மனோன்மணீயம் காட்டும் சிவகாமி சரிதை

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை


நம் செந்தமிழ் மொழியை முத்தமிழ் என முன்னோர் வழங்குவர். இயல், இசை, ’கூத்து’ என்னும் நாடகம் ஆகிய மூன்று பகுதிகளாகத் தமிழ் தொன்றுதொட்டு இலங்கி வருகின்றது. தொல்காப்பியர், நாடகத் தமிழுக்குரிய மெய்ப்பாடுகளைப் பொருளதிகார மெய்ப்பாட்டியலில் மிக விரிவாக விளக்கியுள்ளார். நாடகம் எழுதுவதற்கான இலக்கண நூல்களும் அந்நாளில் இருந்தனவென்பதைச் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்குநல்லார் எடுத்துக்காட்டியுள்ளார்.
அகத்தியம், குணநூல், சயந்தம், செயிற்றியம், மதிவாணர் நாடகத் தமிழ் போன்ற தமிழ் நாடக இலக்கண நூல்கள் பண்டை நாளில் வழக்கிலிருந்தன. அல்லிக்கூத்து, கொடுகொட்டி, குடை, குடம், பாண்டரங்கம் போன்ற கூத்துக்களைப் பண்டைத் தமிழர் போற்றியுள்ளனர். எனினும் தமிழில் நாடக இலக்கிய நூல்கள் கிடைக்காமல் போனது நம் தவக்குறைவே. மேலும், கலைகளைப் பற்றிக் குறிப்பாக நாடகக் கலை பற்றி, நாகரிகக் கலப்பால் தமிழர்களிடையே மாறுபட்ட எண்ணமும் நிலவுவதாயிற்று.
தமிழ்நாட்டில் பல நாடகங்கள் நடிப்பதற்காகத் தோன்றினாலும், இலக்கிய நாடகங்களாக அவை மிளிரவில்லை. இந்நிலையில் ஆங்கிலேயர் ஆட்சி தமிழ்நாட்டில் இடம்பெற்றபின் ஆங்கில மொழியும், இலக்கியமும் செல்வாக்குப் பெற்றன. சேக்ஸ்பியரின் நாடகங்கள் ஆங்கிலம் கற்ற தமிழர்களிடம் பாராட்டுப் பெற்றன.
இச்சமயத்தில், 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், திருநெல்வேலிச் சீமையைச் சார்ந்த பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளையவர்கள், ‘மனோன்மணீயம்’ என்றவோர் அரிய நாடக நூலைத் தமிழ்மக்கள் படித்தின்புறவும், நடித்து மகிழவும் படைத்துத் தந்தார். இந்நாடக நூலே இன்றளவும் தமிழ் நாடக இலக்கியத் துறையில் தன்னேரில்லா நாடக இலக்கியமாக விளங்கிவருகின்றது என்றால் மிகையன்று.
இந்நூல், கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாகச் சென்னைப் பல்கலைக்கழக இடைநிலை (Intermediate), இளங்கலைப் பட்ட வகுப்புக்களில் நாடக இலக்கியமாகத் திகழ்ந்த பெருமை பெற்றது. ஆங்கில நாடக இலக்கியத்தைப் போலவே ஐந்து அங்கங்களையும் (Acts) பல உட்களங்களையும் (Scenes) கொண்டது இந்நூல். நாடக நூலின் ஐந்து அங்கங்களை, நாடக இலக்கணிகள், முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல் என்று குறிப்பிடுவர். மனோன்மணீயமும் இவ்வைந்து உறுப்புக்களைப் பெற்றுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, லிட்டன் பிரபு ஆங்கிலத்தில் எழுதிய ‘The Secret Way’ – இரகசியவழி என்ற நூலைத் தழுவியே மனோன்மணீயத்தைப் படைத்துள்ளார். எனினும், இந்நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலன்று; மூலக்கதை ஆங்கில மொழியில் அமைந்ததாயினும் மனோன்மணீயம் தமிழ்நாட்டுச் சூழலில் தமிழ் மண்ணில் தோன்றிய முதல் நூலே போன்று விளங்குகின்றதென்பதனை இந்நூலைக் கற்பார் நன்குணர்வர்.
