மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 1

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
Parkadal.jpg
மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!


பட்டர்பிரான் பெற்றெடுத்த பெண்பிள்ளையான ஆண்டாள், கண்ணனோடு இரண்டறக் கலக்கவேண்டி பாவை நோன்பு ஆரம்பிக்கிறாள். நாள், நக்ஷத்திரம் எல்லாமும் பார்த்து ஆரம்பிக்கிறாள். மார்கழி மாதம், பூரணச் சந்திரன் நிறைந்து தோன்றும் நன்னாளாம் அது. அனைவரையும் நதியில் நீராடிப் பாவை நோன்பை ஆரம்பிக்கலாம் என அழைக்கிறாள். ஆய்பாடியின் செல்வச் சிறுமிகளை அழைக்கும் ஆண்டாள் நந்தகோபனைக் கூர்வேல் கொடுந்தொழிலன் என்று கூறுகிறாள். கொடுந்தொழிலன் என்பது இங்கே கொடுமையான தொழிலைச் செய்பவன் என்ற பொருளில் வராது. கொடுக்கின்றவன் என்ற பொருளிலேயெ நான் பார்க்கிறேன். கூர்வேலால் காளைகளையும், மாடுகளையும் அடக்கி ஆளும் நந்தகோபன் தன் ஈகைத் தன்மையால் சிறந்து விளங்குவதை ஆண்டாள் இங்கே சுட்டிக்காட்டுகிறாள். அத்தகைய நந்தகோபனின் குமாரன் ஆன கண்ணன், ஏரார்ந்த கண்ணியான யசோதையின் இளம் சிங்கம் என்றும் கூறுகிறாள். ஏரார்ந்த என்றால் வடிவான, அழகிய கண்களை உடைய அல்லது அழகிய தோற்றத்தை உடைய என்று பொருள் கொள்ளவேண்டும்.


அந்தக் கண்ணனின் நிறமோ கார்மேனி. கண்களோ எனில் சிவந்த வரிகளையுடைய செங்கண்கள் அவை மலர்ந்து நம்மைப் பார்க்கும்போது செந்தாமரையோ எனத் தோற்றுகிறது. முகமோ எனில் கோடி சூரியப் பிரகாசத்தை ஒத்திருக்கிறது. இத்தகைய முகத்தை உடைய கண்ணன், நாராயணன் என்ற பெயர் கொண்டவன் அவன் நமக்கு நாம் விரும்புவதைக் கொடுப்பான்; பறை தருவான் என்பது மோக்ஷம் என்பதை நேரடியாகக் குறிக்காமல் விரும்புவதைக் கொடுப்பது என்றே வரும். இங்கே நாம் என்ன விரும்பப் போகிறோம்? முக்தியைத் தானே? இந்தப் பாரெல்லாம் புகழ்ந்து போற்றும் கண்ணனைப் பாடித் துதித்தால் அவன் நமக்கு ஞானமாகிய முக்தியைக் கொடுப்பான்.


திருப்பாவை இரண்டாம் பாடல்

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்கு (ச்)
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும், பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.//


