பினாங்கின் கதை 10 (இறுதி)

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பழங்கலத்தில் பழங்கள் - 10 (இறுதி)
ரெ.கார்த்திகேசு

பினாங்கு வள்ளல் சகோதரர்கள்

முதலில் சென்ற இரு வாரங்களாக நான் எழுதி வந்த சுவாமி இராமதாசர் மற்றும் அவர் தோற்றுவித்த செந்தமிழ்க் கலாநிலையம் பற்றிய கட்டுரைகளுக்கு ஒரு பின்குறிப்பு சேர்க்க வேண்டியுள்ளது. கட்டுரையின் முடிவில் சுவாமி மலேசியாவில் தமது இறுதி நாட்களில் வறுமையிலும் தனிமையிலும் கழித்தார் என எழுதியிருந்தேன். 'சுவாமி இறுதி நாட்களில் தனிமையில் இருந்தது தவிர்க்க முடியாததாக இருந்திருக்கலாம்; ஆனால் அவர் வறுமையில் இருந்தார் என்று சொல்ல முடியாது' என்பதை எனக்கு அணுக்கமான இரண்டு பேர் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

சுவாமி தைப்பிங்கில் இருந்த போது ம.இ.கா. துணைத்தலைவர் டத்தோ சி.சுப்பிரமணியம் அவரை ஆதரித்திருக்கிறார். அவர் தலைமையில் இயங்கும் நேசா கூட்டுறவுக் கழகத்தின் மூலமாக அவருக்கென வீடு ஒன்று ஏற்பாடு செய்து கொடுத்து அவர் வாழ்க்கைச் செலவுகளையும் அவர் தந்துள்ளார்.

சுவாமி குவால லும்பூர் வந்தபோது மலேசியச் சிலம்பக் கழகம் அவரை ஆலோசகராக ஏற்றுக் கொண்டு அவரைப் பராமரித்து வந்தது எனச் சிலம்பக் கழகத்தின் அப்போதைய செயலாளரும் இப்போதைய மக்கள் ஓசை ஆசிரியருமாகிய பெ.இராஜேந்திரன் சுட்டிக் காட்டியுள்ளார். சிலம்பக் கழகத்தின் விதிகளை வரைவதிலும் சுவாமி துணை புரிந்திருக்கிறார்.

இறுதியில் சுவாமி உடல் நலம் குன்றித் தமிழகம் செல்ல முடிவு செய்த போதும் டத்தோ சுப்பிரமணியம் உட்பட பல அன்பர்கள் அவருக்குப் பயணச் செலவு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார்கள். எல்லா நல்ல உள்ளங்களுக்கும் நமது நன்றி.

சுவாமி சேர்த்து வைத்திருந்த நூல்கள் அவருடைய அன்பரான குவால லும்பூர் திரு விசுவநாதனிடம் இருக்கக் கூடும் எனத் தெரிகிறது. இது உண்மையானால் திரு விசுவநாதன் அந்த நூல்களை அனைவருக்கும் உதவும் வகையில் மலாயாப் பல்கலைக் கழக நூலகத் தமிழ்ப் பிரிவுக்கு அளிக்கலாம். அதன் நூலகர் திருமதி கோமதி தெய்வீகன் உதவக் கூடும்.

இனி மீண்டும் சோணைமுத்து நமக்கு அளித்துச் சென்ற குறிப்புக்களிலிருந்து இன்னும் இரு பினாங்கு பிரமுகர்களை நினைவு கூருகிறோம். வள்ளல் சகோதரர்களான ஆறுமுகம் பிள்ளை, ரெங்கசாமிப் பிள்ளை ஆகியோரே அவர்கள். இனி சோணைமுத்துவின் பார்வையில் அவர்களைப் பற்றி:

அருள்மாமணி என்.டி.எஸ். ஆறுமுகம் பிள்ளை

சமயம், சமுதாயம், அரசியல், மொழி வளர்ச்சி ஆகிய துறைகளில் பினாங்கில் இந்தியர்கள் வளர்ச்சிக்கு அரும் பணியாற்றியவர் ஆறுமுகம் பிள்ளை. பினாங்கின் குறிப்பிடத்தக்க பணக்காரர்களில் ஒருவரான அவர் பினாங்கில் பல ஆலயங்கள் கட்டவும் சீரமைப்புச் செய்யவும் நிறைய நன்கொடைகள் தந்திருக்கிறார். அவற்றுள் பினாங்கு கொடிமலையில் உள்ள சுப்பிரமணியர் ஆலயம், புக்கிட் மெர்த்தாஜம் காளியம்மன் கோயில் ஆகியவற்றை அவரே அறங்காவலாரக இருந்து நிர்வகித்தும் வந்தார். நாட்டு நலனுக்காகவும் உலக நலனுக்காகவும் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து அவரது வீட்டில் யாகங்கள் நடத்தியுள்ளார்.

பினாங்கு மாநில ம.இ.கா.வில் பல ஆண்டுகள் தலைவராக இருந்துள்ளார். பினாங்கு கூட்டணிக் கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். பினாங்கு இராமகிருஷ்ண ஆசிரமத்தில் பல காலம் தலைவராக இருந்துள்ளார்.

பல தமிழ்ப் பள்ளிக் கூடங்களுக்கு நிலம் கொடுத்து அவற்றைக் கட்ட உதவியுள்ளார். நிபோங் திபாலில் முதியோர் கட்டிடம் ஒன்றைக் கட்ட நிலம் கொடுத்து உதவியுள்ளார். இந்த நிலத்தில்தான் இப்போது அவர் பெயரிலேயே தொழில் பயிற்சிக் கழகம் (Institut Latihan Perindustrian Arumugam Pillai) அமைந்துள்ளது. புக்கிட் மெர்த்தாஜம் நகரிலும் அவர் பெயரால் 'ஜாலான் ஆறுமுகம் பிள்ளை' எனும் சாலை இருக்கிறது.

