மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 6

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழிய சென்றுசெருச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே போதராய்!
சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்!

2thiruppaavai.jpg

கற்றுக்கறவை கணங்கள் பல கறந்து= கற்றுக்கறவை இங்கே இளங்கன்று மாட்டைக் குறிக்கும். பசுமாடு மிகச் சின்ன வயசிலேயே கன்றை ஈன்று பால் கொடுக்குமாம். அத்தகைய கற்றுக்கறவையில் இருந்து இன்னும் வயது அதிகம் ஆன பல பசுக்கள், அதுவும் எப்படி கணங்கள்னு சொல்கிறாள் ஆண்டாள். இங்கே கூட்டம் னு பொருள் கொள்ளலாம். அத்தகைய பசுக்கள் நிரம்பிய கூட்டங்கள், எண்ணிப்பார்க்கமுடியாத அளவுக்குப் பசுக்கள். அப்படிப்பட்ட பசுக்களிடம் இருக்கும் பாலையெல்லாம் கறக்கும் ஒரு கோபனின் பெண்ணைப் பார்த்து இந்தப் பாடலைப் பாடுகிறாள் ஆண்டாள்.


அந்த கோபன் பசுக்களிடம் பால் தாராளமாய் இருக்கிறதேனு கறக்கவில்லை. கன்று குடிச்சும் பால் மடியில் நிரம்பிப் பால் கட்டிக்குமாம் பசுக்களுக்கு. அது அவற்றுக்குத் தரும் துன்பத்தை நீக்கவே பாலைக் கறக்கிறானாம்.


செற்றார் திறலழிய சென்றுசெருச் செய்யும்= செற்றார் இங்கே அசுரர்களைக் குறிக்கும். பொதுவாய் எதிரிகள் என்று கூறினாலும் இங்கே அந்த கோபருக்கு எதிரிகள் யார்னு கேட்டால் கண்ணனை அழிக்க வரும் அசுரர்களே எதிரிகள் ஆவார்கள். ஆகவே தேடித் தேடிக் கண்ணனின் எதிரிகளை அழிக்க இவரும் கிளம்பிடுவாராம். கண்ணனின் எதிரிகள்னு தெரிஞ்சாலே போதுமாம், அவர்களை அழிக்கக் கிளம்பிடுவாராம்.


குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே= அத்தகைய நற்குணங்கள் நிரம்பிய குற்றம் ஒன்றுமே கூறமுடியாத அளவுக்குக் கடமை வீரராய் இருந்து கண்ணன் தொண்டே நம் முதற்கடமை என்றிருக்கும் கோபனின் பெண்ணாகிய கொடி போன்ற பெண்ணரசியே, இங்கே கொடியைக் குறிப்பிட்டிருப்பது மேலாகப் பார்த்தால் மெல்லிய தேகத்தைச் சுட்டுவதாக இருந்தாலும், கண்ணன் என்ற நாமத்தைச் சொன்னாலேயே இவள் உயிர்வாழ்கிறாளன்றி அவன் நாமம் இல்லையெனில் இவள் கொழுகொம்பில்லாத கொடிபோல் வாடுகிறாள் என்பதையும் கூறும்.


புற்றர வல்குல் புனமயிலே போதராய்= புற்றரவு அல்குல் =இடுப்பிலே மேகலை, ஒட்டியாணம் போன்ற ஆபரணங்கள் தரிக்கும் இடம், தொப்புள் னும் சொல்லலாம். அது எப்படி இருக்கிறது என்றால் பாம்பு புகுந்து புறப்படும் புற்றைப் போல் சிறுத்து இருக்கிறதாம். இங்கே சிறுத்து இருப்பது இடையைனு நேரடி அர்த்தம் வந்தாலும் கண்ணன் நாமத்தைச் சொல்பவர்களுக்கு ஆசைகளும் சிறுத்துக் கண்ணனின் நாமம் ஒன்றே பெரும் செல்வம் என்ற எண்ணம் வரவேண்டும் என்பதையும் குறிக்கும். பொதுவாய் பெண்களின் உடற்கூறுகளைப் பற்றிய இந்தக் குறிப்புக்கள் உள்ளார்ந்த அர்த்தம் பொதிந்தவை என்பதை மனதில் கொண்டு படிக்கவேண்டும்.


