பாயிரம் வாயிலாக தமிழ் மறுமலர்ச்சி தொன்மையான இந்திய மதங்கள் அனைத்திலும் அடிப்படையாக அமைவது
மனிதனுக்கும்,பிரபஞ்சத்திற்கும் (cosmos) உள்ள உறவு பற்றிய தேடுதல். இத்தேடுதல் தந்த தரிசனங்கள்தான் இந்திய சமயம் சார்ந்த தத்துவங்கள்.பண்டைத்தமிழர்கள் உலகை பூரண நோக்கோடு பார்த்தனர் (holistic way) . பிரம்மாண்டமாக சிந்தித்தனர்.
பொய்கையின் முதல் பவாவைப்பாருங்கள். உலகை ஒரு அகல் (விளக்காகக்) கொண்டு, வார் கடலை நெய்யாக இட்டு, வெய்ய கதிரோனை விளக்காக வைத்து பிரபஞ்ச கர்த்தாவைப் பார்க்கிறார். "அப்பாலுக்கு அப்பாலாய்" உள்ள இறைமையை அப்படிப் பார்த்தால்தான் தெரியும் போலும்! இல்லை அவன் பிரம்மாண்டத்தை உணர, அப்படியொரு பெரிய விளக்கு வேண்டும் போலுள்ளது! இவர் நோக்கில் அறிவு உரத்த சிந்தனை (அதாவது ஞான மார்க்கம்) இருக்கிறது.
பூதத்தார் பிரபஞ்ச நோக்கிலிருந்து அப்படியே உள்ளுக்கு திரும்புகிறார். அன்புதான் அகல் (விளக்கு) என்கிறார். வீட்டுக்கு அஸ்திவாரம் போல் வாழ்வுக்கு அடிப்படை அன்பு என்கிறார். அடுத்து ஆர்வம் வேண்டும். ஆர்வம் இல்லையேல் வாழ்வு சலிப்புத் தட்டிவிடுகிறது. எனவே ஆர்வம்தான் நெய் என்கிறார். சிந்தை இடுதிரி என்கிறார். இவர் அறிவை ஒதுக்கவில்லை. சிந்தை தெளிவாய் இருந்தால்தான் தேடுதல் வசப்படும். நனைந்த திரியோ, ஜீன்ஸ் (jeans) துணியோ போல் திரி இருந்தால் விளக்கு எரியாது. நல்ல பஞ்சுத் திரி வேண்டும், சிந்தையில் நோக்கு இருக்க வேண்டும். அப்போது வானம் வசப்படும்!
பேயாழ்வார் பக்திதான் முக்தி வழி என்கிறார். இப்பாசுரங்களை முன் அறியாத ஆதி சங்கரனும் ஞான வழி சென்ற பின் ஆழ்வார்களைப் போல்
"பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம்,
பஜ கோவிந்தம் மூடமத" என்கிறார்.
பக்தியின் ஊற்றுக்கண்னைக் கண்டவர்கள் முதல் மூவர். இவர்கள் சமகாலத்தவர்கள். புதிய மதங்களான சமணம், பெளத்தம் என்பவை தென் இந்தியாவில் பரவி, செல்வாக்கு பெற்ற காலமான கி.பி. 5ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் பல்லவர்களின் ஆதிக்கமும் பரவத்தொடங்குகிறது. "நகரேஷு காஞ்சி" என காஞ்சி பெளத்த தலைமைப் பீடம் ஆகிறது. காஞ்சி மன்னின் புதல்வனொருவன் தூர கிழக்கு நாடுகளுக்கு பெளத்தத்தை கொண்டு செல்லுகிறான். அவர் ஆரம்பித்து வைத்தது தான் "ஜென் மதம்" (Zen) ஜப்பானில் பரவுகிறது. இவரை "தாருமா" (Daruma) என ஜப்பானியர் அழைத்து புத்த கோவில்களில் சிலை வைத்து கும்பிடுகிறார்கள்.
வேற்று மதங்கள் செல்வாக்கு பெறும் போது பழமையானநம்பிக்கைகள், மேலும் வலுப் பெறுகின்றன. புராணங்கள் இயற்றப்படுகின்றன. இராம காதை பிரபலமாகிறது. இப்போது மசூதியை இடித்து இராமர் கோவில் கட்டும் மூட ஜனங்களுக்கு(வட இந்தியர்களுக்கு) இராமன் இன்னும் கடவுளாகவே தெரிய ஆரம்பிக்காத நாட்கள். இராம காதை பிரபலமாக்கப்பட்டு தெற்கேயிருந்து வடக்கே போகிறது. இது தேவையான ஒன்று அக்காலக்கட்டத்தில். சமண, பெளத்த மதங்கள் ஒழுங்கை, வாய்மையை, அறனை வலியுறுத்துகின்றன. இராமன் இவையெல்லாம் கொண்ட உத்தம புத்திரன்.
