பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார் 3மரபு விக்கி இருந்துவிநாயகர் பற்றி இன்னும் சில கதைகள் இருக்கின்றன. முதலில் நாம் பார்த்தது ஒரு புராணத்தில் உள்ளது என்றால் "பார்கவ புராணத்தில்" வேறு விதமாய் சொல்கிறார்கள். ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு மாதிரியாக விநாயகர் பற்றிக் கூறப் படுகிறது. பார்கவ புராணம் என்னும் விநாயக புராணத்தின் படி விநாயகரே முழு முதல் கடவுள். இந்த உலகை மட்டுமல்லாது மும்மூர்த்திகளையும் படைத்து அவர்களுக்குப் படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற தொழில்களை செய்யுமாறு கட்டளை இட்டவரும் விநாயகரே ஆவார். ஒவ்வொரு கல்பத்திலும் இவ்வுலகம் அழிந்து மறுமுறை சிருஷ்டி ஆரம்பிக்கும் முன் அண்ட சராசரங்களிலும் உள்ள எல்லா ஜீவன்களும் விநாயகருக்குள்ளேயே ஒடுங்கும் என்று பார்கவ புராணம் சொல்லுகிறது. பிரளயத்துக்குப் பின் விநாயகர் வக்ரதுண்ட விநாயகராக அவதரித்து மும்மூர்த்திகளையும் படைத்தார். பின் அவர்களைத் தங்கள் தொழில் செய்யுமாறு கூறி மறைந்தார். இந்த பார்கவ புராணத்தின்படி ஒரு முறை என்ன நடந்தது என்றால்:
பிரம்மா ஒரு சமயம் கொட்டாவி விடவே அதில் இருந்து ஓர் அரக்கன் தோன்றினான். அவன் பெயர் சிந்தூரனன் ஆகும். ஏனெனெனில் அவன் சிந்தூர வண்ணத்தில் இருந்தான். அவனுடைய செக்கச் சிவந்த நிறத்தால் பயந்து போன பிரம்மா அவன் கேட்காமலேயே அவனுக்கு சில வரங்களைத் தந்தார். சும்மாவே அரக்கன். அவனுக்கு வரம் வேறே இலவசமாய் வந்தால் கேட்கவேணுமா? மூவுலகையும் ஆட்டிப் படைத்தான். யாவரும் செய்வதறியாமல் திகைக்க மும்மூர்த்திகளும் கணபதியைப் பணிந்தனர். விநாயகர் உடனே தோன்றி, "கவலை வேண்டாம். நான் உமா தேவியாரின் திரு வயிற்றில் அவதரிப்பேன்." எனக் கூறி மறைந்தார். அது போலவே கருவுற்று உமாதேவியாரின் திருவயிற்றில் , காற்று வடிவில் நுழைந்த சிந்தூரானன் குழந்தையின் தலையைத் திருகி எடுத்துக் கொண்டு போய் விட்டான். குழந்தை பிறந்தது தலையே இல்லாமல். அனைவரும் பதறவே கலங்காதே என்று சொன்ன சிவபெருமான் முன்பொரு சமயம் கஜமுகாசுரன் கேட்டுக் கொண்டபடி அவனுடைய தலையைத் தன் குழந்தையின் தலை இருக்கும் இடத்தில் பொருத்தினார். அன்று முதல் அந்தத் தெய்வக் குழந்தை "கஜானனன்" என்ற பெயர் பெற்றான்.
உமாதேவியாரிடம் வளர்ந்து வந்த கஜானனன் உரிய காலம் வந்ததும் சிந்தூரனனை அழிக்கப் புறப்பட்டார். சிந்தூரனனைத் தூக்கி எடுத்துத் தன் துதிக்கையால் ஓங்கி அடித்து அவன் ரத்தத்தைத் தன் உடம்பில் பூசிக் கொண்டார். செந்நிறமான விநாயகர் அன்று முதல் "சிந்தூர விநாயகர்" என்ற பெயரும் பெற்றார்.
