பாசுர மடல் 069 : பகவத்கீதையும் ஆழ்வார்களும் .

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பகவத்கீதையும் ஆழ்வார்களும் .



 மகாபாரதக் கதை உலகின் தொண்டுப் பழசான கதை. தமிழின் முதும் பெரும் நூல்களில் மகாபாரதம் பற்றிப் பேசப்படுகிறது. ஒரு தமிழ் மன்னன் பாண்டவர்களுடன் சேர்ந்து போர்ச்சோறு உண்டதாக ஒரு புறநானூற்றுப் பாடலொன்று சொல்லும். இது உயர்வு நவிற்சியா இல்லை மாபாரதப் போர் தமிழ் மண்ணில் நடந்ததா என்பதை சரித்திர ஆய்வாளர்களுக்கு விட்டுவிடுவோம். எப்படி இருப்பினும் இரண்டு ஆரிய வம்சத்து மன்னர் குழுவிற்குள் நடந்ததாக நம்பப்படும் ஒரு போரில் ஆரிய இனம் சாராத விருஷ்ணி குலத்திலகமான வசுதேவன் கிருஷ்ணன் சூத்திரதாரியாக இருந்தது சுவாரசியமான விஷயம். இதை திராவிட மேலாண்மையை ஆரியம் ஒத்துக் கொண்டதின் முதல் அறிகுறி என்று சொல்வாரும் உளர்.

                                                                                            
Mahabharata war.jpg


இந்தியாவின் மூன்று தத்துவ பேரமைப்புகளான உபநிடதம், கீதை, பிரம்மசூத்திரம் என்பவற்றுள் அடங்கும் கீதை பிற்காலத்தில் மகாபாரதக் கதையின் ஒரு அங்கமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. இதை முதலில் செய்வித்தவர் யார் என்பது கேள்விக் குறி. ஆனால் வர்ணாசிர முறை பற்றி பேசும் 18வது அத்தியாயத்தை உள்ளடக்கியதாகக் கொள்ளப் படும் கீதையை கண்ணன் சொன்னதாக உட்புகுத்தியது ஆரியர்கள் தாங்கள் இழந்த மேலாண்மையை சரிகட்ட செய்த சதி என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

                                                                              
Dr-ambedkar.JPG


வேத காலத்து சமூகத்தில் ஒரு குருவிடம் கல்வி கேட்கவரும் சீடர்களை அவரவரது இயல்பு கண்டு அந்தணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிரித்துப் பார்ப்பது வழக்கத்தில் இருந்த ஒன்று. அதன் படி கல்வி, கேள்விகளில் அதிக ஈடுபாடு காட்டி மெய்ஞான சிரத்தை உள்ளவர்கள் அந்தணர் என்று அழைக்கப் பட்டனர். உதாரணமாக தன் இயல்புகளால் சத்திரியராக இருந்த கெளசிகர் தவ பலத்தால் அந்தணர் என்ற நிலைக்கு உயர்ந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. டாக்டர். அம்பேத்கார் இப்படி இருந்த நிலை படிப்படியாக மாறி, சமூகத்தில் சிறப்பு இடம் பெறும் அந்தணர்கள், அந்த இடத்தை என்றும் தக்கவைத்துக் கொள்ள வர்ணம் என்பது பிறப்பால் வருவது என்று மாற்றி இந்திய சமூகத்தில் மேலாண்மை கொண்டனர் என்று சொல்கிறார் தனது, "பார்ப்பனீயத்தின் வெற்றி" என்ற நூலில்.

                                                 

இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் முல்லைத் தெய்வமான கண்ணன் (இவன் இடையர் குலத்து இளவல்) வர்ணாசிர முறை சொல்லி "தொண்டு செய்தல் சூத்திரனுக்கு அவனியற்கையாக ஏற்பட்ட தொழில்" (கீதை 18:44) என்று இந்தியாவின் அடிமைத் தொழிலுக்கு வித்திட்டான் என்ற பழி வந்து சேர்கிறது. இது எவ்வளவு தூரம் உண்மை என்று இம்மடலில் கொஞ்சம் காண்போம்.

