ஶ்ரீராமனின் பாதையில்- அயோத்தி 1

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
பல வருடங்களாக இந்த இடம் செல்ல ஆசை.  98 ஆம் ஆண்டில் காசிக்கு யாத்திரை சென்ற சமயம் அங்கே எங்கள் பயண ஏற்பாடுகளைக் கவனித்த புரோகிதர் அயோத்திக்கு அனுப்பி வைப்பதாகச் சொன்னார்.  ஆனால் அப்போ என் கணவரோட விடுமுறை தினங்கள் முடியும் நேரம் ஆகிவிட்டதாலும் திரும்பிச் சென்னைக்குச் செல்ல முன்பதிவு செய்த நாள் நெருங்கியதாலும் அப்போப் போக முடியவில்லை.  அதன் பின்னர் பலமுறை முயற்சித்தும் செல்ல முடியவில்லை. அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து ட்ராவல் டைம்ஸ் ஏற்பாட்டின் மூலம்  நாசிக், பஞ்சவடி, போன்ற இடங்கள் சென்ற போதும் இதே பாரத் தர்ஷன் மூலம் அயோத்யாவுக்கும் ஏற்பாடு செய்யுங்கள் என நாங்களே அவர்களைக் கேட்டிருந்தோம்.  அது போல் ஒரு திட்டமும் ஏற்பாடு செய்திருந்தனர்.  ஆனால் அதிலேயும் கலந்து கொள்ள முடியவில்லை. ஏதேதோ பிரச்னைகள்.  இடையில் இரண்டு முறைகள் யு.எஸ். பயணம்.  கோயிலில் கும்பாபிஷேஹ ஏற்பாடுகள் என இருந்ததோடு வீட்டிலும் சொந்தப் பிரச்னைகள். அப்படி நாங்கள் செல்ல நினைத்த இடம்


ஶ்ரீராம ஜன்மபூமி.

பொதுவாக இது போன்ற இடங்களுக்குச் செல்வது குழுவாகச் செல்வதே வசதி.  முக்கியமாய்ச் சாப்பாடு கிடைக்கும். செல்லுமிடத்துக்கு வேண்டிய வாகன வசதிகள் அவர்கள் பொறுப்பில் இருக்கும்.  செலவு குறையும்.  ஒரே ஒரு கஷ்டம் என்னவென்றால் தங்குமிடம்.  அவங்க பொதுவாக எல்லாருக்கும் சேர்த்து ஒரு கல்யாணச் சத்திரமோ, டார்மிட்டரி எனப்படும் படுக்கும் வசதி கொண்ட கூடங்களோ ஏற்பாடு செய்வார்கள்.  கேட்டுக் கொண்டால் அறை வசதி செய்து கொடுக்கலாம்.  ஆனால் அதிலும் ஒரு அறைக்கு மூன்றிலிருந்து நான்கு பேர் இருப்பார்கள்.  இது ரொம்பவே நுணுக்கமான விஷயம்.  சரியாக வருமா என்றெல்லாம் யோசித்து ஒன்றிரண்டு குழுவோடு போக முடிவு செய்து பணம் கட்டும் நேரம் ஏதேனும் ஒரு காரணத்தினால் அதை ஒதுக்கும்படி ஆகி விட்டது.


இப்போ இதைக் குறித்துப் பலரிடமும் பேசிப் பார்த்ததிலும், மற்ற பல காரணங்களினாலும் தனியாகவே போகலாம் என முடிவு செய்து அதற்கான தகவல்களைச் சேகரித்துக் கொண்டோம்.  வேளுக்குடி அவர்களின் ஶ்ரீராமனின் பாதையில் தொடரை நன்கு கவனித்துச் செல்ல வேண்டிய இடங்களை உறுதி செய்து கொண்டோம்.  ஆனால் எப்படிச் சென்றாலும் சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடியாக ரயில் பயண வசதி இல்லை.  லக்னோவிற்கு ரயில் இருப்பதாகச் சொல்கின்றனர்.  மூன்று நாட்கள் பயணம்.  முன்னெல்லாம் போயிருக்கோம் தான்.  ஆனால் இப்போ முடியுமா?  அப்போது தான் எங்கள் நெருங்கிய நண்பரும், நாங்கள் மானசிகமாய் குருவாக நினைப்பவருமான திரு காழியூரர் விமானப் பயணத்தை சிபாரிசு செய்தார்.  கட்டணம்???  ஏ.சி.க்கும் இதுக்கும் அப்படி ஒண்ணும் பெரிய அளவு வித்தியாசம் இல்லை.  ஆனால் விமானப் பயணக் கட்டணம் பேரம் செய்து குறைச்சலாக வரும்போது பதிவு செய்யணும்.

