மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 11

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுராய்!
ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலேழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்!

Parkadal.jpg

இது வரைக்கும் பிராட்டியையும், பரமாத்மாவையும் சேர்த்து எழுப்பினாங்க. இப்போப் பிராட்டி எழுந்து வந்துவிடுகிறாள் போலும். ஆகையால் இந்தப் பாசுரம் பிராட்டியும் சேர்ந்தே பகவானை எழுப்பியதாய் ஐதீகம்.


ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்= ஏற்கெனவேயே நந்தகோபன் வீட்டுப் பசுக்களின் எண்ணிக்கையை எண்ணிமுடியாது என்பதைப் பார்த்தோம். இங்கே அவைகள் அனைத்தும் கறக்கும் பாலைப் பற்றிச் சொல்லி இருக்கிறது. எத்தனை பாத்திரங்கள் எடுத்து வந்தாலும் அவை எல்லாமே நிரம்பி வழியும்படியாகப் பாலைச் சொரியுமாம் பசுக்கள். அவற்றை வள்ளல் பெரும்பசுக்கள் என்கிறாள். அப்படி பாலைப் பொழியும் பசுவைப்போல நீயும் உன் கருணை மழையைப்பால் போல் எங்கள் மேல் சொரிந்துவிடு என் அப்பா என்றே கேட்கிறாள்.


ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுராய்!
ஊற்றமுடையாய்! பெரியாய்! = இவ்வளவு பெருந்தன்மை பொருந்திய நந்தகோபனின் மகனே, நீ எங்களை மறந்தாயோ? நீயல்லவோ இந்த உலகின் படைத்துக் காத்து, ரக்ஷித்து என அனைத்தையும் இடைவிடாது செய்து வருகிறாய்?? அதிலே நீ சற்றேனும் அயரவில்லையே? உற்சாகமாய்ச் செய்து வருகிறாயே? நீ எவ்வளவு பெரியவன்?? இவ்வுலகில் முதன் முதல் தோன்றியவனே நீயன்றோ. எண்ணி அடங்க முடியாத அநாதிகாலம் தொட்டே இருக்கும் எப்போது தோன்றினாய் என்றே சொல்லமுடியாதபடி இருக்கும் பெரியவனே.


உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலேழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்= ஏ பரம்பொருளே, ஜோதிவடிவானவனே, நீ இருக்கிறாய் என்பதை எல்லாரும் சொல்கிறார்கள் என்று மட்டும் நாங்கள் நம்பவில்லை. நீயே எங்கள் மத்தியில் வந்து எங்கள் குலத்தில் வந்து தோன்றினாயே? நாங்கள் அணுகுதற்கு எளிமையாக எங்களிடையே வந்து தோன்றிய அருள் பெரும் சுடர் வடிவானவனே. துயிலில் இருந்து எழுந்திரு. மாற்றார்களான அரக்கர்கள் கூட உன்னெதிரில் தங்கள் வலிமையைத் தொலைத்துவிட்டு உன்னிடமே அடைக்கலம் ஆகின்றனரே. அவர்களையும் நீ உன் அடிபணியச் செய்தாயே.


ஆற்றாது வந்துன் அடிபணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்!= உன் சத்ருக்கள் உன்னை எதிர்த்தாலும் கடைசியில் உன் வீரத்துக்கு அடிபணிந்து உன்னிடமே அடைக்கலம் ஆனார்கள். உன் பக்தர்களான நாங்களோ உன் குணத்துக்கு, உன் பெருமைக்கு, உன் கருணைக்குத் தோற்றுப் போய் உன்னிடம் நீயே சரண் என்று வந்திருக்கிறோம். உன்னையே நாங்கள் எந்நாளும் போற்றிப் பாடி வந்திருக்கிறோம். உன்னை நினையாமல் எங்களால் இருக்கமுடியாது. உன் புகழைப்பாடாமல் இருக்க இயலாது.


அங்கண் மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்!
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாவோ!
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
அங்கணிரண்டுங் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல்சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்!