சரி, விநாயகர் பிறந்தாச்சு, அவர் எப்படி இருந்தார்னு பார்ப்போமா? யானை முகம், ஒரு கொம்பு, இரு செவிகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கரங்கள், ஆறு எழுத்துக்கள் உள்ளவர். விநாயகர் என்பது ஆறு எழுத்து இல்லையா? இவரை வழிபடுவோர் ஏழு பிறவிகளில் இருந்தும் விடுபட்டு, எட்டுத் திசைகளும் புகழ, ஒன்பது மணிகளும் பெற்று சம்"பத்து"க்களுடன் வாழ்வார்கள். இவருடைய திருமேனி மூன்று வகையில் ஆனது. இடைக்குக் கீழே பூத உடம்பு, இடைக்கு மேல் கழுத்து வரை தேவ உடம்பு, தலை மிருகத் தலை, ஒரு கொம்பு ஆண் தன்மை, கொம்பில்லாத பகுதி பெண் தன்மை, யானைத் தலை அஃறிணை, தெய்வ சரீரம் உயர்திணை. இந்த மாதிரித் தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர் திணையாய், அஃறிணையாய் எல்லாமுமாய் விளங்குபவர் விநாயகர். "தத்துவ மசி" என்ற ஆறு எழுத்தின் வடிவமே விநாயகர்.
பிரணவ வடிவினரான விநாயகரின் காது, அகன்ற யானைத் தலை, வளைந்த துதிக்கை ஆகியவை "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தின் வடிவத்தைக் குறிக்கும். இவரது திருவடிகள் ஞான சக்தியும், க்ரியா சக்தியும் ஆகும். இவருடைய பேழை வயிற்றில் உலகெல்லாம் அடங்கும். ஐந்து கரங்களும் ஐந்து தொழிலகளைச் செய்யும். எழுத்தாணி பிடித்த கரம் படைப்பையும், அங்குசம் கொண்ட கை அழித்தலையும், பாசம் வைத்திருக்கும் கை மறைத்தலையும், அமுத கலசம் ஏந்திய துதிக்கை அருளையும் குறிக்கும். மூன்று கண்களோ என்றால் முறையே சூரிய, சந்திர, அக்னியாகும். இவரின் உருவ அமைப்பில் எல்லா உருவங்களும் இருப்பதாய்க் கூறுகிறது "பார்கவ புராணம்" என்னும் விநாயக புராணம். இவருடைய நாடி பிரம்மா, முகம் வி்ஷ்ணு, கண் சிவன், இடப்பாகம் சக்தி, வலப்பாகம் சூரியன் என்று அமைந்திருப்பதாய்க் கூறுகிறார்கள். அடுத்து அவரை வழிபடும் முறை பற்றிப் பார்ப்போமா?
விநாயகர் வழிபாட்டுக்கு அருகம்புல் மிகவும் உகந்தது. பொதுவாக நம் முன்னோர்கள் வழிபாட்டை நம் உடல் ஆரோக்கியத்துடன் சேர்த்தே யோசித்து நமக்குச் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். நம் உடலில் வாதம்-பித்தம்- சிலேத்துமம் எனப்படும் கபம் என்று மூன்றுவிதமான தோஷங்கள் இருக்கின்றன. வாதம் நீர்த்தன்மை கொண்டது. வாதம் உள்ளவர்கள் எப்போதும் வெயிலையே விரும்புவார்கள் எனச் சொல்லப் படுவது உண்டு. நாராயணன் நீர் மேல் இருப்பவன். அவன் எப்போதும் நீர் மேல் இருப்பதால் அவன் வழிபாட்டுக்குச் சூடு உள்ள துளசியை வைத்திருக்கிறார்கள். பரமசிவனோ என்றால் எரிக்கும் சுடுகாட்டில் வசிப்பவர். அங்கே இன்னும் சூடு உதவுமா? அவரின் வழிபாட்டுக்கு வில்வம், குளிர்ச்சியைக் கொடுக்கும். இந்த சிலேத்துமம் ஒரு இரண்டுங்கெட்டான் நிலைமை. அதற்காகத் தான் அருகம்புல். அருகம்புல் மூலிகை