'செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா !
பொய்கையார், பூதத்தார், பேயார் என்னும் முதல் மூன்று ஆழ்வார்கள்- இருக்குமிடத்தில் - இறைவனைக் காணும் ஆன்மீக நோக்கை தமிழகத்திற்கு அறிமுகப் படுத்துகின்றனர். இவர்கள் மங்களா சாசனம் செய்வித்த ஊர்கள் "திருப்பதிகள்" ஆகின்றன. மெதுவாக இந்த கோட்பாடு தமிழகம் முழுவதும் பரவுகிறது. நான் பிறந்த ஊராகிய திருப்பூவணத்தை காசியை விட வீசம் மடங்கு புண்ணியம் அதிகம் என்று சொல்லும் ஐதீகம் உண்டு. இதனால் கஷ்டப்பட்டு தீர்த்த யாத்திரை மேற் கொள்ளும் சிரமம் இல்லாமல் போய்விடுகிறது. அந்தக் காலத்தில் காசிக்கு யாத்திரை போய்த் திரும்பி வந்தால் ஆச்சர்யம்தான்! இதன் இன்னொரு பொருள் இருக்கும் இடத்தில் இறைவனைப் பார்க்கத் தெரியாத நமக்கு காசிக்கு போய் தெரியவா போகிறது? ("இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார்ஞானத்தங்கமே" என்ற சித்தர் பாடல் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.)
இப்படி அறிமுகப் படுத்திய புதியநோக்கு ஆண்டாள் வாழ்ந்த காலத்தில் கனிந்து நின்றிருப்பது ஆண்டாளின் பாசுரங்களில் தெரிகிறது. ஆண்டாள் தான் வாழ்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரை பிருந்தாவனமாகத்தான் பார்த்திருக்கிறாள். இது நாச்சியார் திருமொழியாலும், திருப்பாவையாலும் தெரியவருகிறது. பெண்கள் ஒருவருக்கொருவர் கண்ணனை எங்கேயாவது பார்த்தீர்களா என கேள்வி கேட்டு, ஆமாம்! பிருந்தாவனத்தில் பார்த்தோம் என்று சொல்வது போல் அமையும் ஒரு விளையாட்டு:
கார்த்தண் கமலக் கண்ணென்னும்
நெடுங்கயி றுபடுத்தி,என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும்
ஈசன் றன்னைக் கண்டீரே?-
போர்த்த முத்தின் குப்பாயப்
புகர்மால் யானைக் கன்றேபோல்,
வேர்த்து நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே.
சிறுவர் பாடும் பாடலா இது? இங்கு விழும் உவமைச் சிறப்பை பெரும் புலவர்கள் கூட கொண்டுவர முடியாது. கண்ணன் கருணைத் தெய்வம். அவன் ஆயர் தம் கொழுந்து. அதாவது வேரில் புண் என்றால் இலைக் கொழுந்துவாடுவது போல் பக்தர் துயர் காணாது இரங்கும் தெய்வம். அவன் கண்களில் பின் கோபக்கனலா தெரிக்கும்? கார்மேகத்தின் குளிர்ச்சியை கண்ணில் வைத்திருப்பதாக உவமை தருகிறாள் ஆண்டாள். இத்தாமரைபோன்ற நெடிய கண்கள் (அஜந்தா, எல்லோரா சித்திரங்கள் பார்த்திருக்கிறீர்களா?) என்னும் பெருங்கயிற்றினால் இவளை கட்டி ஈர்த்து நிற்கும் இவளது ஈசன் விளையாடும் இடத்தைப் பார்த்தீர்களா என்பது கேள்வி.
கண்ணன் விளைடாடி நிற்கிறான். எப்படி? வேர்த்து விருவிருத்து, வேர்வைத் துளிகள் முத்து போல் நின்றாட யானைக் கன்று போல் நிற்கிறான். இங்கு யானை உவமை கூட சிறப்பானதுதான் (வால்ட்டிஸ்னியின் "ஜம்போ" பிடிப்பவர்கள் அப்படியொரு அழகு என்றும் கொள்ளலாம்! ஆனால் நான் சொல்லவருவது..) யானை உருவத்தால், பலத்தால் மனிதனைவிட பல மடங்கு பராக்கிரமமானது என்றாலும் மனிதன் தன் தலையில் கால் வைத்து ஏறும் வண்ணம் குனிந்து கொடுத்து, அவனைத் தாங்கி நிற்கிறது. கண்ணனான தெய்வமும் தன் பலமெல்லாம் தெரிந்தும் இரங்கும் பக்தனுக்காக இறங்கி வருகிறது என்றும் கொள்ளலாம்.
திருப்பாவை முழுவதும் பிருந்தாவனத்தில் நடப்பது போல்தான் ஆண்டாள் பாடியிருக்கிறாள். இரண்டுஉதாரணங்கள்:
குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.
பாவைப் பாடல்கள் பாடிக்கொண்டு வரும் பாவையர் (கிருஸ்துமஸ் கேரல் ஞாபகம் வரவில்லை?) கடைசியாக கண்ணன் வீட்டுக்கும் வந்து விடுகின்றனர். இவர்கள் வேண்டி நிற்கும் தெய்வம் தூங்கலாமா? அவனும் விழித்து எழுந்து அருள் செய்தால்தான் நல்லது. இவர்கள் வரும் நேரத்தில் கண்ணன் தன் காதலியான கொத்தலர் பூங்குழல் நப்பின்னை (ஆஹா!) கொங்கை மேல் கை வைத்து உறங்கிக் கொண்டு இருக்கிறான். ஆண்டாளுக்குத்தான் ஆண்டாவனுக்கும், தனக்கும் இடைவெளி எதுமில்லாமல் உறவு கொண்டவளாச்சே. கண்ணனது பள்ளியறைக்கே போய்விடுகிறாள். இதில் இன்னொரு ரசமுண்டு. ராதையான ஆண்டாளுக்கு எந்தப் பொறாமையும் எழவில்லை இப்போது (பிருந்தாவனமும் நந்த குமாரனும் யாவருக்கும் பொது சொந்தமன்றோ,ஏனோ ராதா இந்தப் பொறாமை யார் தான் அழகால் மயங்காதவரோ? - இந்தப் பாடல் எழுதியவர் திருப்பாவை வாசித்ததில்லை என்று தெரிகிறது!).