நாடகம் நடைபெறும் இடங்கள், தண்டமிழ் மதுரையும், தீந்தமிழ்த் திருநெல்வேலியும் சேரவேந்தனின் திருவனந்தபுரமும் ஆகும். இவையெல்லாம் தமிழ் மணக்கும் நன்னிலங்கள் அன்றோ! அம்மட்டோ! நாடகத்தில் இடம்பெறும் நாடக மாந்தர்களை நினைப்பின் அவர்கள் எல்லாரும் தமிழ்ப் பண்பாட்டினை வெளிப்படுத்துகின்ற நன்மக்கள்; நனிநாகரிகர். சீவகவழுதி பாண்டிய மன்னன்; சுந்தர முனிவர் குலகுரு; குடிலன் கேடுசூழ் அமைச்சன்; மனோன்மணி மன்னனின் ஒரே மகள்; நற்பண்புகளின் உறைவிடம். வாணி மனோன்மணியின் தோழி; நடராசனின் காதலி; அறிவில் சிறந்த நங்கை. நடராசன் சுந்தர முனிவரின் சீடன். புருடோத்தமன் சேரவேந்தன்; மனோன்மணியின் காதலன்; நற்பண்பினன். நாராயணன் மன்னனின் நலம்நாடும் நற்குடிமகன். பலதேவன் குடிலனின் மகன். சகடன் வாணியின் தந்தை; பொருளாசை மிக்கோன்.
நாடக மாந்தர் மட்டுமல்லர், நாடகக் கதையும் தமிழ் நாகரிகத்தின் இரு கண்களாக விளங்கும் அகமும் புறமும் – காதலும் வீரமும் செறிந்து விளங்குவது. இதனைப் பின்புலமாகக்கொண்டு நடைபோடுவதே இம்மனோன்மணீய நாடகம். இந்நாடகத் தொடக்கம்கூட இந்நாட்டு நாகரிகத்தையும், பண்பாட்டினையும் பறைசாற்றுவதாகும்; அதனைக் காண்போம்.
பாண்டிய மன்னன் சீவகவழுதியின் அரசவைக்கு மன்னனின் குலகுரு சுந்தர முனிவர் எழுந்தருளுகின்றார். மன்னன், தம் குருவை வணங்கி இனிய நன்மொழி கூறி வரவேற்கின்றார். அவ்வரவேற்புரை மன்னனின் மாண்பினைச் சுட்டுவது.
“வருக! வருக! குருகிரு பாநிதே!
திருவடி தீண்டப் பெற்றவிச் சிறுகுடில்
அருமறைச் சிகரமோ ஆலநன் னீழலோ
குருகுல விசயன் கொடித்தேர்ப் பீடமோ
யாதென ஓதுவன்?”
இம்மொழிகள் நம் பண்பாட்டினை உலகிற்கெடுத்துரைப்பதல்லவா? கருணை முனிவ! அருள் வள்ளலே! வருக! தங்களின் பொன்னார் திருவடிகள் தீண்டப்பெற்ற இச்சிறுகுடில் வேதங்களின் முடிவுப் பொருளோ? தென்முகக் கடவுள் வீற்றிருக்கும் ஆலமரத்தின் நல்ல நிழலோ? கண்ணபிரான் கீதை அருளிய அருச்சுனனின் தேர்ப் பீடமோ? அப்புகழுரைகள் தன் குருவிடம் மன்னன் காட்டிய நல்லெண்ணத்தின் வெளிப்பாடேயன்றோ?