                                                                              
Krishna-with-flute.jpg


கண்ணன் வழிபாடு என்பது தமிழ் மண்ணில் தொன்று தொட்டு உள்ள ஒரு மரபு. பரிபாடல், சிலப்பதிகாரம், மதுரைக் காஞ்சி, முல்லைப் பாட்டு, திருமுருகாற்றுப் படை, திரிகடுகம் போன்ற பல்வேறு பண்டைய நூல்கள் இதற்கு சான்று பகரும். பரிபாடலில் காணும் "ஆர்வம்" என்பது பக்தியாக பின்னால் மலர்கிறது என்பார் "தமிழ் இலக்கியங்களில் வைணவம்" நூல் ஆசிரியர் இந்திரா பார்த்தசாரதி. "இடையில் தோன்றிய சில நீதி நூல்களை ஒதுக்கிவிட்டு பார்ப்போமானால் சங்க இலக்கியம் பக்தி இலக்கியமாக மாறிவந்த வளர்ச்சியைக் கவனிக்கலாம்" என்று சொல்கிறார் டாக்டர்.மு.வரதராசனார். ஆக, இந்த பண்பாட்டு வளர்ச்சியின் உச்ச கட்டம்தான் ஆழ்வார்களும், நாயன்மார்களும் தமிழ் மண்ணிற்குத் தந்த பக்தி இலக்கிய காலம். எனவே ஆழ்வார் பாடல்களில் கீதை பற்றிய மேற்கோள்கள் உள்ளனவா எனத் தேடுவது நாம் முன் சொன்ன புதிருக்கு விளக்கம் அளிக்கும்.

                                                                                 

அதாவது, இன்றைய கண்ணோட்டத்தில் கீதை என்பது பார்த்தனுக்கு கண்ணன் பாரதப் போரில் நடத்திய உரை என்று கருதப் படுகிறது. டாக்டர் இராதா கிருஷ்ணன் "பகவத் கீதை உரை" என்ற புத்தகத்தில் கீதை ஒரு மதநூல் என்று எழுதுகிறார். தத்துவ நூலாக இருந்த கீதைக்கு மத ஸ்தானம் கிடைக்கிறது. மேலும் உலக அளவில் பிரசித்தி பெற்ற மத ஸ்தாபகர்களான பிரபுபாதா போன்றோர் கீதையை வைணவ நூலாகவே பிரகடணப் படுத்தி உள்ளனர். தமிழ் வைணவ ஆச்சாரியர்களும் திருவாய் மொழிக்கு உரை எழுதும் போது கீதை வரிகளை மேற்கோள் காட்டத் தவறியது இல்லை. ஸ்ரீவைஷ்ணவத்தின் பிதாமகர்களில் சிறந்த இராமானுசர் பகவத் கீதைக்கும், பிரம்ம சூத்திரத்திற்கும் உரை எழுதி உள்ளார். தத்துவ பேரமைப்புகளுக்கு உரை (பாஷ்யம்) எழுதுவது காலத்திற்குக் காலம் கற்றறிந்த சான்றோரால் செய்யப் பட்டே வந்திருக்கின்றது. ஆதி சங்கரர், மாத்துவர் போன்றோரும் உரை எழுதியுள்ளனர். அவரவர் கண்ணோட்டப்படி அதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.

                                                                                        
Geethopadesam.gif


கண்ணன் தோரோட்டிய செய்தி பல இடங்களில் நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில் சொல்லப் பட்டாலும் கீதை உபதேசம் கூறப் படவில்லை என்பதை முனைவர் ஆ.க.பார்த்தசாரதி தனது "பெரியாழ்வார் பாசுரங்கள்-ஆய்வு" என்ற நூலில் குறிப்படுகின்றார். மேலும் அவர், "மகாபாரதத்தில் அர்ச்சுனனுக்குக் கீதையை உபதேசித்தான் என்ற சரித்திரம் உண்டு. இந்தக் கீதைதான் பகவத் கீதை என்று பிரசித்தமாய் விளங்குவது. இக்கீதையைப் போற்றாத மக்களில்லை. இதைப் பற்றி ஆழ்வார் பாடல்களில் யாதொரு குறிப்பும் கிடையாது என்பது இங்கே மனங்கொள்ளத் தக்கது" என்ற திரு.வையாபுரியின் வரிகளை நினைவு கோர்கிறார் (எஸ்.வையாபுரிப் பிள்ளை-அகராதி நினைவுகள். ப97)


ஆழ்வார்களுக்கு கீதை பரிச்சியம்தான் என்று சொல்லும் வைணவர்கள் மேற்கோள் காட்டுவது இரண்டு திருவாய் மொழிப் பாடல்களை.


