கா.மு. சிதம்பரம்
தமிழ்ச் செவ்வியல் நூல்கள் பலவற்றில் இராமன் பற்றிய குறிப்புகள்
காணப்படுவதால், கம்பனுக்கு முன்பே வேறு யாராலாவது இராமகாதை எழுதப்பட்டிருக்கிறதா இல்லையா?
"ஆம்" என்பதே இவ்வினாவுக்குரிய விடை.
அதற்கு மூன்று காரணங்களைக் கூறலாம்.
"வால்மீகியின் வாயிலாக இலக்கிய வடிவம் பெறுவதற்கு முன்பே இக்கதைத் தொகுதி தொன்ம வடிவிலும், நாடோடிப் பாடல்கள் வடிவிலும் இந்தியாவின்
எல்லாப் பகுதிகளிலும் பரவி இருந்ததாக மானுடவியலாலரிடையேயும், சமூகவியலாலரிடையேயும் ஒரு கருத்து நிலவி வருகிறது (இராமகாதையும் இராமாயணங்களும் - டாக்டர் அ.அ.மணவாளன் - பக்.1).
"தமிழில் அகவல் வடிவில் ஒரு இராமாயண நூல் இருந்துள்ளது. அவற்றில் ஐந்து செய்யுள்கள் மட்டும் இப்போது கிடைக்கின்றன. இதுதவிர, சமண இராமாயணம் ஒன்றும் இருந்துள்ளது. கம்பரது இராமாயணம் தோன்றிய பிறகு
அவையெல்லாம் புகழ் மங்கி மறைந்தன என்று "புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு" என்கிற நூலில் டாக்டர் தமிழண்ணல் பதிவு செய்துள்ளார்.
உலகிலேயே பாலி மொழியில் "தசரத ஜாதகம்" என்ற இராமகாதை
முதன்முதலில் தோன்றியது.
பின்னர் வால்மீகி சம்ஸ்கிருத மொழியில் இயற்றினார்.
அதன் பின்னர் பிராக்கிருதம், திபெத்திய மொழி ஆகியவற்றில் இராமாயணம் இயற்றப்பட்டது.
இவற்றுக்குப் பின்னர்தான் தமிழில் இராமாயணம் இயற்றப்பட்டது.
இராமாயணம் இந்திய மொழிகளில் மட்டுமன்றி, தாய்லாந்து, மலேசியா, இலாவோஸ், பிலிப்பின்ஸ், ஜப்பான், பர்மியம், பாரசீகம் ஆகிய மொழிகளிலும் இயற்றப்பட்டுள்ளது.
திபெத், இந்தோனேஷியா, ஜப்பான் ஆகிய மொழிகளில் இயற்றப்பட்ட
இராமாயணங்கள் கம்பராமாயணத்துக்குப் பிற்பட்டவை அல்ல. எனவே,
கம்பராமாயணத்துக்கு முன்பே ஒரு இராமாயணம் தமிழில் உறுதியாக
இருந்திருக்க வேண்டும்.
தமிழ் இலக்கிய வளர்ச்சியை உற்றுநோக்கினால் ஓர் உண்மை புலப்படும்.
முதலில் தமிழ்ப் புலவர்கள் தங்கள் கருத்துகளை அகவற்பாவில் வெளியிட்டனர்.
பின்னர் வெண்பா வாயிலாக உரைத்தனர்.
அடுத்த காலகட்டங்களில்
விருத்தப்பா
துறைதாழிசை
கண்ணி
சிந்து
கீர்த்தனை
வில்லுப்பாட்டு
புதுக்கவிதை
ஹைக்கூ
என்று மன்னர்கள், மக்கள், செல்வந்தர்கள் ஆகியோரது இரசனைக்கு ஏற்பவும், படைப்பாளிகளுக்கு யாப்பிலக்கணத்தின் மீதிருந்த அச்சத்திற்கு ஏற்பவும் கருத்தை வெளியிடும் வடிவங்கள் மாறிவந்துள்ளனஎடுத்துகாட்டாக
மகாபாரதக் கதை அகவற்பா, வெண்பா, விருத்தம், புதுக்கவிதை ஆகிய
வடிவங்களில் இயற்றப்பட்டுள்ளது.
