மரபும் - மரபுடைத்த மரபும் .6.

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

மரபும் - மரபுடைத்த மரபும் .6.


கற்பனை குழும உரையாடல் இழை தொடர்கிறது:


2011/5/01 நவீனத்துவம்<modernist@dbkr.com>


>>>ஆனால் அதுதான் கவிதை என்று பெயரிடும்போதுதான், இலக்கணம் தேவைப்படுகிறது. ஏற்கனவே மக்கள் ஏதேதோ பிரச்சனையில் மண்டைக் காய்ந்து போய், மனதை ஆனந்தமாக வைத்துக் கொள்ள கவிதைப் படிக்க வந்தால், கவிதை என்ற பெயரில் எதையோ எழுதி இன்னும் அவர்களின் மண்டையை காய்ந்து போக வைத்து விடுகிறீர்கள்.<<<


மரபண்ணே! ஏதோ நவீனத்துவக் கவிதையை படித்தால் மட்டுமே மண்டை காய்ந்து விடுவதாக ஒரு காட்சியை உருவாக்கிக் காட்டுகிறீர்களே... நீங்கள் கொடி பிடிக்கும் மரபுக் கவிதையால் மண்டை கலங்கி போனவர்கள் பட்டியலை சொல்லி முடிக்க முடியுமா? மண்டை காய்ந்துப் போவதும், குழம்பி போவதும் நவீனத்துவத்தால் கிடையாது. உள்ளே இருக்கும் சரக்கால்.

நவீனத்துவத்தில் "காந்தள் விரலால் மதி முகத்தை தடவினாள்" என்பது போல எல்லாம் எழுதிக் கொண்டிருப்பதில்லை. முதலில் காந்தள் மலரைப் பார்த்திருக்கிறீர்களா? உண்மையில் காந்தள் மலர் போல விரல் இருந்தால், ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ் வந்து எலும்பு வீங்கிய விரல் போலிருக்கும்.

'புறமுதுகில் குத்தாதே" என்று இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு கோழை ஓடும்போது எதிரே ஒருவன் வந்து துப்பாக்கியால் சுட்டால் மார்பில்தான் குண்டு பாயும். உடனே அவன் வீரனாகி விடுவானா?

வீரமாக எதிர்த்து போராடும்போது "Stray bullet" கூட முதுகில் பாயலாம். அதனால் அவன் கோழையாகி விடுவானா? மன்னர் காலத்து மரபை இன்னும் பாட்டில் எழுதிக் கொண்டிருந்து விட்டு, நவீனத்துவத்தை கிண்டல் செய்கிறீர்கள்!

மரபு கோமணத்தில் எம்ப்ராய்டரி செய்து போட்டுக் கொண்டதால், வேட்டி கட்டிய நவீனத்துவத்தை விட மரபு முறையான ஆடை ஆகி விடுமா?



>>> நீ கையை வைத்துக் கொண்டு சும்மா இராமல் கல்லை உடைத்து சிற்பம் பண்ண நினைக்கும்போதுதான், சிற்பக்கலை எனும் இலக்கணம் தேவைப்படுகிறது. பாறையை பாறையாகவே விட்டு விட்டால் யார் என்ன சொல்லப் போகிறார்கள்?<<<

முதலில் நவீனத்துவவாதிகளுக்கு இலக்கணம் சொல்வது இருக்கட்டும். உங்களது எண்ணப் போக்கை, குறுகிய சிந்தனையைச் சற்றுக் கவனியுங்கள்.


கம்பர் இப்போது இருந்து இதே போல் குழுமத்தில் கம்ப இராமாயணம் எழுதியிருந்தால், உங்களைப் போன்றவர்கள் அவரது படைப்பை கொஞ்சமாவது கவனித்திருப்பீர்களா?

பாடலுக்குப் பாடல் அவரை காய்ச்சி எடுத்திருப்பீர்கள். அழாத குறையாக அவர் எழுதுவதையே நிறுத்தி விட்டு ஓடிப் போயிருப்பார்.