மிகவும் சாவகாசமாக, நப்பின்னை (மைத்தடம்கண்ணினாய்! -மீண்டும் ஆஹா!) உன்னை விட்டால் நீ கண்ணனை எழுப்ப மாட்டாய். சுகமாக படுத்து இருக்கத்தான் பார்ப்பாய். நாங்களோ சிற்றஞ்சிறு காலை நீர் ஆடி குளிரிப் போய் வந்துள்ளோம். சட்டுப் புட்டுன்னு சுவாமியை எழுப்பும் தாயே! என்கிறாள் ஆண்டாள்.
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.
செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா (a warm welcome..wow!). குளிரும் குழந்தைகளுக்கு வெப்பம் கொடுக்கும் கண்ணன்தானே அப்போதைய தேவையும் கூட! நப்பின்னையை மீண்டும் எந்தப் பொறாமையும் இல்லாமல் வருணிக்கிறாள். செப்பென்ன மென் முலை. செவ்வாய். சிறு மருங்குல் (சின்னஇடை.) திருவே! காலையில் எழுந்தவுடன் கண்ணாடி பார்க்கும் பழக்கம் அந்தக்காலத்தில் உண்டு போலும். தட்ளொளி தந்து எழுப்பச் சொல்கிறாள். கண்ணாடி இன்னும் கண்டுபடிக்கப் படாத காலம். அதான் ஒளிரும் தட்டைக் காட்டச்சொல்கிறாள்.
மார்கழி நோன்பு முடிந்த பின் சிறார்களெல்லாம் சேர்ந்து கூடல் விளையாடுகிறார்கள். அதாவது முறத்தில் அரிசியை பரப்பி வைத்துக் கொண்டு விரலால் வட்டமாக கோடு போட வேண்டும் - கண்களை இறுக்க மூடிய பின். வட்டம் சேர்ந்தால் (கூடினால்) நினைத்த காரியம் நடக்கும், கூடாவிடில் நடக்காது.
பூம கன்புகழ் வானவர் போற்றுதற்
காம கன்,அணி வாணுதல் தேவகி
மாம கன்,மிகு சீர்வசு தேவர்தம்,
கோம கன்வரில் கூடிடு கூடலே.
வானவர் போற்றும் பூமகன் (மலரின் மேவு திருவின் மணாளன்); தேவகி மகிழும் காமகன் (காதல்நாயகன்); வசுதேவர் என்ற மாமாவின் மகன் (ஆண்டாள் முழுதும் தன்னை இடைச்சியாக பாவித்து வசுதேவரை மாமாவாக்கி விட்டாள்); என் கோமகன் (என் ராசா!) இவன் என்னிடம் வருவானென கூடிடு கூடலே என்கிறாள். கூடுவதாக கதை
இக்கதை கேட்டதன் பலனை பின்வருமாறு சொல்கிறாள் கோதை:
ஊடல் கூட லுணர்தல் புணர்தலை,
நீடு நின்ற நிறைபுக ழாய்ச்சியர்,
கூட லைக்குழற் கோதைமுன் கூறிய,
பாடல் பத்தும்வல் லார்க்கில்லை பாவமே.
ஊடல், பின் கூடல் இதுதான் காமத்திற்கு இன்பம் என்பான் வள்ளுவன். ஆண்டாளும் அதையேதான் சொல்கிறாள். புணர்தல் என்று கலவியைச் சொல்கிறாள். எத்தகைய கலவி? சாதாரண அர்த்தத்தில் - தான் காதல் கொண்டுள்ள ஒருவனுடன் கூடுவதை விட காதல் இன்பம் வேறென்னவேண்டும் ஒரு பெண்ணிற்கு. புணர்தலை - என்றும் பண்டைய தமிழன் இன்றைய "பாசாண்டித்தனத்தில்" குறைத்து மதிப்பிட்டதில்லை. அதெற்கென்று வள்ளுப் பேராசான் ஒரு காமத்துப் பாலே பாடியுள்ளான். எனவே இந்தஅர்த்தத்தில் எதுவும் சிறுமைப் பட்டு போகவில்லை. இரகசியார்த்தமாகப் பார்த்தால் - ஜீவன் பரமாத்துமாவுடன் கூடும் புணர்தலைச் சொல்லலாம்
இன்றென்னைப் பொருளாக்கித்
தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப்
புணர்ந்து என் செய்வான்?
என்கிறார் நம்மாழ்வார். என்னைப் புறம் போகச் சொல்லி யாரைப் புணர்வான் அவன்? நானே அவனுக்கு புணர்பொருள். என்னையும் ஒரு பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான், என்று சொல்வதால் ஆண்டாள் சொல்லும் புணர்தல் இதைத்தான் குறிக்கிறது என்றும் கொள்ளலாம்.
நா.கண்ணன்.
Date . 30 , Nov,.1997 17. 39 .46 + 0100.