Thiruparkadal01.jpg

அங்கண் மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்!= இங்கே ஆண்டாள் கண்ணன் ஒரு அரசனாக இல்லாதிருந்தபோதும் பல பெரிய சாம்ராஜ்யத்தின் அரசர்கள் அனைவரும் அவன் உதவி வேண்டி, அவன் ஆற்றலை வேண்டி அவனிடம் வந்து இறைஞ்சியதை நினைவூட்டுகிறாள். மஹாபாரதத்திலேயே பார்க்கலாம் இதை. கண்ணன் யாருக்கு உதவி செய்கிறானோ அவர்பக்கமே வெற்றித் திருமகள் இருப்பாள் என்ற எண்ணம் தோன்றிய துரியோதனன் கண்ணனின் படைவீரர்களின் உதவி முழுதும் தனக்கே கிடைக்கவேண்டும் என்று வந்து காத்திருக்கிறான்.


முதலில் கண்ணனின் காலடியில் அவன் கண்பார்வை படும் வண்ணம் அமர்ந்திருந்தான் துரியோதனன். ஆனால் பின்னர் செருக்கு மீதூறக்கண்ணன் தலைமாட்டில் வந்து அமர்கிறான். தூங்கும் கண்ணன் நம்மைத் தான் முதலில் கவனிப்பான் என்று எண்ணி அவனிடம் உதவியைக் கேட்டுவிடலாம் என்ற எண்ணம் அவனுக்கு. அடுத்து வந்தான் அர்ஜுனன். கண்ணன் தூங்குவதைக் கண்டான். அவன் சிவந்த பாதங்கள் சற்றே வெளியே தெரிந்தன. செந்தாமரை மலர்கள் போன்ற அந்தத் திருப்பாதங்கள் தங்கள் ஐவருக்காகவும் கால் நோக தூது நடந்ததை நினைத்தான். அவன் கண்களில் நீர் பெருகிற்று. கண்ணன் மேல் பாசமும், அன்பும் மீதூறக் காலடியில் அமர்ந்து அவன் கால்களைப்பிடித்துவிட ஆரம்பித்தான்.


கண்ணனின் முகத்தில் குறுநகை துலங்கக் கண்விழித்தான். துரியோதனன் நினைத்தது போலவே அருகே அமர்ந்திருந்தஅவனைக் கண்ணன் முதலில் பார்க்கவில்லை. முதலில் பார்த்தது அர்ஜுனனைத் தான். எனினும் துரியோதனனும் அருகே அமர்ந்திருப்பதை உணர்ந்த கண்ணன் அவனிடம் என்ன வேண்டும் துரியோதனா என்று கேட்க துரியோதனனுக்கு உள்ளூற மகிழ்ச்சி. ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தன் வேண்டுதலைக்கூறுகிறான் துரியோதனன். "இரு துரியோதனா, காலடியில் அமர்ந்திருப்பது யார்? நான் கவனிக்கவில்லையே? அவரையும் என்னவெனக் கேட்கிறேனே! மேலும் முதலில் நான் பார்ப்பவருக்கு அன்றோ முதலில் என் உதவியைத் தரமுடியும்? அது தானே நியாயமும் கூட?" என்றான் கண்ணன். துரியோதனன், "ம்ம்ம்ம்" என்று கோபத்தோடு உறுமினான்.


"கண்ணா, பேச்சு மாறாதே! நீ முதலில் எவரைக் காண்பாயோ அவருக்கே உதவி செய்வதாய் வாக்குக் கொடுத்திருக்கிறாய்!" துரியோதனன் கோபத்தோடு உறுமினான். "ஆம், துரியோதனா, ஆனால் என் கண்கள் கண்டது முதலில் அர்ஜுனனை அன்றோ?"


"இரு அப்பா, இவன் சொல்வதையும் கேட்டுவிடுகிறேன், உனக்கே நான் முதலில் உதவி செய்வேன்." என்று கூறிய கண்ணன் காலடியில் அமர்ந்திருப்பது அர்ஜுனன் எனத் தெரிந்து கொள்கிறான். அவனுக்குத் தெரியாததா? புரியாததா? எனினும் அப்போதுதான் தெரிந்தாற்போல் காட்டிக்கொண்டான். "அர்ஜுனா, நீயா? ம்ஹும் தாமதம் செய்துவிட்டாயே! துரியோதனன் முதலிலேயே வந்துவிட்டானாமே? என்னால் என் படை வீரர்களை ஒருவருக்கும், நான் மட்டும் எந்த ஆயுதமும் இல்லாமல் இன்னொருவருக்கும் உதவ முடியும். இந்த இரண்டு உதவிகளில் உனக்கு எது வேண்டும்?? "


அர்ஜுனன், "கண்ணா, எனக்கு நீ ஒருவனே போதும், உன்னையன்றி எனக்கு வேறு துணை எதற்கு?" என்று கூற, கண்ணனும் குறுநகை மாறாமல், "அப்படியா? எனில் துரியோதனனுக்கே என் படை மொத்தமும் பணி செய்யும்! நீ காலடியில் அமர்ந்திருந்ததால் தெரியவும் இல்லை. மேலும் முதலில் வந்ததும் துரியோதனன் அன்றோ?"


