தென்கலை வைணவத்தின் சமூக உள்ளடக்கம்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பொருளடக்கம்

தென்கலை வைணவத்தின் சமூக உள்ளடக்கம்

வெ. கிருஷ்ணமூர்த்தி


முன்னுரை


தமிழகத்தில் பன்னெடுங்காலமாகவே வைணவம் வழக்கில் இருந்து வந்தது.எனினும் அதுஒரு பரந்துபட்ட சமையமாக விரிவடைந்தது, ஆழ்வார்கள் காலத்தில்தான் என்பது நன்கறிந்தது. ஆழ்வார்களுக்குப் பின்னால் ராமானுஜர் வைணவத்தை ஒரு தத்துவார்த்த அடிப்படையின் மேல் நிறுத்தியவர்.அதனை ஒரு கட்டுக்கோப்புடைய மதமாக நிறுவிய பெருமையும் அவருக்கு உண்டு. சமய மட்டத்திலும் பல சீர்திருத்தங்களைச் செய்தவராவார்.


ராமானுஜருக்குப் பின்னால் வைணவத்தில் இரு பிரிவுகள் தோன்றின. தோன்றிய பகுதியைப் பொறுத்து அவை வடகலை என்றும் ,தென்கலை என்றும் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டன. வடக்கில் காஞ்சியை மையமாகக் கொண்டு வடகலையும் ,தெற்கே ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு தென்கலையும் வளர்ந்தன.


இவ்விரு பிரிவினருக்கும் இடையே தத்துவ மட்டத்தில் வேறுபாடு இல்லை.இவ்விருசாராருமே ராமானுஜரையும் அவரது விசிஷ்டாத்வைத தத்துவத்தையும் முன்னோடியாகக் கொள்கிறார்கள், என்றாலும் இவர்களுக்கிடையே இறையியல் , ஜீவாத்மா பரமாத்மாவை அடையும் வழி போன்றவற்றில் கடும் வேறுபாடுகள் உள்ளன.


இவை குறித்துப் பல்வேறு அறிஞர்கள் ஆராய்ந்துள்ளனர். இவர்களில் Patricia y Mumme முதன்மை வகிக்கிறார். சமீபத்தில் வெளிவந்துள்ள " The Srivaishnava Theological Dispute " என்ற அவரது நூல் இப்பொருள் குறித்து வெளிவந்துள்ள ஆய்வுகளில் மிகச் சிறந்தது.1
இக்கட்டுரையில் இவ்விரு பிரிவினரில் தென்கலை வைணவத்தின் தத்துவ , இறையியல்,பரமாத்மா ஜீவாத்ம, தொடர்பு ஆகியவற்றை ஓரளவு சமூகப் பின்னணியோடு ஆராய எண்ணியுள்ளேன்.


ராமானுஜரின் காலம் 11--12 ம் நூற்றாண்டு ஆகும், அவர் கி பி 1137 ல் காலமானார் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பின்னால் கிட்டத்தட்ட 130 ஆண்டுகள் வைணவ சமயத்தில் நிகழ்ந்த உள் முரண்பாடுகள் ஒரு பெரும் தத்துவார்த்த சமயக் கிளர்ச்சியைத் தோற்றுவித்தன. இதனால் இப்பிரிவினரிடையே பல்வேறு நூல்கள் தோன்றின. சமயப் ப்ரசாரங்களும் நி்கழ்ந்தன.


இக்கால கட்டத்தில் வைணவம் மக்களிடையே வெகு வேகமாகப் பரவியது. இவை பற்றி விவாதிப்பதற்கு முன்னால் ராமானுஜரின் விசிஷ்டாத்வைத தத்துவம் குறித்து ஓரளவு நினைவு படுத்திக்கொள்வது நமது நோக்கத்துக்கு உதவியாக இருக்கும்.
ராமானுஜருடைய தத்துவத்தை இவ்வாறு சுருக்கிச் சொல்லலாம்.


புற உலகையும் தனி மனித உயிர்களையும் (ஜீவான்மாக்கள்) ஒட்டுமொத்தமாக உடல் எனக் கொண்டால் இறைவனை (பரமாத்மா) அதில் உறையும் உயிர் எனக் கொள்ளலாம். எவ்வாறு உடலுக்கு உயிர் ஆதாரமோ அதுபோல புறஉலகு, ஜீவான்மாக்கள் ஆகியவற்றால் ஆன உடலுக்குப் பரமாத்மாவே உயிராவான்.


எனினும் இறைவனே உயிர்கள் அனைத்துக்கும் உலகுக்கும் அந்தர்யாமியாய் உள்நின்று அவையனைத்தையும் இயக்குகிறான்.எனவே ஆன்மாக்கள் பலவாயினும் அவ்வான்மாக்கள் அனைத்தையும் தனக்கு உடலாகக் கொண்டு ஆன்மாக்களுக்கெல்லாம் ஆன்மாவாக நிற்பது பரமாத்மா ஒன்றுதான் என்பது கருத்து.


அதே சமயம் இறைவன் உயிருக்கு உயிராக நிற்கும் காரணத்தால் ,இறைவன் வேறு,ஜீவன் வேறு அல்ல,இரண்டும் ஒன்றுதான் என்பது பெறப்படுகிறது:. ராமானுஜரைப் பொருத்தமட்டில் புற உலகும் உண்மை (ஏனெனில் அது இறைவனின் திருமேனி) உயிர்களும் உண்மை.
ஆனால் அவை ப்ரம்மத்தின் ( இறைவனின் ) விசேஷணங்கள்.ப்ரம்மம் அவ்விசேஷணங்களையுடைய விசேஷியம். இந்த விசேஷணம், விசேஷியம் சேர்ந்த கூட்டுக்கு விசிஷ்டம் என்று பெயர்.அந்த விசிஷ்டத்துக்கு வேறாக வேறொன்றும் இல்லை. அதனாலேயே ராமானுஜருடைய தத்துவம் விசிஷ்டாத்வைதம் என்றழைக்கபட்டது.


ராமானுஜர் தமது விசிஷ்டாத்வைத தத்துவத்தை ஆழ்வார்களின் பாசுசுரங்களின் அடிப்படையிலேயே உருவாக்கிக்கொண்டார் என்பதற்கு சான்றுகள் உண்டு. அதிலும் குறிப்பாக, நம்மாழ்வாரின் திருவாய்மொழியே விசிஷ்டாத்வைதத்தின் அடிப்படை என்பதிலும் ஐயமில்லை.நம்மாழ்வாரின் கீழ்க்கண்ட திருவாய்மொழி இக்கூற்றை உறுதிப்படுத்தும்.


”திடவிசும் பெரிவளி நீர்நில மிவை மிசை
படர்பொருள் முழுவதுமாய் அவையவை தொறும்
உடல்மிசை யுயிரெனக் காந்தெங்கும் பரந்துனன்
சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே ”


ராமானுஜர் இப்பாசுரங்களின் அடிப்படையிலேயே ப்ரஸ்தானத் திரயங்கள் என்றழைக்கப்படும் உபநிடதங்கள்,ப்ரம்மசூத்திரம்,பகவத்கீதை ஆகியவற்றுக்கு உரை எழுதித் தமது விசிஷ்டாத்வைதத்தை விவரித்துக் கூறினார்.


வடகலை, தென்கலைப் பிரிவினர் இருவரும் ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத்தையே தங்கள் தத்துவமாகக் கொண்டுள்ளனர்.அதாவது தத்துவ மட்டத்தில் இரு சாராருக்கும் கருத்து வேறுபாடோ அன்றிச் சச்சரவோ இல்லை. ஆனால் பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள உறவை -- வேறு விதமாகச் சொல்வதானால், தனிமனித ஜீவன் (உயிர்) இறைவனை அடையும் வழிமுறை என்ன என்பதிலேயே இவர்களது வேறுபாடு தொடங்குகிறது.


இவ் வேறுபாட்டை விளக்க வைணவ அறிஞர்கள் கூறும் உவமை மிகவும் சுவாரசியமானது பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் இடையே உள்ள உறவு குரங்குக்கும் அதன் குட்டிக்கும் இடையேயுள்ள உறவைப் போன்றது என்று வடகலையார் கூறுகின்றனர்.
இதனை மர்க்கட நியாயம் என்றழைக்கின்றனர் ( மர்க்கடம்-- குரங்கு ) தென்கலையாரோ அவ்வுறவு பூனைக்கும் அதன் குட்டிக்கும் போன்றது என்று கூறுகின்றனர். இதனை “ மார்ஜாரம்-- பூனை என்று அழைக்கின்றனர்.


இதனைச் சற்று விளக்குவோம். குரங்கு தன் குட்டியை வயிற்றில் கட்டிக் கொண்டு கிளைக்குக் கிளை தாவிச் செல்லும். அப்போது குட்டி,தாயின் வயிற்றில் ஒட்டிக்கொண்டு அதை இறுகக் கட்டிக்கொள்ளும்.


இவ்வுவமையில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் பொறுப்பும் கவலையும் குட்டிக்கு உண்டு.ஆனால் பூனை குட்டியைக் கவ்விக் கொண்டு செல்லும்பொழுது பூனைக்குட்டி எவ்விதப் பொறுப்பும் கவலையும் இன்றி நிம்மதியாக இருக்கும். இறைவனை அடைய விரும்பும் ஜீவாத்மா சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட தருமங்களை அல்லது கடமைகளை,ஆசாரங்களைக் கடைப்பிடித்துப் பற்றி ஒழுகினாலன்றி பரமாத்மாவை அடைதல் சாத்தியமல்ல என்று வடகலையார் கருதுகின்றனர். மாறாகத் தென்கலையாரோ ஜீவாத்மா முழுக்க முழுக்க தன்னை இறைவனிடம் ஒப்புக் கொடுத்துவிட்டால் போதும், பிறவற்றை இறைவன் பார்த்துக் கொள்வான் என நம்புகின்றனர். இவ்வாறு இறைவனை அடைதல் எவ்வாறு என்பது பற்றிய வேறுபாடே
இப்பிரிவினரிடையே ப்ரதான வேறுபாடாயிற்று எனலாம்.
இப்பிரிவினரின் வேறுபாட்டுக்கு சமூகக் காரணங்கள் உண்டு,அவை குறித்து ஆராயுமுன் இவ்வேறுபாட்டை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.


தத்துவம் என்பது தனி மனித உணர்வுக்கும் புற உலகுக்கும் இடையேயுள்ள தொடர்பை ஆய்வு செய்யும் இயல். உணர்வைப் பற்றி ஆராய்வதை ஞானம் என்றும் புற உலகை ஆராய்வதை விஞ்ஞானம் என்றும் கீதை கூறுகிறது. தத்துவத்தில் இருபெரும் கூறுகள் உள்ளன. ஒன்று ஞானமே முதல் என்றும் விஞ்ஞானம் ஞானத்தின் படைப்பு என்றும் கூறுகிறது.


