ஹொரநாடு(அன்னபூர்ணேஸ்வரி)
அன்னபூர்ணேஸ்வரி என்றதுமே முதலில் காசிநாயகியான அன்னபூர்ணேஸ்வரி தான் நமது நினைவுக்கு வரும். அடுத்து அள்ள அள்ளக் குறையாது உணவை வாரி வழங்கும் அட்சய பாத்திரமாகவே விளங்கும் ஹொர நாடு அன்னபூர்ணேஸ்வரி திருக்கோயிலின் நினைவு அனைவருக்கும் வந்துவிடும்.
இது சிக்மகளூர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அடர்ந்த கானகத்தின் இயற்கைச் சூழலில் அமைந்துள்ள இடம். செல்லும் வழியெல்லாம் ஏகப்பட்ட கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட மலைப்பாதையில் பரிபூரண அமைதி. சூழ்நிலை சற்று திகிலாகவும் இருக்கிறது. ‘கலஸா’ என்னும் இடம் வரை ஓர் அளவுக்குக் கஷ்டமில்லாமல் வந்து விடலாம். மழைக் காலத்தில் சிரபுஞ்சி போல எப்போதும் மழை பெய்து கொண்டு இருக்கும். பதினைந்துவருடம் முன்புவரை இந்தப்பகுதிக்கு அவ்வளவு எளிதாக யாரும் வந்துவிடமுடியாதாம் இப்போது சீரான மலைப்பாதைகள் உள்ளன.
தனியாகத் தலபுராணம் எதுவும் இந்தக் கோயிலுக்கு இல்லை..400 வருடங்களுக்கு மேலாக ஜோஷிகள் எனும் குடும்பத்தினர் இந்த திருக்கோயிலை நிர்வகித்து வருகின்றனர்.
1973ல் இந்த கோயில் புனருத்தாரணம் செய்யப்பட்டுத் தற்போது உள்ள அன்னபூர்ணேஸ்வரி திருமேனி சிருங்கேரி அபிநவ தீர்த்த மஹாசுவாமிகளால் அஷய த்ரிதியை அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்று முதல் இதன் பெயரும் புகழும் மிகவும் பிரபலமாகியது. பக்தர்கள் பலர் வரத்தொடங்கினர்.
மனதைக்கவரும் பசுமையான மலைத் தொடர்கள் சிற்றோடைகள் காப்பி தோட்டங்கள் ஏலக்காய் தோட்டங்கள் என்று பயணத்தின் போது வழி நெடுக நம்மைப் பரவசப்படுத்துகின்றன. .ஊட்டி கொடைக்கானல் மலைப் பாதையில் பயணம் போவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
பொதுவாகவே கர்னாடக மாநிலத்தில் திருக்கோயில்கள் அதிலும்குறிப்பாக உடுப்பி, தர்மஸ்தலா, சிருங்கேரி, கொல்லூரு போன்ற இடங்களில் இரண்டுவேளைகளிலும் எத்தனை பக்தர்கள் வந்தாலும் இல்லை எனாது உணவு வழங்கப்படுவது அனைவரும் அறிந்த செய்திதான். ஆனால் ஹொரநாடு அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் பெயருக்கேற்ப இங்கு உணவுக்கு முன்பாக வித்தியாசமாக இரண்டுவேளையும் - காபி(ஃபில்டர்காபி) மற்றும் டிபன் கொடுக்கிறார்கள். இடையிடையே சுக்கும் ஏலமும் போட்ட இனிய பானகம் வேறு வேண்டுமளவு அளிக்கிறார்கள் என்றால் இந்த விருந்தோம்பலை எப்படிப் புகழ்வது சொல்லுங்கள்!
இதுமட்டுமா?
சின்னக்குழந்தைகளுக்கு நல்ல பசும்பால் தருகிறார்கள்.
பசி என்று சொல்லிக்கொண்டு யாரும் இங்கேயிருந்து செல்லமுடியாது. கைபடாத சுத்தமான உணவு ,நவீன கொதிகலன்களில் தயாராகிறது.தட்டுகள் பாத்திரங்கள் எல்லாமே கொதிநீரில் சுத்தம் செய்யப்படுகின்றன.
இவை யாவும் யாருடைய உதவியும் இல்லாமல் தனிப்பட்டகுடும்பத்தினரால் நிர்வாகிக்கப்பட்டுவருவது என்பதுதான் இங்கு வியப்பு!