விமானப் பயணக் கட்டணம் குறைவாக வரும் நாளாகப் பார்த்துக் கொண்டே இருந்தோம். நாங்கள் செல்ல வேண்டிய தினத்தை முடிவு செய்தோம்.  விமானப் பயணக் கட்டணம் ஓரளவு குறைச்சலாய்க் கிடைக்கிறது என்பது தெரிந்ததும், இங்குள்ள  ஏஜென்ட் மூலம் இருப்பதிலேயே குறைவான விமானக் கட்டணம் உள்ள இன்டிகோவைத் தேர்ந்தெடுத்து டிக்கெட்டெல்லாம் வாங்கிட்டோம்.  விஜயதசமி கழிந்த அக்டோபர் பதினாறாம் நாள் சென்னையிலிருந்து லக்னோ செல்ல விமான டிக்கெட் தயார். சென்னைக்குச் செல்லத் திருச்சியிலிருந்து பல்லவனில் விஜயதசமி அன்று செல்லவும் டிக்கெட் வாங்கியாச்சு. சென்னை சென்று உறவினர் வீட்டில் தங்கி அங்கிருந்து விமான நிலையம் சென்று லக்னோ செல்லத் திட்டம்.  சென்னையில்  இரு தினங்கள் நல்லபடியாக முடிந்து லக்னோ செல்லவும் சென்னை விமான நிலையம் கிளம்பிவிட்டோம்.  இந்த விமானம் நேரடியாக லக்னோ செல்லாதாம்.  டெல்லி சென்று அங்கிருந்து வேறு விமானம் மாற வேண்டுமாம்.  அது வேறேயா!  கடவுளே!

இதிலே என்ன வேடிக்கைன்னா, ஹைதராபாத், பெண்களூருக்கு நேரடி விமான சேவை இருக்கிறது.  சென்னைக்கு மட்டும் கிடையாதாம்.  என்ன அநியாயம்! 


இப்போதெல்லாம் உள்நாட்டு விமான சேவையில் உணவு கொடுப்பதில்லை.  உணவு வண்டி வரும்.  ஆனால் அதுக்கு நாம் தனியாக விலை கொடுத்து வாங்க வேண்டும்.  ஒரு டீ 75 ரூக்குக் கொடுக்கிறாங்க.  காஃபி என்றால் 90 ரூ,  டிபன், காபி சேர்த்து வாங்கினால் ஒருத்தருக்குக் குறைந்தது 250 ரூ ஆகிறது.  ஆகையால் நாங்க தங்கி இருந்த உறவினர் வீட்டிலேயே சொல்லிக் கையில் இட்லி,, புளியோதரை, காஃபி போன்றவை வாங்கிக் கொண்டோம். விமான நிலையம் வந்து செக்யூரிடி செக்கப் எல்லாம் முடிந்து விமானத்தில் ஏறி உட்கார்ந்து காலை ஆகாரம் மட்டும் காஃபியோடு சாப்பிட்டோம்.  டெல்லி வந்ததும், லக்னோ போக விமானம் அடுத்த கட்டிடத்தில் உள்ள டெர்மினலில் இருந்து கிளம்பும் என்ற செய்தியைப் பெற்றுக் கொண்டு, அந்தக் கட்டிடத்தில் இருந்து வெளியே வந்து பக்கத்துக் கட்டிடம் விரைந்தோம்.  அங்கே செக்யூரிடி செக்கிங் முடித்துக் கொண்டுவிமானம் கிளம்பும் வாயிலுக்குச் செல்ல நேரம் இருந்தமையால் சற்று உட்கார்ந்து ஆசுவாசப் படுத்திக் கொண்டு பின்னர் விமானத்துக்குக் கிளம்பினோம்.  விமானத்தில் ஏறி உட்கார்ந்து விமானம் கிளம்பியது தான் தெரியும்.  சரியாக உட்கார்ந்து கொள்வதற்குள்ளாக விமானம் தரை இறங்க ஆரம்பித்துவிட்டது.  லக்னோவுக்கு ஒரு மணி நேரத்துக்கும் குறைவாகப் பயண நேரம்.  விமானத்திலிருந்து வெளியே வந்து சாமான்களைப் பெற்றுக் கொண்டு விமான நிலைய வாயிலுக்கு வந்தால் எங்கே போவது, எங்கே தங்குவது என ஒண்ணும் புரியவில்லை.