"கண்ணா, எனக்கு உன் படையோ, உன் வீரர்களோ, உன் ரதங்களோ, உன் யானைப்படை, குதிரைப்படைகளோ தேவை இல்லை. எனக்குத் தேவை நீ ஒருத்தன் மட்டுமே. நீ மட்டும் எனக்கருகே இருந்தால் போதும்!" அர்ஜுனன் வேண்டுகோள்.


"அப்படியே ஆகட்டும் அர்ஜுனா, ஆனால் நான் ஆயுதமே எடுக்க மாட்டேன், வேண்டுமென்றால் ( என்ன குறும்பு பாருங்க) உனக்கு ரத சாரதியாக ஊழியம் செய்கிறேன். (அர்ஜுனனைப் போல் கொடுத்து வச்சவங்க யாரு?) நான் நிராயுதபாணியாகத் தான் உனக்குத் துணை இருப்பேன். என் படைகள் மொத்தமும் துரியோதனனுக்கு ஊழியம் செய்யும்." கண்ணன் கூற அர்ஜுனன் தலை வணங்கி ஏற்றுக்கொண்டான். கண்ணனின் அருகாமை ஒன்றே தனக்கு வேண்டியதைத் தனக்குப் பெற்றுத் தரும் என முழுமையாக நம்பினான் அர்ஜூனன். வெறும் ஆட்களின் எண்ணிக்கையில் நம்பிக்கை வைத்தான் துரியோதனன்.


வென்றவர் யார்னு சொல்லவே வேண்டாம் இல்லையா?


அது போல்தான் இங்கேயும். இவ்வுலகில் உள்ள அனைத்து அரசர்களும் கண்ணனின் ஆற்றலையும் வீரத்தையும் வேண்டிக் கேட்டுக் கண்ணனின் கட்டிலருகே காத்திருந்தால் ஏ, கண்ணா, என்னப்பா, நாங்கள் அனைவரும் உன் கருணைப்பார்வைக்காக அன்றோ வந்திருக்கோம். உன்னிடம் எதையும் எதிர்பார்த்து நாங்கள் வரவில்லை அப்பா. எங்களைக் கண் திறந்து பார்த்து எங்களை ஆட்கொள்வாய் எனக் காத்திருக்கோம்.


கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாவோ= கிண்கிணி என்பது குழந்தைகளுக்குக் கட்டும் ஒரு சிறிய மணி. குஞ்சுமணி என்றும் சொல்வார்கள். அந்த மணியின் வாயைப் போல் சின்னதாய் செப்புப் போல் இருக்கிறதாம் கண்ணனின் திருவாய். அவனது கண்களோ எனில் செவ்வரியோடிய செந்தாமரைப் பூக்களைப் போல் மெல்ல மெல்ல மலர்க்கின்றனவாம். அந்தக் கண்களினால் நீ எங்களைக் காண மாட்டாயா? நீ கண் விழிக்கும்போது உன் அருட்பார்வை எங்கள் மேல் முதலில் படவேண்டும்.


திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
அங்கணிரண்டுங் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல்சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்!= சூரியனும், சந்திரனும் போன்ற உன்னிரண்டு கண்களினால் எங்களை நீ கருணையுடன் பார்த்தாயானால் ஜென்ம ஜென்மமாய் நாங்கள் செய்த பாவங்களின் மிச்சங்கள் அனைத்தும் கரைந்து போய் நாங்கள் உய்வோமே. உன் கருணையாலே நாங்கள் இதுவரை சேர்த்திருந்த கர்ம பலன்கள் அனைத்தும் விலகி உன்னோடு நாங்கள் ஐக்கியம் ஆகி விடுவோம். என்கிறாள் ஆண்டாள்.


--Geetha Sambasivam 09:53, 6 ஜூலை 2011 (UTC)



பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 7 ஜூலை 2011, 10:43 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,759 முறைகள் அணுகப்பட்டது.