அதாவது உணர்வே புற உலகைத் தோற்றுவிக்கிறது என்று கூறுகிறது.இதனை ஆன்மீகவாதம் அல்லது கருத்து முதல்வாதம் என்று அழைக்கிறோம். ஆனால் விஞ்ஞானமே ப்ரதானம், ஞானம் அதன் விளைவு என்பதைப் பொருள் முதல் வாதம் என்று அழைக்கிறோம். இந்தியத்தத்துவத்தில் இவ்விரு பிரிவுகளும் தோன்றி வளர்ந்துள்ளன. அதேபோன்று ஞானத்தையே முதலாகக் கொண்ட கருத்து முதல் வாதத்திற்குள்ளே பல பிரிவுகள் உள்ளன.

இப்பிரிவுகளில் சங்கரர் ஞானம் மட்டுமே உண்மையென்றும் விஞ்ஞானம் பொய்யென்று கூறினார். அதாவது உணர்வு மட்டுமே உண்மை புற உலகம் மாயை, அல்லது தோற்றப் பிழை என்று கூறி அதை மறுத்தார். ராமானுஜரோ ஞானமும் உண்மை , விஞ்ஞானமும் உண்மை என ஒப்புக்கொள்ளும் அதேபோதில் ஞானமே அடிப்படை எனக் கருதினார். முன்னவரை அகவய ஆன்மீக வாதி என்றும்,பின்னவரை புறவய ஆன்மீக வாதி என்றும் கூறலாம்.

இவ்வாறு மனித உணர்வுக்கும் புற உலகுக்கும் இடையேயுள்ள தொடர்பை ஆய்வதோடு தத்துவத்தின் ( Philosophy ) எல்லை முடிவடைந்துவிடுகிறது. பொருள் முதல்வாதிகள் போன்ற தத்துவவாதிகளின் விசாரணையின் எல்லையும் இதுதான். ஆனால் அதற்கு மேல் தனிமனித உணர்வுக்கும் பூரண உணர்வுக்கும் இருப்பதாகக் கருதப்படும் அதாவது ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையிலான தொடர்பை ஆராய்வது soteriology எனப்படும். இது தத்துவத்துக்கும் ( Philosophy ) இறையியலுக்கும் (Theology ) இடைப்பட்ட நிலையில் உள்ளது. இந்திய ஆன்மீகவாதிகள் குறிப்பாக வேதாந்திகள் எனப்படும் அத்வைத, விசிஷ்டாத்வைத, துவைத,சைவசித்தாந்தவாதிகள் தத்துவம் என்ற பெயரில் இந்த soteriology அல்லது கீதையில் குஹ்ய சாஸ்திரம் என்றும் ரகஸ்யம் என்றும் அழைக்கப்படும் ஜீவாத்மா பரமாத்மா தொடர்பு பற்றியே பெரிதும் ஆராய்கின்றனர். இதனைத் தத்துவம் என்றும் அழைக்கின்றனர்.

ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்பது அத்வைதம், ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு என்பது துவைதம், வேறெனினும்,பரமாத்மாவுக்குள் ஜீவாத்மா அடக்கம் என்பது விசிஷ்டாத்வைதம். இத்தகைய வேறுபாடுகள் தோன்றியதற்கு சமூகக் காரணங்கள் உண்டு. அவற்றை எல்லாம் ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல.

நாம் ஏற்கெனவே குறிப்பிட்டபடி ராமானுஜரின் தத்துவம் குறித்து வடகலை,தென்கலைப் பிரிவினரிடையே பெரும் வேறுபாடு ஏதுமில்லை. இவ்விரு பிரிவினரின் வேறுபாடு ஆன்ம ரகஸ்யம் பற்றியதே ஆகும். இறைவனை அடைவது எவ்வாறு என்பதிலேயே தான் முக்கிய வேறுபாடு, இக்கட்டுரையில் ஆன்மாவின் தன்மை ,அது பக்தி மார்க்கமா சரணாகதி மார்க்கமா,வருணாசிரமஆசார அனுஷ்டானங்களினாலா அல்லது உருவ வழிபாடே போதுமா போன்றவற்றில் வடகலை, தென்கலை வைணவப் பிரிவுகளின் சித்தாந்த ரீதியான வேறுபாடுகளையும் அவற்றின் குறிப்பாக தென்கலை வைணவத்தின் சமூக உள்ளடக்கம் குறித்தும் கட்டுரையின் எல்லைக்குட்பட்டு ஆராய்வோம்.
இக்கட்டுரையின் பிற்சேர்க்கையாக இரண்டு அட்டவணைகள் தரப்பட்டுள்ளன. அட்டவணை 1 வடகலை தென்கலை ஆகிய பிரிவினரின் ப்ரதான ஆசிரியர்களின் பட்டியலைக் காட்டுகிறது. அவர்களின் காலமும் ஆண்டுவாறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அட்டவணை 2 இவ்விரு சாராரும் இயற்றிய நூல்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது.


வடகலை வைணவத்தின் ப்ரதான ஆசிரியராகக் கருதப்படுபவர் வேதாந்த தேசிகர். இவரது காலத்துக்கு முன்னரேயே வடகலை வைணவம் தோன்றி விட்டதெனினும் அது தெளிவாக உருப்பெற்றது வேதாந்த தேசிகரின் காலத்தில்தான். இவருடைய நூல்கள் பெரும்பாலும் வடமொழியிலேயே எழுதப்பட்டவை. இந்நூல்களில் பெரும்பகுதி விசிஷ்டாத்வைத தத்துவத்தை நிலைநிறுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டவை. அவ்வகையில் பிற வேதாந்த தத்துவங்களையும்,வேத விரோத தத்துவங்களையும் இவரது நூல்கள் விமரிசிக்கின்றன. அதே சமயம் ஜீவாத்மா பரமாத்மா உறவையும் இவை ஆராய்கின்றன.


ஆழ்வார்களின் திவ்யப் ப்ரபந்தங்களை இவர் எதிர்க்கவில்லை யெனினும் அவற்றைக் காட்டிலும் தருமசாஸ்திரங்களையும்,கீதை,உபநிடதங்கள்,பிரம்மசூத்திரம் போன்றவற்றையே தமது கொள்கையின் அடிப்படையாக இவர் கொள்கிறார். மோட்சம் அடைய வேண்டுமெனில் தரும சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள வருணாசிரம தரும அடிப்படையில் வாழவேண்டும். அதாவது சாஸ்திரங்களில் ஒவ்வொரு வருணத்தாருக்கும் விதிக்கப்பட்டுள்ள ஒழுக்க விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.வேறு வகையில் சொல்வதானால் தத்தம் வினைப்பயனை ஒட்டியே விளைவுகள் இருக்கும். விடுதலை அல்லது மோட்சத்திற்கு தரும சாஸ்திரங்களே அடிப்படை என்பது தேசிகரின் கருத்து.

தென்கலை வைணவத்தின் தலைசிறந்த ஆசிரியராகக் கருதப்படுபவர் , வேதாந்த தேசிகரைக் காட்டிலும் காலத்தால் நூறாண்டுகள் பிந்திய மணவாள மாமுனிகள் ஆவார். இவரது காலம் கி. பி. 1370----- 1443 ஆகும்.இவருக்கு முன்னரே,திருக்குருகைப் பிரான் தொடங்கி,பெரியவாச்சான்பிள்ளை, பிள்ளை லோகாச்சாரியர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் போன்றோர் பல்வேறு நூல்கள் இயற்றித் தென்கலை வைணவத்தைப் பரப்பினர் என்றாலும் மணவாள மாமுனிகளே தென்கலையின் பிரதான ஆசிரியராகக் கருதப்படுகிறார்.

தனக்கு முன்பிருந்த ஆசிரியர்களின் நூல்களுக்கு உரை எழுதியதன் மூலம் தமது கொள்கையை அவர் நிலை நாட்டினார். உதாரணமாக,அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இயற்றிய ஆச்சாரிய ஹ்ருதயம், திருவரங்கத்தமுதனார் இயற்றிய ராமானுஜ நூற்றந்தாதி பிள்ளை லோகாச்சாரியர் இயற்றிய ஸ்ரீவசன பூஷணம், முமு‌க்‌ஷுப்படி ஆகிய நூல்களுக்கு மணவாள மாமுனிகள் எழுதிய உரைகள்,தென்கலை வைணவத்தின் கொள்கை மற்றும் நடைமுறை ஆகியவற்றை ஸ்திரமானதொரு அஸ்திவாரத்தில் நிறுத்தின எனில் மிகையாகாது.

பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள உறவை ஒரு ஆண்டாள் அடிமை உறவுக்கு மணவாள மாமுனிகள் ஒப்பிடுகிறார், பரமாத்மாவை அடைய விழையும் ஜீவாத்மா செய்ய வேண்டியதெல்லாம் இறைவனிடம் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டு அவனை முழுக்கச் சரணடைய வேண்டிய தேயாகும். சாஸ்திரங்களில் கூறப்பட்ட, வருணத்திற்கேற்ப விதிக்கப்பட்ட உவிதி முறைகளைக் கடைப்பிடித்தால் மட்டுமே மோட்சம் கிட்டும் என்பது பொருளற்ற கூற்று.

இன்னும் சொல்லப்போனால் வருணாசிரமதருமமும் அவற்றைக் கூறும் தரும சாஸ்திரங்களும் மோட்சத்திற்குத் தடையாக நிற்பவை என அவர் கூறுகிறார். இவையெல்லாம் உவமையில் வரும் குரங்குக் குட்டியின் கவலையைப் போன்றவை, ஜீவாத்மா பூனைக் குட்டியைப் போன்று இறைவனிடம் தன்னை ஒப்படைத்துவிட்டுக் கவலையின்றி இருந்தாலே போதுமானது.

ஆழ்வார்களின் பாசுரங்களும் எளிமையான வழிபாட்டு முறையும் இதிகாச புராணங்களில் கூறப்படும் பக்தர்களின் வாழ்க்கைக் கதைகளும் சரணாகதியும் மோட்சத்திற்கு அடிப்படை என்று மணவாள மாமுனிகள் கருதுகிறார். இறைவன் சந்நிதியில் வருண வேறுபாடுகளுக்கு இடமில்லை என்பது அவரது கொள்கை.

இவ்விருவரின் கொள்கைகளை இன்றும் சற்று ஆழமாகச் சில தலைப்புகளில் ஆராயலாம்.


ஜீவாத்மாவின் இயல்பு


விசிஷ்டாத்வைத தத்துவப்படி ஆன்மா, அத்வைதிகள் கூறுவதைப் போல, ஞானம் மட்டுமல்ல, அது ஞானத்தின் பிறப்பிடமும் கூட,ஆனால் பிரம்ம சூத்திரம் போன்ற நூல்கள் ஞானமே ஆன்மா என்று கூறுகின்றன,இது விசிஷ்டாத்வைதத்திற்கு சற்றுத் தடையாக இருப்பது உண்மையே.


