பாசுர மடல் 055 : அவதாரங்களை அணுகுவது எப்படி ?

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 


அவதாரங்களை அணுகுவது எப்படி ?



கட்டியம்: தெய்வம் என்னும் கருப்பொருளை வைத்து எழுதப்படும் பாசுர மடல்கள் நாத்திக/அக்நோத்திய அன்பர்களின் உள்ளம் வாடச் செய்தால் மன்னிப்புக் கோருகிறேன்.


அவதாரங்களை எப்படிப் புரிந்து கொள்வது என்பது இப்போது கேள்விக் குள்ளாகிறது. குறள் வடிவில் இறைவன் வந்தான் என்றால் அவன் ஒரு dwarf, genetically deformed என்று கொள்வதா இல்லை அவதாரங்கள் அதன் கதைகளுக்குப் பின்னால் வேறு சேதி ஏதும் சொல்கின்றனவா? முனைவர் லோகநாதன் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வது போல் அமைகின்றது இப்பாசுர மடல்.
____________________________________________________________________________



அன்று இரயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் போது தியாகராஜரின் வசந்தா இராகத்தில் அமைந்த "சீதம்மா மாயம்மா!" கீர்த்தனையைக் கேட்டுக் கொண்டு வந்தேன், கண்களில் நீர் வழிய! எப்படி உருகி,
Images.jpg
உருகி சாகித்தியங்கள் செய்திருக்கிறார் இந்த மனிதர். சில நேரங்களில் தோன்றும் அப்படி என்ன அவதி அவருக்கு? சுடர் விடும் மெழுகு துடிப்பது போல துடித்துப் போயிருக்கிறாரே என்று. அப்பாடல்களைக் கேட்கும் போது நம் கவலைகள் சர்வ சாதாரணமாகப் போய் விடுகின்றன.


ஒரு தத்துவவாதியைப் பொறுத்தவரை இராமன் என்பது ஆய்பொருள். அதன் மெய்ப்பாடு, அதன் தோற்றம், அது இலக்கியங்களில் கையாளப்படும் விதம் அதன் அரசியல் கலப்புகள் இப்படி. ஆனால் தியாகராஜருக்கு இராமன் எப்படி? தன் இதய கீதத்தின் ஆத்ம ஸ்வரங்கள்! அவன் இன்றி ஒரு அணுவும் அவரைப் பொறுத்தவரை அசைவதில்லை. அந்த திண்ணத்தில், அந்த அசைக்க முடியாத நம்பிக்கையில் விழுகின்றன சாகித்யங்கள். இராகங்கள் காத்திருக்குமாம் என்னைப் பாடு, உன்னைப் பாடு என்று!! அந்த மனிதன் செய்த பக்தி இன்று எத்தனை ஆயிரம் உள்ளங்களை பண்படுத்துகிறது! Cleveland-ல் தியாகராஜ உற்சவம். அன்று கீலுக்கு வந்திருந்த சுதா ரகுநாதனின் பக்க வாத்தியக்காரர் சொன்னார், " Cleveland-ல் நல்ல பெயர் வாங்கிவிட்டால், அது பெரிய சான்றிதழ்" என்று. இப்படி நாடு கடந்து நாடு செல்லும் தியாகராஜரின் புகழுக்குக் காரணம் எது? பக்தி! இராம பக்தி! இராமனின் அவதாரத்தைப் பற்றி ஆராய்வதைவிட இராம பக்தி செய்து விடுவது பல மடங்கு மேல் :-) அதனால்தான் சிவ பெருமான், "ஸ்ரீராம, ராம ராமேதி.....என்று சொல்லி ஆயிரம் நாமங்களில் இராம நாமம் மிகச் சிறந்தது என்கிறார்.


