பிரசவம் ஆன பெண்களுக்கான பாரம்பரிய மருந்துகள்.மரபு விக்கி இருந்துகுழந்தை பிறந்த உடனே முன் காலங்களில் அம்மியில் அரைத்த பச்சை மஞ்சளைக் கொடுப்பார்கள். மஞ்சள் வயிற்றுப் புண்ணை ஆற்றுவதோடு சுட்ட கத்தரிக்காய் போல் இருக்கும் கர்ப்பப் பையை வலுப்படுத்தி ஒரு நிவாரணியாகவும் செயல்படும். பின்னர் வெற்றிலையில், இந்த வெற்றிலை பிள்ளை பெற்றவர்களுக்கென்றே இளம் வெற்றிலையாகத் தேர்ந்தெடுப்பார்கள். அத்தகைய வெற்றிலையில் கஸ்தூரி மானின் உடலிலில் இருந்து எடுக்கப்படுவதாய்ச் சொல்லப் படும் கஸ்தூரியை வைத்து மடித்துக் கொடுப்பார்கள். பின்னர் திப்பிலிச் சுரசம் தேனை விட்டுக் கொடுப்பார்கள். திப்பிலியை நன்கு வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து இரண்டு கிண்ணம் நீரில் ஒரு ஸ்பூன் திப்பிலிப் பொடியைப் போட்டு அரைக் கிண்ணமாகும் வரை சுண்ட வைத்துத் தேனை ஊற்றிக் கொடுப்பார்கள். பிரசவம் ஆன அன்று நீராகாரமான கஞ்சி மட்டுமே கொடுப்பார்கள்.
அதுவும் புழுங்கலரிசியை வறுத்துக்கொண்டு மிக்சியில் ஒன்றிரண்டாக உடைத்துக்கொண்டு, வெந்தயம் சேர்த்துக் குழைய வேக வைத்து மிதமான அளவு சர்க்கரையும், பாலும் சேர்த்துக் கொடுப்பார்கள். முன்காலங்களில் பிரசவம் ஆன பெண்களை நிறைய வெற்றிலை போட்டுக்கொள்ளச் சொல்லுவார்கள். அதுவும் நாட்டு மருந்து எனப்படும் மூலிகைகள், வேர்கள் போன்றவற்றால் ஆன சுரசம், லேகியம் போன்றவை விடிகாலையில் நான்கு மணிக்கு எழுப்பிக் கொடுத்துவிட்டு உடனே வெற்றிலை போட்டுக்கொண்டு படுக்கச் சொல்வார்கள். லேகியம், சுரசம் போன்றவை குடிக்கும், சாப்பிடும் அளவு மிதமான சூட்டில் இருத்தல் வேண்டும். இவை எல்லாமே பிரசவம் ஆனது இருபது, இருபத்திரண்டு நாட்களுக்குள்ளாகச் செய்ய வேண்டியவை.
சாப்பிட வேண்டிய காய்கள்: கீரை, புடலை, அவரை, கத்திரி, பீர்க்கை எல்லாமே பிஞ்சுகளாக இருத்தல் நலம். முருங்கையும் பிஞ்சாகப் பயன்படுத்தலாம். வாழைக்காய், உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனை, பூஷணி, பறங்கி போன்றவற்றைத் தவிர்த்தல் நல்லது. பூண்டு, வெங்காயம் அதிகம் சேர்க்கலாம். பூண்டையும், வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிப் போட்டு தோசை, ஊத்தப்பம், இஞ்சி சேர்த்துச் சட்னி, துவையல், பச்சடி போன்ற முறையில் சாப்பிடலாம். வாழைப்பழம் மலைப்பழம், கற்பூர ரஸ்தாளி போன்றவை சாப்பிடலாம். மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவையும் சாப்பிடலாம். மற்றவை தவிர்த்தல் நலம். அடுத்து பிரசவ லேகியம்.
