லெமூரியா-ஆய்வுக் கட்டுரை--1

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
லெமூரியா-  குமரிக்கண்டம்- கோண்ட்வானா 

“லெமூரியாதான் குமரிக்கண்டம் , குமரிக்கண்டம்தான் லெமூரியா” என்று முன்பெல்லாம் சில தமிழறிஞர்களும் – தமிழார்வலர்களும் எழுதியும் பேசியும் வந்தனர். இப்போதும் சிலர் இதை உறுதியாக நம்புகின்றனர். இதனிடையே, அண்மைக் காலமாக வெளிவரும் நூல்களில், குமரிக் கண்டம் பற்றி எழுதும் தமிழார்வலர்கள் ‘குமரிக் கண்டம்’ எனும் சொல்லைத் தொடர்ந்து அடைப்புக் குறிக்குள் ‘கோண்ட்வானா‘ என்று எழுதுகிறார்கள்.

ஆய்வரங்கங்களிலும் ,கருத்தரங்கங்களிலும் “குமரிக் கண்டம் அல்லது கோண்ட்வானா” என்று பேசுகிறார்கள். குமரிக்கண்டம்- லெமூரியா – கோண்ட்வானா இம்மூன்றும் ஒன்றுதான் என்பது, உண்மையல்ல.  


லெமூரியா


பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் கண்டுபிடிக்கப்பட்ட ரயில்வண்டி 1850 களில் பல நாடுகளிலும் பரவத் தொடங்கியது. அப்போது ரயில் வண்டியை இயக்கத் தேவைப்படும் நிலக்கரிப் படிவங்களைத்  தேடும் பணியில் புவியியலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இந்தியாவில் 1853 ஆம் ஆண்டு ரயில் அறிமுகப் படுத்தப் பட்டது. நிலக்கரிப் படிவங்களை கண்டுபிடிப்பதற்கென்றே 1851 ஆம் ஆண்டு ஜியலாஜிக்கல்  சர்வே ஆப்  இந்தியா துவங்கப் பட்டது. இந்தத் துறையை சேர்ந்த புவி இயலாளர் ‘மெட்லிகாட்’ , இந்தியாவின் கிழக்குப் பகுதியில் மேற்கு வங்கம், ஜார்கண்ட் , மத்தியப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதி இங்கெல்லாம் நிலக்கரிப் படிவங்களை கண்டுபிடித்தார். நிலக்கரி உள்ள  படிவப் பாறைகளில் ‘கிளஸ்ஸாப்டேரிஸ்’  எனும் தொல் தாவர இலை எச்சங்களையும் அவர் கண்டு பிடித்தார். 
சற்றேறக்குறைய  இதே காலகட்டத்தில் தென் அமெரிக்கா , ஆஸ்த்ரேலியா ஆகிய பகுதிகளிலும் இதே போன்ற தொல்லுயிரெச்சங்கள் உள்ள படிவப் பாறைகள் ஐரோப்பிய புவியியலாளர்களால் கண்டறியப் பட்டன. தொல்தாவர எச்சங்கள் மட்டுமின்றி, ‘தேராப்சிட்ஸ்’ எனும் தரை வாழ் விலங்கினத்தின் தொல்லுயிர் எச்சங்களும் இபகுதிகளில் கண்டு பிடிக்கப்பட்டன.