"பிணக்கற அறுவகைச் சமயமும்..." என்று தொடங்கும் திருவாய்மொழியில் (1.3.5)"வணக்குடைத் தவநெறி வழி நின்று" என்ற வரிகளுக்கு வியாக்கியானம் சொல்லும் போது, "பகவத் கீதையில் பத்தியைப் பற்றிக் கூறுமிடத்தில் (9:14) பத்தியினால் என்னை வணங்கி வழிபடுகின்றார்கள், என்று கூறி, பின்னர், என்னை வணங்குதலைச் செய்வாய் (9:34) என்றும் கூறுவதால் நம்மாழ்வாரும் வணக்குடைத் தவநெறி" என்று சொல்லுவார்கள் (ஈடு ப.156).


(இந்தப் பாடலை விரிவாக வேறொரு கருத்தில் பின்னொரு மடலில் காண்போம்)


கீதா உபதேசத்துடன் ஒத்துப் போகும் மற்றொரு திருவாய்மொழி 10.4.9.

கண்டேன் கமல மலர்ப்பாதம்; காண்டலுமே
விண்டே ஒழித்த வினையாயின எல்லாம்
தொண்டே செய்து, என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணிவகையே
.


இந்த கடைசி வரிகளுக்கு பொருள் சொல்லும் போது பரமன் என்பது கிருஷ்ணனைக் குறிக்கும் என்றும் பணித்த பணிவகை என்பது பகவத்கீதை என்றும் சொல்வர்.


பண்டே பரமன் பணித்த பணி வகையே கண்டேன் கமல மலர்ப்பாதம் என்பதற்கு ஈடு, அவன், " என் ஒருவனையே புகலிடமாகப் பற்று (மாம் ஏகம் சரணம் வ்ரஜ-கீதை18:66) என்கிறபடியாலே நான் (நம்மாழ்வார்) அவன் திருவடிகளைக் காணப் பெற்றேன்" என்று பொருள் சொல்கிறது.


வேதாந்த தேசிகர் கீதையின் சாரத்தைச் சொல்லும் "கீதார்த்த சங்கிரகம்" என்ற நூல் செய்வித்த சேதியை "கீதை மொழிந்தருளும் வேதாந்த தேசிகனார் பாதார விந்தமலர் பற்று" என்னும் தனியன் சொல்லும்.


தத்துவ நூலாக இருந்த கீதை அதன் சிறப்பு குறித்து அடிக்கடி மேற்கோள் காட்டப் பட்டிருப்பது தெரியவருகிறது. அது உண்மையில் ஒரு மத நூலா? அதை வைணவர்கள் சொந்தம் கொண்டாடுவது சரியா? இல்லை, வையாபுரிப் பிள்ளை கேள்வி கேட்பது போல் மாபாரதப் போரில் சொல்லப் பட்டதாக வரும் கீதைதான், வைணவர்கள் மேற்கோள் காட்டும் பகவத் கீதையா? அடிமைத் தொழிலை முன்மொழியும் ஒரு ஏடு மத நூலாகக் கருத இடம் உள்ளதா? சாதீயத்தை எதிர்க்கும் ஆழ்வார்கள் இயக்கம் கீதையை நேரடியாக மேற்கோள் காட்டமைக்கு உள்காரணம் இருக்குமா? தொன்று தொட்டு வரும் தமிழ் மரபில் சாதீயக் கண்ணோட்டம் இருத்தலாகாது என்றுதான் ஆழ்வார்கள் செப்பாமல் விட்டனரா? இல்லை, இன்று பிரபலமாக இருக்கும் பகவத் கீதை ஆழ்வார்கள் காலத்திற்குப் பின் புனையப் பெற்றதா?



நா.கண்ணன்.
Date - Sat., Sat., 15 Jan., 2000 01.16.52 +0200 15.22.05  +0200

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 29 நவம்பர் 2010, 14:35 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,057 முறைகள் அணுகப்பட்டது.