கோயிலைச்சுற்றியே இலவசத் தங்கும் விடுதிகள் உள்ளன. வெளியேயும் இருக்கின்றன அவற்றிற்க்குக் குறைந்த வாடகையே பெற்றுக்கொள்கின்றனர். கோயில் திண்ணைகளில் படுத்துறங்கலாம். கிராமத்துச்சூழ்நிலை இருக்கும். இலவச அறைகளில் கீழே விரிக்க பெரிய விரிப்புகள் தலையணைகள் கம்பளிகள் எல்லாமே இலவசமாக வழங்கப்படுகின்றன,
அறுபதுவயதை நெருங்கும் பீமேஸ்வர ஜோஷிஎன்பவர்தான் இந்தத் திருக்கோயிலை நிர்வகித்துவருகிறார். பீமேஸ்வர ஜோஷி திருக்கோயிலின் நிர்வாகத்துடன் பல சமூகத்தொண்டுகளிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுவருகிறார். இவருடைய குடும்பம் முழுவதும் இந்தப்பணியில் ஈடுபட்டுவருகின்றது.
50ரூ கொடுத்து அர்ச்சனை சீட்டு வாங்கினால் பிரசாதமாக அர்ச்சனை சாமான்கள் அனைத்தும் அதாவது நாலைந்து உடைத்த தேங்காய்மூடிகள் கால்கிலோ கல்கண்டு சர்க்கரை, கொப்பரை, எள் சேர்த்த மாவுப் பிரசாதம்,அன்னபூர்ணேஸ்வரியின் அரிசிப் பிரசாதம் பூ உட்படக் கொடுக்கிறார்கள்! நாம் வீட்டிலிருந்தே கொஞ்சம் அரிசி, வெல்லம், தேங்காய் கொண்டு செல்வது சிறப்பு. இல்லையென்றால் கோவிலிலேயே கொடுக்கிறார்கள். அதனை வாங்கி அவர்கள் தரும் தாமிரத்தட்டில் வைத்து சந்நிதிக்குக்கொண்டு சென்றுஅர்ச்சனை முடித்து வந்து சந்நிதி வாசலில் உள்ள அரிசிக் கிடங்குப் பாத்திரத்தில் அரிசியை பக்தியுடன் செலுத்தி தட்டைதிரும்பக்கொடுத்துவிட்டும் வரலாம் நாங்கள் மறக்காமல் வீட்டிலிருந்து எல்லாம் எடுத்துப்போனோம். சிலர் அம்பாளுக்குச் சேலை, ரவிக்கைத்துணி, கண்ணாடி வளையல் என்றெல்லாம் வாங்கிவந்தார்கள். நமக்கு அளிக்கும் அர்ச்சனைப் பிரசாதப் பொட்டலத்தில் முக்கியமாய் அரிசிப் பிரசாதமும் இருக்கும் அங்கே பிரசாதமாகத் தரும் அரிசியை எடுத்து வந்து நமதுவீட்டின் அரிசிப்பானையில்(டப்பாவில்)போட்டுவைத்தால் உணவு, தானியம் எடுக்க எடுக்கக் குறையாமல் இருக்குமென்பதும் அன்னையின் தரிசனப்பேறு நமக்குக் குறைவில்லாத செல்வத்தையும் நீடித்து வழங்கும் என்பதும் நம்பிக்கை..
கோவிலின் முன்பாக அழகான தோரண வாயில். இருபத்தி ஐந்து அகலமான படிக்கட்டுகளில் ஏறி உள்ளே சென்றால் விஸ்தீரமாண பரப்பளவில் அமைந்துள்ள அன்னையின் திருக்கோயில் நம்மைஎதிர்கொள்கிறது. கோவில் வாசலில் நம்வீடுகளில் மொட்டை மாடியில் பாய்களை விரித்து மதியவெய்யிலில் பலசரக்கைக் காயவைப்பதுபோல என்னென்னமோ காயவைத்திருக்கிறார்கள்! மஞ்சள் மஞ்சளாய் குண்டுகுண்டாய் இருந்த பொருளைப்பார்த்து கன்னடத்தில் அங்கே இருந்த கோயில் ஊழியரிடம் கேட்டேன்.
‘அது ஏனு?’
செம்மொழியான தமிழ்முகம் தான் இந்த முகம் என்று தெரிந்தோ என்னவோ பைந்தமிழில் என்னிடம் அதெல்லாம் 'பாக்கு'ன்னார். பாக்கலாம் என அருகே போனோம். இன்னொருபக்கம் புளியைப் பத்துப் பெண்கள் கொட்டை கோது நீக்கிக் காய வைத்துக் கொண்டிருந்தார்கள். இடையிடையே குடும்பபிரச்சினைகளை அலசியபடி!
