பாசுர மடல் 011 : வேதம் தமிழ் செய்த மாறன்.

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

வேதம் தமிழ் செய்த மாறன்.


 தமிழ் மிகத் தொன்மையான மொழியாக உலகில் நிற்கின்றது. கல் தோன்றா, மண் தோன்றா காலத்தே..போன்ற அரசியல் வசனங்கள் மிகைப்படுத்தி மொழியை ஒரு வழிபடும் கருத்தாக கொண்டு .சென்றாலும், உண்மையில் இம்மொழி தொன்மை வாய்ந்ததாக இருக்கின்றது


இவ்வரசியல் வழிபடும் கலாச்சாரத்தில் வெறுப்புற்று இம்மொழியின் தொன்மை மீது சந்தேகம் கொண்டு மதுரைப் பல்கலைக்கழகத்தில் படித்துவரும் காலத்தில் உலகத் தமிழ் மாநாடு நடந்தது. ஆட்டங்களும், பாட்டங்களும், துதிகளும், தோத்திரங்களுக்குமிடையே சில நல்ல ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப் பட்டன. அதிலொன்று முனைவர் ஐராவதம் மஹாதேவனின் கட்டுரை. இது தமிழ் மொழியை சிந்து சமவெளி நாகரீக மொழி என்று பல சான்றுகளுடன் சொன்னது. இக்கருத்தை முன்னுமே கா.நா.சுப்பிரமணியன் எழுதிய மாதவி என்ற புதினத்தில் வாசித்து இருக்கிறேன். அது ஆய்வு பூர்வமாக மதுரையில் கிடைத்தது. இதன் பின் பல, ஐரோப்பிய, அமெரிக்க ஆய்வுகள் இக்கூற்று உண்மையென நிறுவின. இதில் பின்லாந்தைச் சேர்ந்த அஸ்கோ பார்ப்போலாவின் ஆய்வு முக்கியம் (Deciphering the Indus Script - Asko Parpola, Cambridge University Press. pp.374, $95). சமிஸ்கிருதம்தான் இந்திய மொழிகளில் மூத்த மொழி என்ற கருத்து மாறிவருகிறது. தமிழை Proto Indo European மொழி என்றுதான் பெரும்பாலான மொழியியலார் நம்புகின்றனர்.


இத்தொன்மையான மொழி சமிஸ்கிருதத்தில் தாக்கம் ஏற்படுத்துவது இயல்பானதே. பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட் (பெர்க்கிலி தமிழ் பீடம்) காளிதாசனின் காப்பியங்கள் சங்க மரபை ஒத்து இருக்கின்றன என்று சொல்வதில் ஆச்சர்யப் படுவதிற்கில்லை.


இத்தொன்மையான இந்திய மொழிகளுக்கிடையே எவ்வளவு கொடுக்கல்-வாங்கல் இருந்தனவோ, அந்த அளவுக்கு போட்டியும் இருந்திருக்கிறது. இப்போட்டியில் ஆர்யம் (இச்சொல் இங்கு உயர்வு கருதி - உயர் தனிச் செம்மொழி-சொல்லப்படுகிறது. இன அடிப்படையில் அல்ல), ஒரு மிக சமார்த்தியமான காரியம் செய்கிறது. அதாவது ஆர்யம் கோயில் மொழி ஆகிறது


இதில் பாரிய லாபம் இருக்கிறது. சமய உணர்வு என்பது மிக, மிக தொன்மையான மனித உணர்வு. சமீபத்திய பரிணாமவியல் ஆய்வுகள் சமய உணர்வு மனித பரிணாமத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக நம்புகின்றனர் (Appraising Grace - What evolutionary good is god? by Daniel C.Dennet, pp.39-44, The Sciences, Jan/Feb 1997). இப்படி இருக்கையில் மொழியை சமயத்துடன் சேர்த்து வைப்பது மொழியின் இருப்பிற்கும் (survival) அதன் பெருமைக்கும் வழி வகுக்கும்.


வேதங்கள் சமிஸ்கிருதத்தில் இருக்கின்றன. மிகத்தொன்மையான சமிஸ்கிருததில் உள்ள இம்மறைகள் இன்றளவும் தப்பிதம் இல்லாமல் சொல்லப்படும் வகையில் மிக நேர்த்தியான பாட முறைகளை அமைத்து எவ்வித மாற்றமும் இல்லாமல் சொல்லப்பட்டு வருகின்றன. வேதம் வாழுமளவு சமிஸ்கிருதமும் இருக்கும். இப்படி நிலை பெற்றுப் போன ஒரு ஆழமான சம்பிரதாயத்தை மாற்றி, தமிழை தேவ பாஷையாக செய்விப்பது என்பது மலையைப் பெயர்ப்பதற்கு ஒப்பான செயலாகும். ஆனால் அதைச் செய்திருக்கின்றனர், ஆழ்வார்கள்!


ஆழ்வார்கள் தமிழின் மீது மாறா அன்பு கொண்ட உன்னத தமிழர்கள். இவர்கள் பல குலங்களிலிருந்து வந்திருக்கலாம், ஆனாலும் அவர்கள் எல்லோருக்கும் தமிழின் மீது ஆறாக்காதல் இருந்திருப்பதை அவர்கள் செய்வித்த பாசுரங்களில் காணலாம். இவர்கள் அன்று இப்பெரும் முயற்சி எடுக்கவில்லையெனில் இன்று மெல்லத் தமிழ் செத்திருக்கும்.


