சேஷாத்ரி ஸ்வாமிகள் - 3மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:03, 15 டிசம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் சேஷாத்ரி ஸ்வாமிகள் - 3
அவருடைய தவ வலிமை பிரபலமடைய நாளாவட்டத்தில் அக்கம்பக்கமிருந்து எல்லாம் மக்கள் தரிசிக்க வந்து கொண்டிருந்தனர். கூட்டம் அதிகரிக்கவே அங்கிருந்து ஒருவருக்கும் தெரியாமல் கிளம்பிவிட்டார். நாளவட்டத்தில் பேச்சையும் குறைத்துவிட்டார். முக்கியமான விஷயங்களாக இருந்தால் எழுதிக்காட்டுவார். மெளன சுவாமிகள் என்ற பெயரை மக்கள் சூட்டினார்கள். திண்டிவனம் கோயிலின் யாகசாலையில் தவம் இருக்கவேண்டும் என உள்ளே சென்று அமர்ந்து நான்கு நாட்களாகியும் வெளியே வராமல் போகவே குருக்கள் பயந்து போய்க் கதவைத் திறந்து பார்த்தார். குருக்களுக்கு அவர் கோயிலில் சமாதி நிலையில் தவம் இருந்தது பிடிக்காமல் சேஷாத்ரி சுவாமிகளை வேறெங்காவது போகச் சொன்னார். அங்கிருந்து கிளம்பிய சேஷாத்ரி தான் திருவண்ணாமலைக்குச் செல்வதாக எழுதிக்காட்டிவிட்டுக் கிளம்பி விட்டார். சில மாதங்கள் அங்கேயும் இங்கேயுமாகச் சுற்றினார். படவேடு ரேணுகாம்பாளைத் தரிசித்து அவள் அருளாட்சியில் மூழ்கித் திளைத்தார். வழியில் சந்நியாசிப்பாறையைத் தரிசித்துவிட்டு அருணையம்பதி வந்து சேர்ந்தார் சேஷாத்ரி சுவாமிகள்.
தாம் கடைசியில் வந்து சேரவேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டோம் எனப் புரிந்து கொண்டார். தன்னிலை மறந்து தான் என்பது கரைந்து தானும் அதுவும் ஒன்றாகி அதில் கரைந்தார். இவ்வுலகைத் துறந்து, தன் உடலையும் மறந்து கிட்டத்தட்ட உன்மத்தராய், ஒரு பித்தராய்த் தெருக்களில் அலைந்து திரிந்தார். சித்தப்பா ராமசாமி ஜோசியருக்குத் திருவண்ணாமலையில் சேஷாத்ரி இருப்பது தெரிய வந்து கிளம்பி வந்தார். எப்படியேனும் பிள்ளையை அழைத்துப் போகவேண்டும் என்ற எண்ணத்தோடு வந்திருந்தார். இங்கு வந்து சேஷாத்ரி சுவாமிகள் ஒரு பிச்சைக்காரனைப் போல் பரட்டைத்தலையோடும், ஒட்டிய கன்னங்களோடும், குழி விழுந்த கண்களோடும், வாடிய வயிற்றோடு தனக்குத் தானே பேசிக்கொண்டு இருப்பதைக் கண்டு மனம் வருந்தினார். அங்கேயே தங்கி சேஷாத்ரியைத் தன்னுடன் அழைத்துச் செல்லப் பலவகையிலும் முயன்றார். முடியவில்லை. கடைசியில் அங்கிருந்த அன்னச் சத்திரக்காரரிடம் சேஷாத்ரிக்கு வயிறு நிரம்பச் சாப்பாடு போடச் சொல்லி வேண்டுகோள் விடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.
சேஷாத்ரி சுவாமிகள் கம்பத்து இளையனார் சந்நிதியிலோ, அல்லது திரெளபதி அம்மன் கோயிலிலோ அல்லது ஈசான்ய மடம், துர்கை அம்மன் கோயில் ஆகிய இடங்களிலேயே அமர்ந்து தவத்தில் ஈடுபடுவார். மலை மேல் ஏறிச் சென்று தவம் செய்யப் போனதில்லை. மலை அடிவாரத்திலேயோ பாதாள லிங்க சந்நிதியிலேயோ அமர்வார். தமது பத்தொன்பதாவது வயதில் 1889-ஆம் ஆண்டில் அருணாசலத்திற்கு வந்து சேர்ந்தார் சேஷாத்ரி சுவாமிகள். அருணாசல க்ஷேத்திரத்தைக் குறித்து சேஷாத்ரி சுவாமிகள் கூறுவதாவது, “இந்த க்ஷேத்திரத்தில் தான் அம்மையும், அப்பனும் இணைந்து இவ்வுலகத்து மாந்தர் அனைவரையும் அழைத்து முக்தி கொடுக்கின்றனர். அந்தக் கிருஷ்ணனோ தன் சுதர்சனச் சக்கரத்தைக் கூட வைத்துவிட்டுப் புல்லாங்குழலில் இசைக்கும் கீதங்களுக்கு ஈசன் வெளியே வந்து நடனமாடுகிறான்.” என்பாராம். சேஷாத்ரி சுவாமிகள் வந்து சேர்ந்து சரியாக ஆறு வருடங்களுக்குப் பின்னர் அங்கே இன்னொருவரும் வந்து சேர்ந்தார். அவர் ரமண மஹரிஷி. ரமண மஹரிஷியைப் பாதாள லிங்க சந்நிதி குகைகளில் தவம் செய்கையில் முதலில் கண்டவர் சேஷாத்ரி சுவாமியே தான். அவரைச் சின்ன சாமி என்று அழைப்பாராம். மேலும் ரமணரைக் குறித்து உலகுக்கு அறிவித்தவரும் சேஷாத்ரி சுவாமிகளே ஆகும்.
ரமணரைப் பலவிதங்களிலும் சேஷாத்ரி சுவாமிகள் பாதுகாத்து வந்ததைக் கண்ட மக்கள், சேஷாத்ரி சுவாமிகளை அம்பாள் எனவும், ரமணரை சுப்ரமணியர் அவதாரம் எனவும் அழைத்தனர். அல்லது சேஷாத்ரி சுவாமிகளைப் பெரிய சேஷாத்ரி எனவும், ரமணரைச் சின்ன சேஷாத்ரி எனவும் அழைத்தனர். சேஷாத்ரி சுவாமிகளை அனைவரும் பைத்தியம் எனச் சொல்வதைக் கேட்ட ரமணர் சிரித்துக்கொண்டே இந்த அருணாசலத்தில் மூன்று பைத்தியங்கள். ஒன்று இந்த அருணாசலேஸ்வரர், இரண்டாவது சேஷாத்ரி சுவாமிகள், மூன்றாவது தாம் என்று கூறுவாராம். சில பக்தர்களோ அருணாசலத்தில் மூன்று லிங்கங்கள். ஒன்று அருணாசலமலை, இன்னொன்று சேஷாத்ரி சுவாமிகள், மூன்றாவது ரமணர் என்பார்களாம்.
--Geetha Sambasivam 21:03, 15 டிசம்பர் 2011 (UTC) |