பழங்கலத்தில் பழங்கள் - 5
(ரெ.கார்த்திகேசு)
மாவுத்தர், ராவுத்தர், மரைக்காயர்
பினாங்கு தமிழ் முஸ்லிம்கள் அதிகம் வாழும் இடம். குட்டி இந்தியாவில் அவர்கள் ஒரு பிரதம அங்கம். அங்கு ஹிந்து, முஸ்லிம் வர்த்தகர்கள் ஒரு குடும்பத்து உறுப்பினர்கள் போல் உறவாடி வாழ்கிறார்கள். பினாங்கில் இருந்து தொடங்கிய "நாசி காண்டார்" (தமிழில் எப்படிச் சொல்லுவது? "தூக்குச் சோறு?") இன்று சென்னை வரை பிரபலமாகி இருக்கிறது.
நான் சில கட்டுரைகளுக்கு முன் குறிப்பிட்ட பினாங்கு முதுசொம் (heritage) கருத்தரங்கில் பினாங்கின் இந்திய முஸ்லிம்கள் பற்றிய அரிய கட்டுரை ஒன்றைப் புலவர் சீனி நைனா முகம்மது ஆங்கிலத்தில் படைத்தார். இந்த வாரக் கட்டுரையில் நான் சொல்லும் தகவல்கள் அனைத்தும் அக்கட்டுரையின் அடிப்படையில் ஆனவையே ஆகும்.
பிரிட்டிஷார் மலேசியக் கரைகளைத் தொடுமுன்னரே இந்திய முஸ்லிம்கள் வந்திருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. 1786க்கு முன்னதாகவே குவாலா கெடா பகுதியில் அவர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததாகவும். 1794இல் ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்திய முஸ்லிம்கள் பினாங்கில் இருந்ததாகவும் பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் குறித்திருக்கிறார்கள்.
மலேசியாவில் பொதுவாகத் தமிழ் முஸ்லிம்களை மரைக்காயர்கள் என்றும் ராவுத்தர்கள் என்றும் அடையாளம் கூறலாம். (ஆனால் இந்த அடையாளப் பெயர்களை இப்போது அவர்களில் பலர் கைவிட்டுவிட்டனர் என்றே தோன்றுகிறது.) மரத்தால் செய்யப்பட்ட கலங்களில் ஏறி வந்தவர்கள் "மரக்கலையர்" என்று அழைக்கப்பட்டுப் பின்னர் மரைக்காயர்கள் ஆனார்கள். ராவுத்தர் எங்கிருந்து வந்தார்? தமிழ் மன்னர்களின் யானைப் படைகளுக்கும் குதிரைப் படைகளுக்கும் மாவுத்தர்களாய் இருந்தவர்கள்தான் ராவுத்தர்கள் ஆகியிருக்க வேண்டும் என்பது ஒரு யூகம். மலாய்க்காரர்களிடையே இன்று உள்ள "மரிக்கான்" என்னும் குடும்பப் பெயர் இந்த மரைக்காயரிலிருந்தும், "ரவுத்தின்" என்னும் குடும்பப் பெயர் ராவுத்தரிலிருந்தும் பெறப்பட்டதுதான்.
இன்று பினாங்கில் காணப்படும் தமிழ் முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் (பெரும்பான்மையினர்) தென்காசி முஸ்லிம்கள் என்றும், கடைய நல்லூர் முஸ்லிம்கள் என்றும் அடையாளம் கொண்டிருக்கிறார்கள். தென்காசி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாநிலத்தில் உள்ளது. கடைய நல்லூர் அங்குள்ள பெரிய நகரம். இன்னொரு பகுதியினர் ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் இருந்து வந்தவர்கள். இவர்களைப் பேட்டை முஸ்லிம்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
தென்காசி முஸ்லிம்கள் கடுமையான உழைப்பைக் கொண்ட சிறுவர்த்தகர்கள். ஆரம்ப காலத்தில் கையால் சுருட்டு உருட்டித் தயாரித்து விநியோகித்தார்கள். பீடி, மூக்குப் பொடி தயாரிப்பும் இவர்களின் தொழில். மற்றவர்கள் சிறு ஒட்டுக் கடைகளில் மாட்டிறைச்சி, மீன், பலசரக்கு விற்றார்கள். கப்பல் துறையிலும் மராமத்துத் துறையிலும் நீரளிப்பு, முனிசிபல் துறையிலும் உடலுழைப்புத் தொழிலாளர்களாகவும் இருந்தார்கள். இவர்களின் பெண்மக்கள் மசாலை அறைத்து விக்கும் பணியிலும் இருந்தார்கள்.