வையத்து வாழ்வீர்காள் என்று விளிக்கும் ஆண்டாள் இவ்வுலக வாழ்க்கையைப் பெரிதாகக் கூறுகிறாள். இங்கே இவ்விதம் கூறுவதன் காரணம் பரமனோ பூமியில் வந்து ராமனாக அவதரித்து மனித வாழ்க்கையில் உள்ள எல்லாக் கஷ்டங்களையும் அநுபவித்திருக்கிறான். அதே போல் கண்ணனாக வந்து ஒரு சின்னஞ்சிறு குழந்தை எப்படி எல்லாம் பெற்ற தாய்க்கும், தந்தைக்கும் ஆநந்தத்தைத் தருமோ அப்படிக் கொடுத்திருக்கிறான். அதோடு மட்டுமா?? கோபிகைகளின் தாபத்தைத் தீர்க்கிறான். ஒவ்வொரு கோபியும் கண்ணனைத் தங்களுடனேயே இருக்கிறவனாய்க் காண்கின்றார்கள். ஒருத்தியிடம் விளையாடினால், இன்னொருத்தியிடம் கோவிக்கிறான். மற்றொருத்திக்கு மாடுகறக்க உதவினால், வேறொருத்தியின் மாடுகளை மேய்க்கிறான். ராதையுடனோ கேட்கவே வேண்டாம். புல்லாங்குழலை ஊதிக்கொண்டு ஆடிப் பாடிக் களிக்கிறான். அவனுடைய ராஸக்ரீடையின் முதல் ரஸிகேஸ்வரியாக ராதையும் இருக்கிறாள். இப்படி அந்தப் பரந்தாமனே வைகுந்தம் வேண்டாம், பூமிக்கு வந்தால் அங்கே என் அடியார்களோடு ஆடிப்பாடிக்கொண்டு அவர்கள் சொன்னவண்ணம் கேட்டுக்கொண்டு இருக்கிறதே சுகம் என்று ஓடோடி வந்துவிடுகிறான் அல்லவா? அதனாலேயோ என்னமோ ஆண்டாள், வையத்து வாழ்வீர்காள் என்று கூப்பிடுகிறாள்.


மேலே அவள் கூறுவது எல்லாம் விரத நியமங்கள். விரதம் இருப்பது என்பது வெறும் வயிற்றுக்கு உண்ணாமல் பட்டினி இருப்பது மட்டுமல்ல. உடல் மட்டுமில்லாமல் உள்ளத் தூய்மையும் பெறவேண்டும். அதற்கு ஆண்டாள் சொல்லும் விரத நியமங்களைப் பாருங்கள்:


பாற்கடலில் பையத் துயிலுகிறானாம் பரமன்.


பாற்கடலில் அவன் என்ன தூக்கம் தூங்குகிறான்?? அது யோக நித்திரை அல்லவா?? கீழே ஆதிசேஷன் எதுக்கு? குண்டலினி எப்படி உறங்குகிறதோ அதைச் சுட்டத் தானே. ஐந்து இந்திரியங்களையும் ஐந்து முகங்களாய்க் கொண்ட ஆதிசேஷன் மேல் ஆண்டவன் யோகநித்திரை கொண்டிருக்கிறான். ஆக நம் மனம், வாக்கு, காயம் அனைத்துக்கும் அதிபதியான அவன் பைய=மெல்லத் தான் துயிலுகிறானாம். அடியாருக்கெல்லாம் ஓடோடி வந்து அருள் செய்யும் பரமன் மெல்லத் தானே தூங்க முடியும்??
அவனுடைய திருவடித் தாமரைகளை நினைந்து பாடுவோம் என்னும் ஆண்டாள், நோன்பு நூற்கும் நியமங்களாய் நெய்யுண்ணோம், பாலுண்ணோம், என்றும் நெய்க்கும், பாலுக்கும் தடை விதிக்கிறாள். ஆஹா, இது என்ன??? கண்ணனுக்குப் ப்ரீதி நெய்யும், பாலும் தானே? ஆமாம், கோகுலத்திலும் நெய்யும், பாலும் தானே ஓடும்??ஆம், ஆனால் அதை நாம் தான் உண்ணக் கூடாது. கண்ணனுக்கு அர்ப்பணிக்கவேண்டும். தூய்மையான உள்ளத்தோடு நெய்யும், பாலும் சேர்க்காமல் நம்மிடம் இருப்பதை அந்தக் கண்ணனுக்கே எனக் கொடுத்துவிடுவோம். இங்கே பாற்கடலில் இருக்கும் பரமனைப் பார்த்த கண்களுக்கு அதன் பின்னரும் உணவில் நாட்டம் இருக்குமா என்றும் கொள்ளலாம்.


