பாசுர மடல் 058 : காதல் விளைவித்த காரமாமேனி !

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

காதல் விளைவித்த காரமர்மேனி !!



 “ப்ரபத்திக்கு தேச நியமமும், கால நியமமும், ப்ரகார நியமமும், அதிகாரி நியமமும், பல நியமமுமில்லை, விஷய நியமேயுள்ளது”


என்பதைக் கண்டோம். விஷய நியமத்தைப் பற்றிப் பேசுமுகமாக ஸ்ரீமணவாளர், அர்ச்சாவதார்த்தை எடுத்துக் கொள்கிறார். “விஷய நியமமாவது குணபூர்த்தியுள்ளவிடமே விஷயமாகை; பூர்த்தியுள்ளதும் அர்ச்சாவதாரத்திலே” என்று சொல்கிறார்.


அர்ச்சாவதாரம் என்பது கோவிலில் உள்ள பெருமாள் வெறும் கற்சிலை என்று பார்க்காமல் அவரது திருமேனி உண்மை என்று கண்டு, அவரது கல்யாண குணங்களை அனுபவிக்கும் ஒரு மனோனிலையாகும். அதாவது திருமால் இனி தனியாக அவதாரம் எடுக்கவேண்டிய அவசியமில்லாமல் ஒவ்வொரு ஊரிலும் அர்ச்சாவதாரமாக நிற்க நாம் வெறுமே சென்று அனுபவிக்க வேண்டியதுதான் என்று பொருள். இது ஒரு வகையான மனோலயம். பாடும் போது கமகம் கொடுத்து, வளைத்து, நெளித்துப் பாடும் போதுதான் “பாவம்” வெளிப் படுகிறது. பாவமே இல்லாமல் பாடினால் “ஐயோ! பாவம்” என்று ஆகிவிடுகிறது.


வெண்மையில் எல்லா நிறங்களும் அடங்கிவிடுகின்றன என்றாலும், உலகு வெண்மையாகவா உள்ளது. அப்படி இருந்தால் எவ்வளவு சோர்வாக இருக்கும்! பாரதி பேசும் “வண்ணக் களஞ்சியத்தின்” சாத்தியம் இல்லாமலே போயிருக்கும் இல்லையா? உலகம் ஒன்றிலிருந்து வந்தது என்று அறிகிறோம். அந்த ஒன்று, ஒன்றாகவே இருந்திருந்தால், இந்தப் பாசுர மடலின் தேவை என்ன? உலகில் பாவங்கள் முக்கியம், பாவனைகள் முக்கியம். பாவனை இல்லாமல் உலகில் எதுதான் நடக்கிறது?


வீட்டில் அப்பாவாக உள்ளவர்,ஆபீஸ் போனபின் ஆபீசர் ஆகிவிடுகிறார், சாயந்திரம் மனைவிகிட்டே அதே "ஆபீசர்" பாவனை செய்ய முடிவதில்லை. கொஞ்ச வேண்டியுள்ளது. ஓடி வரும் மழலையைக் கண்டவுடன் “சின்னஞ் சிறுகிளியே!” என்று உருக வேண்டியுள்ளது. பாவனை இல்லாமல் வாழ்வு சுவைப்பதே இல்லை. திருமங்கை ஆழ்வார் அனுபவிப்பதைப் பாருங்கள். “திருமாலைப் பாடக் கேட்டு..மடக்கிளியை கைகூப்பி வணங்கினாளே!” என்கிறார். கருங்குவளை மலர்களைக்கண்டு பெருமாள் நிறம் கொண்டீரே! என்று ஆண்டாள் பொருமவில்லையா? பெரியாழ்வார் தன் பெண் இருந்த நிலை பற்றிப் பேசும் போது, “ காதை பூணுங் கண்ணாடி காணும்” என்று சொல்கிறார். எனவேதான் அர்ச்சாவதாரம் என்பது ஒரு மனோலயம் என்றேன்.


பாவனை என்பதால் வெறும் கற்பனை என்று கொள்ளவேண்டாம். வீட்டை விட்டுக் கிளம்பும் அப்பா, ஆபீஸில் ஆபீஸராகி, மாலையில் டென்னிஸ் பிளேயராகி, கோவிலில் இந்துவாகி, மனைவிக்கு கணவராகி, குழந்தையைக் கண்டவுடன் மீண்டும் அப்பவாகி விடுகிரார்.