ராமானுஜர் இக்கூற்றை விளக்கும் போது ஞானம் இரண்டு வகையானது என்றும் அது புறவய ஞானம், அகவய ஞானம் எனப்படும் என்றும் கூறுகிறார். அகவய ஞானம் ஆன்மாவின் தொடர்ச்சியான அடிப்படியான பண்பு என்றும், புறவய ஞானம் அதன் வெளிப்பாடு என்றும் கூறுகிறார்.


புற உலகையும் ,புறவுலகத்தின் தன்மையையும் புரிந்து கொள்ளப் புறவய ஞானம் உதவுகிறது. விடுதலை பெற்ற ஆன்மாவுக்கு எல்லாமே இன்பமயமாக உள்ளது.


வாழ்வில் தளையுண்ட ஆன்மாவுக்கு இவ்வின்பம் தத்தம் வினைப்பயனுக்கு ஏற்பவே அமைகிறது அதாவது வினைப்பயனுக்கும் மோட்சத்திற்கும் தொடர்பு உண்டு. இதனையே சாஸ்திரங்கள் (குறிப்பாக பிரம்மசூத்திரம்)


’ பிரகிருதியின் இயல்பின் விளைவு “ என்று கூறுகின்றது இவ்வகையில் பார்க்கும்போது ஆன்மாவின் இயல்பு மூன்று. (1 ) ஆன்மா சாஸ்திரங்களை அறியும் திறன் கொண்டது. இது ஞாதா எனப்படும் (2) அது செயல்களின் விளைவுகளை அனுபவிக்கும் திறன் கொண்டது. அதனால் போக்தா எனப்படுகிறது. (3) செயல்களைச் செய்யும் திறனும் கொண்டது. எனவே அது கர்த்தா என அழைக்கப்படுகிறது.


வேறுவகையில் சொல்வதானால் ஆன்மா புறவுலகை சாஸ்திர ரீதியாக அறியக்கூடியது.அவ்வறிவின் அடிப்படையில் செயல்படக் கூடியது. அத்தோடு அத்தகைய செயல்பாட்டின் விளைவுகளை அனுபவிக்கக் கூடியது . இவ்வாறு பிரம்மசூத்திரக் கருத்துக்கு விளக்கம் அளிக்கிறார்.


அவ்வாறாயின் ஆன்மா தன்னிசையாக இயங்குதல் சாத்தியமா ? அவ்வாறு இயங்கினால் அது சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள தடைகளை -- நிபந்தனைகளை மீறியதாகி விடுமே?


இக்கேள்விகளுக்கும் ராமானுஜர் விடையளிக்கிறார்.


ஆன்மா தன்னிச்சையாக இயங்குகிறது. செயல்படுகிறது. ஆனால் இந்த சுயேச்சைத் தன்மையானது பரமாத்மா அனுமதிப்பதன் விளைவுதான்.அதாவது ஆன்மா தன் இஷ்டம் போல் செயல்பட முதலில் பரமாத்மா அனுமதிக்கிறார். இவ்வாறு அனுமதிப்பதை “உதாசீனம்” என்று ராமானுஜர் குறிக்கிறார், ”உதாசீனம் “ என்றால் கண்டும் காணாதது போல் இருத்தல் என்று பொருள்.


ஆன்மா தன் சுயமுயற்சியால் செயல்படத் தொடங்கும்போது நல்லது கெட்டது என சாஸ்திரங்களில் கூறப்படும் செயல்களைச் செய்கிறது.இறைவனின் கண்காணிப்பிலேயே இது நிகழ்கிறது.


ஆன்மாக்களின் வினைப் பயனுக்கேற்ப இறைவன் தீர்ப்பு வழங்குகிறான்.இத்தீர்வு சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப ஆன்மா எவ்வாறு இயங்கிறது என்பதைப் பொறுத்தே வழங்கப்படும்.


சுருங்கச் சொல்வதானால் ஆன்மா தன்னைத்தானே அறிந்து கொள்வதையும் புறவுலகை அறிவதையும் தனது இயல்பாகக் கொண்டிருக்கிறது.சுயேச்சையாக இயங்க இறைவனால் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.


அவ்வாறு இயங்கும்போது அது செய்யும் வினைப்பயனுக்கேற்ப இறைவன் தீர்வு வழங்குகிறான். இதில் நல்லது எது ,தீயது எது என்பது தரும சாஸ்திரங்களின் அடிப்படையிலே அமையும்.


இதனையே வடகலை வைணவர்கள் ----குறிப்பாக அதன் ஆரம்ப ஆசிரியரான சுதர்சன சூரி ஜீவனின், ’ஸ்வாதந்தரியம்” என்றும் அது தரும சாஸ்திரங்களுக்குக் கட்டுப்பட்டது என்றும் கூறுகிறார். வேறு வகையில் சொல்வதானால் தனது சொந்த வாழ்வில் சாதீய ஏற்றத்தாழ்வை எதிர்த்த ராமானுஜர் இறையியல், தத்துவம் என்று வரும்போது வருணாசிரம தருமத்தைப் போதிக்கும் தரும சாஸ்திரங்களின் அடிப்படையிலேயே இறைவன் தீர்வு வழங்குவான் என்று கூறுகிறார். இக்கூற்றைத் தென்கலை வைணவ ஆசிரியர்கள் பிரதானமாகக் கொள்வதில்லை, இதனைப் பின்னால் விளக்கலாம்.


ராமானுஜர் இறைவனுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள உறவை விளக்க பல்வேறு இரட்டைச் சொற்களைப் பயன்படுத்தினார்.


சரீரி -----சரீரம்: ஸ்வாமி----தாசன்; ஆதாரம்------ஆதேயம்; நியந்தந்---நியம்யம்: சேஷி------சேஷம் ஆகிய சொற்களே அவை வைணவ இலக்கியத்தில் கடைசியாகக் கூறப்பட்ட சேஷி--- சேஷம் ஆகிய சொற்களே பெரும்பாலும் பயன் படுத்தப்படுகின்றன.இதனை ஆண்டான் ---- அடிமை உறவு எனக் குறிப்பிடலாம்.


நாம் மேலே விவாதித்த இரு கருத்துக்களையும் இணைத்து ராமானுஜர் ஜீவனின் இயல்பு குறித்து இவ்வாறு தனது வேதார்த்த சங்கிரகம் என்ற நூலில் விளக்குகிறார்.


’ஜீவனுக்கு இரண்டு இயல்பு உண்டு. ஒன்று ஞானம். இது ஆன்மாவின் இயல்பில் ஒரு பகுதி மட்டுமே, இன்னொன்று அதன் சேஷத்துவம் அதாவது அதன் தாசத்துவம்.. அடிமைப்பண்பு. (ஸ்வரூபம் )”


வைணவத்தின் இரு கலையாரும் ராமானுஜரின் கருத்தைத் தங்களுடைய கொள்கைக்கேற்ப வியாக்யானம் செய்துகொள்கின்றனர்.


ஆன்மாவின் இயல்பு ஞானம் என்பதை வடகலையாரும் சேஷத்துவம் என்பதைத் தென்கலையாரும் பற்றிக்கொண்டனர்.


ஆன்மாவின் இயல்பு ஞானம்,செயல்பாடு,அனுபவம் ஆகியவை என்று கொண்டால் மட்டுமே அது நன்மை தீமையை உணரமுடியும்.அப்போதுதான் தருமசாஸ்திரங்கள் பொருளுடையவையாக இருக்கும்.இல்லையெனில் தருமசாஸ்திரத்தில் கூறப்படும் ஒழுக்கங்கள் பொருளற்றுப் போய்விடும் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார்


தென்கலையாரோ சேஷத்துவக் கருத்துக்கே முதலிடம் தருகிறார்கள். மணவாள மாமுனி சேஷத்துவம் என்ற பண்பு சாதாரண இயல்பு ( ஸ்வரூபம்) மட்டுமல்ல. அது ஸ்வரூபயாதாத்மியம்-------அதாவது இறைவன்பால் உச்சபட்ட சேஷத்துவமும் சார்புமே அதன் இயல்பு என்று கூறுகிறார். சேஷத்துவம் சுதந்திரம் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்ற ஒத்துப்போக முடியாதவை.


ஆன்மா ஞானமுடையது,என்று பேசும்போதே அது சேஷத்துவத்திற்கு ஊறு விளைவிக்கிறது.வேறு விதமாகச் சொல்வதானால் ஞானத்தை வலியுறுத்தும் போது இறைபற்று அழிந்து போகிறது என மணவாள மாமுனிகள் கருதுகிறார்.இவ்வாறு கூறும் பொழுது அறிவே பொருளற்றது என அவர் கூறவில்லை,புற உலகைப் புரிந்து கொள்ள ஞானம் பயன்படும். ஆனால் இறைவனை அடைய அதாவது ஜீவாத்மா பரமாத்மாவை அடைய சேஷத்துவமே பயன்படும் என்பது தென்கலையாரின் கருத்தாகும்.


மேலே கூறியவற்றை ஆராய்ந்தால் ஒரு விஷயம் நமக்குத் தெற்றென விளங்கும்.அதாவது இவ்விருசாராரும் மனுஸ்ம்ருதி போன்ற தரும சாஸ்திரங்களின் முக்கியத்துவம் குறித்து அடிப்படையில் தமக்குள் வேறுபடுகின்றனர் என்பதே அது.


சாஸ்திரங்கள் நல்லது எது தீயது எது என விளக்குகின்றன அதனை அறிந்து அதன்படி ஒழுக ஞானம் தேவை, அவ்வாறு சாஸ்திரவிதிகளைப் பற்ரி ஒழுகினாலே மோட்சம் கிட்டும்.இறைவனை அடையலாம் என்பது வடகலையார் கருத்து.


ஞானம் என்பது ஆன்மாவின் இயல்பாகிய சேஷத்துவத்திற்கு உட்பட்டது.அதோடு மட்டுமல்ல ஞானமும் இறைவனுக்கு கட்டுப்பட்டது. சந்தனமும் நறுமலரும் தமக்குத் தாமே பயனுடையதாக இருக்க முடியாது,அதனைச் சூடுபவராலேயே அது பயன் பெறுகிறது.


அதே போன்று ஆன்மாவும் தனக்கென எவ்விதப் பயனுமின்றி ( ஸ்வப்பிரயோஜனம்) சேஷிக்கு ---அதாவது இறைவனுக்கே பயன்படுதாகிறது.அதுவே அதன் இயற்கையான இயல்பு என மணவாள மாமுனிகள் கூறுகிறார்.


பக்தி--ப்ரபத்தி


இறைவனை அடைய பக்தியே சிறந்த மார்க்கம் என்று வடகலையாரும் பிரபத்தியே உற்றவழி என்று தென்கலையாரும் கூறுகின்றனர். பக்தி என்பது கீதையில் கூறப்பட்டுள்ள பக்தி யோகத்தையும்,பிரபத்தி என்பது சரணாகதியையும் குறிக்கும்.


இவ்விரு வழிகளும் ஆரம்ப காலத்திலேயே ---அதாவது நடாத்தூர் அம்மாள் காலத்திலேயே உருவாகிவிட்டன எனினும் பிற்காலத்தில் மிகத் தெளிவான பிரிவுகளாக அவைமாறி விட்டன.