பாசுரங்கள் தெய்வப்பாடல்கள். முழுக்க, முழுக்க இறைத்தத்துவமும், அழகியலும், கவித்துவமும் கொண்டவை. அதாவது பண்டைய பாஞ்சராத்திர ஆகமங்களெல்லாம் தமிழ் நாட்டில் உருவானாலும் அவை உயர்வு கருதி சமிஸ்கிருதத்தில் எழுதப்பட்டன.


இம்முறையை பின் பற்றி ஆழ்வார்களாலும் அத்தனை பாசுரங்களையும் சமிஸ்கிருதத்தில் செய்வித்து இருக்க முடியும். சமிஸ்கிருத புலவரான திருமழிசை ஆழ்வார்


'....விதையாக நற்றமிழை'

வித்தி யென் உள்ளத்தை நீ விளைவித்தாய்

கற்ற மொழியாகக் கலந்து.


என்று எழுதக்காரணமென்ன? ஏன் ஆழ்வார்கள் பாசுரங்களை தமிழில் செய்தனர்?


இதற்கு ஆன்மீக காரணங்களைவிட சமூக காரணங்களே முக்கியம் என்று தெரிகின்றது. முதலில் ஆழ்வார்கள் பகவத் அனுபவத்தில் (இறை அநுபூதியில்) லயித்து மட்டும் இருப்பவர்களானால் கவிதையே எழுதவேண்டிய அவசியமில்லை. அப்படியே கவிதை செய்தாலும் அதை தமிழில் செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. உதாரணமாக ஆழ்வார்களால் மொழி என்ற எண்ணத்தின் குறியீடு தோன்றும் தோற்றுவாய்க்கு முன்னமே நின்று நிலைத்து விட முடியும் என்று தெரிகிறது. நம்மாழ்வார் பிறந்து 16வயதுவரை வாயே திறவாமல் யோகத்தில் மவுனித்து இருந்ததாக குரு பரம்பரைக் கதைகள் சொல்லுகின்றன. அப்படியே இருந்திருக்க வேண்டியதுதானே? ஏன் தன் தெய்வீக அனுபவங்களைத் தமிழில் தரவேண்டும்?


பாசுரங்களை நாமெல்லோரும் ஆய்வு செய்யும் வண்ணம் அவைகளை மீட்டுத்தந்த நாதமுனி, மாறன் சடகோபன் (நம்மாழ்வார்) பற்றி இப்படி எழுதுகிறார்:


வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் சடகோபன் வண்குருகூர் - ஏறு, எங்கள்
வாழ்வாம் என்று ஏத்தும் மதுரகவியார், எம்மை
ஆள்வார் அவரே சரண்


எவ்வளவு ஆசையும் அன்பும் வார்த்தையில் விழுகின்றன பாருங்கள்! நம்மாழ்வாரை குருகூர் ஏறு (சிங்கம்) என்கிறார். "ஆழ்வார்கள் எம்மை ஆள்பவர்களே" என்ற கலைஞரின் வசனமும் முன்பே சொல்லப் பட்டு இருப்பதைக் காண்க.


கவிச்சக்கிரவர்த்தி கம்பன், நம்மாழ்வார் என்ற மாத்திரத்தில் ஆரிய வேதம் சொல்லும் அந்தணர்கள் தங்கள் கரங்களை தலைமேல் வைப்பர் என்பதை:


படி எடுத்துக் கொண்ட மாறன் என்றாம் பதுமக்கரங்கள்
முடி எடுத்துக் கொண்ட அந்தணர்......

(சடகோபர் அந்தாதி 34)


என்கிறார். சமிஸ்கிருத மொழி வல்லுனரான வேதாந்த தேசிகர்:


"செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித்
தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே" ...


என்கிறார். பாருங்கள் தேசிகர் வாழ்ந்த 14ம் நூற்றாண்டுக்குள் நிலைமையை தலைகீழாக மாற்றிவிடுகின்றனர் ஆழ்வார்கள். ஆரிய வேதங்களுக்கு பொருள் தேட திராவிட வேதத்திலிருந்து சான்றுகள் எடுக்குமாறு!


இதைத் தமிழன் மறுமலர்ச்சி என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது ?


கடைசியாக ஒரு சுவையான செய்தி. கூடல் [ மதுரை ] புராணம் என்ற நூலில் கிடைக்கின்றது.


அண்ட கோளத்தாரென்ற ஆரியத்தமிழாலன்று

தண்டத் தமிழ்ச் சங்கம் வென்ற சடகோபா ............


தமிழ் என்ற வார்த்தைதான் திராவிடம் என்றாகிறது. ஆரியம் என்பது உயர்வு கருதி சமிஸ்கிருதத்திற்கு சொல்லப்படுகிறது. இப்பாடல் “ ஆரியத் தமிழ் “ என்றொரு பிரயோகத்தைப் போடுகிறது !!


தனித்தமிழ் இயக்கத்திற்கு தலையிடி கொடுக்கும் வார்த்தை போல் அல்லவோ தெரிகிறது :-]


நா.கண்ணன்.
.Date . Sun . 05 , Oct 1997 11.25 .12 + 0100.

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 15 நவம்பர் 2010, 10:36 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,839 முறைகள் அணுகப்பட்டது.