இதனால்தான் பெரியாழ்வார் நம் எல்லோருக்கும் தந்தையான இறைவனை, “எந்தை தந்தை, தந்தை, தந்தைதன் மூத்தப்பன்“ என்று சொல்கிறார். இறைவனை நம்பு என்று சொல்வது இறைவனை நிராகரிப்பதற்கு ஒப்பாகும். இல்லாத ஒன்றைத்தான் நம்பவைக்க வேண்டும். இறைவனை எப்படிக் காண்பது, இறைவனை எப்படி அனுபவிப்பது என்று கற்றுக் கொடுக்கவேண்டும்,கற்றுக்கொள்ளவேண்டும். நம்மாழ்வார் சொல்லித்தரவில்லையா? “உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் “ என்று! மெல்லுணர்வை வளர்த்துக் கொள்ளவேண்டும். பரந்து, விரிந்து, ஆழ்ந்து கிடக்கும் “கிராண்ட் கென்யனில் “ நின்று கொண்டு ஜெ.கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார், “பார்க்கத் தெரிகிறான் படைத்தவனும் அவன் படைப்பும் “ என்று. தியாகராஜருக்கு தன் இராமன் பேசும் தெய்வம். இல்லாவிடில் மனிதர் வந்த சுகத்தை விட்டு, “நிதி சால சுகமா? இராமு நீ சந்நிதி சால சுகமா? நீ சந்நிதி சேவ சுகமா? மமத பந்தன யுத நரஸ்துதி சுகமா? சுமதி தியாகராஜனுதினி கீர்த்தன சுகமா?” என்று பஞ்சலோக சிலையிடம் பேசிக்கொண்டு இருப்பாரோ?


சிலையிடம் பேசுவது பயித்தியக்காரத்தனம் என்று சொல்லலாம். சிலை பதில் சொல்லுமா? என்றும் கேட்கலாம். ரோஜாச் செடியிடம் பேசினால் பதில் சொல்வதில்லை, மலர் தருகிறது. நாயிடம் பேசினால் பதில் சொல்வதில்லை, தன் வாழ்வையே தருகிறது, கொடும் சிங்கத்திடம் பேசினால் கூட தன் நட்பைத்தர சம்மதிக்கிறது. தெய்வத்திடம் பேசினால் என்ன குறைந்துவிடப் போகிறது? தியாகராஜர் பேசியதற்குப் பலனாக அவரது கீர்த்தனைகள் சாகாவரம் பெற்று விடவில்லையா?


                                                                                   
Df001.jpg


"ஆழ்வார்கள் பலவிடங்களிலும் ப்ரபத்தி பண்ணிற்றும் அர்ச்சாவதாரத்திலே” என்று மணவாளர் சொல்கிறார். ஆழ்வார்கள் ஒவ்வொரு திருத்தலத்திற்கும் செல்லும் போதும் வெவ்வேறு வகையான அனுபவம் கிடைகிறது. அதை வைத்து பாடல்கள் செய்துள்ளனர். இப்படி அனுபவம் கிடைக்கவேண்டுமெனில் அதெற்கென ஒரு மனோபாவம் வேண்டும். ஒரு மெல்லிய நுண்ணுணர்வு வேண்டும். நாம் அப்படியானதொரு உணர்வுடன் இருக்கும் போதுதான் “அருளிச் செயலாக” இறைக் கவிதை பிறக்கிறது. அப்படித்தான் ஆழ்வார்கள் இறைவனை அனுபவித்து உள்ளனர். இவர்கள் பாடல்களில் கொஞ்சமும் பரிச்சயமில்லாமல் ஒரு சாதாரணனுக்கு எப்படி மனோபாவம் சித்திக்கும்? நல்ல இசையை அனுபவிக்க வேண்டுமெனில் முதலில் கேட்டுப் பழக் வேண்டும். இசை ஞானம் வளர, வளர, இசையின் நுணுக்கங்கள் பிடிபடும். நுணுக்கங்கள் பிடி, பட, பிடி பட இசையில் லயிப்பு உண்டாகும். லயிப்பு உண்டாகும் போது இசையின் பயன் முழுமை அடைகிறது. இதைப் போலத்தான் இறைமையின் லயிப்பும். “அறிவின் பயனே! அரி ஏறே!” என்கிறார் நம்மாழ்வார். அறிவின் பயனே இந்த ஆனந்த லயிப்புதான் என்கிறார். இதனால்தான் ஞானத்தில் திளைத்த ஆதி சங்கரரும் “பஜ கோவிந்தம்” என்று பக்திப் பரவச நிலை பற்றிப் பேசுகிறார். வைணவக்குரவர்கள் (பூர்வாச்சாரியர்) ஞானத்தில் இறைவனைக் கண்டு அனுபவித்தாலும் ஆழ்வார்கள் அனுபவித்த பக்தி பரவச நிலையே இறைச் சரணுக்கு ஏதுவானது என்பது மணவாளரின் துணிபு. காதல் முழுமையடையும்போது, “எனக்கு தேனே பாலே கன்னலமுதே திருமாலிருஞ்சோலைக்கோனே” என்று இறைவன் பக்கம் முழுச் சரணம் சாத்தியமாகும்.