பக்தியோகம் என்றால் என்னவென்று கீதைக்குத் தாம் எழுதிய கீதாபாஷ்யத்தில் ராமானுஜர் விளக்குகிறார். அதாவது உபநிடதங்களிலும் ,பிற நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள இறைவனையும் அவனது கல்யாண குணங்களையும் சதா இடைவிடாது தியானித்தல், அவ்வாறு தியானித்தலோடு சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள தத்தம் வருணாசிரம வழிப்படி வழிபடுதல் அவ்வாறு செய்யும்போது பற்றற்றுச் செய்தல்.


கீதையில் கூறப்பட்டுள்ள ஞான யோகமும் கரும யோகமும் பக்தியோகத்திற்கு துணை செய்பவை மட்டுமே. இறைவனை அடைய ஞானயோகமும், கருமயோகமும் நேரடி உபாயங்கள் அல்ல.பக்தியோகமே நேரடி வழியாகும்.


ராமானுஜர் தரும சாஸ்திரங்களின் வழியிலேயே பக்தியோகத்தின் மூலம் இறைவனை அடைய இயலும் என்று கூறுகிறார். சித்தாந்த ரீதியாக வருணாசிரம தரும முறையை எதிர்க்க அவரால் இயலவில்லை. என்பதை இங்கு நாம் மனங்கொள்ளுதல் வேண்டும்.

ராமானுஜரின் இக்கருத்தை வடகலையார் மேலும் விரித்துக்கொண்டனர்.


பக்தியோகத்தில் ஈடுபட நித்திய நைமித்திய கருமங்களை ஒருவர் கடைப்பிடிக்க வேண்டும். இந்நித்திய,நைமித்திய கருமங்கள் ( நித்தியம் என்பது தினமும் செய்ய வேண்டிய அனுஷ்டானங்கள், நைமித்தியம் என்பது அவ்வக்காலத்தில் செய்ய வேண்டியவை ) வருணத்துக்கு வருணம்-- ஏன் சாதிக்குச் சாதி வேறுபடும். அவற்றை இம்மியளவும் பிசகாது கடைப்பிடித்தால்தான் மோட்சம் கிட்டும் என்று வடகலையார் கூறினர். இறக்கும் தருணத்தில் கூட இறைவனை ஸ்மரிப்பதும் இதில் அடங்கும். இதனை அந்திம ஸ்ம்ருதி என்று அழைக்கிறார்கள். இவற்றில் சிறு பிழை நேர்ந்தாலும் கூட மோட்சம் எய்துதல் கிட்டாது அல்லது அது அடுத்த பிறவிக்குக் காரணம் ஆகும் என்று அவர்கள் கூறினார்கள்.


தென்கலையார் ப்ரபத்தியே சிறந்தது எனக் கூறுகிறார்கள். ப்ரபத்தி என்பது தாஸத்துவம் அல்லது சேஷத்துவம் ஆகும். அவ்வழியே எல்லாவற்றிற்கும் --ஏன் பக்தியோகத்துக்கும் அடிப்படை என அவர்கள் கூறுகிறார்கள். பக்தியோகத்தின் முதல் தேவை வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகியவற்றில் பயிற்சி,வாழ்நாள் முழுவதும் இடைவிடாத கட்டுப்பாடான வழிபாடு, தியானங்கள், அனுஷ்டானங்கள் ஆகியவை ஆகும். எனவே இம்முறை மேற்குலத்தில் பிறந்த ஆடவரால் மட்டுமே கைக்கொள்ளக்கூடியது. ஏனெனில் வேத சாஸ்திரங்களைப் பயிலுதல் அதன்படி ஒழுகுதல் பெண்குலத்திற்கும் சூத்திரருக்கும் தடை செய்யப்பட்டவை ஆகும்.


ஆனால் ப்ரபத்தியோ மிக எளிமையானது.எளிய வழிபாட்டு முறையான பஞ்சராத்ர ஆகமம்,இதிகாச புராணங்களில் வரும் பக்தர்களின் கதைகள், எல்லாவற்றிற்கும் மேலாக ஆழ்வார்களின் பாசுரங்கள் ஆகியவையே ப்ரபத்திக்கு அடிப்படை. இவற்றை சாதி, வருணம்,பிறப்பு,கல்வி, தகுதி போன்ற வேறுபாடு இன்றி யாரும் பயிலலாம்.அவற்றின்படி எளிமையான வழிபாட்டிலும் ஈடுபடலாம். ப்ரபத்தியில் ஈடுபட ஒரே தகுதி இருந்தால் போதுமானது. அதாவது கதியற்றவராகவும் ஏதிலராகவும் இருக்கவேண்டும் அவ்வளவே.


ப்ரபத்தி மார்க்கத்தை, நிர் அபேட்ச உபாயம், அதாவது வேறெதையும் வேண்டாத வழி எனவும் சித்த “பாயம் “ -- எண்ணியதும் சித்தியாகும் வழி என்றும் தென்கலையார் கூறுகிறார்கள்.


வேதாந்த தேசிகர் பக்தியோகம், ப்ரபத்தி ஆகிய இரண்டும் உபாயங்கள்தான் என்று ஒப்புக்கொள்கிறார். ஆனால் இவை ஒன்றுக்கொன்று மாற்றாக அமைந்தவை என்று கருதுகிறார். பிறப்பு ஞானம்,தகுதி,பொறுமை உடையோர் பக்தியோகத்தைப் பின்பற்றவேண்டும். ஏழையரும் ஏதிலரும் மட்டுமே--அதாவது பக்தியோகத்தை பயில இயலாதோர் மட்டுமே -- ப்ரபத்தியைக் கைக்கொள்ளலாம் என்று கூறுகிறார். இதிலிருந்து ப்ரபத்தியைத் தாழ்ந்த உபாயம் என்றே வடகலையார் கொள்கிறார்கள் என்பது தெளிவாகும்.


ஆனால் தென்கலையாருக்குப் ப்ரபத்தியே உபாயம். மணவாள மாமுனிகள் தரும சாஸ்திரங்களும் , பக்தியோகமும் தாழ்ந்த வழி என்றும் எக்கணத்தில் பூரண சரணாகதியே சிறந்தது என்று உணரப்படுகிறதோ அக்கணத்தே பக்தியோகம் பொருளற்றதாகிப் போகிறது என்றும் கூறுகிறார். இன்னும் சொல்லப் போனால் பக்தியோகம் இறைவனை அடையத் தடையாக உள்ளது என்றும் அவர் கருதுகிறார்.


பகவத் கீதையின் 18 ம் அத்தியாயத்தின் 66 ஆவது சுலோகம் “சரமஸ்லோகம் “ என்று வைணவ சம்பிரதாயத்தில் அழைக்கப்படுகிறது. ’சர்வதர்மான் பரியத்ஜ்ய. மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்‌ஷ யிஸ்யாமிமா.சுச: ‘ என்பது கீதை. இதன் பொருள் ‘எல்லாவிதமான தர்மங்களையும் விட்டுவிட்டு என் ஒருவனையே சரணம் அடை. நான் உன்னை எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுதலை செய்து உனக்கு மோட்சம் அளிக்கிறேன்.கவலையற்க’ என்பதாகும்.


இந்த சுலோகத்தில் எல்லா தர்மங்களையும் எனக் கண்ணன் கூறுவது ஸ்ருதி, ஸ்ம்ருதி என்றழைக்கப்படும். எல்லாவித தர்மங்களையும், தர்மசூத்திரங்கள், சாத்திரங்கள் போன்ற எல்லா தருமங்களையும் விட்டுவிட்டால்தான் இறைவனை அடைதல் சாத்தியம்’ என்று தென்கலையார் இதற்குப் பொருள் கொள்கிறார்கள்.


ஆனால் வடகலையாரோ ‘விட்டுவிட்டு ‘ என்பதை ஒரு அனுவாதமாகவே கொள்கிறார்கள். அதாவது ‘விட்டுவிட்டு’ என்பது நடந்து முடிந்த ஒரு விஷயம். எனவே இறைவனைச் சரணைடையும் முன்னர் தருமசாஸ்திரங்களைப் பற்றி ஒழுகுதல் முதல் தேவை என்று பொருள் கூறுகிறார்கள்.


இக் கருத்துக்களிலும் இரு தரப்பினரின் அடைப்படை வேறுபாடு வருணாசிரம தருமத்தைப் பற்றியதே என்பது சொல்லாமலேயே விளங்கும்.


ராமானுஜர் மேலே குறிப்பிட்ட இரு விதமான விளக்கங்களையும் தமது உரைகளில் கூறியிருக்கிறார் என்று N . ஜெகதீசன் கூறுகிறார்.* ‘வேறுபாடான விளக்கங்கள் ‘சர்வதர்மான் பரித்யஜ்ய’ என்ற சுலோகத்துக்கு உண்டு,அதாவது ‘எல்லா தருமங்களையும் விட்டுவிட்டு, என்றும் ’ப்ரபத்தியைத் தவிர எல்லாத் தருமங்களையும் விட்டுவிட்டு’ என்றும் இதற்குப் பொருள் உண்டு.


ராமானுஜர் கீதைக்கு எழுதிய பாஷ்யத்தில் முதல் பொருளையும் ‘கத்யம் என்ற தனது நூலில் இரண்டாவது பொருளையும் கொள்கிறார்’ என்று ஜெகதீசன் கூறுகிறார். எனவே ராமானுஜரின் கொள்கை இச்சரம ஸ்லோகத்தைப் பொறுத்த மட்டில் தென்கலையாருக்குச் சாதகமாகவே இருக்கிறது எனக் கொள்ளலாம்.


வழிபாட்டு முறைகளிலும் இரு சாராரும் வேறுபடுகின்றனர்.வடகலையார் வைகானச ஆகம முறையையும், தென்கலையார் அதைக்காட்டிலும் எளிமையான வழிபாட்டு முறையாகிய பஞ்சராத்ர ஆகம முறையையும் கைக்கொண்டனர். ராமானுஜர் பழைய வைகானச முறையை மாற்றி பஞ்சராத்ர முறையைக் கோவில்களில் குறிப்பாக ஸ்ரீ ரங்கம் கோவிலில் நடை முறைப்படுத்தினார்.


வைகானச முறை வடமொழி சாஸ்திர விதிகளை அடிப்படையாகக் கொண்டது. எனவே வடகலையாரால் பெரிதும் போற்றப்பட்டது. தென்கலையாரோ பஞ்சராத்ர வழிமுறையை மேலும் எளிமையாக்கினர். அதன் விளைவே உருவ வழிபாட்டுக்கு அவர்கள் தரும் முக்கியத்துவம் ஆகும். இதனை ’அர்ச்சாவதாரம் ’ என்று அவர்கள் அழைத்தனர்.