பெண்களாகிய நாம் ஆடை, ஆபரணங்களால் அலங்கரித்துக்கொள்வதில் நாட்டம் உடையவர்கள். ஆனால் இப்போது கண்ணனுக்காக அதையும் நாம் தியாகம் செய்யவேண்டும். காலை சீக்கிரமே எழுந்து குளித்து, கண் மை இட்டு கண்களில் எழுதாமல், மலர்களால் நம்மை அலங்கரித்துக்கொள்ளாமல், நெய், பால் சேர்க்காமல் உணவு அருந்தி அந்தப்பரமனின் திருவடி தரிசனத்தை நினைத்து அவன் புகழ் பாடிக்கொண்டிருப்போம். இப்படி இருக்கும் நாட்களில் நாம் செய்யாதன எதுவும் செய்யோம். அதாவது நற்செயல்களையே செய்யவேண்டும், நல் எண்ணங்களையே சிந்திக்கவேண்டும். நல் வார்த்தைகளையே கூறவேண்டும். தீங்கு நினையாமல் இருக்கவேண்டும். நல் சொற்களைப் பேசவேண்டும், தீய சொற்களைப் பேசக் கூடாது. இதைத் தான் ஆண்டாள் தீக்குறளைச் சென்றோதோம் என்கிறாள். உடல் மட்டும் சுத்தமாய் இருப்பது விரதம் இல்லை, உடலோடு மனமும் சேர்ந்து சுத்தமாக இருக்கவேண்டும். அர்ப்பணிப்பு உணர்வோடு ஆண்டவனிடம் நம்மையே நாம் அர்ப்பணித்தால் அவன் நமக்கு மோக்ஷத்தைக் கொடுப்பான்.


அது மட்டும் போதாது. ஐயமும், பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி என்று மேலும் சொல்கிறாள். ஐயம் என்பது ரிஷிகள், துறவிகள் , பிரமசரிய விரதம் இருக்கும் பிரமசாரிகள் போன்றோருக்குப் போடும் பிக்ஷை என்று கூறலாம். ஐயம் இங்கே சந்தேகம் என்ற பொருளில் வரவில்லை. "ஐயமிட்டு உண்" என்பதும் உயர்ந்ததொரு கருத்தைத் தான் கூறுகிறது. துறவிகள், ரிஷிகள், முனிவர்கள், பிரமசாரிகள் போன்றோருக்கு நாம் தினமும் பிக்ஷை அளிக்கவேண்டும். அவர்களைத் தேடிப் போயாவது அளித்தல் நம் கடமை என்பார்கள். பிரமசாரிகள் பிக்ஷை எடுத்தே உண்ணவேண்டும் என்பது ஒரு காலகட்டத்தில் கட்டாயமாய் இருந்தது. ஒரு முறை பிக்ஷை கேட்ட வீட்டில் மறுமுறை போயும் கேட்கக் கூடாது. அதே போல் ஒரு வீட்டில் கேட்டுக்கொண்டே நிற்கக் கூடாது என அதற்கும் பல நியமங்கள் உண்டு. அத்தகையதொரு உயர்ந்த தருமத்தை நாம் தேடிப் போய்ச் செய்யவேண்டும் என்கிறாள் ஆண்டாள். பொதுவாய் பிக்ஷையையே கேவலமாய் எண்ணும் இந்தக் காலத்தில் இதென்ன ஐயமும், பிச்சையும்னு இரண்டு தரமும் ஒண்ணையே சொல்லி இருக்காளேனு தோணும்.


மேற்கண்டவர்கள் மட்டுமின்றி ஏழைகள் இருப்பார்களே அவங்களுக்கு உணவு அளிப்பதைத் தான் இரண்டாம் முறை சொல்லி இருக்கும் பிச்சை என்ற வார்த்தை குறிக்கும். ஏழைகள், முதியவர்கள் என்று சாப்பிட உணவில்லாமல் பிச்சை கேட்டு வரும் நபர்களுக்கும் நம்மிடம் இருப்பதைக் கொடுக்கவேண்டும் என்கிறாள் ஆண்டாள். இவை எல்லாத்தையும் கொடுத்துவிட்டால் நாம் உய்யுமாறு கண்ணன் அருள் நமக்குக் கிடைக்கும். நாம் அனைவரும் உவப்புடன் இருப்போம் பெண்களே.

Imagesmahavishnu.jpg

--Geetha Sambasivam 11:57, 5 ஏப்ரல் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 4 ஜூன் 2011, 08:39 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,452 முறைகள் அணுகப்பட்டது.