                                                                      
988Krsnaeatingdirt.jpg


அர்சாவதாரத்தின் அருமையை ஸ்ரீ மணவாளர் ஒரு அழகான உவமையால் எடுத்துச் சொல்கிறார்: “பூகத ஜலம் போலே அந்தர்யாமீத்வம்; வரண ஜலம் போலே பரத்வம்; பாற்கடல் போலே வ்யூஹம்; பெருக்காறு போலே விபவங்கள்; அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம்”


நல்ல தாகம் உள்ள ஒருவனுக்கு, பாறைக்குள் (மண்ணிற்குள்) ஒளிந்திருக்கும் தண்ணீரால் என்ன பயன்? இல்லை, அண்டத்திற்கு வெளியே பரவி இருக்கும் நீரணுவால் என்ன பயன்? அண்டதில் உள்ள பாற்கடலால் கூட என்ன பயன்? பிரவாகமாகப் பரவி ஓடும் காட்டாற்றால் என்ன பயன்? இவைகளிலிருந்து அவனது தாகம் அடங்கப் போவதில்லை. ஆயின், மழை பெய்து சேர்ந்திருக்கும் மடுக்களிலிருந்து குடிக்க தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம்தானே!


கல்லினுள் நீர் போல் உள்ளது அந்தர்யாமித்துவம். இறைவன் எல்லாருள்ளும் உள்ளான் என்று பார்க்கும் பார்வை அவ்வளவு எளிதாக வந்து விடுகிறதா? அப்படியிருந்தால் இன்று உலகம் எப்படி இருக்கும்! “பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே!! பகைவனுக்கருள்வாய்” என்று நம் நெஞ்சிடம் மன்றாட அல்லவோ வேண்டியுள்ளது! பாட வந்த வள்ளலாரும் “ஒருமையுடன் நினது திருவடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்கிறார். அந்தர்யாமியைக் காண பொறுமை எங்கே உள்ளது? “வேகம் தடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க!” என்கிறார் மாணிக்க வாசகர். வேகம் அதிகம் உள்ள இவ்வுலகில் கல்லினுள் உள்ள நீர் போல் இருந்தால் இறைவனை ரசிக்க முடியுமோ?


அண்டத்திற்கு வெளியேயுள்ள நீரணுவாக (hydrogen) உள்ளது பரத்துவம்! அதிலிருந்துதான் சூரியன் முதலான கோள்கள் சக்தி பெறுகின்றன என்றாலும் அந்த நீரால் விடாய் தீர்க்க முடிவதில்லை. அதாவது, இந்நிலையை மனது கிரகிப்பதில்லை.


அண்டத்திற்குள் உள்ளதுதான் பாற்கடல். இந்த பாற்கடல் (Milky way) மிகப் பெரியது. அது போல்தான் திருமாலின் வியூகம். இப்படி விஸ்வரூபம் காட்டியபோது, விஜயனால் கண்டு ரசிக்க முடியவில்லை. பயந்துவிட்டான். ஆனால், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய், பார்வையிலே நண்பனாய் வந்த போதுதான் அவனால் காண்டீபம் தூக்க முடிந்தது. யசோதை மிரண்டு விடவில்லையா? தாமோதரனாக இடுப்பில் கயறு கட்டுண்ணப்பண்ணும் சிறுவனாக வந்த போதுதானே அவளால் கண்ணனிடம் நெருங்க முடிந்தது. மிரட்டுபவனாக இறைவன் இருந்தால் என்ன பயன்? “அன்பும் சிவமும் வேறு, வேறு என்பர் அறிவிலார்” என்பது திருமூலம்


பெரிய காட்டாறு போலே இராம கிருஷ்ண விபவங்கள். இந்த அவதாரங்கள் இப்போது இல்லை. அதனால் உடன் பயன் இல்லை.


ஆனால், மண்டியிருக்கும் மடுக்கள் போல் உள்ளன அர்ச்சாவதாரம். இதனால் உடன் பயன் உண்டு. கோவிலில் போய் மனமுருகி அழும் போது, மனது இலகுவாகிறது. பகைமை உணர்வு போய் விடுகிறது. வாழ்வில் லயிப்பு உண்டாகிறது. பிள்ளை, குட்டிகள் மேல் பாசம் வளர்கிறது. வாழத் தோன்றுகிறது!


இதை உணர்ந்துதான் ஆழ்வார்களும், “காதல் கடல் புரைய விளைவித்த காரமர்மேனி” என்று அர்ச்சாவதாரப் பெருமாளை, அவன் திருமேனியை இரசிக்கின்றனர். “என்னைத் தீமனம் கெடுத்தாய்” “மருவித்தொழும் மனமே தந்தாய்” என்று இறைவன் தனக்குச் செய்த நல்லவகைகளை எண்ணி மகிழ்ந்தும், அவன் திருவடிகளில் தான் பண்ணும் கைங்கர்யங்களில் உவப்பும், அதனால் அவனுக்கு உண்டாகின்ற மகிழ்வைக்கண்டு தனக்கு உண்டாகின்ற உவப்புமே பலனாக அமைகிறது என்று காட்டிச் சென்றனர்.


அடுத்தமுறை கோவில் செல்லும்போது இதுவே நமது மனோனிலையாகட்டும்!


                                                                                             
2005051300080301.jpg



நா.கண்ணன்.

Date - Tue., 7 Sep., 1999 08 . 33.16 . 0400

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 26 நவம்பர் 2010, 05:21 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,070 முறைகள் அணுகப்பட்டது.