சற்று நேரம் முழி, முழினு முழிச்சோம்.  அங்கே இருந்த உ.பி. சுற்றுலா மையம் அலுவலகத்திற்குச் சென்று பார்த்தோம்.   யாரையும் காணோம்.  அக்கம்பக்கம் விசாரிக்கலாம்னால் கூட யாருமே இல்லை.  அந்தப் பக்கமாக வந்த செக்யூரிடியை விசாரித்தோம்.  அலுவலர் எப்போவானும் வருவார்னு தெரிஞ்சது. என்ன செய்யலாம்னு யோசித்துவிட்டு லக்னோவில் முதல்லே தங்கி இடம் பார்த்துக் கொண்டு பின்னர் முடிவு செய்யலாம்னு நினைச்சுக் கொண்டு போன புளி சாதத்தைச் சாப்பிட்டுவிட்டு, ப்ரி-பெய்ட் ஆட்டோ(நல்லவேளையா விமான நிலையத்தின் உள்ளேயே இருக்கு) கேட்டு, அவங்களே ஆலம்பாக் என்னும் இடம் சென்றால் தங்க நல்ல ஹோட்டல்கள் கிடைக்கும்னு சொல்லி ஒரு காரை புக் செய்து கொடுத்து அனுப்பி வைச்சாங்க.  அந்தக் காரும் வந்து எங்களை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது.  அங்கே போனால் தங்க அறை இருக்கு.  ஆனால் வாடகை!!!  அம்மாடியோவ்!  விமானக் கட்டணத்தை விடவும் அதிகம்.  ஏ.சி. அறை வேண்டாம்னு சொல்லிப் பார்த்தோம். ஏ.சி. தான் கொடுப்போம்னு பிடிவாதம். சரினு அங்கேருந்து கிளம்பி வேறே ஹோட்டல் பார்த்துக் கொண்டு போகையில் நம்மவருக்குத் திடீர்னு ஒரு யோசனை!

நேரே அயோத்யா போயிட்டால் என்ன? 

எப்படி?

இந்தக் காரிலேயே!

கட்டுப்படி ஆகுமா?

இப்போக் கும்பகோணம் எல்லாம் போகலையா?  இந்த ஊரிலே எல்லாம் பஸ்ஸிலே ஏறிப் போக முடியாது! தமிழ்நாடா? இல்லை கர்நாடகாவா?

கேட்டுப் பாருங்க.

கேட்டோம். அந்த டிரைவருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்  அவரோட முதலாளி கிட்டே ஃபோனில் பேசினார்.  அவர் சரினு சொல்லி ரேட்டையும் ஃபிக்ஸ் பண்ணிக் கொண்டோம்.  அங்கிருந்து அயோத்யா கிளம்பிட்டோம். லக்னோ உ.பி.யின் தலைநகரம்.  என்றாலும் சாலைப் பராமரிப்பு என்பதே இல்லை.  அந்தச் சாலையில் மேடு, பள்ளங்களில் காரில் பயணிக்கையிலேயே சிறிது நேரத்திலேயே முதுகு வலி ஆரம்பம். தகர டப்பாவைப் போன்ற ஒரு பேருந்து அயோத்யாவுக்குச் சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் போனால் இரவு பத்து மணிக்கு அயோத்யா போய்ச் சேரலாம் என டிரைவர் சொன்னார். அயோத்யாவிலே தங்குமிடம் கிடைக்குமா?  சாப்பாடு வசதி எல்லாம் எப்படியோ தெரியலையே!  பெரிய ஊரா, சின்ன ஊரா?  எதுவுமே புரியலை.  மணி மாலை நான்காகிக் கொண்டிருந்தது. கிழக்குப் பகுதி என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக இருட்ட ஆரம்பித்தது.  சுற்று வட்டாரங்களிலோ, ஹைவேஸ் எனப்பட்ட அந்தச் சாலையிலோ விளக்கு என்றால் என்ன என்று கேட்கும் வண்ணம் ஒரு மெழுகு வர்த்தி விளக்குக் கூடக் கிடையாது.  எந்தக் கிராமங்களிலும் மின் வசதி என்பதே இல்லை. 

ஆனால் எல்லாக் கிராமங்களிலும் உள்ள சின்ன மண் குடிசைகளில் கூடக் குறைந்தது ஒரு பசுவும், எருமையுமாவது இருந்தது.  கால்நடைச் செல்வங்களை அங்கே கண்டாற்போல் இங்கே தமிழ்நாட்டில் காணமுடிவதில்லை.  அதோடு அங்கே இன்னமும் பச்சைப் பசும்புற்களையே மாடுகள் சாப்பிடுவதோடு வயல்களிலும் இயற்கை உரமே ஆங்காங்கே மலை போல் குவித்து வைத்துப் போட்டு வருகிறார்கள். பல இடங்களில் மாடுகள் உழுவதையும் பார்த்தேன்.  படம் எடுக்கலாமேனு கேட்பீங்க. அப்போ இருந்த டென்ஷன் மட்டுமில்லாமல், வண்டி குதித்துக் குதித்துப் போனதால் காமிரா நழுவிவிடுமோனும் பயம்.  இவ்வளவு வசதிக் குறைவு இருந்தும் மக்கள் அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.  இனி வேகமாகச் செல்வோம்.


--Geetha Sambasivam (பேச்சு) 11:57, 25 டிசம்பர் 2013 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 25 டிசம்பர் 2013, 11:58 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,305 முறைகள் அணுகப்பட்டது.