அடுத்துப் புனமயிலே போதராய்= மயில் தோகை விரிந்தாற்போல் விரிந்த கூந்தலை உடைய பெண்ணே

சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்


முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட= இங்கே இருக்கும் நம் சுற்றம், நண்பர் வட்டம் அனைத்துத் தோழிகளும் சேர்ந்து வந்து உன் வீட்டு முற்றத்தில் இந்தக் குளிரில் பனியில் நின்று கண்ணனின் புகழைப் பாடிக்கொண்டிருக்கிறோமே, உன் காதில் விழவில்லையா?? இங்கே நாங்கள் கண்ணன் பேரைச் சொல்லிப் பாடிக்கொண்டிருக்க உள்ளே நீ அதைக் கேட்டு ஆநந்தித்துக்கொண்டு இருந்த இடத்தை விட்டு நகராமல் இருக்கிறாயே?


சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்!= என்னடி இது பெண்ணே, இப்படியும் ஒரு பெண் இருப்பாளா?? செல்வம் நிறைந்த பிராட்டியாக நீ இருந்தால் எங்களுக்கு என்ன வந்தது?? இதுதான் கண்ணனிடம் நீ வைத்திருக்கும் பக்திக்கு அழகா? இது அத்தனையையுமா கேட்டுக்கொண்டு இன்னமுமா நீ உறங்குகிறாய்? சீக்கிரமாய் வா பெண்ணே!


மேலே கூறியது பாகவத லக்ஷணங்கள் என்று கூறலாம். கண்ணனை நினையாத மனமும், கண்ணனுக்காக உருகாத உள்ளமும், கண்ணனுக்காக ஒழிக்காத ஆசையும் எதற்கு என ஆண்டாள் கேட்கிறாள்.


கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால்சோர
நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!
இனித்தானெ ழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத் தாரும் அறிந்தே லோரெம்பாவாய்!

Images thiruppavai.jpg

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால்சோர
நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!= எருமை மாடுகள் கறக்க ஆளில்லாமல் பால் கட்டி அவஸ்தைப் படுகின்றனவாம். அதோடு கன்றுக்கு ஊட்டவும் முடியாமல் மாடுகள் கட்டிப் போடப் பட்டிருக்கின்றன. இங்கே கட்டுதல் என்பது அறியாமையில் நாம் கட்டப் பட்டிருப்பதையும் சொல்லலாம். எருமையும் அறியாமையின் அடையாளமே என முன்னரே பார்த்தோம். அப்படிக் கட்டிப் போட்டிருக்கும் எருமைகள் பால் கனம் தாங்க முடியாமல் தானாகவே பாலைச் சொரிகின்றன. அந்தப்பாலெல்லாம் கீழே விழுந்து கோபர்களின் இல்லமெல்லாம் பாலும், மண்ணும் கலந்து சேறாகிவிட்டதாம். இந்த கோபன் இல்லை போலும், அதான் பால் கறக்க ஆளில்லை!


அவன் எங்கேயும் போகவில்லை. நற்செல்வன் ஆச்சே! வெறும் பொருளால் ஆகிய செல்வம் மட்டும் இல்லை அவனிடம், அவனிடம் சிறந்த பக்திச் செல்வமும் இருப்பதாலேயே கோதை அவனை நற்செல்வன் என்று கூறுகிறாள். அத்தகைய நல்ல பக்திச் செல்வம் நிறைந்தவனின் தங்கை வீட்டிற்கு இப்போது போயிருக்கிறாள் ஆண்டாள். அவளை எழுப்புகிறாள்.


பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்! = பனி கொட்டுகிறது. அதுவும் கோகுலத்தில் கேட்கவும் வேண்டுமா?? கொட்டும் பனியில் நனைந்து கொண்டு கீழே நிற்கலாம் என்றால் கீழேயும் பால் கொட்டிச் சேறு. இத்தனை அமர்க்களத்தில் நாங்கள் நிற்க முடியாமல் உன் வீட்டு வாசல் கதவைப் பிடித்துக்கொண்டு நிற்கிறோம். என்கிறாள் ஆண்டாள். அப்படியும் அவள் அசைந்தே கொடுக்கவில்லை.


சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற = சினம் என்ன சாதாரண சினமா? தன் மனைவியைச் சிறைப்பிடித்த சினம். சிறைப்பிடித்தவனும் சாமானியன் அல்லவே. சிறந்த சிவபக்தன். நவகிரஹங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவற்றைத் தான் மிதிக்கும் படியாகப் போட்டுக்கொண்டவன். தன் அண்ணனாகிய குபேரனின் செல்வத்தைக் கொள்ளை அடித்து அவனை லங்காபுரியிலிருந்து அலகாபுரிக்கு விரட்டி அடித்தவன். ஈசனிடமே சரிக்குச் சரியாக நின்று அவரை ஆட்டி வைக்கப் பார்த்துப் பின்னர் அவர் கால்விரலின் கனம் தாங்காமல் கத்தோ கத்துனு கத்தி அதனால் ராவணன் என்ற பெயரும், சந்திரஹாசம் என்ற வாளும் பெற்றவன். இப்படிப் பட்ட ராவணனைத் தோற்கடித்தவன் யார்??


மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!
இனித்தானெ ழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத் தாரும் அறிந்தே லோரெம்பாவாய்! =வேறே யாரு? நம்ம மனதுக்கு இனியவனே என்கிறாள் ஆண்டாள். ஆமாம், இந்தக் கண்ணன் படுத்தற பாடு தாங்கலை தான். கோபியர்களை அங்கேயும், இங்கேயும் அலைக்கழிக்கிறான். திடீர்னு ஒருத்திக்குப் பூச்சூட்டுகிறான் இன்னொருத்திக்குத் தலை வாரிவிடுகிறான். வேறொருத்தியின் வீட்டில் வெண்ணெய் சாப்பிடுகிறான். சரினு பார்த்தால் நம் வீட்டு முற்றத்திலே நிற்கிறான். புல்லாங்குழல் பாட்டிசையைக் கேட்டுப் போனால் ஒளிஞ்சுக்கறான்.


ஆனால் ஸ்ரீராமன் அப்படி இல்லை. கருணாமூர்த்தி! தனக்குத் தீமை செய்தவர்களுக்குக் கூட நன்மையே செய்பவன், ராவணனைக்கூட இன்று போய் நாளை வா என்றே பெருந்தன்மையாய்க் கூறினான் அன்றோ! ஆகவே ஏ, பெண்ணே இந்தக் கண்ணன் நாமம் வேண்டாம், சரியா, ராவணனுக்கே சரணாகதி கொடுக்கத் தயாராய் இருந்த ஸ்ரீராமன் நமக்கும் கொடுப்பான். அத்தகைய மனதுக்கு இனிய நற்குணங்கள் நிரம்பிய ஸ்ரீராமனைப் பாடுவோம் வா, நாங்களும் அவன் புகழைப் பாடுகிறோம். நீ என்னன்னா இன்னும் தூங்குகிறாயே! எழுந்திரு பெண்ணே! இனியாவது எழுந்திரு! அக்கம்பக்கம் எல்லாம் பார்க்கிறாங்க பார்! எங்களுக்கு ஒண்ணுமில்லை அம்மா, உனக்குத் தான் அவமானம், இப்படியும் ஒரு பெண் இத்தனை பேர் இத்தனை நேரம், இத்தனைப் பாட்டுப்பாடியும் தூங்கறாளேனு சொல்லுவாங்க. வா, வா சீக்கிரமாய்!


--Geetha Sambasivam 09:37, 6 ஜூலை 2011 (UTC)




பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 7 ஜூலை 2011, 10:26 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,665 முறைகள் அணுகப்பட்டது.