வைத்தியத்தில் முதன்முதல் பயன்படுத்தப் பட்டதாய்ச் சிலர் சொல்கிறார்கள். இது நம் உடலில் படிந்திருக்கும் அதிகப் படியான உப்பைக் கரைத்து வெளியேற்றி ரத்தத்தைச் சுத்தமாக்கி நீரின் அளவை மிதப் படுத்தும். அதனால் தான் விநாயகர் வழிபாட்டுக்கு அருகம்புல் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. இதைத் தவிர நம் தமிழ்நாட்டில் விநாயகர் பிரம்மச்சாரி என்பதால் எருக்கம் பூ மாலையை அணிவிக்கிறார்கள். அது போல வன்னி மர இலைகளாலும் விநாயகரை வழிபடலாம். வன்னி மர இலைகளும் மருத்துவ குணம் மிகுந்தது. நச்சுத் தன்மையை முறியடிக்கும், அத்கோடு இல்லாமல சருமப் புண்களை இந்த மரத்தின் இடையே புகுந்து வரும் காற்று நீக்கும் தன்மை கொண்டது. விஷக்கடி, சொறி, சிரங்கு, அலர்ஜி போன்றவை குணமாக வன்னி மரத்தின் இலை, காய், பட்டை ஆகியவற்றை உலர்த்திப் பொடி செய்து தேனோடு கொடுப்பது உண்டு, அல்லது சொறி, சிரங்குகளில் தேங்காய் எண்ணெய் கலந்து தடவுவதும் உண்டு. இலையைச் சுத்தமான பசும்பாலில் அரைத்து உட்கொண்டால் கடும் நோய்கள் குணம் ஆகும்.
விநாயகரை வலம் வரும்போது ஒரு முறை வலம் வந்தால் போதுமானது. விநாயகரை வழிபடுவதால் ஏழரைச் சனி உள்ளவர்களுக்கு அதன் தாக்கம் குறைவாக இருக்கும். அது போல் விநாயகருக்குச் சிதறுகாய் உடைப்பதிலும் ஒரு பெரும் தத்துவம் அடங்கி இருப்பதாய்ப் பரமாச்சாரியார் அவர்கள் கூறி உள்ளார். தேங்காய்க்கு மூன்று கண்கள் உண்டு. இது ஈஸ்வரனுக்குச் சமமாகக் கருதப் படுகிறது. ஈஸ்வரனைப் போன்ற மூன்று கண்கள் உடைய காயை விநாயகருக்கு நிவேதனம் செய்வதின் மூலம் நம்மை விட உயர்ந்த ஒன்றை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் தத்துவமும், அதனாலும், நம் மனத்தில் உள்ள ஆணவம் அகன்று மனம் நிர்மலம் ஆகவும் சிதறுகாய் போடுகிறோம். மண்டை ஓட்டைப் போலக் கெட்டியான தேங்காயை உடைத்துச் சிதற அடிக்கிறோம் அல்லவா? அதன் அர்த்தமே நம் மனதில் உள்ள ஆணவமும் அதுபோல் சிதறிப் போய்த் தேங்காயின் உள்ளே உள்ள இனிப்பான நீர்போல் இனிமை நிரவ வேண்டும் என்பதற்கும் தான்.
விநாயக வழிபாடு நம் நாட்டில் மட்டும் இல்லாமல் வடமாநிலங்களிலும் உண்டு என்று அறிந்து கொண்டிருப்பீர்கள். அது தவிர, பர்மாவில் "மகாபிணி" என்றும், மங்கோலியாவில் "தோட்கர்" என்றும், திபெத்தில் "சோக்ப்ராக்" என்றும், (நேரிலேயே பார்த்திருக்கேன் இந்த வழிபாட்டை), கம்போடியாவில் "பிரசகணேஷ்" என்றும், சீனாவில் "க்வான்ஷிடியாக்" என்றும், ஜப்பானில் "விநாயக் ஷா" என்றும் வணங்கப் படுகிறார். சயாமில் விநாயகருக்கு ஆமை வாகனமும், இந்தோனேஷியாவில் சதுர்முக கணபதி என்றும், ஜப்பானிலும், சீனாவிலும் அர்த்தநாரி (பாதி பெண், பாதி ஆண்) உருவத்திலும் விநாயக வழிபாடு நடைபெறுகிறது.
--Geetha Sambasivam 04:55, 24 ஆகஸ்ட் 2011 (UTC) |
