INDIAN SHAME மொழி மாற்றம்.
- மனிதக் கழிவை மனிதனே அகற்றும் முறை ஒழிப்பில் மெத்தனம் : அரசுக்கு உச்ச நீதி மன்றம் கண்டனம். [நவம்பர் 09/2010 , செய்தி ]
மனிதக் கழிவை மனிதனே அகற்றும் உலர் கழிப்பிட முறையை ஒழிப்பதிலும் அந்த பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதிலும் மெத்தனமாக செயல்படுவதாகக் கூறி தில்லி உள்ளிட்ட சில மாநில அரசுகளுக்கு உச்ச நீதி மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இச்சட்டம் நடைமுறையில் உள்ளது. இது ஒரு அரசியல் சாசன விடயம். இந்தச் சட்டத்தை முறையாக அமல்படுத்த நீதிமன்றமே நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலிக்கும் என்றும் பெஞ்ச் தெரிவித்தது.
இந்தியாவின் அவலம்
அவமானம், கீழ்தரமான, மனிதாபிமானமற்ற, சங்கடப்படுத்துகிற, அருவருப்பான, மனிதத்தின் அவமதிப்பு - இது தான் “கைகளினால் கழிவை அகற்றும் முறை “. - மனிதக் கழிவை மனிதனே அகற்றும் அவலம். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால், மனிதனின் கழிவை, மனிதனே கைகளால் அள்ளி, தலையில் அல்லது இடுப்பிலோ,தோளிலோ கூடையில் வைத்து சுமந்து, ஒரு வேளை நல்ல நேரம் வாய்க்கப் பெற்றவராக இருக்கும் பட்சத்தில், தள்ளு வண்டி கிடைக்கும்.
பல்லாண்டு காலமாக இந்தக் கொடுமையான முறையை முற்றிலுமாக ஒழிக்க, புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. கூட்டமைப்புகளும் கமிஷன்களும் நிறுவப்பட்டுள்ளன. சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான பணமும் செலவிடப்பட்டுள்ளன. ஆனால் சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் இந்த மனிதத்தை அவமதிக்கக்கூடிய செயல் நம்மிடையே நடந்து கொண்டுதானிருக்கிறது.
2002-2003 இல், ச்மூக நீதித்துறை அமைச்சகம், 6.76 லட்சம் கழிவை அள்ளும் தொழிலாளர்கள் இருப்பதாகவும், 92 லட்சம் உலர் கழிவறைகள், 21 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் பரவி இருப்பதாகவும், ஒப்புக் கொண்டுள்ளனர். இருப்பினும் கழிவுப் பணியாளர்கள் சங்கம் [SKA] தனிப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுடன் சேர்ந்து, 2003 இல் உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். பல மாநிலங்கள் தங்கள் பகுதிகளில் இந்த முறை ஒழிக்கப்பட்டு விட்டதாகவும்,குறிப்பிட்ட அந்தத் தொழிலைச் செய்பவர்கள் வேறு தொழிலுக்கு மாறிவிட்டதாகவும் தீவிரமாக மறுத்தனர். மாநிலங்களின் உச்சநீதி மன்றங்கள் பதிலளிப்பதற்கு மூன்று ஆண்டுகள் ஆயின. பலரும் உலர் கழிப்பறையே இல்லை என்பதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்தனர். அதிலிருந்து விவாதங்கள் தொடர்ந்தன. SKAவின் தேசிய அமைப்பாளரான பெஸ்வாடா வில்சன், இந்தப் பிரச்சனை, அறிவுறுத்துவதற்காகவோ, மாற்று உபாயம் நிர்ணயிப்பதோ குறித்தது அல்ல. இது ஒரு சமுதாயப் பிரச்சனை. அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்புகள் இல்லாத நிலையில்,கிடைத்த தகவல்களின் கொண்டு, மாதிரிக் கணக்கெடுப்பை செய்த போது 13 லட்சம் பணியாளர்கள் நாட்டில் இருக்கக் கூடும் என்று கூறினார். 1993 இல், வில்சன், மனிதக் கழிவை மனிதனே அகற்றும் பணி மற்றும் உலர் கழிவறை கட்டுவதை தடை செய்யும் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அது மேலும் சில மாநிலங்களில் இதனை கடைப்பிடிப்பதற்கு மேலும் 10 ஆண்டுகள் ஆயின. சில மாநிலங்கள் இச்சட்டத்தை, தங்களிடம் எந்த கழிவுகள் அகற்றும் துப்புரவு தொழிலாளிகளும் இல்லை என்று கூறி நிராகரித்தனர். சில மாநிலங்களோ SKA அமைப்பு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து ஏற்றுக் கொண்டன.
ஒரு பிரச்சனை இருப்பதை ஒப்புக் கொள்லாவிடில் எங்கனம் அதற்கான தீர்வைக் காண இயலும் ?
