நவரத்தின மாலை - பகுதி -2மரபு விக்கி இருந்து- ’அன்பே சிவமாம் அமர்ந்திருப்போரே’
அன்பே சிவம் ஆதலின் பரம்பொருளை அன்பினாலேயே அடைய முடியும் . இறைவன் எளிதாக அன்பு வலைக்குள் அகப்படுபவர் அன்றோ. ஆம் அவர் அன்பு எனும் பிடியில் அகப்படும் மலை. எனவே அன்பு நெறி ஒன்றே நம்மை இறைவன் பால் எளிதில் சேர்க்கும் என்றும் இவ்வன்புப் பெருக்கால் யாரும் செய்ய முடியாத வன்மையான செயல்களைச் செய்த பெரும் பேறு பெற்ற பேராளர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களுள் ஒருவராம், சைவமும், தமிழும் இரு கண்ணென வாழ்ந்த,’தொண்டர் சீர் பரவுவார்’ என்று அழைக்கப் பெரும் ஐயா ரா.ப. தங்கவேலனார் அவர்கள்! சாதாரண எளிய குடும்பத்தில் திரு பச்சியப்ப முதலியாருக்கும், திருமதி பழனியம்மாளுக்கும் பிறந்தவர்.
அவர்தம் பள்ளிப் படிப்பு எட்டாம் வகுப்பு வரையே ஆனாலும், பலருக்கும் எட்டாத, சைவ சமய சார்பான நுண்ணறிவு பெற்றவர்கள்.பிறந்து
’யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதற்கொப்ப வாழ்ந்த ஐயா, தம் சிறு வயதிலேயே ‘மாணவர் சன்மார்க்க சங்கம்’ நிறுவி, வள்ளற் பெருமான் புகழைப் பரப்பி வந்தவர். கைமாறு கருதா பணி செய்யும் பேரியல்பு கொண்டவராம் திரு தங்கவேலனார், பட்டி தொட்டிகளுக்கெல்லாம் சென்று பெருமான் புகழை எடுத்தியம்புவார். அவ்வண்ணம் சில நாடகள் செல்ல இயலாத நிலையில், ‘ அப்பா நான் வேண்டுதல் கேட்டு ......என்ற வள்ளலார் பாடலை வழிபாட்டில் கூறி, ‘எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினது அருட்புகழை இயம்பிடல் வேண்டும் என்ற வரிகளை மீண்டும் மீண்டும் சிந்திப்பாராம். ஐயாவின் பேச்சு மிக எளிய நடையிலும், நகைச்சுவை ததும்ப இருந்ததனால், சாதாரண மக்களும் ஈர்க்கப்பட்டனர். இவரால் சைவமான குடும்பங்கள் ஏராளம் என்பர்.
பிறருக்கு உதவ வேண்டும் என்ற பரோபகாரச் சிந்தை மிகுந்திருந்தக் காரணத்தினாலேயே, பள்ளிப் படிப்பு பயிலும் போதே, சாரணர் பயிற்சி பெற்று , சாரணர் இயக்கத்தில் நகரத்தில், ஒழுங்கு கட்டுப்பாடு தேவையான இடத்தில் முன்னின்று முறைப்படுத்துவார். ஆசிரியப் பயிற்சி பெற்று ஆரம்பப் பள்ளி ஆசிரியரானார். ஆசிரியராக இருந்தவர், தாமே, ஒரு ஆரம்பப் பள்ளி,திண்ணைப் பள்ளியாக உருவாக்கி, அதில் குழந்தைகளுக்கு, கல்வியுடன் சேர்த்து, சமயத்தையும் போதித்தார்கள். குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், இளைஞர்களுக்கும், போதிக்க வேண்டி, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும், வகுப்புகள் நடத்தி, ஈரோட்டிலும் சுற்று வட்டாரத்திலும், திருக்குறள் நெறியையும், சைவ மரபையும் ஏற்படுத்திய பெருமை இவரையே சேரும் என்று ஐயாவோடு தொடர்பு கொண்ட பலரும் விளக்குகின்றனர்.
பல பெரியவர்களை வகுப்பிற்கு வரவழைத்து அரிய, பெரிய கருத்துக்களை தம் வாலிபப் பருவத்திலேயே, பலருக்கு பண்போடு இறை நெறியையும் ஊக்குவிப்பார்கள்.அவர் மிக எளிமையாக எடுக்கும் வகுப்புகள் மனதில் நன்கு பதிவதோடு, பேசி முடித்த பின்பு, தொகுப்புரையாகவும், நன்றியுரையாகவும் அந்தக் கருத்துக்களை மனதில் பதியும்படியாக எடுத்துரைக்கும் பாங்கு மிகப் பிரத்யேகமானதாகவும், சுவாரசியமானதாகவும் இருக்கும். இதனாலேயே, தம் வாலிபப் பருவத்திலேயே, இவருக்கு’வாத்தியார்’ பட்டமும் வந்து சேர்ந்தது.அந்தக் காலத்தில் வாத்தியார் என்று குறிப்பிட்டாலே ஐயா தங்கவேலனாரைக் குறிப்பதாகவே ஊரில் ஒரு வழக்கம் இருந்து வந்திருக்கிறது.இன்றும், இவருடைய வாத்தியார் என்ற பட்டம்,நின்று நிலவுவதை ஈரோடு பகுதியில் வாழ்பவர்கள் அறிந்திருப்பர்.
மகாநாட்டில்,பலஅறிஞர்களும்,பேராசிரியர்களும், பேசும் போது, அவர்,’இவாகளெல்லாம் கல்லூரிப்பட்டம் பெற்ற பெரிய பேச்சாளர்கள், நான் ஆரம்பப் பள்ளி ஆசிரியர், எளிமையாகத்தான் பேசுவேன்' என்று ஆரம்பித்து, மனதில் பசுமையாக நிலைத்திருக்கும்படி பேசி, அனைவரின் கவனத்தையும் கவர்ந்துவிடுவார், என்று கயிலைமணி திரு அ.முனுசாமி அவர்கள் ஐயாவைப் பற்றி நினைவு கூறுகிறார்.
ஈரோட்டில் திரு தொண்டீசுவரர் சுவாமி கோவிலில், முன்பு நகரத்தார் திருப்பணி செய்தார்கள்.அதன் பிறகு சிவத்திரு தங்கவேலனார் முயற்சியிலேயே பல திருப்பணிகள் நடைபெற்றது. முதலில் தொண்டீசுவரர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜலதாரயை சரியாக அமைக்காதலால், சுவரே கீழே இறங்க ஆரம்பித்தது. அதைப் பலருடன் கூடி முன்னின்று திருப்பணி செய்து சுவர் கற்களை எடுத்து பஞ்சலிங்கம் வைத்துள்ள மேற்குப் புறக் கட்டிடத்தைச் செப்பனிட்டார்கள்.கன்னி மூலையில் விநாயகர் கோவில் பாழடைத்திருந்ததை சிவத்த்ரு அர்த்தனாரி முதலியாருடைய நன்கொடையால் அழகாக்k கோவில் கட்டிப் புதிய திருவுருவமும் செய்து 1953ல் குடமுழுக்கும் செய்தார்கள்.
திருப்பணிகள் தொடர்ந்தது.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:17, 9 ஜூலை 2011 (UTC)
|