தியாகராஜருக்கு ஏன் போகவேண்டும்? நாம் அறிந்த கல்கி (அதான் பொன்னியின் செல்வன் கல்கி - மன்னிக்க, நீங்கள் ஒரு இலக்கியவாதியின் ஆன்மீக நோக்கைக் கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் :-)) கல்கி செய்வித்த "காற்றினிலேவரும் கீதம்" பாட்டு! சுதா எனக்கிருக்கும் நம்மாழ்வார் பக்திக்குப் பரிசாக அன்று வசந்தா இராகத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் மேல் ஒரு பாடலும், காற்றினிலே வரும் கீதம் பாடலும்
Sudha.jpg
பாடினார். அந்தப் பாட்டின் பொருள் புரிந்து நெகிழக் கூடிய ஒரே தமிழன் அன்று நான்தான். ஆனால், பெரும் ஜெர்மன் கூட்டமே நெகிழ்ந்து போய், குழலோசை கேட்ட ஆவினங்கள் போல் மெய் மறந்து இருந்ததை நான் அன்று கண்ணாறக் கண்டேன். என் கண்ணனின் மாயா லீலையையும் கண்டேன்! வெறும் இசைக்கு மயங்குகிறார்கள் என்றால் அவர்கள் முன்னமே மயங்கியிருக்க வேண்டும். ஆனால் இந்தப் பாட்டு செய்த மாயம் என்ன? அதன் பொருள் அவர்களுக்கு எப்படி விளங்கியது? கண்ணனுக்குத்தான் வெளிச்சம்!!


கண்ணனும், இராமனும் அவதாரங்களாய் வரவில்லை எனில் இன்று இந்த லயிப்பு இல்லை. இன்று உலக காவியங்களில் தனிச்சிறப்புற்று இருக்கும் மகாபாரதம் இல்லை, இராமாயணம் இல்லை! ஆராய்ந்து கொண்டே இருக்கலாம்தான். வெங்காயம் மாதிரி ஆராய, ஆராய ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. ஆனால் சிந்தும் சில கண்ணீர் துளிகள் (வெங்காயக் கண்ணீர் அல்ல! அன்புக் கண்ணீர்!) நாம் ஆராய்வதால் அடையும் பயனை தூக்கி சாப்பிட்டு முழுங்கி விடுகின்றன.


                                                                                                        
Sri-ramar-hanuman-lakshmanar.jpg


ஆழ்வார்களும், தமிழின் பெரும் கொடையாக வந்த ஆசார்ய்ய பரம்பரையும் அவதாரம் என்பதை நீங்கள் சொல்லும் சாதாரண அர்த்தத்தில் புரிந்து கொண்டிருப்பார்கள்- அதுதான் திருமாலியம் - என்று நீங்கள் சொல்வது நம் பண்பாட்டுச் செழுமையை நாமே அவமதிப்பது போலாகும். அவதாரங்கள் Metaphor-என்பதை மிகத் தெளிவாகத் தெரிந்தேதான் அதை முன் வைத்து பக்தி இயக்கத்தை நடத்திச் சென்றனர்.

அவதாரம் என்னும் கருத்து எப்படி சைவ, வைணவ பாரம்பரியத்தில் எடுத்தாளப் படுகிறது எனக் காண்போம்.


                                                 
Rama avatar.jpg

                                                                                                                

                                                                                                                 

1.நீள்வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலிமண்
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானைத்
தோளா மணியைத் தொண்டர்க் கினியானைக்
கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே? (பெரிய திருமொழி)


                                                                                        
Krishna avatar.jpg


திருமால் குறளுருவாய் (வாமனாவதாரம்) வந்து அணுவுக்குள் அணுவாய், அப்பாலுக்கு அப்பாலாய் இருப்பதும் அவனே என்று காட்டிய நிகழ்ச்சியைச் சொல்கிறது இந்த அவதாரம்.
இதே கருத்தை திருமூலர்


                                                                     
Vamana avatar.jpg


அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண்டிலர் மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல
முடிகண்டேன் என்று அயன் பொய் மொழிந்தானே (16)


என்கிறார். சைவ சித்தாந்தத்தின் ஆரம்ப கர்த்தாவான திருமூலர் சொல்லும் கதையை யாரும் சரித்திர பூர்வமாகப் பார்ப்பது இல்லை. பரம்பொருளின் அடியும் முடியும் அளவிட முடியாது என்பதுதான் இந்த ஐதீகங்கள் (myths) சொல்ல வருவது என்று கைக்குழந்தை கூட புரிந்து கொள்ளும்.