முதல் மூவர் பாடல்களில் தென்படும் அவதாரங்கள் கண்ணன், இராமன், வராகன், வாமனன் இவையே
பேயாழ்வார் முதல் முறையாக "ஸ்ரீ" என்ற சமிஸ்கிருத பதத்திற்கு "திரு" என்ற தமிழ் சொல்லை பயன்படுத்துகிறார். "திரு" வை திருமாலுடன் இணைப்பதில் பெரும் தத்துவ வெற்றி அடங்கி இருக்கிறது
வேதகாலத்து பூஜை முறைகளில் "ஸ்ரீ" , லட்சுமியாக பூஜிக்கப் படுகிறாள். ஆழ்வார்கள் இவளை திருமாலின் நெஞ்சில் வைத்து அவளின் முழு காருண்யத்தை திருமால் பக்தர்களுக்கு தர வைக்கின்றனர். காருண்யமிக்க தாள்களை சரண் அடைவதில் தராதரம் வெண்டியதில்லை. அவள் எல்லோரையும் ஒரு தாயைப் போல் இரட்சிப்பாள். அவைதீக மதங்களான (அதாவது வேதத்தை ஒத்துக் கொள்ளாத மதங்கள். கடவுள் என்ற கருத்தில் நம்பிக்கை வைக்காத மதங்கள்) சமணம், பெளத்தம் இவை அறனை வெகுவாக வலியுறுத்தின. அறவழிக் கருத்துக்களை எல்லோருக்கும் பாடம் சொல்லித் தந்தனர். அறவழி நில்லேல் வேறு காப்பு இல்லை என்கின்ற நிலை. ஆழ்வார்கள் "திரு" வைக்காட்டி கதி அற்றாருக்கும் புகலிடம் உண்டு என்கின்றனர். நீ புத்திமானாக இருந்தாலும், மூடனாக இருந்தாலும் பக்தி செய்தால் இவள் கடைக்கண் அருளுக்கு பாக்கியமாவீர்கள் என்கின்றனர். இப் பக்தி வழி விரைவில் பாமர ஜனங்களிடையே செல்வாக்கு பெறுகிறது.
அவைதீக மதங்கள் வேதத்தை ஒத்துக் கொள்ளாததால் சாதிப் பிரிவினை என்ற பாகுபாட்டையும் வலியுறுத்தவில்லை. வேதத்தை ஒத்துக் கொள்ளும் ஆழ்வார்கள் இரண்டுமுக்கிய மாற்று வழிகளைக் காண்பிக்கின்றனர்
இது நம் சரித்திரத்தில் மிகவும் முக்கியமான திருப்பு முனை.
1. ஆழ்வார்கள் கண்ணனின் அடியார்க்கு சாதி அவசியமில்லை என்றனர். அதாவது பக்தி ஒன்றுதான் வழி என்றனர். இது குறித்த தொண்டரடிப்பொடியின் அறை கூவலை பிறகு சொல்கிறேன்
2. இரண்டாவது மாற்று தமிழ் வேதத்தை செய்விப்பது. சமிஸ்கிருத வேதத்தைச் சொல்ல உரிமை உள்ளவர்கள் அந்தணர்கள் மட்டுமே என்று சொல்லும் வைதீக சாதீயத்திற்கு மறுப்பாக திராவிட வேதமாகிய திவ்யப் பிரபந்தங்களை அனைவரும் சொல்லலாம் என்று செய்தனர்
இது அந்தக்காலம் தொட்டு இக்காலம் வரை ஒரு புரட்சிதான். இதற்கு மேலான தனித்தமிழ்
ஆர்வத்தை நாம் எங்கும் காண இயலாது. செய்வித்தவர்கள் ஆழ்வார்கள்
பக்தி இயக்கத்தின் ஆரம்ப கர்த்தாக்கள் பெளத்தம் செழித்த காஞ்சிக்கு அருகில் தோன்றியது தற்செயலான நிகழ்வு இல்லை என்றுதான் தோன்றுகிறது
நா.கண்ணன். தேதி - புதன் - 03 செப்டம்பர் 1997 - 15.45.49 + 0000.