பிரசவ லேகியம்
இஞ்சி நூறு கிராம், தேன் நூறு கிராம் , கால் கிலோ கருப்பட்டி, நெய் கால் கிலோ, நல்லெண்ணெய் நூறு கிராம்
மேற்சொன்ன சாமான்கள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். பத்து கிராமுக்குக் குறையாமலும், இருபத்தைந்து கிராமுக்கு மிகாமலும் மேற்கண்ட சாமான்களை வாங்கிக்கொள்ளவும். பின்னர் சுத்தம் செய்து வெயிலில் காய வைக்கவும். வெறும் வாணலியில் ஒவ்வொன்றாய்ப் போட்டு வறுக்கவும். வறுத்த சாமான்களை மிக்சியில் அல்லது இயந்திரத்தில் பொடி செய்து கொள்ளவும். சுமார் முக்கால் கிலோ வரை பொடி வரும். கால் கிலோ கருப்பட்டியைத் தூள் செய்து சுத்தமான நீரில் போட்டு அழுக்கு, கல் நீக்கி வடிகட்டி வைத்துக்கொள்ளவும். இஞ்சி நூறு கிராம் வாங்கித் தோல் நீக்கித் துருவி அரைத்துக்கொண்டு சாறு எடுக்கவும். சாறை ஒரு இரும்புச் சட்டியில் ஊற்றிக் கொதிக்க விடவும். கொதிக்கையிலே கொஞ்சம் கொஞ்சமாய்க் கருப்பட்டி நீரையும் சேர்க்கவும். இரண்டும் நன்கு கொதிக்கையிலே மேற்சொன்ன மருந்துப் பொடியில் பாதி அளவு எடுத்துக்கொண்டு கொதிக்கும் கலவையில் ஒரு கையால் கிளறிக்கொண்டே இன்னொரு கையால் மருந்துப் பொடியைத் தூவவும். நன்கு கெட்டியாக வருகையில் பொடியை நிறுத்திவிடவும். கொஞ்சம் நெய், நல்லெண்ணெய் எனச் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். வாணலியில் ஒட்டாமல் சுருண்டு உருட்டும் பதத்துக்கு வந்ததும் மிச்சம் இருக்கும் நெய்யையும், நல்லெண்ணையையும் விட்டுக் கிளறிக் கீழே இறக்கி ஆறவிடவும். நன்கு ஆறியதும் தேனை விட்டுக் கலந்து ஒரு சுத்தமான பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
சாப்பிடும் முறை:
காலை வெறும் வயிற்றில் கொடுத்தல் நன்மை பயக்கும். ஆனால் தற்போதைய ஆங்கில மருத்துவம் இந்த மருந்துகளை அறவே தடுப்பதால் காலைக் காப்பியின் போது ஒரு டேபிள் ஸ்பூன் இந்த லேகியம் கொடுத்த பின்னர் காலைக்காப்பியைச் சாப்பிட வைக்கலாம். தினமும் இருவேளை எடுத்துக்கொள்ளலாம். அஜீர்ணம், வாயு சேர்தல், பித்தம், ருசியின்மை போன்றவை குறைந்து பிரசவம் ஆன பெண் நன்கு ஆரோக்கியமாக உணவு எடுக்க முடிவதோடு குழந்தைக்குப்பாலும் சுரக்கும். மேற்சொன்ன அளவுப் பொடியை மூன்று மாதங்களுக்குப்பயன்படுத்தலாம். அதன் பிறகும் தேவை எனில் சாமான்கள் வாங்கி மருந்துப் பொடி தயாரித்துக்கொண்டு பயன்படுத்தலாம். குழந்தை பிறந்த ஒருவருடமும் முன் காலங்களில் சாப்பிட்டு வந்தார்கள்.
பிரசவம் ஆன கர்ப்பிணிப் பெண்களில் பலரும் தாய்ப்பால் சுரக்கவில்லை எனக் கவலைப் படுகின்றனர். அவர்கள் கீழ்க்கண்ட முறைகளில் ஏதேனும் ஒன்றைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் சீக்கிரம் குழந்தைக்குப் பாலூட்டி மகிழலாம்.
வெள்ளைப் பூண்டை நெய்யில் வதக்கிச் சாதத்தில் போட்டுச் சாப்பிடலாம், அல்லது தோசையில் வெங்காய ஊத்தப்பம் போல் பூண்டு ஊத்தப்பமாகச் சாப்பிட்டு வரலாம். நெய்யில் வதக்கிய பூண்டைப் பாலில் வேகவைத்தும் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வரலாம்.
--Geetha Sambasivam 08:03, 1 ஜூன் 2011 (UTC)
|