2.
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கப்பொழுதே அவன் வீயத் தோன்றிய, என்
சிங்கப்பிரான் பெருமை யாரயும் சீர்மைத்தே (திருவாய்மொழி 2.8.9)


கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றுதான் நான் கதை கேட்டுப் பழக்கம். இதையேதான், சிவனும் பாண்டியன் இட்ட பிரம்படிக் கதையால் எல்லோருக்கும் சொல்ல வருகிறார். யாரும் சிவன் எப்படி மானுட உடம்பு கொண்டு வந்தார். அவர் மானுட உடம்புடன் வந்தார் என்றால் மனித
Nrasimha.jpg
மலங்கள் அவரை ஒட்டிக் கொள்ளாதா எனக் கேட்பது இல்லை. யானைத் தலையும், மனித உடம்புடைய பிள்ளையாரை யாரும் கேள்வி கேட்பதில்லை. சிங்கபிரானை மட்டும் கேள்விக்கு உள்ளாக்குகிறார் முனைவர் லோகநாதன். குறிஞ்சித் தலைவன் செய்யாத குறும்பா? வள்ளியை மணம் புரிய அவர் செய்த விளையாட்டு. அவர் அவதரித்த கதைகள். இதையெல்லாம் யாரும் சரித்திரம் என்று காண்பதில்லை.

3.
அவதாரங்கள் Metaphor என்று தெரிந்ததால்த்தான் நம்மாழ்வார் கற்று உணரவேண்டும் என்று விரும்புபவர்கள் இராமனையும், கேட்டு அனுபவிக்க வேண்டும் என்பவர்கள் கேசவனின் கதையையும் கேட்க வேண்டும் என்று சொல்கிறார்.


கற்பார் இராம பிரானை அல்லால் கற்பரோ? (திருவாய்மொழி- 7.5.1)
கேட்பார் கேசவன் கீர்த்தியல்லால் மற்றும் கேட்பரோ (தி.மொழி 7.5.3)


இதை விளக்கப் புகும் ஈடு முப்பதாயிரப்படி, "ஒவ்வொரு குணத்தை அனுபவிக்கப் புக்கால் வேறு குணங்களில் கால் வாங்கமாட்டாதவாறு போலே ஆயிற்று" என்று சொல்கிறது. யாரும் அவதாரங்களை literal-ஆகப் பொருள் கொள்வதில்லை. உண்மை இப்படி இருக்க, அறிஞரான லோகாநாதன் வைணவத்தைப் பழிப்பானேன்? அவர் ஆசை வைத்திருக்கும் சைவ சித்தாந்தம் கண்ணை மறைக்கிறதா? ஆசை அறுமின், ஆசை அறுமின் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின் என்று சொல்வது சைவ சித்தாந்தம்தானே?


ஆக தமிழ் வைணவமும், தமிழ்ச் சைவமும் அவதாரம்/திருவிளையாடல் என்பதை metaphor என்ற அளவில்தான் கையாளுகின்றன. வாக்கிற்கும், மனத்திற்கும் எட்டாத பொருளைப் பற்றிப் பேசும் போது metaphor உதவுகிறது. ஒன்றை வைத்துதான் ஒன்றைச் சொல்ல முடியும். நேரடியாக விளக்க முடியாது. அதனால்தான் கந்தக் கடவுள் அருணகிரியாரிடம் "சொல்லற, சும்மா இரு" என்றார். அதையே நான் சொன்னால் மழுப்புவாதம் என்றாகிவிடும் :-))


