பாசுர மடல் 019 : ஊமையின் கனவு.

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

ஊமையின் கனவு.




பாசுர மடல்கள் ஆழ்வார் மனதைப் புரிந்து கொள்ளவும், ஆழ்வார்களை நம்மிடம் கிட்டே கொண்டு வரவும்,


பாசுரங்கள் மூலமாக அவர்கள் தமிழுக்கு செய்திருக்கும் சேவைகளை அறிந்து கொள்ளவும் வருகின்றன. ஆழ்வார்களை உயர்ந்த பீடத்தில் வைத்து நம்மிடமிருந்து பிரித்து மரியாதை செய்வதைவிட ஆழ்வார்கள் எப்படி கண்ணனை சகியாக வைத்தார்களோ அதே போல் ஆழ்வார்களை நம் உற்ற தோழர்களாகக் காண்பதே மேல். ஒண்ணு மண்ணா இருப்பதில் உள்ள சுகமே தனி!


நவம்பர் 13 தேதி ஒரு பாடல் இணையத்தில் உலா வந்தது. அது:


இளங்சிறாராய் இன்புற்றுத் துள்ளியோடி
இளைஞராய் இளமங்கை இணைமார்புக்கேங்கி
இங்குற்றோர் சொர்க்கமென இணைந்தனுபவித்து
இங்குமங்குமோடித் தேடித்தேடிப் பொருள் சேர்த்தே
இங்கோர் பாதிநாள் கடந்தபின்
படுத்தெழுந்தோர் பாதியிரவில்,
சற்றுமோர் சிந்தையின்றி
உண்டுகூடிக் களித்துறங்கும்
உற்றதொரு விலங்காய் வாழவே
உதித்தேனோ என்ற எண்ணம் உந்த
உணர்வார் தம் உள்ளத்தேடலை.


என்று முடிந்தது. இப்பாடலில் ஒரு ஆழ்ந்த துக்கமும், தேடலும் தொக்கி நிற்கின்றன. பாலகனாய் துள்ளியோடிய நாட்கள், பின் பெண் பிள்ளைகள் மார்புக்காய் ஏங்கி நின்ற நாட்கள், பின் பெண் தரும் கலவையே (sex) சொர்க்கமென்று இருந்த நாட்கள், காசு, காசு என்று அலைந்த நாட்கள் இப்படி வாழ்வில் பாதிநாள் கழிந்த ஓர் இரவில் சட்டென ஒரு சிந்தனை, அட சேய்! இதுக்கா நான் பிறந்தேன்? கேள்வி ஆன்மீகத்தில் முடிகிறது.


இந்தத் தேடல் பொதுவாய் 40-50ல் இருக்கும் புகலிட தமிழரிடம் ஓங்கி நிற்கும். வாழ்வு வெளியிலும், உள்ளம் தமிழகத்திலும் நிற்கும். என்றாவது ஒருநாள் அங்கு நிரந்தரமாய் போய் நிற்பேன் என்ற ஏக்கம். தாயைப் பிரிந்த சேய் மனது! இந்த உணர்வை நம்மில் பலர் அனுபவித்து இருக்கக்கூடும். துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து வாசிக்கலாம்! யாழும், பெண்ணும் துணைக்கு இல்லாவிடில் நம் துக்கத்தை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளலாம். இவர் ஒரு கதை சொல்ல, அவர் ஒரு கதை சொல்ல கொஞ்ச நேரத்தில் துக்கத்தின் கனம் குறைந்து விடும். இந்த துக்கம் - கவிதை எழுதிய எல்.ஏ.சுவாமிநாதனுக்கு மட்டும் சொந்தமா? இல்லை இத்தகைய மனோநிலை ஆழ்வார்களுக்கும் வந்திருக்கிறதா? ஆழ்வார்களையே கேட்போம்:


தொண்டரடிப் பொடியாழ்வார் தம் திருமாலை 3ம் பாடலில் இத்தயை மனோநிலையைவெளிப்படுத்துகிறார். அதாவது வேதநூல் பிரகாரம் நமக்கு நூறு வயது. அதில் பாதி
Baby elep.jpg
உறக்கத்தில் போய்விடுகிறது. மீதி ஐம்பது ஆண்டு. அதில் ஒரு பெரும் பகுதி பால பருவத்தில் போய்விடுகிறது (உலகில் உள்ள உயிரினங்களில் மிக அதிக பால பருவம் உள்ள உயிரினம் மனிதர்கள்தாம். பதினெட்டு வயது வரை பால் வடியும் முகத்துடன் அம்மா தலைப்பை பிடித்துக் கொண்டு அலையும் ஒரே உயிரினம் மனிதர்கள்தாம்:-). மீதி உள்ள நாள்களில் காய்ச்சல், கடுப்பு, பசி என்று. கடைசி நாட்கள் மூப்பில் போய்விடுகிறது. அடடா! இடையில் உள்ள நாட்களில் நாம் என்ன செய்தோம்? பொண்ணு பிண்ணால ஓடறது (பெண் வாசகர்கள் ஆண்கள் பின்னால் என்றும், ஓரினப் புணர்ச்சியுடையோர் அந்தந்த இனத்தின் பின்னால் என்றும் திருத்திவாசிக்கவும்) அப்புறம் கல்யாணம், கார்த்திகை, காசு, உறவு இப்படி... உற்றதொரு விலங்காய் வாழவே உதித்தேனோ என்ற எண்ணம்...இதுவும் சிலருக்கு வருகிறது, பலருக்கு வருவதில்லை. இதை



