ்ந்தார். தமிழைப் புறக்கணித்தது தவறென்பது அவர் மனத்துக்குப் புலப்பட்டது.
அரசர் அவருக்கு வேண்டியவற்றை அளித்து உபசரிக்கும்படி அருகில் நின்ற உத்தியோகஸ்தர்களிடம் கட்டளையிட்டுவிட்டு ஸ்வாமி தரிசனம் செய்யச் சென்றார். தரிசனம் செய்த பிறகு அரண்மனைக்கு வந்து
கவனிக்க வேண்டியவற்றை முடித்துக்கொண்டு தம்பிரானை அழைத்து வரச் செய்தார்.
தம்பிரான் அரசரைக் கண்டார்; அவருடைய ஸல்லாபத்தால் தமிழ் மொழியின் வளப்பத்தை அரசர் அறிந்ததோடன்றிச் சேரர்கள் தமிழை வளர்த்த வரலாற்றையும் நன்றாகக் கேட்டுத் தெளிந்தனர். திருவாவடு துறை ஆதீனத்தின் பெருமையைப் பலபடியாக எடுத்துரைத்தார்; தம்பிரானுடைய அறிவின் திறத்தையும், தூய்மையையும் அரசர் உணர்ந்ததன்றி அவ்வாதீனத்தின்பால் அவருக்கு நன்மதிப்பு உண்டா யிற்று. அவ்வாதீனத்திற்குச் செய்யப்படும் உதவிகளெல்லாம் சிவபூஜை மகேசுவர பூஜைகளிலும் பல அறச்செயல்களிலும் பயன்படுகின்றன வென்றும் அம்மடத்தினது விருத்தியானது ஊருணிநீர் நிறைந்தாற் கொப்ப உலகுக்குப் பயன்தருமென்றும் தம்பிரானுடைய வார்த்தை களால் அரசர் அறிந்தார். தம்பிரான் சிலகாலம் அரசருடைய ஆதரவில் அங்கேயே இருந்து தமிழ் நயத்தை இயன்றவரையில் எடுத்துக் காட்டினார்.
பிறகு தம்பிரான் திருவாவடுதுறை செல்ல எண்ணி அரசர்பால் விடைபெறுதற்கு விருப்பங்கொண்டார். அதுகாறும் அத்தகையவர்களோடு பழகியறியாத அரசர் அவருடைய தூய்மையில் ஈடுபட்டமையால் அவரைப் பிரிவதில் சிறிது மனம் வருந்தினார். அப்பால் பலவகையான பொருள்களை உதவினார். பட்டுகளும், பீதாம்பரங்களும், பூஜைக்குவேண்டிய வெள்ளிப் பாத்திரங்களும், பிறவும் வழங்கினார்; அவருக்கு ஒரு பல்லக்கு அளித்து அதனை சுமப்பவர்களுக்குரிய அடித்தூண் சம்பளத்துக்கு வேண்டும் பொருளையும் ஈந்தார்; ”நீங்கள் அடிக்கடி இங்கே வந்து போக வேண்டும்” என்று கூறி விடையளித்தார்.
தம்பிரான் தாம் பெற்ற பொருள்களோடு திருவாவடுதுறை வந்து யாவற்றையும் ஞானாசிரியர் திருமுன் காணிக்கையாக வைத்துப் பணிந்தார்; ”இவை தமிழ் தந்த வளம்” என்று சொல்லித் திருவநந்தபுரத்தில் நிகழ்ந்தவற்றை விரிவாகச் சொன்னார்.
அந்தத் தம்பிரானும், திருவநந்தபுரம் அரசரும் பூதவுடம்பை நீத்தனராயினும் தமிழ் தந்த வளம் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு உரியதாக விளங்குகிறது. இவ்வரலாற்றை முதலில் எனக்குச் சொன்னவர் திரிசிபுரம் ஸ்ரீ சி. தியாகராச செட்டியார் அவர்கள