                                                                                       
Matsa avatar.jpg


அவதாரம் 1, 2 என்று நீங்கள் சொல்லும் இரண்டின் உளவியல் காரணமும் ஒன்றுதான். திராவிட மெய் இயலின் அடிப்படைக் கூறு அவதாரம் என்பது. மற்ற இந்திய மொழிகளை விட தமிழ் ஒன்றில்தான் ஒரு வார்த்தைக்கு ஆயிரம் பொருள் வைத்துப் பேசும் வழக்கம் உள்ளது. அதே போல் ஒன்றைச் சொல்ல வேண்டுமெனில் அதை அப்படியே சொல்லாமல் அதற்கொரு கவித்துவம் கொடுத்து கொஞ்சம் வேறொன்றை வைத்துச் சொல்வது. அதாவது தமிழ் வழக்கில் Metaphor-என்பது இட்லி, தோசை போல் இரண்டறக் கலந்து உள்ளது:-)


இப்படித்தான் மச்சா அவதாரம், நரசிம்ம அவதாரங்கள் கவித்துவத்துடன் கதைகளாய் சொல்லப் பட்டு, பின் தத்துவ மெருகேற்றப் பட்டு வெளிவந்திருக்க வேண்டும். Magical realism என்று இன்று பிரபலப் படும் இலக்கிய வகையின் பூர்வ தாத்தாக்கள் தமிழர்கள்! Magic இல்லாமல் ஒரு கதை உண்டோ நம் மண்ணில்? (விட்டலாச்சார்யாவை விடுங்கள்:-) கடலில் இருந்துதான் உப்பு வருகிறது, உணவு வருகிறது, முத்து வருகிறது. இதை Poetical-ஆகச் சொல்ல வந்தால் மச்சாவதாரம் வந்து சேரும். அதாவது ஒன்றைச் சொல்ல ஒன்று வருவது.


                                                                                           
Vishnu seshan.jpg


கூர்மாவதாரம் காடுகளில் வேட்டை ஆடித் திரிந்த மனிதன் நிலத்தை உழுது பயண்படுத்தும் காலத்தில் தோன்றிய ஐதீகமாக (myth) இருக்கலாம். இப்படித்தான் ஒவ்வொரு அவதாரமும். ஆனால் myth என்பதின் வாசிப்பு (mythical reading) எப்படி இருக்க வேண்டும்? ஐதீகம் என்பதை சரித்திர உண்மை என்று சொல்லப் புகுந்தால் அது "பொய்" என்று ஆகிறது. எனவே அவதாரங்கள் பொய் ஆகும். ஆனால் myth என்பது Metaphor என்று பார்த்தால் அதன் வல்லமை புரியும். myth என்பது நம் ஆழ்மனத் தேடுதலின் காவிய வெளிப்பாடு. இல்லை என்றால் கம்பன் போன்ற ஒரு மகா கவி, தனது கவித்துவத்தையும், நேரத்தையும் ஒரு "பொய்" யை பின் புலமாக வைத்து ஒரு காவியம் செய்திருப்பானா? அப்படியேதான் இருந்திருந்தாலும் அது இன்று ஆத்திக/நாத்திக அத்தனை தமிழர்களின் உள்ளத்தையும் தொட்டுத்தான் இருக்குமா?


நடு கல் வைத்து தமிழ் நிலத்து வீரனை கடவுளாக்குவது தமிழ் மரபு. அவதாரங்களின் தோற்றம் இந்த உளவியலில்தான் உள்ளது.