வேதநூற் பிராயம் நூறு
மனிசர்தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும்
நின்றதில் பதினை யாண்டு
பேதை பாலகன தாகும்
பிணிபசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன்
அரங்கமா நகருளானே


என்று சொல்கிறார் தொண்டர் அடிப்பொடி. அதே சிந்தனை!


இதைவிட இன்னும் உருக்கமாகச் சொல்கிறார் திருமங்கை ஆழ்வார். ஏக்கங்கள் நிறைந்த நம் வாழ்வை ஊமை கண்ட கனவு என்கிறார். ஊமை கானும் கனவை அவனைத் தவிர வேறு யாரிடமும் சொல்லக் கூட முடியாது. இதில் தொனிக்கும் தனிமையும் கழிவிரக்கமும் சொல்லில் வடிக்க முடியாது. தனிமையை அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும். வெறும் ஊமைக்கனவு என்று சொல்லி விட்டுப் போனாலும் பரவாயில்லை. ஊமை கண்ட கனவும் பழுதானால்? என்ன கொடுமை ஐயா!


சேமமே வேண்டித் தீவினை பெருக்கித்
தெரிவைமார் உருவமே மருவி
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய்
ஒழிந்தன கழிந்அந் நாள்கள்
காமனார் தாதை நம்முடை யடிகள்
தம்மடைந் தார்மனத் திருப்பார்
நாமம்நா னுய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும் நாமம்


(திருமங்கை ஆழ்வார் - பெரிய திருமொழி -3)


"உற்றதொரு விலங்காய் வாழவே உதித்தேனோ என்ற எண்ணம்!" இங்குதான் ஆரம்பமாகிறது ஆன்மீகத் தேடல். இந்த முற்றுப் பெறாத தேடலில் பல உணர்ச்சிகரமான கட்டங்கள் உண்டு. ஊர், ஊராய் அலையும் மக்கள் சொல்லலாம் ஊரிலேன் (இது ஈழச் சகோதரர்களுக்கு மிகவும் பொருந்தும்); காணியில்லை - எனக்கென்று சொந்தமாக நிற்பதற்கு இடமில்லை. உறவு என்று கொண்டாடுவதற்கு யாரும் இல்லை. வாழ்வில் பற்றுவதற்கு ஒன்றுமில்லை. காசு, காசு என்ற அலைந்தாலும், பட்டிணத்து அடிகள் சொன்னது போல் காதறந்த ஊசியும் கடைசி வரை வாராதுதான்.

                                                               
Red-sunset-casey1.jpg


ஊரிலேன் காணியில்லை
உறவுமற் றொருவரில்லை
பாரில்நின் பாத மூலம்
பற்றிலேன்; பரமமூர்த்தி
காரொளி வண்ண னே! என்
கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர் களைகணம்மா!
அரங்கமா நகருளானே!


(தொண்டரடிப் பொடியாழ்வார் - திருமாலை -29)


கண்ணனே கதறுகிறேன் என்கிறார். என் துயர்களை களைவார் யார் உளர், அம்மா? என்றும் வினவுகிறார்.


இம்மாதிரி சுயவிசாரணை ஆரம்பிக்கும் போது உள்ளத்தின் கசடுகள் பல வெளியே வரும். பாலைக் கடையும் போது வெண்ணய் திரண்டு மேலே வருவது போல். அதன்பின் மனது எளிதாகிவிடும். பின்வரும் ஆழ்வாரின் அனுபவம் போல்:


மனத்திலோர் தூய்மை யில்லை
வாயிலோர் இன் சொலில்லை
சினத்தினால் செற்றம் நோக்கித்
தீவிளி விளிவன்; வாளா
புனத்துழாய் மாலை யானே!
பொன்னிசூழ் திருவரங்கா
எனக்கினி கதியென் சொல்லாய்?
என்னையா ளுடைய கோவே!


(திருமாலை 30)


எனக்கு இனி கதி என்ன? என்ற கேள்வி எப்போதாவது வரும் போது ஆழ்வார்களுக்குள் வாருங்கள். அங்கு பதில் இருக்கிறது.



நாகண்ணன்.

Date: Sun, 16 Nov 1997 20:50:16 +0100

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 17 நவம்பர் 2010, 06:24 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,673 முறைகள் அணுகப்பட்டது.