அன்னபூரணியம்மாவின் பண்ணைவீட்டுக்குள் போவது போல இருந்தது.! ஆண்கள் இங்கே மேல்சட்டை அணிந்துவர அனுமதி இல்லை.
பொதுவாகஅன்னபூரணியை நினைத்தால்ஒரு கையில் பாத்திரமும் மறுகையில் கரண்டியுடனும் உயிர்களுக்கு அன்னம் விளம்பும் உருவம்தானே மனக்கண்ணில் தோன்றும்? ஆனால் இங்கே அன்னபூரணி அப்படி இல்லை.சங்குசக்கரம் தாங்கிய திருக்கோலம்தான் கையில் கரண்டி கிடையாது.
மூலவரான அன்னபூர்ணேஸ்வரி பொன்மகளாய் புன்னகை தவழ நம்மை நோக்குகிறாள்! ‘ஆறடிஉயரத்தில் முழுவதும் பொன்கவசம் அணிந்த ஸ்வர்ணத்திருமேனி! சிரசின்மீது ஏழுதலைசூழ்ந்த வெள்ளி நாகம்! சந்நிதிக்கு எதிரே பொன் நிறத்தில் ஒரு சிம்மம் இரண்டுகால்களை கீழே ஊன்றிக்கொண்டு முன் இரண்டு காலக்ளில் ஒரு அட்சயப்பாத்திரத்தை ஏந்த்திக்கொண்டு நிற்கிறது. சந்நிதியின் மேற்சுவரில் அன்னபூர்ணேஸ்வரி சிம்ஹவாஹினி என்று சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்டுள்ளது.ஆம் அம்பாள் இங்கு சிம்ஹவாஹினியுமாய் காட்சி தருகிறாள்.
மலைராணியாய் மகாசக்தியாய்அருள்பொழியும் திரு விழிகளுடன் நிற்பவளின் கோலம் கண்டு உள்ளம் அரற்றுகிறது.
//வெளி நின்ற நின் திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே
தெளி நின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.
//
என்று அன்னையின்மீது அபிராமிபட்டர் அருளிய பாடலை நினைக்கவைக்கிறது.
எதைஎதையோ கேட்டுப்பெற நினைத்து வந்த மனசு ஏதும் கேட்கத் தெரியாமல் மௌன சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தின் மீது அமர்ந்துகொள்கிறது. பார்த்துமகிழவேண்டிய நம்விழிகள் பரவசத்தில் மூடிக்கொள்கின்றன! முதல்பார்வையில்தான் அவள் மனத்தின் உள்ளே புகுந்துவிட்டாளே. எங்கெழுந்தருளுவது இனியே என்பது போலஅன்னையைச் சிக்கென மனத்தில்பிடித்துவிட்ட உணர்வில் கண் மூடிக் கொள்ள மனம் மட்டும் மானசீகமாய் அவளைக்கண்டுகொண்டிருக்கிறது!
அர்ச்சனை முடியும்வரை நம்மை அன்னை எதிரேயே சந்நிதானத்து வாசலில் அமரச்சொல்கிறார்கள். அர்ச்சகர் ஒருவர் மைக் அருகே அமர்ந்து தட்டில் குங்குமத்தை அர்ச்சனை செய்தபடி மந்திரம் சொல்கிறார், இன்னொருவர் உள்ளே அம்பாளுக்கு தீபஜோதிகாட்டுகிறார்..’ஆயிற்று எழுந்திருங்கள் அம்பாளை வணங்கி அனைவரும்செல்லுங்கள் அடுத்துவருபவர்களிங்கே அர்ச்சனைக்கு அமரவேண்டும் ’என்கிறார்கள்.
மனமின்றி எழுந்திருக்கிறோம். அன்னையைச் சேவித்து எழுகிறோம்.மலைப்பிரதேசத்தினாலா அல்லது மனப்பிரதேசம் சந்நிதியில் நுழைந்ததுமே மற்ற நினைவுகளை மறக்கடித்துவிட்டதாலா..எது என்று தெரியவில்லை உடலும் மனமும் அங்கே குளிர்ந்துபோனதென்னவோ நிஜம்.
