. மரபும் - மரபுடைத்த மரபும்
கலையானது மரபு என்னும் விதிகளுக்குள் கட்டுப்பட்டு இருப்பதைத் தாங்க முடியாத இலக்கிய அவதார புருஷர்கள் கலையை மரபுக்குள்ளிலிருந்து கிழித்தெடுத்து புது வடிவம் தந்தனர்.
நவீனத்துவம் என்ற பெயரோடு அந்த கலை என்னும் கன்னிப் பெண், நியூ வேவ் பெண்ணாக, இலக்கிய சமுத்திரத்தில் பிகினியோடு ஆடி பாடி களிக்கத் தொடங்கினாள்.
நவீனத்துவக் கவிதைகள் புற விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் அகத்துள் மறைந்து சொல்ல முடியாமல் தேங்கி நிற்கும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்.
இதுதான் அறுதியான சத்தியம் என்ற தத்துவம் நவீனத்துவத்தில் இல்லை.
எந்த உண்மையும் சார்பு தன்மையுடையது. ஓரிடத்தில் உண்மையாய் இருப்பது, வேறிடத்தில் பொய்யாகும். ஓரு கட்டத்தில் உண்மையாக இருப்பது இன்னொருக் கட்டதில் பொய்யாகும்.
நவீனத்துவத்துவம் கலாசாரம், வரலாறு, நிறுவனம், மதம் என எதனோடும் தன்னைப் பிணைத்துக் கொள்ளாது.
தனிமனித எண்ணம், தனி மனிதத் தீர்மானம், உள்ளுணர்வு இவைகளுக்கே முக்கியத்துவமுண்டு.
நவீனத்துவக் கவிதைகள் முதலில் மரபு எனும் விதிகளை தூக்கி எறிவதையே பிரதானமாகக் கொண்டன.
கவிதை என்பது எதுகை, மோனையாலோ, யாப்பாலோ இதர விதிகளாலோ வடிவம் கொள்வது கிடையாது. கவிதை என்றும் கவிதையாகவே இருக்கிறது. விதிகள் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவை கவிதையின் தன்மையை மாற்றுவதில்லை என்பதே அவர்கள் கொள்கை.
இங்கேதான் நமக்கொரு சந்தேகம் வருகிறது. இதோ இதுவரை நான் கட்டுரை(?) என்று ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன். இது கவிதையாகி விடுமா?
நவீனத்துவத்தின்படி கவிதை என்பது தனி மனித மனத்தால் தீர்மானிக்கப்படுவது.
மனம் ஒன்றை கவிதை என்று உணரும் போது அது கவிதையாகி இருக்கிறது. அதை உணருபவனுக்கு அது கவிதை. வெகு ஜன தீர்மானம் இங்கே முக்கியமில்லை. படிப்பவனுக்கு அது கவிதையாகத் தெரிந்தால் அது கவிதைதான்.
உள்ளே ஓடி வாம்மா கண்ணு
வாடைக் காத்து வீசுதல்லோ
என்று ஒரு தாய் தன் குழந்தையை அன்போடு அழைப்பது, வசனமாகத் தெரிந்தால் உமக்கு வசனம். கவிதையாகத் தெரிபவனுக்கு அது கவிதை.
எனவே கவிதையை மரபுகள் தீர்மானிப்பதில்லை தனி மனமே தீர்மானிக்கிறது என்று ஒரே போடாகப் போட்டு நவீனத்துவம் சிலிர்த்தது.
தொடரும்)
செல்வ குமரன்
தேதி - 04/05/2011.