இன்னும் சொல்லப் போனால் ‘அர்ச்சாவதாரத்தைக் காட்டிலும் சிறந்தது வேறெதுவுமில்லை என்று அவர்கள் போற்றினர். இதனை ‘அத்தாணிச்சேவை’என அவர்கள் கூறினர். இதன் பொருள் ‘அந்தரங்கக் கைங்கரியம்’ என்பதாகும். அதாவது சாஸ்திர விதிப்படி செய்யபடும் கருமங்களைக் காட்டிலும் இந்த அர்ச்சாவதாரமே சிறந்ததாகும்.
எவ்வாறு உறங்குபவனின் கைப்பண்டம் அவனையறியாது கைநழுவிப் போகுமோ அவ்வாறே அத்தாணி சேவகத்தில் ஈடுபடுவோருக்குக் கருமம் விலக்கானது என்று தென்கலையார் கூறினர்.


இதன் தொடர்பாக ‘மங்களாசாசனம்’என்பது கைங்கர்யங்களில் எல்லாம் சிறந்தது எனத் தென்கலையார் கூறினர்.


இது இறைவன் பால் கொண்ட காதலால் அவனது உருவத்திற்கு,விக்ரகத்திற்குத் தீங்கு விளையாது,அதனைக் காப்பது,தொண்டு செய்வது ஆகியவற்றைக் குறிக்கும்.இதனை செய்ய ஜாதி வருண வேறுபாடுகள் இல்லை.


ஏனெனில் இத்தகைய தொண்டு ஆன்மாவின் சொரூபத்திற்கு அதாவது அதன் அடிப்படை இயல்புக்குப் பொருத்தமானது சேஷன் என்ற முறையில் சேஷியைக் காத்து நிற்பது, சேஷனின் கடமையாகும் என்று தென்கலையார் கூறினர். இவ்வாறு விக்ரக வழிபாட்டையும் அதனைப் பாதுகாத்தலை உயர்ந்த சேவை எனவுந் தென்கலையார் பாராட்டி முன்வைத்தற்குக் காரணம் அது தாழ்த்தப்பட்ட மக்களுக்கேற்ற வழிபாட்டு முறை என்பதேயாகும்.

இவ்விரு கலையாருக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் பதினெட்டு என்று கூறப்படுகிறது.அடிப்படையான கொள்கை ரீதியான வேறுபாடுகளில் முக்கியமானவற்றில் சிலவற்றை மட்டும் மேலே குறிப்பிட்டோம்.பழக்க வழக்கங்களில்,புறச்சின்னங்களில் பின்னாளில் நிகழ்ந்த சச்சரவுகள்,சண்டைகள், வழக்குகள் ஆகியவை குறித்து நாம் இங்கே ஆராயவில்லை.


நாம் மேலே விவாதித்த தலைப்புகளிலிருந்து இவ்விரு பிரிவினரின் அடிப்படை வேறுபாடாக நாம் காண்பது தரும சாஸ்திரங்கள் என்றழைக்கப்படும் நூல்களில் காணப்படும் வருணாசிரம தரும முறை பற்றியதாகும். இவ்வருணாசிரம முறையின் தோற்றம்,வளர்ச்சி குறித்துப் பல்வேறு ஆய்வுகள் வரலாற்று ரீதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. வருணாசிரம அமைப்பு முறை வேதப் பிற்காலத்தில் தோன்றியதாகும். இது வேதங்களுக்குப் பின்னால் தோன்றிய கல்ப சூத்திரங்கள் எனப்படும் நூல்களின் அடிப்படையில் கி. பி. முதல் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்ட தரும சூத்திரங்களில் தெளிவாக்கப்பட்டது.


இதற்குப் பின்னால் எழுதப்பட்ட மனு ஸ்ம்ருதி முதலான தரும சாஸ்திரங்களில் கெட்டிப் படுத்தப்பட்டது. பகவத் கீதையும் இவ்வகை நூல்களில் அடங்கும்.


சமூதாயத்தை நான்கு வருணங்களாகப் பிரித்து உற்பத்தியில் நான்கு விதமாக அவைகளை ஈடுபடச் செய்து அந்நான்கு வருணத்தாருக்கும் அதன் அடிப்படையில் வேறுபாடுகள் கற்பித்து,அதற்குத்தக, நான்கு வருணத்தாருக்கும் வேறுபட்ட ஒழுக்கங்களையும் நீதிகளையும் வகுத்ததில் இத்தரும சாஸ்திரங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. இந்நூல்களின் உள்ளடக்கத்தையும்,அவற்றின் பாதிப்புகளையும் முழுமையாக ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல’ என்றாலும் இக்கட்டுரையில் அடிப்படையான சில விஷயங்களை ஆராய்வது அவசியம் ஆகும்.


பகவத் கீதையிலிருந்து நானே சமைத்தேன்,அவரவர் குணத்திற்கும் செய்கின்ற தொழிலுக்கும் ஏற்ப’ என்று கீதை அத்தியாயம் 4----13 ல் கண்ணன் கூறினான்.இதன் மூலம் வருணப் பிரிவினைக்கு தெய்வீக அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இறைவனே இதற்குப் பொறுப்பு என்று கூறிவிட்டதால் மானிடர்களுக்கு இதில் மறுப்புக் கூற ஏதுமில்லை என்று ஆகிவிட்டது.


இவ்வாறு உருவாக்கப்பட்ட நான்கு வருணத்தாருக்கும் உற்ற தொழிலை இறைவனே கீதையில் இவ்வாறு கூறுகிறான் .’ பிராமணர் க்ஷத்திரியர்,வைசியர் மற்றும் சூத்திரர் ஆகியோரின் தொழில்களை நான் கூறுகிறேன்’ 1841 ‘மனத்தையும் இந்திரியங்களையும் அடக்குதல் பொறையுடமை,நிர்மலம்,ஞானம்,விஞ்ஞானம் ஆகியவற்றைப் பயிலுதல்,இறைப்பற்று,பயிலுதல் பயிற்றுவித்தல் பிராமணரின் தொழில்’1842 ‘வீரம்,அச்சமின்மை,திடம்,போர்க்கள்த்தே தீரம்,தானம்,காத்தலாகியவை க்ஷத்திரியனின் இயல்பான தொழில்’ 1843


விவசாயம்,ஆநிரை காத்தல்,வாணிகம்,வைசியர் கடன்; மேல் வருணத்தாருக்கு தொண்டு செய்வதே சூத்திரர் தொழில் 1844


தரும சூத்திரங்களும் , தரும சாஸ்திரங்களும் கீதையில் கூறப்பட்ட இக்கருத்தையே மிக விரிவாகக் கூறியுள்ளன. சூத்திர வருணத்தின் உட்பிரிவாக எண்ணிறந்த சாதிகள் உருவாக்கப்பட்டன,ஒவ்வொரு சாதியும் உற்பத்தியில் ஏதாவது ஒரு வழியில் ஈடுபடுத்தப்பட்டன,விவசாயிகள்,தச்சர், கொல்லர்,கருமான்,தட்டர் போன்ற நேரடி உழைப்பாளர்கள் சூத்திர வருனத்தில் அடக்கப்பட்டனர்.


இது மட்டுமின்றி மிகத் தாழ்ந்த சாதியினராகக் கருதப்பட்ட பின்னாளில் பஞ்சமர் அல்லது ஐந்தாவது வருணத்தார் என்றழைக்கப்பட்ட சண்டாளர்கள் எனப்படுவோரும் சூத்திர ஜாதியினர் ஆயினர்.இத்தரும சாஸ்திரங்கள் சாதிப் பாகுபாடு செய்ததோடு மட்டுமின்றி சாதிகளிடையே ஏற்றத் தாழ்வையும் கற்பித்தன,சாதிக்கு ஒரு நீதி வகுக்கப்பட்டது.இச்சாதி ஏணிப்படியின் உச்சியில் பிராமணரும் அதற்குக் கீழே க்ஷத்திரியரும்,வைசியரும் அதற்கும் கீழே சூத்திரர்களும் இடம் பெற்றனர்,ஏற்றத் தாழ்வுகள் சாதிக் கொடுமைகளுக்கு வழி வகுத்தன.


ஏற்கெனவே குறிப்பிடப் பட்டபடி கி. பி. முதல் நூற்றாண்டு வாக்கில் தொடங்கப்பட்ட சாதீய ஏற்றத் தாழ்வுகள் இன்று வரை நீடிக்கிறது எனலாம்.கொடுமைகளின் தன்மை மாறியிருக்கலாமே ஒழிய ஏற்றத் தாழ்வுகள் இன்றும் நீடிக்கின்றன. உதாரணமாக,வேதங்களைப் பயிலுதல் சூத்திரர்களுக்கு விலக்கப்பட்டது. பெண்களும் அவர்கள் மேல் வருணத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி வேதங்களைப் பயில இயலாது. சொல்லப் போனால் வேத கோஷங்களை ஒரு சூத்திரன் கேட்டுவிட்டால் அவனது காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்பது போன்ற மனித விரோதக் கருத்துக்கள் தரும சாஸ்திரங்களில் இடம் பெற்றுள்ளன. ஆனால் பல நூற்றாண்டுக் காலப் போராட்டங்களின் பின்னரே இவைகள் தளர்ந்துள்ளன,ஆனால் இன்றும் ஒழிந்து விடவில்லை.


சூத்திர வருணத்தாருக்கு தரும சாஸ்திரத்தின்படி வேதம் பயிலுவது மட்டுமல்ல அதன் அடிப்படையிலான சடங்குகளும் மறுக்கப்பட்டன.அந்நாளில் சாதீய அந்தஸ்து என்பது சடங்கை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கப்பட்டது.எவ்வளவுக்கெவ்வளவு ஒருவன் அதிக சடங்கு செய்கிறானோ அந்த அளவுக்கு அவன் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவன் என்று சாஸ்திரங்கள் கூறின. இதனை ritual status ஒன்று குறிப்பிடலாம்..


பொருளாதார அந்தஸ்தைக் (actual status) காட்டிலும் இந்தச் சடங்காசார அந்தஸ்தே சமூகத்தில் முதலிடம் வகித்தது. எனவே சூத்திரர்களுக்கு ஆசார அந்தஸ்தை வழங்க தரும் சூத்திரங்களும் தருமசாஸ்திரங்களும் மறுத்தன. இந்த அந்தஸ்தை பெறவேண்டிப் பலவேறு இடையறாத போராட்டங்கள் இந்திய சமூகத்தில் நடந்துள்ளன.