இரண்டாவது, அவதாரங்களுக்கு ஒரு democratic, non-discriminatory பண்பு உண்டு. அதாவது கடவுள் என்பது உச்சியில்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்பதுதான் அது. அதாவது மனித மனம் எப்போதும் பிரிவினை செய்கிறது. பிரித்துப் பார்க்கிறது. discrimination என்பதுதான் நிறவெறியாக, மத வெறியாக, இன வெறியாக, சாதி வெறியாக வெளிப்படுகிறது. இந்த அவதாரங்கள் என்ற myth பிரதானப் படுத்தப் பட்ட கால கட்டத்தைப் பார்த்தால், தமிழகத்தில் சாதி வெறி ஓங்கி, வர்க்கங்கள் பிரிந்து, நில உடமைச் சமுதாயம் (feudal) சீர்கெட்டுப் போயிருந்தது தெரியும். சங்க காலத்தில் சிறப்புடன் இருந்த பாணர்கள், திருப்பாணாழ்வார் காலத்தில் தீண்டத்தகாதவர் ஆகி விடுகின்றனர்! சுவாமி புறப்பாட்டிற்கு ஜவ்வாது கொண்டு வரும் புலையன் இறந்த மாட்டுடன் உறவு கொண்டாடுவதால் தீண்டத் தகாதவன் ஆகிவிடுகிறான். ஜவ்வாது கொண்டு வரும் உரிமையில் சிதம்பரம் சென்ற நந்தனார் தடுத்து நிறுத்தப் படுகிறார். இதை எப்படி முறியடிப்பது?


அவதாரம் கை கொடுக்கிறது. கடவுளே மனிதனாகப் பிறந்து நம் இன்ப துன்பங்களில் பங்குற்றால்? கடவுளும் நம் போல் விதி வசப்பட்டு உழன்று தவித்தால்? (அதாவது உழன்று தவிப்பது ஒரு நடிப்பு என்று அவருக்கு உள்ளுணர்வாய்த் தெரியும், சாதாரணனுக்கு அது தெரியாது. இது குறித்த நம்மாழ்வாரின் பாடலை பின்னால் தருகிறேன்) ஒரு நொடியில் கடவுள் நம் கைக்கு கிடைத்து விடுகிறார்! அதனால்தான் காந்தி, "ஏழையின் ஒரே உடைமை கடவுள்" என்று சொன்னார். அவதாரம் என்பதை சங்க காலத்தில் இழிதல் என்று பயன் படுத்தி உள்ளனர். இன்று "இழிசனன்" என்பதை தீண்டத் தகாதவன் என்று பயன்படுத்தினாலும், சங்கத் தமிழர் இழி சனன் என்பதை தெய்வம் இழிந்து வரும் சனம் என்ற பொருளில் பயன்படுத்தினர். அதாவது, சாமி இறங்கி வந்து ஆடுபவர்கள்-சந்நதமாடிகள்! அதனால்தான் இறங்கி வந்த சாமி "மலை ஏற" வேண்டி உள்ளது!


இந்த கருத்தாக்கத்தை மிகச் சிறப்பாக பயன்படுத்தியவர் மாமுனி இராமானுசர். காவிரியில் குளிக்கப் போகுமுன் (தூய்மை இல்லாமல்) அந்தணச் சீடர்கள் தோள் பற்றி, குளித்து வந்த பின் உறங்காவில்லிதாசர் (அந்தணர் அல்லாத) தோள் பற்றி வந்து வைணவத்தில் சாதீயத்திற்கு இடமில்லை என்று காண்பித்தார். இன்றளவும் அவர் செய்வித்த தென்கலை சம்பிராயத்தில் சங்கு, சக்கரம் தோள் பதித்த எவன் ஒருவனும் சாதி பேத மில்லாமல் மற்றவனுக்கு உணவு இட, அதைச் சாப்பிடும் பழக்கம் உள்ளது! வைணவம் செய்த அளவிற்கு மெய்கண்ட சாஸ்திரமுடைய சைவத்தால் இன்றளவும் சாதிக்க முடியவில்லை!