கர்ப்பகிரஹமும் திருக்கோயிலின் மற்றகட்டுமானப் பணிகளும் கேரள பாணியில் மரத்தினாலேயேஅமைந்துள்ளது
சிறப்பு. பூர்ணாகுதி உச்சிகாலபூஜை ஆனபின்புதான் மதிய உணவு ஆரம்பமாகிறது. மூன்றுமணிவரைக்கும்
இடைவிடாது உணவு வழங்கப்படுகிறது. பளபளவென்று தேய்க்கப்பட்ட எவர்சில்வர் தட்டுக்கள் டம்ளர்கள் சுத்தமாக இருக்கின்றன. கீழே அமர இயலாதவர்களுக்கு தனியே மேஜை, நாற்காலி வசதி இருக்கிறது. கர்னாடக வழக்கப்படி சாதம் போட்டதும் முதலில் தெளியவைக்கிறார்கள்; அதாவது தெளிவான ரசம் விடுகிறார்கள். பிறகு காய்கறிகள் நிறைய போடப்பட்ட சாம்பார் பிறகு பாயசம் மோருடன் அருமையான உணவு. தட்டுக்களை அலம்பச்சொல்வதில்லை அதைச்செய்யப் பணியாளர்களை நியமித்திருக்கிறார்கள்.
.பின்னர் மாலை 7மணிக்கு ஆரம்பித்து 9 மணிவரை அன்னதானம் மறுபடியும் நடைபெறுகிறது கோயிலின் பிராகாரத்தை ஒட்டியுள்ள மிகப்பெரிய சமையலறையில் உணவுப்பொருட்களும் அரிசிமூட்டைகளும் காய்கறிகளும் எப்போதும் நிரம்பிக் கிடக்கின்றன. இந்தத் திருக்கோயிலின் பணி பக்தியோடு மட்டும்முடியவில்லை பல சமூகப்பணிகளும் நடைபெறுகின்றன. மலைநாட்டுவிவசாயிகள் தங்கள் விளைபொருட்களில் ஒருபகுதியை இந்தத் திருக்கோயிலுக்கு வழங்கிவருகின்றனர்.
ஹொரநாடு ஆரம்ப பாடசாலை மற்றும் மருத்துவ மனை இரண்டும் மக்களுக்காகச் செயல்பட்டுவருகிறது. பாடசாலையில்
சீருடைகள், நோட்டுப்புத்தகங்கள், பேனா, பென்சில், விளையாட்டுச் சாமான்கள், பொம்மைகள் உட்பட பலபொருட்கள் வழங்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்டகுழந்தைகளுக்கு மதிய உணவும் வழங்குகிறார்கள். மருத்துவமனைக்கும் இதேபோல தேவையான உபகரணஙக்ளை அளிக்கிறார்கள். இங்கு ஒரு மிகப் பெரிய கல்யாணமண்டபமும் இருக்கிறது. ரிக் யஜுர் சாம வேதங்களைக் கற்பிக்க அன்னபூர்ணி வேத பாடசாலை இயங்கி வருகிறது.
கிருஹலட்சுமி திட்டத்தின் கீழ் வசதி இல்லாதவர்களுக்கு வீடுகட்டிக் கொடுக்கிறார்கள். நிதி உதவியும் செய்கிறார்கள்.இதில் 1950வீடுகள் கட்டப்பட்டு நிதி பெற்றிருக்கின்றன. ஆனந்த ஜோதி திட்டத்தின் கீழ் ஏழை எளியவர்களின் வீடுகளுக்கு மின்சார இணைப்புகள், தெருவிளக்குகள் அமைத்தல் போன்றவைகள் உள்ளன. 1992முதல் சப்தபதி திட்டத்தின் மூலமாக இலவசக்கூட்டுத்திருமணங்கள் நடைபெற்றுவருகின்றன. 1985ம்வருடம் முதல் வசதியற்றவர்களுக்காக இலவச உபநயனமும் செய்துவருகிறார்கள். கோவில் வாசலில் உள்ள கடைகளில் கிராம்பு, ஏலக்காய், கசகசா, முந்திரிப்பருப்பு, சுத்தமான தேன் முதலானவை விலைமலிவாகக் கிடைக்கின்றன. காபிப்பொடி சொன்னால் நம்பமாட்டீர்கள் கொள்ளை மலிவு விலையில் கிடைக்கிறது. நாலுகிலோ அள்ளிக்கொண்டு வந்துவிட்டேன்!
அனைவரும் தரிசிக்கவேண்டிய அருளும்சக்தியும் மிகுந்த திருத்தலம் இது!
ஷைலஜா.
தேதி - 07/04/2011.