தன்னுடைய 9 வது வயதிலிருந்து, ஒரு துப்புரவுத் தொழிலாளியாக[இன்று 20] இருக்கும் மீனா, தான் முதன் முதலில் ஒரு கூடையில் கழிவுகளை சுமந்து சென்ற போது, வழுக்கி கீழே விழ, கழிவுகள் தன் மீதே கொட்டிவிட, கூடையும் மிக அருவருப்பான நிலையில் இருந்ததால் ஒருவரும் தன்னைத் தூக்கிவிட முன்வரவில்லை என்பதை நினைவு கூறுகிறார். மற்றொரு துப்புரவு தொழிலாளி வந்து தூக்கிவிடும் வரை அதே இடத்தில் அப்படியே சுருண்டுக் கிடந்ததை எண்ணி இன்றளவும் மாய்ந்து போகும் மீனா, அந்த நாளில், இந்த உலகத்திலேயே மிக துரதிருஷ்டமான குழந்தை தான் மட்டுமே என்று நொந்துப் போனதாகவும் சொல்கிறார். அவருடைய கணக்குப்படி இது போன்ற தொழில்புரிபவர்கள் 100 முதல் 150 குடும்பங்கள் வரை உள்ளதென்கிறார்.
திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கமும் இருந்தது. அதையும் இத்தொழிலாளர்களே சென்று சுத்தம் செய்தனர். மீனா எப்படியோ சிரமப்பட்டு படித்து பள்ளியிறுதியாண்டு வரை முடித்திருக்கிறார். ஆனாலும் இக்கல்வி எந்த பெரிய மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. அவர் மேலும் கூறியதாவது,
“பரம்பரை பரம்பரையாக இதுதான் எங்கள் குடும்பங்களில் நடந்து கொண்டிருக்கிறது. வேறு வேலை எவரும் கொடுக்கத் தயாராகவும் இல்லை. உண்மையில் சொல்லப்போனால், என் தாய் என் தந்தையை திருமணம் செய்து கொண்டதே அவர், அதிகமாக அள்ளக்கூடிய ஜனசந்தடி அதிகம் உள்ள இடத்தில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றதால்தான்.”
மீனாவின் கணவன் முகேஷ் நந்த நகரியில் பொதுக்கழிப்பறையில் பணிபுரிகிறார். முகேஷ் அரசாங்கத்துறை துப்புரவுப் பணியில் சேர விரும்பினாலும், அதற்கு ரூ.50,000 லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்ததால், அதையும் கைவிட்டு, அன்றாடம் ரூ100 வாங்கும் கூலித் தொழிலாளியாக பணியமர்ந்தார். இதிலும் கொடுமை என்னவென்றால், அந்த சொற்ப கூலியிலும் ஒரு பகுதியை காவல்துறையினருக்குக் கொடுக்க வேண்டுமென்பதுதான்.
மீனாவின் தாய் சாரதா, அந்தப்பகுதி குடியிருப்பில் வீட்டிற்கு ரூ10 வாங்கிக் கொண்டு, பத்து உலர் கழிவறைகளை சுத்தப்படுத்தும் வேலையைச் செய்கிறார். தேவையான தண்ணீர் கூட இல்லாத நிலையில் தானும் தன் கணவனும் சேர்ந்து உடைந்த பிளாஸ்ட்டிக் துண்டுகளைக் கொண்டு, சுரண்டி அள்ளி கூடையில் போட்டுக் கொண்டு செல்வதாகக் கூறுகிறார். இவருடைய கவலையே தன் கூடை பிய்ந்துப் போனதால் புதிய கூடை வாங்க ரூ 70 ஆகுமே என்பதுதான்.
மகாத்மா காந்தியின் குஜராத்தில் கூட தங்கள் கழிவறையை தாங்களே சுத்தம் செய்ய கற்றுக் கொள்ளவில்லை. 55,000 பணியாளர்கள் வரை குஜராத்தில் உள்ளனர். மாநில அரசும், அவர்களுக்குரிய பணப்பட்டுவாடாவை செய்வதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. இந்தத் தொழிலாளர்கள் இதுதான் தங்கள் தலைவிதி என்று நம்ப ஆரம்பித்ததால் இதைப்பற்றி பேசவும் விரும்பவில்லை.
மற்றொரு முக்கியமான தடை ரயில்வேத்துறை. இரயில் தண்டவாளங்கள் கைகளினாலேயே சுத்தப்படுத்த வேண்டிய கட்டாயம், திறந்த வெளி கழிவறைத்திட்டம்.
இதனைத் தடை செய்யும் சட்டம் அமலுக்கு வந்து 13 ஆண்டுகளில் ஒரு வழக்கு கூட வரவில்லை. இந்தச்சட்டம் 1 வருட சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் அல்லது இரண்டுமோ கொண்டது. இந்தச்சட்டம் ஒரு திட்டம் போல்தான் செயல்பட்டது.
அரசாங்கம், கடன் வழங்குதல், மானியம் அளித்தல், என்று பல திட்டங்கள் மூலம் முன்னேற்றத்தை ஊக்குவித்தாலும் பெரிய பலன் ஏதுமில்லை.
SKA அளித்த அறிக்கையில் பெரும்பாலான பணியாளர்கள் இரத்த சோகை, வாந்தி, பேதி போன்ற நோய்களுக்குப் பலியாவதாகக் கூறுகிறது. செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பலர் கார்பன் மோனாக்ஸைட் விசவாயுவினால் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறது.
அரசியல்வாதிகளும் இப்பிரச்சனையை கண்டு கொள்ளாமல் இருப்பதற்கும் காரணம் உள்ளது. தண்ணீர் மற்றும் மின்சாரம் போன்று ஓட்டுப் பெறுவதற்கு துருப்புச் சீட்டாக இதை பயன்படுத்த இயலாது என்பதுதான்.
நன்றி - FRONT LINE - sept - 09/22/2006.
பவள சங்கரி திருநாவுக்கரசு
தேதி - 23 - 03 - 2011.