கடவுளே இழிசனனாக இருப்பதால் (இழிந்து வருபவனாக உள்ளதால்) இழிசனன் பேசும் தாய் மொழிக்கு வைணவத்தில் என்றோ முதல் இடம் கொடுக்கப் பட்டு உள்ளது. நீங்கள் இன்று மெய் மறை என்று பேசும் தேவாரமும், திருவாசகமும் வசந்த மண்டபத்தில் வைத்துத்தான் இன்றளவும் ஓதப் படுகிறது. அதை ஏன் கருவறைக்குள் இன்றளவும் நுழைக்க முடியவில்லை? நானும் கேட்கலாம்தானே?


                                                                                   
Buddha avatar.jpg


நாதமுனிகள் வேதம் கற்ற நல்ல அந்தணர். மற்றவர்கள் போல் வேதத்தின் புகழ் பாடிக் கொண்டு காலத்தைக் கழித்து இருக்கலாம். ஆனால் அவர் ஏன் பிறப்பால் அந்தணர் இல்லாத நம்மாழ்வாரின் பாடலில் மயங்கி. ஊர், ஊராய் அலைந்து நாலாயிர திவ்யப் பிரபந்தங்களையும் சேர்த்தார். வேதங்களையும் விட மெய்பொருள் ஞானம் தேனில் இனிமை போல் நாலாயிர திவ்யப் பிரபந்தங்களில் ஊறிக் கிடப்பதைக் கண்டுதான்.


இதை அறிந்துதான் வேத பண்டிதரான வேதாந்த தேசிகர், "தெளியாத மறை நிலங்களை" தமிழ் பாசுரங்களைக் கற்றதால் அறிந்து கொண்டேன் என்கிறார். உண்மை இப்படி இருக்கும் போது, நீங்கள் "அடிப்படையில் எழும் ஏனைய தத்துவ விளக்கங்களும் குறைபாடு உடையவைகளாகத் தானே இருக்கமுடியும்? ஆகவே இவ்வாறான குறைகள் அற்ற தேவாரங்களையும் திருமூலரின் திருமந்திரத்தையும் மெய்கண்ட சாத்திரங்களையும் ஓதித் தெளிவதே சிறப்பு என்று எண்ணுகின்றேன்." என்று சொல்வது மதம் மாறிய ஒருவர் பேசுவது போல்தான் எனக்குப் படுகிறது (மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆசாமி நான்! மதம் மாற்று வித்தைகள் கண்டு அறிந்தவன்:-))


"இவ்வாறு அவதாரங்கள் எடுத்து பல்வேறு அவதாரங்களாகவே விளங்கும் தெய்வம் வாக்குமனாதீத கோசரமாக அனைத்திற்கும் அப்பாலாக, அனைத்தொடும் அநந்நியாமாக நின்றாலும் யாதினொடும் தொடக்கற்று நின்று தன் ஆணைவழியே அனைத்தையும் செலுத்தும் பராபரனாக இருக்கமுடியாதைக் காண்க. ஓர் அரசனைப் போன்று தன் ஆணைவழி அனைத்தையும் செலுத்தும் பராபரனை அவதாரக்கோட்பாடு காணமுடியாது செய்துவிடுகின்றது. இதனால் தான் உள்ளதாகிய பஞ்சகிருத்தியங்களையும் அவற்றின் முதல்வனாகிய சங்கார காரணனையும் வைணவர்கள் காணமுடியாது விழுகின்றனர்."


இப்படி மாற்று மதத்தினர் பேசலாம். முனைவர் கிருஷ்ணன் லோகநாதன் பேசலாமா? தமிழ் வைணவம் வீழ்ந்தால் தமிழ்ச் சைவமும் வீழ்ந்துவிடும். இரண்டும் உடலும் உயிரும் போலும் தமிழ் மண்ணில் வளர்ந்திருக்கின்றன.