மேலும், இந்நாடகக் காப்பியத்தில் தமிழ்நாட்டின் இயற்கைஎழில் கவினுற எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. நடராசனின் தனிமொழியில் இடம்பெற்றுள்ள புல், வாய்க்கால், நாங்கூழ்ப்புழு பற்றிய செய்திகள் இயற்கை வருணனைகளோடு குறிப்புப் பொருளைச் சுட்டுவனவாகவும் அமைந்துள்ளன. இதனினும் மேலாக நாஞ்சில்நாடு எனப்பெறும் நன்செய்நாட்டு வளங்கூறும் பகுதி – இயற்கையெழிலைக் கற்பார் உள்ளம் களிகூர எடுத்துக்கூறும் பகுதியாகும். மனோன்மணீயம் கூறும் நன்செய்நாட்டு வளம் பத்துப்பாட்டின் பல நூற்பகுதிகளின் பிழிவெனக் கூறலாம். மருதமும் நெய்தலும் மயங்கிய திணைமயக்கப் பகுதிச் செய்திகள் தமிழ் மாணாக்கர் அனைவரும் படித்தின்புறவேண்டிய பகுதியாகும்.
மேலும் இந்நூல் சுட்டும் நுண்பொருளாக அறிஞர்கள் சுட்டுவதையும் காணலாம். சீவகன் ஜீவாத்மாவாகவும், அவனை ஆட்டுவிக்கும் குடிலன் மாயா சக்தியாகவும், மனோன்மணி சுத்த தத்துவமாகவும், அவள் தோழி வாணி புத்தி தத்துவமாகவும், நடராசன் உபாசனா மூர்த்தியாகவும், புருடோத்தம வேந்தனை அனுக்கிரக சக்தியாகவும், சுந்தர முனிவரைக் கருணாமூர்த்தியாகிய ஞானாசிரியராகவும், மதுரையை மூலத்தானமாகவும் சுட்டுவர். இதனால் இந்நூல் தத்துவக் கருத்துக்களை உட்பொருளாகக் கொண்டு விளங்கும் நன்னூல் என்பதும் அறியத்தக்கதாகும். மற்றும் கருணாகரரும், நிட்டாபரரும் சிலந்திப் பூச்சியை எடுத்துக்காட்டித் தம் சித்தாந்த, வேதாந்தக் கருத்துக்களை விளக்கும் பகுதி இந்நூலின் மேலாந்தன்மையை அங்கையின் நெல்லியாய்த் தெளிவுபடுத்தும்.
 இனி, இந்நூலில் இடம்பெற்றுள்ள சுவைமிக்க ’சிவகாமி சரிதை’யை அடுத்த பகுதியில் காண்போம்.

பாண்டிய மன்னன் சீவகவழுதிக்கும் சேரவேந்தன் புருடோத்தமனுக்கும் போர் மூளும் சமயம் ஊரெங்கும் ஒரே பேராரவாரம். இதனைக் கேட்ட மனோன்மணி இதுபற்றித் தன் தோழி வாணியிடம், ”ஊரில் என்ன ஆரவாரம்!” எனக் கேட்கின்றாள். அவள் கவனத்தைத் திருப்ப எண்ணிய வாணி, பிற செய்திகளைப் பேசுகின்றாள். அப்போது மனோன்மணி வாணியை நோக்கி, “நின் இசைவிளங்கு குரலால் பாடுக!” எனச் சொல்லுகிறாள். அப்பாடலே இந்நூலில் இடம்பெற்றுள்ள ’சிவகாமி சரிதை’யாகும். இக்கதை, மனோன்மணீய நாடகத்திற்கு நேரடித் தொடர்பில்லாமல் இடம்பெற்றுள்ள கிளைக் கதையாகும்.