தரும சூத்திரங்கள் தோன்றியபோதே ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்து சூத்திரர்கள் போராடியிருக்க வேண்டும் என்பதற்கு தரும சூத்திரங்களிலேயே அகச்சான்றுகள் தோன்றியதாகக் கருதப்படும் வாசிஷ்ட தரும சூத்திரத்தில் சூத்திரன் யார் என்று விளக்கும்போது
” தீர்க்க வைரம்” அசூயாச அசத்தியம் ப்ராமண தூஷணம் பைசூன்யாம்நிர்தய்த்வம்ச ஜானியாட் சூத்ரலக்ஷணம் ” என்று கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் “தீராத வெறுப்பு., அசூயை,பொய்மை,பிராமணர்களை தூஷித்தல் விலங்குகளிடத்தில் இரக்கமின்மை ஆகியவை சூத்திரனின் லட்ஷணம் என்பதாகும்.பிராமண தூஷணம் என்ற சொல்லை நாம் உற்று நோக்கினால் தாழ்த்தப்பட்ட மக்கள் மேல் வருணத்தாராகிய பிராமணரை ஆரம்ப காலத்திலேயே எவ்வளவு வெறுத்தார்கள் என்பது புலனாகும். இதற்குரிய காரணம் தெளிவானது,இது சாதீய பொருளாதார அந்தஸ்தை வேண்டி எழுந்த குரல் என்பதும் விளங்கும்.


சடங்காசார அந்தஸ்துக்காக நடந்த போராட்டத்தின் விளைவாக பிராமணீறு சமூகத்தில் சூத்திரர்களுக்கு சிலசில சலுகைகள் கிடைத்தன.’ பதினான்கு பதினைந்தாவது நூற்றாண்டு வாக்கில் சூத்திர வருணத்தார் செய்யவேண்டிய சடங்குகள் பற்றியும் அவற்றை இயற்றும் நடைமுறை பற்றியும் பலவேறு நூல்கள் தோன்றின.அவையாவன சூத்திரதரும போதினி (மதனபாலர் என்பவரால் இயற்றப்பட்டது) சூத்திர ஆசார சிந்தாமணி (வாசஸ்பதி மிஸ்ரர்) எழுதியது, சூத்திர சிரோமணி (கிருஷ்ணசேனர் இயற்றியது) சூத்திர நிருத்யதத்துவம் (ரகுநந்தனர் ) மற்றும் சூத்ரகமலாகரம் (கமலாகர பட்டர் இயற்றியது) என்று R S சர்மா குறிப்பிடுகிறார்.


நாம் மேலே குறிப்பிட்ட விவரங்களிலிருந்து சமூகத்தில் அந்தஸ்து மறுக்கப்பட்டு கொடுமைகளுக்கு ஆட்பட்ட தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள் தொடர்ந்து போராடி வந்தது நமக்குப் புலனாகும்.


இத்தகைய பின்னணியில் தான் ராமானுஜர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமூக அந்தஸ்து வழங்க வேண்டி அவர்களை வைணவத்தோடு இணைத்தார். இறைவனின் தொண்டர்களாயின் அவர்கள் உயர்ந்த குடியினரே என்ர ஆழ்வார்களின் கொள்கைகளை அவர் நடைமுறைப் படுத்தினார் .ஆனால் அவருடைய போதனையில் இரு அம்சங்கள் இருந்ததை ஏற்கெனவே நாம் விளக்கினோம். சாதீய ஏற்றத் தாழ்வை எதிர்ப்பது,அதே சமயம் கொள்கை அளவில் வருணாசிரம தருமத்தை ஏற்றுக்கொள்வது என்ற இரு அம்சங்கள் இருந்ததை நாம் சுட்டிக்காட்டினோம்.


தென்கலை வைணவத்தார் ராமானுஜரின் சாதீய ஏற்றத் தாழ்வு எதிர்ப்புக் கொள்கையை மேலும் முன்னெடுத்துச் சென்று அதற்குச் சித்தாந்த ரீதியான ஒரு அந்தஸ்தை ஏற்படுத்தினார் என்று கூறலாம், கடையனுக்கும் கடைத்தேற்றம்’ என்ற கொள்கையைச் சிக்கெனப் பற்றிக்கொண்டு அக்கொள்கைக்கு சமய அந்தஸ்தையும் ஏற்படுத்தித் தந்தனர் என்றால் அது மிகையாகாது.


தென்கலை வைணவத்தார் ஆழ்வார்களால் இயற்றப்பெற்ற நாலாயிர திவ்யப் ப்ரபந்தங்களை வேதங்களுக்கு இணையானவை என்று கொண்டனர்.


இதற்குக் காரணம் அவர்கள் வடமொழி அறியாதவர்கள் என்பதல்ல.தமிழகத்தில் சமூதாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பேசும்போது அவர்களுடைய மொழியிலேயே பேசவேண்டியதாயிற்று என்பதே அதன் பொருள். மணவாள மாமுனிகள் ‘ஆசார்ய ஹிருதயம்’ என்ற நூலுக்கு எழுதிய உரையில் இது குறித்துப் பின் வருமாறு பேசுகிறார்.


‘செந்திறந்த தமிழோசை வட சொல்லாகி என்று ஸம்ஸ்கிருதத்தோடு ஸஹபடித மாகையாலே, அகஸ்தியரால் வெளியிடப்பட்ட திராவிடமும் அநாதியயுள்ளது’ (ஆசாரிய ஹிருதயம்-14)


அதனை (வடமொழி வேதங்களை) “வசையில் நான் மறை என்று சொன்னது போல இதனையும் ‘ஏதமிலாயிரம்’ என்று நிர்தோஷமாகச் சொல்லிற்று. அதனை சுர்டர்மிகு சுருதி ‘ என்றது போல இதனையும் செவிக்கினிய செஞ்சொல் என்றது ‘வேத நூல் ஓதுகின்ற துண்மையல்ல தில்லை என்று அதனை சத்யவாதி என்றது போல இதனை பொய்யில் பாடலாயிரம் என்று சொல்லிற்று. ‘பண்டை நான்மறை’ ’ நிற்கும் நான்மறை ‘ என்று அதனை அநாதியாகவும் மேல் அழிவில்லாததாகவும் சொன்னது போல இதனையும் முந்தையாயிரம், அழிவில்லாவாயிரம்’ என்றது.


“இயற்பாவான திருவிருத்தம் திருவாசிரியம் பெரிய திருவந்நாதியாகிற மூன்று பிரபந்தங்களும் ருக்கு,யஜுர்,அதர்வணம் என்கிற மூன்று வேதங்களைப் போன்றது , திருவாய்மொழியானது இசைகொளவேதம் என்ற சாமவேதத்திற்குச் சமமானது (ஆ-ஹி 50)


இவற்றிலிருந்து தென்கலை வைணவர்கள் தமிழை வடமொழிக்கு இணையாகவும், ந்ம்மாழ்வாரின் பாசுரங்களையும் அதனோடு பிற பிரபந்தங்களையும் வேதங்களுக்கு இணையாகவும் கொண்டார்கள் என்பது புலனாகிறது.


சாஸ்திரங்களைக் கற்றவர்களை சாஸ்திரிகள் என்றும் சாமானிய மக்களை சாரக்ஞர் என்றும் மணவாள மாமுனிகள் கூறினார். தருமசாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ச்சியுற்று அதன் வழியால் இறைவனை அடைய எண்ணுகிர சாஸ்திரிகளைக் காட்டிலும் சாமானிய மக்கள் சிறந்தவர்கள் என்று காட்ட அவர் கீழ்வருமாறு எழுதினார்.


சாஸ்திரங்களிலே ஊற்றமுடையவர்கள் தெப்பம் பற்றி ஆறு நீஞ்சுமலர்கள் தெப்பத்தை ஒருகையிலேயிடுக்கி தாங்களும் ஒருகை துழாவுமா போல் ஸ்வப்ரயத்நமென்ன அதனாலாகும் பகவத்க்ருபையென்ன ஆக இரண்டையும் அவலம்பித்துக் கொண்டு பிறவிக்கடல் நீந்துவார்க்கே என்கிறபடியே ஸம்சார சமுத்திரத்தைக் கடக்க நினைக்க சாஸ்திரதாத்பரிய சார்மான திருமந்திரத்தை உணர்ந்த சாரக்ஞர்கள்,ஓடம் ஏறினவர்கள் போல இரண்டு கைகளையும் விட்டு பகவத் ப்ராப்தியாகிற கரையைக் கிட்டுகைக்கு ஈடான காலத்தைச் சிந்தனை பண்ணியிருப்பார்கள்,’ ( ஆ--ஹி 18)


இதனைச் சுருக்கிச் சொல்வதானால் சாஸ்திரம் பயின்றோர் தெப்பக் கட்டயை ஒரும் கையால் துழாவிக் கொண்டிருப்பவர்கள் , சாமானியர்கள் திருமந்திரத்தைச் சொல்லிக்கொண்டு,படகிலேறிக் கரையைச் சேருவதற்கு எக்கவலையு இன்றிக் காத்திருப்பவர்கள்.இவ்வுவமை நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட மர்க்கட,மார்ஜார உவமையோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியதாகும். தெப்பக் கட்டையைப் பற்றுவோர் வடகலையார், ஓடத்தில் ஏறியவர்கள் தென்கலையாவர்.


அத்தோடு மட்டுமல்ல,வருணாசிரம தருமங்கள் தாழ்ந்த படியைச் சேர்ந்தது என்றும் சரணாகதியே சிறந்தது என்றும் கீழ்வருமாறு மணவாள மாமுனிகள் விளக்குகிறார்.


‘ வாத்சல்யமுடையவளான பெற்ற தாயானவள் மண்ணைத் தின்ன ஆசைப்பட்ட தன் குழந்தை முகம் கன்றாதபடிக்கு முந்தற மண்னைத் தின்னும்படியாக இசைந்திருந்து பின்னை அதற்கு மாற்று மருந்து இடுமாப் போல சகல ஆத்மாக்களிடத்திலும் தாய்போலே வத்ஸலனான ஸர்வேஸ்வரனும் சேதனருடைய ருசிக்குத் தகுதியாக பந்தகங்களான சாஸ்திரங்களையும் காட்டிப் பின்னையந்த நிவர்த்த பேஷஜமான சாஸ்திரங்களையும் காட்டுவான்.,’


இக்கூற்றில் தரும சாஸ்திரப் பயிற்சியை சிறு குழந்தை அறியாமையால் ‘மண் தின்ன்னுவதற்கு ‘ஒப்பிடுகிறார் அந்த மண் தின்னும் தவறை நீக்கும் வழியாக --நிவர்த்தகமாக சரணாகதியைக் காட்டுகிறார்.


எல்லாவற்றிக்கும் மேலாக சாதி வேறுபாடு காண்பது பாவத்தில் எல்லாம் பெரும் பாவம் என்று மணவாள மாமுனிகள் உரைக்கிறார்.


’நீரார் முகில் வண்ணன் பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரே’ என்ற நம்மாழ்வார் அருளிச் செய்தபடியே ஏதானும் ஜன்ம வ்ருத்தங்களை உடையரேயாகிலும் நித்யஸூரிகளோ டொப்பர்கள் என்னும்படி ச்லாக்கியராய் இலங்குவான் என்கிறபடியே உயர்கதியடையா நிற்க-
அமர ஓரங்கமாறும் வேதமோர் நான்கும் ஓதித் தமர்களில் தலைவராய சாதி அந்தணர்களேலும் நுமரைப் பழிப்பாராகில் நொடிப்ப தோரளவில் ஆங்கே அவர்கள் தாம் புலையர்போலும்....உத்திருஷ்ட யோனியிற் பிறந்தவர்களாகிலும் கர்ம சண்டாளராய் இனியொருகாலும் கரையேற யோக்யதையில்லை எனும்படி அதோகதி அடைவார்கள்.’