நம்மாழ்வார் தெள்ளத் தெளிவாக திருவாய்மொழி 7.5.4 சொல்கிறார், "பல விதமாய்ப் படர்ந்திருக்கும் பொருள்களுள் ஒன்றும் இல்லாதபடி அழிவு அடைந்த காலத்து, முன் வாசனை அழியும்படி தன்னுள்ளே கலந்திருந்த எல்லாப் பொருள்களையும் தோற்றுவித்த விரகுகளைச் சிந்தித்து, உலக காரணனாய் இருக்கும் தன்மையை அறிகின்றவர்கள்தாம், காரணப் பொருளான கண்ண பிரானுக்கு ஆள் ஆவாரே அன்றி மற்று ஒருவர்க்கு ஆள் ஆவாரோ?"


நாரணன் என்ற சொல்லுக்கு விளக்கம் கொடுக்கும் போது அழியாத பொருள்களின் இருப்பிடமாக இருப்பவன் என்று சொல்வார்கள். தன்னுள்ளே படைத்து, காத்து, கெடுத்து உழலும் ஒரு சக்திக்கு அவதாரமாக, ஒரு நடிப்பாக வருவது எவ்வளவு சாதாரண விஷயம். இதைத் திருவிளையாடல் என்று சொன்னால் என்ன? அவதாரம் என்றால் என்ன? நாம் கற்பனையாகவேனும் முன்பு ஒரு காலத்தில் தமிழகத்தில் நடந்த வைணவ, சண்டையை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டாம். அது வெல்ல முடியாத யுத்தம்!


இவையும் அவையும் உவையும்
இவரும் அவரும் உவரும்
யவையும் யவரும் தன்னுள்ளே
ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனிமுதல் எம்மான்
கண்ணபிரான் என் அமுதம்
சுவையன் திருவின் மணாளன்
என்னுடைச் சூழலுளானே (1.9.1)


அவதாரம் என்பது அழகான ஒரு கோட்பாடு. அதை கவித்துவத்துடன் (with an inherent poetical licence) பார்க்கப் பழகிக் கொண்டால் பிரச்சனையே இல்லை. சொல்லினால், மனத்தால் எட்ட முடியாத, அளவிட முடியாத பரம் பொருளை கால, இட பரிமாணத்தில் கொண்டு வந்து அனுபவிக்கும் முறைதான் அவதாரம் என்ற கோட்பாடு. அவதாரம் என்பது ஒரு தியான முறை. பக்தி யோகத்தின் மூச்சாக கண்டு கொள்ளப் பட்டது அவதாரம் என்ற கோட்பாடு.


உங்களுக்கு மெய்கண்டாரை முதன்மைப் படுத்த வேண்டும் என்றால் தாராளமாகச் செய்யுங்கள். திவ்யமாய் கேட்கிறோம். அதற்காக பல்லாயிரம் ஆண்டுகளாய் தமிழ் மண்ணில் செழித்து, வளர்ந்த ஒரு சமய மரபை குறை உள்ளது, குறை உள்ளது என்று பழிக்காதீர்கள். அது நம் தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது போலாகிவிடும்! நீங்கள் வைணவராக மாற வேண்டும் என்றோ, வைணவம் பற்றி முன்பு நான் எழுதிய பாசுரமடல்களைப் பாருங்கள் என்றோ நான் சிபாரிசு செய்யப் போவதில்லை. அது நீங்கள் பேசும் ஆணவ கோசமாகப் போய்விடும். ஆனால் உண்மைக்கு பல பரிமாணங்கள் உண்டு என்பதை மட்டும் அனுமதியுங்கள் என்று கூறி இதை இப்போதைக்கு முடிக்கிறேன்.


(அர்ச்சாவதாரம் என்ற உன்னத தமிழ் கோட்பாடு பற்றி பின்பு பேசுவோம்).




நா.கண்ணன்.

Date Thurs., 29 April 1999 14 . 48 . 01 +0000

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 25 நவம்பர் 2010, 13:07 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,439 முறைகள் அணுகப்பட்டது.