இச்சிவகாமி சரிதை மனோமணீய நூலின் முதற்பதிப்பில் இடம்பெறவில்லை. இரண்டாம் பதிப்பிலேயே இடம்பெற்றதென்பர். இக்கதையும் ஆங்கிலக் கதையின் தழுவலே என்று கூறுவாருமுளர். இதன் மூலக்கதை ஆங்கிலக் கவிஞர் ’Oliver Goldsmith’ எழுதிய ‘The Vicar of Wakefield’ என்னும் நூலில் கிளைக் கதையாக இடம்பெற்றுள்ள “Edwin and Angelina, a ballad” என்பதைத் தழுவி அமைந்துள்ளது. Edwin சிதம்பரமாகவும், Angelina சிவகாமியாகவும் சுந்தரம்பிள்ளையால் படைக்கப்பெற்றுள்ளனர். சிவகாமி சரிதை மனோன்மணீய நாடகத்தின் மூன்றாம் அங்கம், மூன்றாம் களத்தில் வாணியின் கூற்றாக அமைந்துள்ளது.
சிவகாமி சரிதையையும், Edwin and Angelina, a ballad கதையையும் ஒருங்குவைத்துக் கற்பார், சிவகாமி சரிதை இந்த ஆங்கிலக் கதையின் தழுவலே என்பதை நன்கறிவர். தொடக்கமுதல் இறுதிவரை இத்தழுவலின் சாயல் நன்கு புலப்படுகின்றது.
எனினும், ஈண்டும் சுந்தரம்பிள்ளை தமிழ் மரபையும், தமிழ் நாகரிகத்தையும் மிக நன்றாகப் போற்றியுள்ளார். கதை நிகழுமிடம் பூம்புகார். கதைத் தலைவியான சிவகாமியின் தாய்வழிப் பாட்டிக்கு மக்கள் மூவர்; இருவர் பெண்டிர்; ஒருவர் ஆண். பெண்களுள் ஒருத்தியின் மகள் சிவகாமி; மற்றொருத்தி மகப்பேறில்லாதவள். ஆனால் பெரும் செல்வமுடையவள். அச்செல்வம் முழுவதையும் அவள் சிவகாமிக்கே தந்தாள். ஆண் மகனுக்குச் சிதம்பரம் என்ற ஒரே மகன். சிவகாமியும், சிதம்பரனும் உடன்பிரியா நிழல்போல் ஒன்றாக வளர்ந்தனர். ஒருவரை ஒருவர் காதலித்தனர்.
“ஆனாலும், யான் பெற்ற பொருட்செல்வத்தால் தலை மயங்கினேன்; செருக்குற்றேன். தலைவர் என்ற அவரது நிலையை மறந்தேன். இதனால் அவர் என்னைவிட்டுச் சென்றார். பொருள்கருதி மணம் பேச வந்தனர் பலர். பின்னரே எனக்கு உண்மை புலனாயிற்று. எனவே அவரைத் தேடிப் பலவிடங்களிலும் அலைந்தேன்; அவரைக் காணவில்லை. இறுதியாக இக்காட்டிற்கு வந்தேன்” என்று சிவகாமி ஓர் முனிவரிடம் கூறுவதாக இக்கதை நடைபோடுகின்றது.
சிவகாமி ஆண் வேடத்தில் முனிவரிடம் தன் துயரக் கதையினைக் கூறுகின்றாள். அவள் வேடம் கலைகின்றது. ஆற்றொணாது கண்ணீர் பெருக்குகின்றாள் சிவகாமி. மனம் வெறுத்து வெளியேறிய சிதம்பரனே ஆண்டு முனிவர் வேடத்தில் உள்ளான். அவனிடம் தன் கதையைக் கூறிவந்த சிவகாமி, முனிவர் குளிர்காய மூட்டிய தீயில் வீழ முற்படவும் ”சிவகாமி! யானுனது சிதம்பரனே!” எனச் செப்பினான் முனிவர் வேடத்தில் இருந்த சிதம்பரன். இருவரும் ஓருருவமாய் இணைந்தனர். இதுவே சிவகாமி சரிதை. ‘உண்மைக் காதல் வெல்லும்!” என்ற கோட்பாட்டை, வாணி இச்சரிதை வாயிலாக மனோன்மணிக்கு உணர்த்துகின்றாள். எனவே, மனோன்மணி சேரவேந்தன்பால் கொண்ட காதலும் வெல்லும் என்பதை வாசகர்கட்குக் குறிப்பால் உணர்த்துகின்றார் நூலாசிரியர்.
