நவராத்திரியில் நவ சக்திகள் -
அன்னையின் சேனையில்-
. நவராத்திரி ஆரம்பத்தின்போது தங்கள் சக்திகளை எல்லாம் அம்பாளிடம் ஒப்படைக்கும் தேவாதிதேவர்கள் சக்தியை இழந்து ஒரு பொம்மையைப் போல் இருப்பார்கள். அதை நினைவூட்டும் விதத்திலேயே பொம்மைக்கொலு வைக்கும் வழக்கம் ஏற்பட்டது என்பார்கள். மேலும் அன்னைக்கு உதவிய அனைவரும் பெண்களே. அன்னையின் சேனையில் சேனாபதிகளாகவும், தளபதிகளாகவும், அன்னைக்கு மந்திரியாகவும் பணி புரிந்த அனைவரும் பெண்களே. அதனாலேயும் நவராத்திரி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாய்ப் பத்து நாட்கள் கொண்டாடும் பண்டிகையாய் உள்ளது.
சப்தகன்னியர்கள்:
ப்ராம்மி: நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள். நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் பிடித்த வண்ணம். கமண்டலம், அக்ஷமாலையைப் பின்னிரு கரங்களில் ஏந்தி முன்னிரு கைகளில் அபயவரதம் காட்டுவாள். ருத்திராக்ஷமால தரித்து ஹம்ஸவாகனத்தில் வீற்றிருப்பவள். இவளை வணங்கினால் சகல கலைகளும் சித்திக்கும்.
வாராஹி: திருமாலின் வராஹ அவதாரத்தின் வடிவாய்த் தோன்றியவள். மேகநிறத்தினள். கரிய வண்னமே பிடிக்கும். வராஹமுகத் தோற்றம் உடையவள். கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள். லைதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவலை வணங்குவோர்வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும்.
மகேஸ்வரி: மகேசனின் சக்தி இவள். முக்கண் படைத்தவள். ஜடாமகுடத்துடன் காட்சியளிப்பாள். மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள். தூய வெண்ணிறமே பிடித்த வண்ணம். ரிஷபவாஹனத்தில் காட்சி கொடுக்கும் இவளை வழிபட்டால் மங்களங்கள் வந்தடையும்.
இந்திராணி: இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அப்யாரதம் காட்டுவாள். வெண்ணிற யானை வாஹனம் சத்ரு பயம் போக்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும் கொண்டவள்.

நவராத்திரியின் எட்டாம் நாளான இன்று ரக்தபீஜனை வதம் செய்த திருக்கோலத்தில் அம்பிகை காக்ஷி கொடுப்பாள். இன்று பத்மக் கோலமிட்டு அம்பிகையைப் பீடத்தில் அமர வைத்து அலங்கரிக்க வேண்டும். எட்டுச் சக்திகள் புடைசூழ, அபய வரதம் காட்டிய வண்ணம் மலர் அம்பு ஏந்திய கோலத்தில் வீற்றிருக்கும் இந்த துர்கையை வணங்கி வழிபட்டால் பகை அழியும். செயற்கரிய செயல்கள் அனைத்தையும் செய்து முடிக்கும் திறன் ஏற்படும் வண்ணம் மனதில் தைரியம் ஏற்படும். வல்லமை தருவாள் மஹா சக்தி! வாழியென்றே துதிப்போம். இந்த நாளில் ஒன்பது வயதுள்ள பெண் குழந்தையை துர்கையாகப் பாவித்து வழிபடவேண்டும். இன்றும் வழிபாட்டுக்கு முல்லை மலர்களும், வெண் தாமரை மலரும் பயன்படுத்தலாம். இன்றைய நிவேதனம் தேங்காய் சாதம். இந்த வருஷம் எட்டாம் நாள் சனிக்கிழமை வருவதால் ஒரு சிலர் எள் சாதமும் செய்கின்றனர். என்றாலும் அம்பிகை வழிபாட்டுக்குத் தேங்காய் சாதமே சிறந்தது.
நவராத்திரி வெள்ளிக்கிழமைகளில் ஒரு சிலர் புட்டுப் போடுவார்கள். முன்னரே எழுத நினைச்சு மறந்துட்டேன்.. என்றாலும் இந்த எட்டாம் நாளும் சிலர் போடுகின்றார்கள்.அஷ்டமி திதியான இன்றே சரஸ்வதி ஆவாஹனம் செய்யப் படுவதால் சிலர் இன்றும் போடுவர். கடலைப்பருப்புச் சுண்டலும் செய்யலாம்.
கொண்டைக்கடலைச் சுண்டல் அல்லது கடலைப்பருப்புச் சுண்டல், ஊற வைத்து உப்புச் சேர்த்துக் குழைய வேக வைக்கவேண்டும். கடலைப்பருப்புச் சுண்டலுக்கு இஞ்சி, பச்சை மிளகாய், கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்துத் தாளிக்கவேண்டும். கொண்டைக்கடலைச் சுண்டல் என்றால் மி.வத்தல், பெருங்காயம், கொத்துமல்லி விதையைக் கொஞ்சமாக எண்ணெய் விட்டு வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு, கடுகு, ஒன்றிரண்டு மி.வத்தல், கருகப்பிலை தாளித்து வெந்த கொண்டைக்கடலையைப் போட்டு வதக்கிவிட்டு இறக்கும்போது வறுத்த பொடியைச் சேர்க்கவேண்டும். தேங்காய் துருவல் சேர்க்கவேண்டும்.
புட்டு செய்யும் விதம் நளபாகம்/ சமையல்பகுதியில் தனியாகக் கொடுக்கப் பட்டுள்ளது.
இனி துர்காஷ்டகம்
கன்னி துர்கையே இதயக் கமல துர்கையே
கருணை துர்கையே வீர சுகன துர்கையே
அன்னை துர்கையே என்றும் அருளும் துர்கையே
அன்பு துர்கையே ஜெயதுர்கை துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
லலிதா நவரத்ன மாலையின் இன்றைய ரத்னம் புஷ்பராகம்
ரஞ்சனி நந்தினி அங்கணி பதும ராக விகாஸ வியாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி சாம்பவி சந்த்ர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி அம்ருத ஸ்வரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு ஸ்ருங்க நிவாஸினி மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
--Geetha Sambasivam 08:00, 4 டிசம்பர் 2010 (UTC)