பினாங்கில் அவருக்குப் பல வணிக நிறுவனங்கள் இருந்தன. பழம்பெரும் கணேச அச்சகம் அவருடையதுதான். தமிழ் மலர், தின மணி ஆகிய இரு நாளிதழ்களின் உரிமையாளர். ரப்பர் தோட்டங்கள் பலவும் வைத்திருந்தார். அவற்றில் மிகப் பெரியது சுங்கைப் பட்டாணியில் உள்ள United Plantation Estate.

தமிழ் நாட்டிலும் அவருடைய சொந்த ஊரான திருப்பத்தூரில் ஆறுமுகம் பிள்ளை-சீதையம்மாள் கல்லூரி உட்பட பல வர்த்தக, அற நிறுவனங்களை அமைத்துள்ளார்.

வள்ளல் நா.ரெங்கசாமிப் பிள்ளை

நா.ரெங்கசாமிப் பிள்ளை ஆறுமுகம் பிள்ளையின் இளைய சகோதரர். "ரெனா" என்று அன்போடு அழைக்கப் பட்டார்.

பல அறநிறுவனங்களுக்கு அன்போடு நன்கொடைகள் வழங்கி ஆதரித்த ரெனா, அதிகம் அறியப் படுவது மலாயாப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பிரிவு அமையத் தமிழவேள் கோ.சாரங்கபாணியோடு இயைந்து ஆற்றிய அரும் பணியினால்தான். அதற்கு மலாயா முழுவதிலுமிருந்து பணம் திரட்டிக் கொடுத்தவரும் அவர். தமிழர் திருநாளைப் பினாங்கிலும் மற்ற ஊர்களிலும் வளமாகக் கொண்டாட உதவியும் உள்ளார்.

பினாங்கில் அவர் இருந்த நாளில் பினாங்குக்கு வரும் எல்லாத் தமிழ்ப் பிரமுகர்களுக்கும் அவர் வீட்டில் பெரும் விருந்து உண்டு. கண்ணதாசன், கவி கா.மு.ஷெரிப், சிலம்புச் செல்வர் ம.பொ.சி. ஆகியோர் மீது அளவற்ற பாசம் கொண்டு அவர்களோடு இடையறாத் தொடர்பு வைத்திருந்தவர். கர்ம வீரர் காமராஜ் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார்.

ரெ.கா.வின் பின் குறிப்புகள்:

ஆறுமுகம் பிள்ளையும் ரெங்கசாமிப் பிள்ளையும் எளிய குடும்பத்தில் பிறந்து தங்கள் சுய முயற்சியால் வாழ்வில் பெருமளவு செல்வமும் புகழும் ஈட்டினார்கள். அந்த வகையில் மலேசியத் தமிழர்களுக்கு எடுத்துக் காட்டானவர்கள். அவர்கள் இருவரின் பெயர்களும் பினாங்கு இந்தியர் வரலாற்றில் அழிக்க முடியாமல் பொறிக்கப் பட்டிருக்கும்.

ஆனால் சகோதரர்கள் இருவரும் தங்கள் பிற்கால வாழ்வில் இறுதிவரை பகைவர்களாகவே வாழ்ந்தார்கள். பிற்காலத்தில் இருவருமே தங்கள் சொத்துக்களை இழந்தார்கள். ஆறுமுகம் பிள்ளை வருமான வரி வழக்கில் அரசாங்கத்தோடு நீதிமன்றத்தில் போராடி தம் சொத்துக்களை இழந்தார். அந்த வழக்கில்தான் யூ.பி.எஸ்டேட் அவர் கையிலிருந்து கெடா மாநில அரசாங்கத்திற்கு மாறியது. இன்று Cinta Sayang Golf Resort ஆக இருக்கிறது. வர்த்தகக் காரணங்களால் ரெங்கசாமிப் பிள்ளையும் தம் சொத்துக்களில் பெரும்பாலானவற்றை இழந்தார்.

ஆறுமுகம் பிள்ளையின் வாரிசுகள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் அவர்கள் தங்கள் தந்தையின் இழந்த செல்வத்தை ஈட்டவில்லை என்றே தோன்றுகிறது. ரெங்கசாமிப் பிள்ளையின் வாரிசுகள் தங்கள் சுயமுயற்சியில் பெரும் தொழில் வல்லுநர்கள் ஆகி தந்தை அளவுக்குச் செல்வம் ஈட்டுகிறார்கள். பிரபல 'தாமரை உணவகம்' அவர்கள் வணிகக் குழுமத்தின் கம்பீரமான அடையாளமாக இருக்கிறது. நல்ல கொடையுள்ளமும் உள்ளவர்கள்.

முடிவுரை:

"பழங்கலத்தில் பழங்கள்" தொடர் இதோடு முடிவடைகிறது. பினாங்கில் இந்தியர்கள் கதையைப் பொறுமையோடு படித்தவர்களுக்கு நன்றி.

பங்களிப்பாளர்கள்

Karthi மற்றும் Ksubashini

"https://marabuwiki.org/index.php?title=பினாங்கின்_கதை_10_(இறுதி)&oldid=640" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 4 ஜனவரி 2010, 20:32 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,395 முறைகள் அணுகப்பட்டது.