வருணாசிரம தருமப்படியான அனுஷ்டானத்தைக் கருமமென்றும், இறைவனது நேரடித் தொண்டை கைங்கர்யம் என்றும் தென்கலையார் அழைக்கின்றனர். மணவாள மாமுனிகள் இவ்விரண்டையும் ஒப்பிட்டுப் பின்வருமாறு கூறுகிறார்.
‘ க்ரியா சப்தத்திலே சொல்லப்பட்ட கர்மமானது அஸத்தியமும் அநித்யமுமான ஜாதிக்கு ஏற்றிருக்கும், வ்ருத்தி சப்தத்தால் சொல்லப்ப்ட்ட கைங்கரியமானது ஸத்யமும் நித்யமுமான தாஸத்துவத்திற்கு ஏற்றிருக்கும்.’


வருணத்தை அஸத்தியமென்றும் அநித்தியமென்றும் பேசுவது ஏனெனில் அது ஆத்மாவுக்கு ஏற்பட்ட வடிவன்றே. வந்தேறியான தேஹத்தளவே நின்று அந்த தேஹத்தளவோடு கூடவே கழிந்து போவதன்றோ வருணமென்பது. ஆகவே அதனை அஸருத்தியமென்றும் அநித்தியமென்றும் சொல்லக் குறையில்லை. அடிமை என்பது அப்படிப்பட்டதன்று. திருமாலே நானுனக்கு பழவடியேன்’ என்று அது ஆத்மாவுக்கே ஏற்பட்ட வடிவாகி ஆத்மாவுள்ளவனாகவும் தொடருகையாலே அது ஸத்யமும் நித்யமுமாகப் பேசப்பட்டது (ஆ--ஹி -26)


நாம் மேலே காட்டிய மேற்கோள்களிலிருந்து வருணாசிரம முறையையும் அதைப் போதிக்கும் தரும சாஸ்திரங்களையும் தென்கலையார் எந்த அளவுக்கு கண்டனம் செய்தார்கள் என்பது நமக்குப் புலனாகிறது,வருணசிரம தருமத்தையும் அதைம் கற்றுத் தேர்ந்தும் திருமாலை உணராத பிராமணர்களை கர்த்தபங்கள்--- அதாவது குங்குமஞ் சுமந்த கழுதைகள் என்றே மணவாள மாமுனிகள் கூறுகிறார். (ஆ ஹி. 86
வைணவத்தில் ஏற்பட்ட இப்பெரும் பிளவுக்குச் சமூகக் காரணங்கள் இல்லாமலில்லை.


ராமானுஜர் தோன்றிய காலம் தமிழகத்தில் நிலவுடமை வேரூன்றிவிட்ட காலமாகும்.நிலமே பிரதான உற்பத்திச் சாதனமாக மாறிவிட்ட காலம்.இதன் அடிப்படையில் பல்வேறு தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் உழவுத் தொழிலிலும் அதனோடு தொடர்புடைய பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டனர். “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் ’ என்று கூறப்பட்டதன் பொருளும் இதுவே. நிலங்கள் அளக்கப்பட்டு அவைகள் பிராமணர்களுக்கு ப்ரமதேயமாக வழங்கப்பட்டன.கிராமங்கள் தோறும் கோவில்கள் எழுப்பப்பட்டு அவைகளுக்கு தேவதான நிலங்கள் வழங்கப்பட்டு அவை சமய மையங்களாக மட்டுமின்றிப் பொருளாதார மையங்களாகவும் செயல்பட்டன.இச்சமூக அமைப்பில் வேதம்,தருமசாஸ்திரம் போன்றவற்றைப் பயில்வோராகிய பிராமணர்களும் அவர்களைப் போற்றிப் பாதுகாத்த அரசர்களும் மேல்தட்டு வர்க்கத்தினராகவும்,உழவுத் தொழிலிலும் அதனோடு தொடர்புடைய தொழில்களிலும் ஈடுபட்டோர் கீழ்சாதியினராகவும் கருதப்பட்டனர்.


இது வர்க்க முரண்பாடுகளைத் தோற்றுவித்தது. ஏழையரும் ஏதிலருமாக வாழ்ந்து கடையர்களாகத் தாழ்ந்த அடித்தட்டு மக்களுக்கு உழைப்பைத் தவிர வாழ்க்கையென வேறொன்றும் இல்லை.என்ற நிலை உருவாயிற்று.கல்வியென்பது அவர்கள் அறியாத ஒன்று,சோழர் காலத்தில் கல்வி என்பது வடமொழிக் கல்வியே என்பதற்கு கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. இக்கல்வி பிராமணர்களாலேயே பயிலப்பட்டது, கடிகைகளும், மடங்களும் அக்ரஹாரங்களும்,சதுர்வேதிமங்கலங்களும்,ப்ரம்மபுரிகளும்,இவ்வடமொழிக் கல்வியை வளர்த்தன. எல்லாவற்றிற்கும் மேலாகப் பொன்னேரி,கும்பகோணம்,எண்ணாயிரம்,திருபுவனி, திருமுக்கூடல்,திருவொற்றியூர் போன்ற இடங்களில் கல்லூரிகள் மன்னர்களின் ஆதரவோடு தொடங்கப்பட்டு உயர்கல்வி வழங்கப்பட்டது.இவ்வுயர் கல்வியென்பது பெரும்பாலும் தரும சாஸ்திரப் பயிற்சியையே குறித்தது என்பதற்குச் சான்றுகள் உள்ளன


இக்கல்விச் சாலைகளில் பிராமணர்களே பயின்றனர்.இத்தரும சாஸ்திரங்கள் வருணாசிரம தரும முறையைக் கட்டிக் காத்தன.


இவ்விடத்தில் வருண அமைப்பு முறையை வேறொரு கோணத்தில் ஆராய்வது பொருத்தமாக இருக்கும்.இது தோன்றிய காலம் கி.பி. முதலாம் நூற்றாண்டு என ஏற்கெனவே குறிப்பிட்டோம். நிலவுடைமை நிலைநிறுத்தப் பட்ட காலத்தில் இவ்வருண அமைப்பு முறையே உற்பத்தி முறையாக மாறிற்று எனலாம். எனவேதான் இம்முறை மன்னர்களாலும் மேல்தட்டு வர்க்கத்தாராலும் போற்றி வளர்க்கப்பட்டது. தடையற்ற உற்பத்திக்கும் வருவாய்க்கும் இது வழி வகுத்தது. தரும சாஸ்திரங்கள் இறைவனால் படைக்கப் பட்டதென்றும் சாதி அமைப்பிற்கும் பிறப்புக்கும் தொடர்பு உண்டென்றும் போதிக்கப் பட்டது.கீழ்ச்சாதியில் பிறப்போர் எல்லாம் உழைக்கும் மக்களாயினர்,மேல்தட்டைச் சேர்ந்த சாதியினருக்குத் தொண்டும் ஊழியமும் செய்வதுமே அவர்களது பிறவியின் பயன் என்று கூறப்பட்டது.நடைமுறையில் அவர்கள் அடிமைகளாகவே ஆக்கப்பட்டனர்.அவர்களும் தம்மை அடிமைகள் என்றே கருதிக்கொண்டனர்.


இத்தகைய சூழ்நிலையில் ராமானுஜர் தோன்றினார். அம்மக்களுக்காக போராடினார்.அதனாலேயே நாடு கடத்தவும் பட்டார். அவரது கருத்துக்களில் இருந்த இரு அம்சங்களின் அடிப்படையில் இரு பிரிவுகளாக வடகலையில் தென்கலையும் தோன்றின.காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு வடகலையும் ,ஸ்ரீரங்கத்தை தலைநகராகக் கொண்டு தென்கலையும் வளர்ந்தன. வடகலை வருணாசிரம தரும முறையை வலியுறுத்தியது.இதற்கான காரணத்தை Patricia Y. Mumme கீழ்வருமாறு கூறுகிறார்.


’ஸ்ரீரங்கம் ஆச்சாரியர்கள் தமிழைப் பெரிதும் பயன்படுத்தியதற்கும் காஞ்சி ஆச்சாரியர்கள்வடமொழியைப் பயன்படுத்தியதற்கும் அவர்கள் தேர்ந்தெடுத்த மூலநூல்கள் மட்டும் காரணமல்ல,ஆழ்வார்களின் பாசுரங்களைத் தமது ப்ரசங்கங்களிலும் எழுத்துக்களிலும் ஸ்ரீரங்கம் ஆச்சாரியர்கள் ப்ரபலப் படுத்திக்கொண்டிருந்த போது ராமானுஜரின் விசிஷ்டாத்வைத தத்துவத்தைக் கட்டிக்காப்பதில் காஞ்சி ஆசாரியர்கள் ஈடுபட்டிருந்தனர்.இந்த வேறுபாட்டையும் எவ்வாறு இப்பிரிவுகள் தம்மை மேலும் மேலும் வளர்த்துக்கொண்டன என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றால் 12, 13 ஆவது நூற்றாண்டுகளில் காஞ்சியிலும் ஸ்ரீரங்கத்திலும் நிலவிய சமூக,வரலாறு மற்றும் சமயச் சூழ்நிலைகளை நாம் ஆராயவேண்டும்.


இன்று போலவே அன்றும் ரங்கநாதர் ஆலயமே ஸ்ரீரங்கத்தின் மையமாக இருந்தது .மத்திய காலத்தில். அவ்வாலயம் ( Burton Stein கூறுவது போல) பலமிக்க நிலவுரிமையாளர்களான பிராமணர் அல்லாத பக்தர்களின் வசம் இருந்தது.ஆழ்வார் பாசுரங்களைப் பாடுதல் எளிமையான பஞ்சராத்ர வழிபாடு,கோவில் வழிபாட்டில் சூத்திரர்களுக்குப் பங்கு ஆகியவற்ரை ரங்கநாதர் ஆலயத்தில் நிறுவியதன் மூலம் நாதமுனி,யமுனர், ராமானுஜர் ஆகியோர் ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்களுக்குத் தலைமைப் பொறுப்பையும் செல்வாக்கையும் உண்டாக்கினார்கள் என்று கூறப்படுகிறது. நாதமுனியின் சீடர்கள் அவர் சேகரித்து வைத்திருந்த நாலாயிர திவயப் ப்ரபந்தங்களுக்கு மெட்டமைத்துப் பாடியதன் மூலம் அவற்றிற்கு ஒரு செல்வாக்கை ஏற்படுத்தினார்கள். ஸ்ரீரங்கம் ஆலயத்தில்தான் முதன் முதலாக தினசரி வழிபாட்டில் ஆழ்வார்களின் பாசுரங்கள் சேர்க்கப்பட்டன. யமுனரும்,ராமானுஜரும் இந்த ஆலயத்தில் தினமும் நாலாயிர திவ்யப் ப்ரபந்தம் குறித்து பக்த கோடிகளிடையே ப்ரசங்கம் செய்தனராம்.
இன்றைக்கும் இந்த மரபு தொடர்கிறது.இப்ப்ரசங்கங்கள் வடமொழி சாஸ்திரங்களைக் கற்கும் தகுதியற்ற பெண்டிர்,குழந்தைகள்,சூத்திரர் ஆகியோரைக் கவர்ந்து இழுத்தது.