மேலும் நாயகியாகிய உயிர் – பசு – சீவான்மா, மாயையின் வயப்பட்டு அல்லலுற்று இறுதியில் தலைவனை – பதியை – பரமான்மாவை அடைவதை உணர்த்துவது சிவகாமி சரிதை. இவ்வண்ணம் நுண்பொருளாகிய தத்துவக் கருத்தையும் தன்னுள் கொண்டிலங்குவது இக்கதை.
சிவகாமியைச் சிதம்பரன் தீயில் விழாது தழுவிக் கொண்டாற்போல, எட்வினும் ஏஞ்சலினாவும் இணைந்தனர். அதனை,
“Forbid it, Heaven!” the Hermit cried,
And clasp’d her to his breast:
The wond’ring fair one turn’d to chide—
’Twas Edwin’s self that prest.
என்ற செய்யுள் வரிகள் நமக்குணர்த்தும். மேலும் அடுத்த பாடல்,
“Turn, Angelina, ever dear!
My charmer, turn to see
Thy own, thy long lost Edwin here,
Restor’d to love and thee.
என்பதாகும்.
’Thy own, thy long lost Edwin here’ என்ற அடியின் தழுவலே ’சிவகாமி யானுனது சிதம்பரனே!’ என்னும் செய்யுளடி. உண்மைக் காதலும், காதலரும் உலகெங்கிலும் ஒன்றுபோலவே உள்ளனர் என்பதனை ஆலிவர் கோல்ட்ஸ்மித்தும், நம் பேராசிரியர் சுந்தரம்பிள்ளையும் ஒன்றுபோலச் சுட்டியுள்ளனர். இதனை எண்ணுங்கால் ’சான்றோர் சான்றோர் பாலராப’ என்ற புறநானுற்றுப் புலவனின் கருத்தும், ‘Great minds think alike’ என்ற ஆங்கிலப் பழமொழியும் நம்முன் தோன்றுகின்றன.
இங்ஙனம் மனோன்மணீய நூலும் அதன்கண் இடம்பெற்றுள்ள சிவகாமி சரிதையும் கற்பார்க்குக் கழிபேருவகை ஊட்டுவதுடன் அமையாது, அவர்தம் அலைபாயும் மனங்களையும் பக்குவப்படுத்தும் பான்மையது என்றால் அவ்வுரை வெறும் புகழுரையன்று! முற்றிலும் உண்மையேயாம்.
இறுதியாக ஓருரை. மணிவாசகரின் திருக்கோவையாரைப் பற்றி அறிஞர்கள் கூறும் கருத்துரை நம் மனோமணீயக் காப்பியத்திற்கும் முற்றிலும் பொருந்தும். திருக்கோவையார், “இலக்கிய நயங் காண்பார்க்கு ஓரினிய இலக்கிய நூல்; சமயக் கருத்துக்களைத் தேடுவார்க்கு அஃதொரு சமயநூல்; தத்துவ ஆய்வாளருக்குத் தத்துவ நூல்; இறைநிலை காண விழைவார்க்கு அஃதொரு வழிகாட்டி; பேரின்ப வீட்டிற்கு அஃதொரு திறவுகோல் என்பர் அறிஞர்பெருமக்கள். இப்பாராட்டுரைகள் அனைத்தும் மனோன்மணீயத்திற்கும் நன்கு பொருந்துவதைக் காணலாம்.
எனவே, தமிழ்நலங்காண விரும்புவாரும், தமிழ் மாணாக்கர்களும் இவ்வினிய நாடக இலக்கியத்தைக் கற்று இன்புறுக!


நன்றி: வல்லமை

பங்களிப்பாளர்கள்

Themozhi

இப்பக்கம் கடைசியாக 25 பெப்ரவரி 2016, 00:51 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,569 முறைகள் அணுகப்பட்டது.