தென் அமெரிக்கா , தென்னாப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில்  காணப்படும் “பெர்மியன்” காலத்தைச்( சுமார் 26 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது) சேர்ந்த, இப்படிவப் பாறைகளும், அவற்றிலுள்ள தொல்லுயிரெச்சங்களும், ஒன்றை ஒன்று மிகவும் ஒத்திருந்தன . இன்று பல ஆயிரம் கி.மீ. அகலமுள்ள கடலால் பிரிக்கப் பட்டுள்ள நிலப் பரப்புகள் ஒன்றிலிருந்து ஒன்றிற்கு அந்தக் காலத்தில் விலங்குகள் எப்படி இடம் பெயர்ந்து சென்றிருக்க முடியும் ?  எனவே, ‘இந்த கண்டங்களுக்கு இடையே இவற்றை இணைத்த வண்ணம் ஒரு பெரும் நிலப் பரப்பு, பாலம் போல் இருதிருக்க வேண்டும்- அந்த  நிலப்பரப்பின் வழியாகத்தான் விலங்குகள் ஒரு கண்டத்தில் இருந்து மற்றொரு கண்டத்திற்கு சென்றிருக்க வேண்டும் – பின்னர் அந்த  நிலப்பரப்பு கடலில்  மூழ்கியிருக்கவேண்டும்’ என்று பிரிட்டிஷ் புவியியலாளர்கள் நினைத்தார்கள். இதன் அடிப்படையில், தென் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, மடகாஸ்கர் , இந்தியா மற்றும் ஆஸ்த்ரேலியாவிற்கு இடையே ஒரு பெரும் நிலப்பாலம் இருந்திருக்க வேண்டும்’ எனும் கோட்பாட்டை 1860 ஆம் ஆண்டு, ‘எர்னெஸ்ட் ஹெயின்ரிச் ஹேக்கல்’ எனும் புவியியலாளர் முன் வைத்தார். மடகாஸ்கர் தீவில் வாழ்ந்து வரும் ‘லெமூர்’ எனும் விலங்கினம் இந் நிலப்பரப்பில் நிறைய இருந்திருக்க வேண்டும் என்று எண்ணிய ‘பிலிப் ஸ்க்லேட்டர்’ எனும் உயிரியலாளர், இப்பெரும் நிலப் பரப்பிற்கு “லெமூரியா” என்று பெயர் வைத்தார்.  


  குமரிக்கண்டம் 

ஆக , லெமூரியா என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் நிலவிய கருத்துக்களின் அடிப்படையில் எழுந்த ஒரு புவி உயிரியல் கோட்பாடு என்பது தெளிவு. ‘அல்ல,அல்ல, லெமூரியா என்பது ஓர் தமிழ்ச்சொல்லே’- என வாதிடுவோரும் உளர். மதிவாணன் எனும் ஓர் அன்பர் எழுதிய சிறு நூல் ஒன்றில் , அந்த அன்பர் கூறுவதாவது.
“ குமரிக் கண்டம் முழுதும் மூலிகைகள் நிறைந்திருந்தன- எல்லாம் இலைகள் –இலை மூலிகைகள், மூலிகை என்பது மூலிரை என்று மருவும்- இலைமூலிகை என்பது, இலைமூலிரை என மாறும் – இலைமூலிரை என்பது மருவி இலெமூரிய என்றாகும், ஆதலின் குமரிக்கண்டம் தான் லெமூரியா “  


சரி,  இப்போதைக்கு லெமூரியாவை விட்டு விட்டு குமரிக் கண்டம் பக்கம் வருவோம். குமரிக் கண்ட கோட்பாட்டிற்கு வித்திட்டவர்கள், இடைக்கால உரையாசிரியர்கள் – இளம்பூரணர்,  அடியார்க்கு நல்லார்  (காலம்-பன்னிரெண்டாம் நூற்றாண்டு ?), போன்றோர் எனத் தெரிகிறது. காரணம், சங்க இலக்கியங்கள் , பதினெண் கீழ் கணக்கு நூல்கள், இரட்டைக் காப்பியங்கள் , பக்தி இலக்கியங்கள் இவை எதிலும் குமரிக் கண்டம் எனும் சொல் காணக் கிடைக்கவில்லை. (இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்). சிலம்பில் , புகார் காண்டம் வேனிற் காதையில், “ நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ் வரம்பறுத்த தண் புனல் நாடு “ என்று தமிழ்நாடு பற்றிய நேரான தெளிவான கருத்து காணப்படுகிறது. தொடியோள் என்றால் குமரி- பௌவம் என்றால் கடல் என்று நேரடியாகப் பொருள் கொள்ளாமல் “ தொடியோள் நதியும் என்னாது, பௌவம் என்றது என்னையெனின் – பஃக்றுளி ஆற்றிற்கும் குமரி என்னும் ஆற்றிற்கும் இடையே நாற்பத்தியொன்பது நாடுகளும் கடல் கொண்டு ஒழிந்ததால் குமரியாகிய பௌவம் என்றார்” என்று அடியார்க்கு நல்லார் விரித்து எழுதியுள்ளார். அடியார்க்கு நல்லார் பன்னிரெண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர்- அரும்பத உரை ஆசிரியரின் உரையைத் தழுவி சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர் என்று கருதப் படுகிறது.




கட்டுரை ஆக்கம் : திரு சிங்கநெஞ்சம் சம்பந்தம் 

 

--Geetha Sambasivam (பேச்சு) 08:53, 4 மே 2014 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 4 மே 2014, 08:54 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,407 முறைகள் அணுகப்பட்டது.