நவராத்திரி நாயகியர் 10

மரபு விக்கி இருந்து

Geetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:08, 29 நவம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம்

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக


நவராத்திரியில் நவதுர்கைகள் - ஆறாம் நாள் பிரமசாரிணி!
ப்ரம்மசாரிணி: பர்வதராஜன் மகளாய்ப் பிறந்த பார்வதி மகேசனையே மணக்க எண்ணி விரதம் இருந்தாள். அப்போது அவளைச் சோதிக்க எண்ணிய ஈசன் அவள் முன் தோன்றி மகேசனை மணாளனாக அடைவது எளிதல்ல என்றும், அதற்காக அவள் தவமியற்றவேண்டும் என்றும் விருத்தனாக வந்து சொல்ல, அதன்படியே தவம் இயற்றினாள் பார்வதி. சாட்சாத் பிரம்மம் ஆன அவளே தவ வடிவாக விளங்கி தவம் இருந்ததால் பிரம்மசாரிணி எனப் போற்றப் பட்டாள். நவராத்திரியின் வியாழக்கிழமைக்கான தேவி இவளே. தவம் செய்யும் காமாக்ஷி இவள் வடிவே என்பர். வியாழக்கிழமைகளில் இவளைப் பூஜித்தால் வியாழன் ஆன தேவகுரு ஞானம், கல்வி, அமைதியான நிலையான வாழ்வு கிட்டச் செய்வார். திரிபுர சம்ஹாரத்தின் போது ஈசனின் இடக்கால் பெருவிரலால் வரையப் பட்ட அஷ்டவகைக்கோலத்தில் இருந்து தோன்றியவளே பிரம்மசாரிணி ஆவாள்.

இன்றைய அலங்காரம்:

சர்ப்பராஜனை ஆசனமாய்க் கொண்ட சண்டிகாதேவி. (அதான் போல, நம்ம வீட்டுக்குக் கிட்டத் தட்ட ஒரு மாசத்துக்கும் மேலாகியும் சுப்புக்குட்டியார் விசிட் செய்யலைனு பேசிட்டு இருந்தோம், ஞாயிறன்று காலங்கார்த்தாலே 4 மணிக்கு தரிசனம் கொடுத்துட்டு, என்னை வெளியே வந்து வாசல் தெளிக்க விடாமல் பயமுறுத்திட்டுப் போயிட்டார். இப்போ 5-30 மணிக்குத் தான் வெளியே எட்டியே பார்க்கிறேன்! :P சுப்புக்குட்டியார் தயவு!)தூம்ரலோசனன் என்னும் அசுரனை வதம் செய்த சண்டிகா தேவி கையில் அக்ஷமாலை, கபாலம், தாமரை, தங்கக்கலசம் போன்றவற்றை ஏந்திய வண்ணம் காக்ஷி தருவாள். சஷ்டி தினமான இந்த ஆறாம் நாள் தேவியின் எண்ணற்ற பெயர்களை கோலமாவினால் எழுதுதல் நன்று.

இன்று ஏழு வயதுள்ள பெண் குழந்தையைச் சண்டிகாவாகப் பாவித்து வழிபட வேண்டும். இன்றும் சிவந்த நிறமுள்ள மலர்களே வழிபாட்டுக்கு உகந்தது எனினும் செம்பருத்தி, ரோஜா போன்ற மலர்களையும் செந்தாமரைப் பூக்களோடு சேர்த்து அர்ச்சிக்கப் பயன்படுத்தலாம். இன்றைய நிவேதனம் கல்கண்டு சாதம். (நம்ம ஃபேவரிட்) செய்முறை சுருக்கமாய்ச் சொல்லப் படுகிறது. ஒரு கப் அரிசி, அரை கப் பாசிப்பருப்பு வெறும் வாணலியில் வறுத்துப் பாலில் குழைய வேகவிடவேண்டும். அரை லிட்டர் பாலாவது தேவை. குழைந்த சாதத்தில் கட்டிக் கல்கண்டைப் போட்டு(டைமண்ட் கல்கண்டு நல்லா இருக்காது.) சேர்ந்து கொதித்து வந்தபின்னர் குங்குமப் பூ, ஜாதிக்காய், ஏலக்காய்,முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழங்களால் அலங்கரித்துக்க் குழந்தைக்குக் கொடுக்கலாம்.

இன்றைய சுண்டல் மொச்சைப்பருப்புச் சுண்டல்.

இனி துர்காஷ்டகம்.

குருவுமானவள் துர்கா குழந்தையானவள்
குலமுமானவள் எங்கள் குடும்ப தீபமே
திருவுமானவள் திரிசூலி மாயவள்
திருநீற்றில் நின்றிட என்னுள் திகழும் துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

லலிதா நவரத்னமாலையின் இன்றைய ரத்னம் மரகதம்

மரகத வடிவே சரணம் சரணம் மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம் ஸ்ருதி ஜதி லயமே இசையே சரணம்
ஹர ஹர சிவ என்றடியவர் குழும அவரருள் பெற அருளமுதே சரணம்
வரநவ நிதியே சரணம் சரணம் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

"https://marabuwiki.org/index.php?title=நவராத்திரி_நாயகியர்_10&oldid=3587" இருந்து மீள்விக்கப்பட்டது