ராமநாதபுரம், தஞ்சாவூர் முஸ்லிம்கள் வியாபாரிகள். இவர்களின் முக்கிய வியாபாரம் கப்பல் போக்குவரத்து சம்பந்தப்பட்டது. கப்பல் முகவர்கள், படகு வாடகைக்குக் கொடுப்பவர்கள், சரக்கு ஏற்றுமதி இறக்குமதிக்கான உபகரணங்களை விநியோகிப்பவர்கள் இப்படி இருந்தார்கள். இந்த வேலைகளுக்கான தொழிலாளர்களை விநியோகிப்பவர்களும் இவர்கள்தான். முக்கிய ஏற்றுமதி, இறக்குமதித் தொழிலை நடத்தியவர்களும் இவர்களே. மளிகைப் பொருட்கள், வாசனைப் பொருட்கள், துணி ("ஜவுளி" என்கிறார்கள், தமிழா?), தாள், அலுவலக உபகரணங்கள் (stationery), ஆகியவற்றை இறக்குமதி செய்து விநியோகித்தார்கள். அதற்கு மேல் நகை வியாபாரம், நாணய மாற்றம், பழைய நாணயங்கள், அஞ்சல் முத்திரைகள் விற்றல் ஆகியவற்றோடு உணவுக் கடைகள், ரொட்டிக் கடைகள், குளிர்சாதனக் கிடங்குகள் இப்படி எல்லா வியாபாரத்திலும் அவர்கள் ஈடுபட்டார்கள். இன்றும் அவர்களுடைய வர்த்தகங்கள் செழிப்பாக உள்ளன. பர்கத் ஸ்டோர்ஸ் போன்ற நிறுவனங்கள் பன்னாட்டு வர்த்தக அடையாளங்கள் பெற்றுள்ளன.
1912இலேயே அவர்கள் "முஸ்லிம் வரத்தக சங்கம்" என்பதை நிறுவினார்கள். இன்றும் அது இருக்கிறது என்பதுடன் டிரான்ஸ்ஃபர் சாலையில் அதற்கு ஒரு விலையுயர்ந்த நிலமும் இருக்கிறது.
மலேசியாவின் எல்லா இனங்களையும் போலவே தமிழ் முஸ்லிம் சமுகத்தின் புதிய தலைமுறையினர் கல்வி பெற்றுப் பல துறைகளில் வெற்றிகரமாகக் கால் பதித்திருக்கிறார்கள்.
பினாங்கில் தமிழ் முஸ்லிம்களின் பிரதானமான அடையாளம் போருக்கு முந்திய அழகிய கட்டிடமான மஸ்ஜிட் கப்பித்தான் க்ளிங். ("கிளிங்" என்ற வார்த்தைக்கு ஒரு மதிப்பைத் தேடித் தரும் இடம் இது என்றும் சொல்லலாம்.) 1802இல் கப்பித்தான் காதர் மொஹிதீன் தலைவராக இருந்து இந்தப் பள்ளிவாசலைக் கட்டி முடித்தார். 1980இல் புதிய பினாங்கு தேசியப் பள்ளிவாசல் கட்டப்படும் வரை இதுவே பினாங்கின் தேசியப் பள்ளிவாசலாக இருந்தது. இன்றும் இந்திய முஸ்லிம்களே இந்தப் பள்ளிவாசலை நிர்வகிக்கிறார்கள்.
பினாங்குத் தமிழ் முஸ்லிம்கள் மூன்று தமிழ்ப் பள்ளிகளை 1930 முதல் நடத்தி வந்துள்ளனர். அவை அஞ்சுமான் தமிழ்ப் பள்ளி (1932), ஐக்கிய முஸ்லிம் தமிழ்ப் பாடசாலை (1934), தென்காசி முஸ்லிம் தமிழ்ப் பள்ளி (1950). (இந்தப் பள்ளிகள் இப்போது மூடப்பட்டு விட்டன.)
பினாங்கு இந்திய முஸ்லிம் சமுகத்தில் பலர் இன்று தேசிய அளவிலும் உலக அளவிலும் புகழ் பெற்றவர்களாக இருக்கிறார்கள். எஸ்.எம். இத்ரிஸ் அவர்கள் நீண்ட காலம் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவாராக இருந்து உலக அளவில் பரிசுகள் பெற்று அதற்குப் புகழ் வாங்கித் தந்திருக்கிறார். மலேசிய அரசாங்கத்தில் பொருளாதாரத் துறையில் உயர் பதவிகள் வகித்த தான் ஸ்ரீ அலி அபு ஹசான் ஒரு தமிழ் முஸ்லிமே ஆவார்.
பினாங்குத் தமிழ் இலக்கியத் துறையிலும் அவர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். 1960இல் வட மலாயா தமிழ் எழுத்தாளர் சங்கம் நிறுவப்பட்டபோது அதன் தலைவராக இருந்தவர் கேகே.டி. முகமது இப்ராஹிம். அதன் செயலாளர் கவிஞர் நக்கம்பாடி கரீம். அதன் பின் ஜே.எம்.ஹுசேன் தலைவராக இருந்தார். தமிழ்ப் பத்திரிகை உலகில் முன்னோடிகளான ஹமீது களஞ்சியம், சாரண பாஸ்கரன் ஆகியோர் பினாங்கில் இருந்தே இயங்கினார்கள். "மலாயா மித்திரன்" (1932), "தேச நேசன்" (1933), "மலாயா" (1954) ஆகிய தமிழ் நாளிதழ்களின் ஆசிரியர்கள் தமிழ் முஸ்லிம்கள்தான்.
பினாங்கின் வரலாற்றில் தமிழ் முஸ்லிம்களின் பெயர் என்றும் இடம் பெற்றிருக்கும்.
(பகுதி 6 தொடரும்)