அதே போன்று இராமாயணக்கதையும் எல்லா வடிவங்களிலும்
இயற்றப்பட்டிருக்க வேண்டும். வெண்பாவில் இயற்றப்பட்ட இராமாயணம்
மட்டும் கிடைக்கவில்லை. அதனால் அப்படி ஒரு நூலே இல்லை என்ற
முடிவுக்கு வருவது சரியல்ல.
யாப்பு வடிவங்களில் அகவற்பாவும், வெண்பாவும் சங்க காலத்துக்கு
முற்பட்டவை. டாக்டர் தமிழண்ணல் குறிப்பிடும், தற்போது ஐந்து பாடல்களே எஞ்சியிருக்கும், அகவற்பாவாலான இராமாயணம், ஒருக்கால் சங்க காலத்துக்கு முற்பட்டதாக இருக்க வேண்டும்.
வெண்பா யாப்பில் ஆக்கப்பட்ட இராமாயணம் தமிழில் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.
சென்னை கம்பன் கழகம் வெளியிட்டுள்ள இராமாயணம் நூலில்,
மிகைப்பாடல்கள் என்று ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணூறு பாடல்கள்
குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள் மூன்று பாடல்கள் மட்டுமே
வெண்பாவால் இயற்றப்பட்டுள்ளன.
அவற்றுள் ஒரு பாடல்,
"கலங்கா மதியும் கதிரோன் புரவிப்
பொலன்கா மணித்தேரும் போகா இலங்கா
புரத்தானை வானோர் புரத்துஏற விட்ட
சரத்தானை நெஞ்சே தரி
என்பதாகும்.
இது ஒரு காப்புச் செய்யுள்.
காப்புச் செய்யுள் நூலாசிரியரால் மட்டுமே இயற்றப்பட வேண்டும்; ஒரு நூலைத் தொடங்கும் முன் முதல் பாடலாக அமையவேண்டும் என்பது மரபு. இப்பாடல் வெண்பாக்களால் இயற்றப்பட்ட இராமாயணத்தின் காப்புச் செய்யுளாக இருக்க வேண்டும்.
அது எவ்வாறோ கம்பராமாயணச் சுவடியுடன் கலந்து, வெண்பாவாலான
இராமாயணம் மறைந்தும், தான் மறையாமல் இருக்கிறது.
வெண்பாவாலான இந்தக் காப்புச் செய்யுள் சங்க காலத்தைச் சேர்ந்தது. சங்க காலத்தில் காப்புச் செய்யுளை வெண்பாவால் இயற்றுவதுதான் மரபாக இருந்தது. இளங்கோவடிகளும் அக்கால மரபை மீறாது வாழ்த்துப் பாடலை
வெண்பாக்களால் இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகாறும் கூறியவற்றால், கம்பனுக்கு முன்பே இராமாயணக் கருத்துகள் தொன்ம வடிவிலும், நாடோடிப் பாடல்கள் வடிவிலும் தமிழ் நாட்டில் வழங்கி வந்திருக்கின்றன. அகவற்பாவால் இயற்றப்பட்ட இராமாயணம் ஒன்று இருந்தது. வெண்பாவாலான இராமாயணம் ஒன்றும் இருந்திருக்க வேண்டும். இவற்றுள் ஏதேனும் ஒன்றின் வாயிலாக அல்லது அனைத்தின் வாயிலாகத்தான், தாம் அறிந்த செய்திகளைச் சங்கப்புலவர்கள் தமது பாடல்களில்
குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பது தெளிவு.
--Ksubashini 11:45, 9 ஜூலை 2010 (UTC)