பழங்கலத்தில் பழங்கள் - 6
ரெ.கார்த்திகேசு
மலேசியாவின் முதல் சீர்திருத்தத் திருமணம் பினாங்கில்!
கு.சோணைமுத்து என்னும் பெயர் பினாங்குத் தமிழ்ச் சமூகத்தில் நன்கு அறிமுகமான பெயர். சிறந்த இலக்கியவாதியாக இருந்ததுடன் தமிழ்ச் சமுகத்தால் பெரிதும் மதிக்கப்படும் தலைவராகவும் இருந்தார். தமிழ்நாட்டிலிருந்து தமது சிறுவயதில் உறவினர் ஒருவரின் கையைப் பிடித்துக் கொண்டு பினாங்குக் கரையில் வந்து இறங்கியவர் அங்கேயே வாழ்நாள் முழுதும் தங்கியிருந்து சென்ற ஆண்டு (2005) காலமானார்.
பினாங்கு இந்தியர்களின் ஆரம்ப காலம் பற்றிய பல அரிய நினைவுகள் அவருள் இருந்தன. அவற்றை என்னிடம் அவர் நேரம் கிடைக்கும்போது பகிர்ந்து கொண்டிருந்தார். "இவற்றையெல்லாம் எழுதி வையுங்கள்; பின்னால் அரிய ஆவணமாக இருக்கும்" என நான் வேண்டிக் கொண்டதற்கிணங்க அவர் அவ்வப்போது நினைவுக்கு வந்தவற்றைத் துண்டு துண்டாக எழுதி வைத்தார். பின்னர் அவர் நோய் வாய்ப்பட்டிருக்கும் போது இந்தக் கையெழுத்தைப் பிரதியை என்னிடம் கொடுத்து அதை ஒரு நூலாகக் கொண்டு வரலாமா என்று பார்த்துச் சொல்லுங்கள் என்று என்னைக் கேட்டுக் கொண்டார். நான் அவற்றைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த காலத்திலேயே அவரை மரணம் தழுவிக் கொண்டது.
தேசத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மானின் நூற்றாண்டை ஒட்டி அவர் எழுதி முடித்துள்ள நூல் ஒன்றும் அவர் குடும்பத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவரான மாணிக்கவாசகம் பற்றியும் ஒரு நூல் எழுதியுள்ளார்.
சோணைமுத்துவின் கையெழுத்துப் பிரதியில் உள்ள சில தகவல்களை அடுத்த சில வாரங்களுக்குப் பகிர்ந்து கொள்ளுகிறேன். இந்த சுவாரசியமான "பினாங்கு இந்தியர் கதைகள்" பெரிதும் அவர் சொற்களிலேயே தரப்படுகின்றன. நீளம் கருதி கொஞ்சம் சுருக்குவதும் செப்பனிடுவதுமே என் வேலை:
மலேசியாவின் முதல் சீர்திருத்தத் திருமணம்
வேதம் ஓதாமல், வேள்வி வளர்க்காமல், அம்மி மிதிக்காமல், அருந்ததி பார்க்காமல், சமயச் சடங்குகள், சாங்கியங்கள் ஏதும் இல்லாமல் சமுதாயப் பெரியவர் ஒருவர் தலைமையில் சான்றோர் பலர் வாழ்த்துரை வழங்க சுயமரியாதைத் திருமணம் ஒன்று மலேசியாவில் முதன் முறையாக பினாங்கில் நடை பெற்றது. 15/9/1929இல் டத்தோ கிராமட் சாலை 490நி விடுதியில் உள்ள மண்டபத்தில் திரு G.M.சுப்பிரமணியம் மகன் மணமகன் இராஜூக்கும் திரு M. நாராயணசாமி மகள் மணமகள் சுப்பம்மாளுக்கும், பேரா இந்து மகாஜன சங்கத் தலைவர் ரெ.ரா.ஐயாறு அவர்கள் தமிழ் மறை ஓதி சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. வாழ்த்துரை வழங்கியோர் சுவாமி அற்புதாநந்தர், திருநெல்வேலி கே.ஐ.சுப்பிரமணியம், புலவர் ஹமீது களஞ்சியம், எஸ்.ஆர்.வீரப்பன், கே மகாலிங்கம், K.A.பண்டிதரின் மனைவி ஜானகி அம்மாள் ஆகியோர்.
இந்தத் திருமணத்துக்கு ஏற்பாட்டாளர்களாக இருந்தவர்கள் ஐக்கிய இந்திய சங்க பஜனக் கோஷ்டியார். அதன் உறுப்பினர்களாகத் திருமணத்தில் முன்னின்றவர்கள் கே.என் மருதமுத்து, வி.செல்லையா, வீரப்பன், சி.கோவிந்தசாமி, எஸ் இராசு, ஆர்.எஸ்.எம்.மருது, எம்.நாராயணசாமி, என்.இராமசாமி ஆகியோர்.
மேலே உள்ளவை சோணைமுத்துவின் குறிப்புகள். அந்தத் திருமணத்தின் அழைப்பிதழ் ஒன்றையும் அவர் பிரதி எடுத்து வைத்துள்ளார். அதில் ஈ.வே.ரா. அவர்களின் படத்துடன் பல சுயமரியாதைச் சுலோகங்களும் இடம்பெற்றுள்ளன. (இதழில் கண்டுள்ளபடி):
"சமதர்மம் தழைத்தோங்குக", "சுயமரியாதை எங்கும் ஓங்குக", "வேற்றுமை விருக்ஷம் வேறோடு வீழ்க", "சுயமரியாதையை இழந்து மனிதன் என்றும் வாழாதே", "அறிவே தெய்வம்", "உயர் வேதியராயினும் ஒன்றே அன்றிவேர் குலத்தவராயினும் ஒன்றே (திரு பாரதியார்)", "சுயமரியாதை நமது பிறப்புரிமை - திரு ஈ.வே.இராமசாமியார்", "மக்களின் அறிவுவளர்ச்சிக்கு முட்டுக்கட்டை அர்த்தமற்ற பழக்கவழக்கம் - திரு கைவல்யசாமியார்"
இதே அழைப்பிதழ் ஒரு பக்கத்தில் ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டுள்ளது. அது சுருக்கமாக இந்த சுலோகங்கள் ஏதும் இல்லாமல் சீர்திருத்தத் திருமணம் என்ற குறிப்பு ஏதும் இல்லாமல் இருக்கிறது.
மணமகன் S.இராஜூ, "யுனைடேட் இஞ்சினீர்" நிறுவனத்தில் ஸ்டோர் கீப்பராக இருந்தவர் என்ற குறிப்பும் உள்ளது.
சோணைமுத்து அவர்களால் இத்தனை பத்திரமாகப் பாதுகாத்து வைக்கப்பட்ட இந்த அழைப்பிதழில் கண்டுள்ள மணமக்கள், அதில் கண்டுள்ள பெயர்களில் உள்ளவர்கள், அல்லது அவர்களின் சந்ததிகள் பினாங்கில் இன்னும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொன்னால் 1929க்குப் பிறகு அவர்கள் வாழ்வு எப்படி இருந்தது என்ற தொடர் கதையை எழுதலாம்.
அடுத்த வாரம் பினாங்குத் திரையரங்குகளில் தமிழ்ப்படம் திரையிடப்படுவதற்காகத் தமிழர்கள் நடத்திய போராட்டம் பற்றி எழுதுகிறேன். உபயம் கு.சோணைமுத்துதான்.
(பகுதி- 7 தொடரும்)