"உலகம் யாவையும் தாமுள வாக்கலும்..." என்ற முதலடியையே தாண்ட விட்டிருக்க மாட்டீர்கள். நூறு வருடங்களுக்கு முன்பிருந்த கவிஞர் அமுக்குவான் எழுதியதே இராமாயணம் என சொல்லி கம்பரை மிரள செய்திருப்பீர்.

அப்படியே விட்டாலும், "ஆஹா ஓஹோ" என சொல்லி விட்டு அது கிடப்பில் போயிருக்கும்.

ஒருவரை நீங்கள் போற்ற வேண்டுமானால் அவர் குறைந்தது இருநூறு வருடங்களுக்கு முன் இருந்திருக்க வேண்டும்.

மரபுக்கு தேவை கவிதை இல்லை. பழமை. மொத்தத்தில் நீங்கள் ஒரு "antique shop" வைத்து நடத்துகிறீர்கள். பழங்கால கால் கழுவும் சொம்பாய் இருந்தாலும் அது உங்களுக்கு விலை மதிப்பில்லாதது. தற்கால தங்கமாய் இருந்தாலும் அதை விட அது உங்களுக்கு கம்மிதான்.




>>>ஆணுக்குரிய உடல் அடையாளங்களே ஆணின் உடற்கூறு இலக்கணம். ஆண் புடவைக் கட்டிக் கொண்டாலும் அடிப்படை உடற்கூறு மாறாத வரை ஆண்தான்.

அத்தகைய உடற்கூறு இலக்கணத்தை வைத்துக் கொண்டாலும், ஆண் என்று தீர்மானிப்பது மனம்தான். எனவே உடற்கூறு இலக்கணம் முக்கியமில்லை என்பீரா?

வீரமாக இருக்கும் பெண்களை 'ஆண்பிள்ளை போல் இருக்கிறாள்' என்போம்! அதனால் உடற்கூறு இலக்கணத்தை கண்டுக் கொள்வதில்லை என்று பொருளாகி விடுமா?

ஒருவர் ஆண்பிள்ளைப் போல் இருக்கிறார் என மனம் சொல்லி விட்டதால் அவரை ஆண்கள் பயன்படுத்தும் கழிப்பறையை உபயோகிக்கலாம் என்று ஆகி விடுமா?

அதே போல் தான்! அடிப்படை இலக்கணமே ஒன்றை கவிதை என்றும், கட்டுரை என்றும் தீர்மானிக்கிறது. உரைநடையை உரக்கப் பாடலாம். இருப்பினும் உரைநடை உரைநடைதான்.<<<

உதாரணம் நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் இதுதான் கவிதையின் இலக்கணம் என்பதை எப்படித் தீர்மானித்தீர்கள்?

உடற்கூறு இலக்கணத்தின் படி உடலின் உறுப்புக்களை வைத்து ஆண், பெண் என்று அறிகிறோம்.

உங்கள் மரபு இலக்கணம்தான் அத்தகைய உடற்கூறு இலக்கணம் என எப்படி சொல்கிறீர்? நீங்களே உங்களுக்கு வாட்டமான எடுத்துக்காட்டை சொல்லி ஆதாரம் என்பீர்களா?

உங்கள் வாதம் தவறு என நிரூபிக்கிறேன்.

கவிதை என்பது வெளி வடிவம் என்று வைத்துக் கொண்டு நீங்கள் உங்கள் கருத்தை தாபிக்கிறீர்கள் . அதாவது கவிதை என்பது படிக்கும்போது இப்படி தெரியவேண்டும் என்பது உங்கள் எண்ணம். எனவே வெளியே தெரியும் உடல் இலக்கணத்தை வாகாக இதற்கு சொன்னீர்கள்.

ஆனால் அடிப்படையே தப்பு.

கவிதை என்பது மனதால் அறிவது என்று வைத்துக் கொண்டு பாருங்கள். உடற்கூறு இலக்கண உதாரணம் ஊற்றிக் கொள்ளும்.

கவிதை என்பது உயிர் போன்றது; அப்படி வைத்துக் கொண்டால் இது ஆண் உயிர், இது பெண் உயிர் என்று வடிவ இலக்கணம் தருவீர்களா?

தொடரும்)



செல்வ குமரன்
தேதி - 04/05/2011

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 5 மே 2011, 13:33 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,996 முறைகள் அணுகப்பட்டது.