வைணவ சமுதாயத்தையும் ஒரு சேர பக்தியில் ஈடுபடுத்தும் விதமாக நாலாயிர திவ்யப் ப்ரபந்தங்களின் அழகையும் அதன் சமயக் கருத்துக்களையும் வெளிக் கொணர்வதே இத்தகைய ப்ரசங்கங்களின் நோக்கமாக இருந்தது.


காஞ்சீபுரம்,ஸ்ரீரங்கத்தைக் காட்டிலும் கலப்புக் கலாசாரம் உடையதாக மத்திய காலத்தில் இருந்தது,அது வாணிகம் ,கலாச்சாரம் ஆகியவற்றின் முக்கிய மையமாக இருந்ததோடு வடமொழியில் இருந்த எல்லாவிதமான தத்துவ தரிசனங்களைப் பயிலும் மையமாகவும் இருந்தது. காஞ்சியைச் சுற்றி முக்கியமான புத்த விஹாரங்களும்,சமணப்பள்ளிகளும் சைவ ,சமணக் கோவில்களும் வேதாதம் மீமாம்சை மற்றும் நியாயம் ஆகியவற்றைப் பயிற்றுவிக்கும் மடங்களும் இருந்தன.பெரும் எண்ணிக்கையிலான ஸ்மார்த்த பிராமணர்கள் அங்கே குடியிருந்தனர்.
மத்திய காலம் முழுவதும் காஞ்சியிலுள்ள கோவில்களும் சநாதன பிராமணக் குழுக்களும் அரசர்களிடமிருந்து கணிசமான உதவிகளையும் அரவணைப்பையும் பெற்று வந்தனர்.


(பார்க்க: K V ராமனின் ஸ்ரீ வரதராஜ ஸ்வாமி கோயில்---காஞ்சி --அதன் வரலாறு, கலை மற்றும் கட்டடக் கலை--புது டெல்லி) .......... இத்தகைய சூழ்நிலையில் காஞ்சியில் வாழ்ந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் பிற தத்துவவாதிகளான அத்வைதிகள்,பேத அபேத வேதாந்திகள்,போன்றோருடன் வாதிடவேண்டி இருந்தது.அவர்கள் வேதாந்தம்,தருமசாஸ்திரங்கள்,புத்தமத இந்து நியாயம், மீமாம்சை, யோகம் போன்றவற்றை அறிந்த அறிஞர்களோடு போராடவும் வேண்டியிருந்தது...’ என்று கூறுகிறார்.


காஞ்சி நகர் பல்லவராட்சியில் மிகச் சிறப்பு வாய்ந்ததாக விளங்கியது.அங்குள்ள கடிகைகளில் பிராமணர்கள் வடமொழி சாஸ்திர நூல்களைப் பயின்றனர்.அக்கடிகைகள் அரசர்களின் நேரடிப்ம் பார்வையில் அரவணைப்பில் இருந்தன என்றும் மயூர சன்மன் என்னும் அரசன் தனது குருவோடு இக்கடிகைக்கு வந்து வேத பாடங்களைக் கற்றதாக தலைகுண்டா கற்றூண் கல்வெட்டு (ஐந்தாம் நூற்றாண்டு)கூறுகிறது.எனவே காஞ்சி நகரம் வருணாசிரம தருமத்தைப் பரப்பியதில் நெடுங்காலமாகவே முன்னணி வகிக்கிறது எனப்தில் ஐயமில்லை.


தென்கலை வைணவம் தாமிரவருணி நதிக்கரையில் பிறந்து காவிரிக் கரையில் திருவரங்கக் கோயிலில் வளர்ந்தது.ரங்கநாதர் ஆலயம்மட்டுமன்றித் தென் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களிலும் அது வளர்ந்தது.அக்கோயில்கள் மன்னர்களின் அரவணைப்பில் வளரவில்லை.எனவேதான் வருணாசிரம தரும முறையையும் வடமொழி தரும சாஸ்திரங்களையும் அக் கோயில்கள் கட்டிக் காக்க முயலவில்லை எனக் கொள்வதில் தவறேதுமில்லை. தெளிவாகச் சொல்லவேண்டுமானால் தரும சாஸ்திரப் பயிற்சி பற்றிய ஒரு கல்வெட்டு கூட ஸ்ரீரங்கம் கோவில் கல்வெட்டுக்களில் காணப்படவில்லை என்பதே இதை உறுதிப்படுத்தும்..


தென்கலை வைணவம் தாழ்த்தப்பட்ட மக்களுடைய நிலையிலிருந்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தியதும். கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற கொள்கையைப் ப்ரகடனப் படுத்தியதும்,எளிமையான வழிபாட்டு முறைகளைக் கடைபிடித்ததும் ஆகிய காரனங்களால் வைணவத்தை ஒரு வெகுஜன மதமாக மாற்ற உதவியது.


இது குறித்து K.V ராமன் பின்வருமாறு கூறுகிறார், ‘ஒரு பிரிவைச் சேர்ந்த ஆச்சாரியர்கள் சம்ஸ்கிருத நூல்களின் அடிப்படையில் ஸ்ரீபாஷ்யத்தைப் பயில்வதையும்,விளக்குவதையும் முக்கியமாகக் கருதினார்கள்.மற்ற பிரிவினர் நம்மாழ்வார் மற்றும்பிற ஆழ்வார்கள் ஆகியோரின் பாசுரங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தனர்.முதல் பிரிவு ஆச்சாரியர்கள் வேதம் மற்றும் புராண நூல்களில் சிறந்த பயிற்சியும் அவற்றை விளக்குவதில் வல்லவர்கள் என்று எல்லோராலும் மதிக்கப்பட்டவர்கள்.அவர்கள் சந்தேகமில்லாமல் சிறந்த அறிஞர்கள்,ஒழுக்க சீலர்கள்.


ஆனால் சாஸ்திரங்களின் அடிப்படையில் தினசரி இயற்றவேண்டிய ஜபம்,ஹோமம் போன்றவற்றை அளவுக்கு அதிகமாக வற்புறுத்தியதாலும் வடமொழி நூல்களுக்கு அவர்கள் அளித்த முக்கியத்துவமும்,தவிர்க்க இயலாதபடி அவர்களைத் தனிமைப் படுத்தியது.இதற்கு மாறாக ,தென்கலை அல்லது ப்ரபந்தப் பிரிவினர் குறைந்த சடங்குகள், நிறைந்த பக்தி ,மற்றும் ஜனரஞ்சகமான சமய வழிமுறைகளைக் கைக்கொண்டனர்.ஆழ்வார்களுக்கும் அவர்களது பாசுரங்களுக்கும் அவர்கள் அளித்த சிறப்பான இடம் அவர்களைப் பரந்துபட்ட பிராமணரல்லாத சமூகத்தாரோடு நெருக்கமாக்கியது.


செங்கல்பட்டு மாவட்ட கெஜட்டில் (1879)’வைணவ மதத்திலுள்ள சூத்திரர்கள் பெரும்பாலும், தென்கலையைச் சேர்ந்தவர்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது .( இந்திய மக்களின் வரலாறும் பண்பாடும்”என்ற நூலையும் பார்க்கவும்--பாரதீய வித்யாபவன் வெளியீடு P 558)........பேரா .P.N சீனிவாசாசார்யா ., ஸ்ரீ வைஷ்ணவத்திற்குத் தென்கலை வைணவம் செய்த மகத்தான சாதனை என்னவென்றால்,அதுகாறும் மேல் சாதியினருக்குச் சொந்தமாக இருந்த தத்துவ தரிசன உண்மைகளை எல்லா மக்களையும் சேர்ந்ததாக ஜனநாயகப் படுத்தியதேயாகும்’ என்று கூறுகிறார்... அத்தோடுமட்டுமன்றி,ப்ரபந்தப் பிரிவினர் நித்ய கருமங்களான ஹோமம்,ஜபம் போன்றவற்றைக் காட்டிலும் கைங்கர்யத்துக்கு அதாவது அர்ச்சாவதாரமான இறைவனை வழிபடுவதும் தொண்டு செய்வதற்கும் ஆகியவற்றிற்கும் ப்ரதான இடம் கொடுத்தனர்.இதனால் இது ஆலயங்களையும் அவற்றின் சேவைகளையும் நோக்கி அவர்களை இட்டுச்சென்றது......... இதனால் பெரும்பாலான விஷ்ணு ஆலயங்கள் விரைவிலேயே அவர்களது கட்டுப்பாட்டுக்குக் கீழ்வந்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை’ என்று K.V . ராமன் கூறுகிறார்.


தென்கலை,வைணவப் ப்ரசாரம் வேறொரு நிலைக்கும் இட்டுச்சென்றது.பேச்சளவில் சாதிவேறுபாட்டை எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் செயலிலும் அது சாதி வேறுபாட்டைக் களைய தன் வழியில் முயன்றது.தாழ்த்தப்பட்ட சாதியினராகக் கருதப்பட்ட ஹரிஜனங்கள், ’நாடார்கள் போன்றோரை மேல் சாதியினராகவும் பிராமணராகவும் அது உயர்த்தியது.


மணவாள மாமுனிகள் காலத்தில் இத்தகைய சமூகப் பெயர்வுகள் பெருமளவில் நிகழ்ந்தன. இது ஒரு விதத்தில் சமூக மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தது எனலாம். தென்னிந்தியாவில் நிகழ்ந்த சமூகப் பெயர்வுகளில் இது மகத்தானது என்று பர்டன் ஸ்டெயின் இதைப் பாராட்டுகிறார்.


முடிவுரை


ராமானுஜர் ஆழ்வார்களின் பாசுரங்களிலிருந்து தமது விசிஷ்டாத்வைத தத்துவத்தை உருவாக்கிக் கொண்டார். தலைசிறந்த தத்துவ ஞானி மட்டுமன்றி ஆழ்ந்த மனிதாபிமானியாகவும் அவர் திகழ்ந்தார், தத்துவ ஞானி என்ற வகையில் வடமொழி சாஸ்திரங்களை குறிப்பாக தரும சாஸ்திரங்களை அவர் பயன்படுத்த வேண்டியதாயிற்று. அதே போதில் மனிதாபிமானி என்ற வகையில் சாதி ஏற்றத் தாழ்வுகளை அவர் எதிர்த்தார்.


அவரது காலத்திற்குப் பின்னால் வைணவத்தில் இரு பிரிவுகள் தோன்றின.வடகலை அல்லது சாஸ்திரமார்க்கத்தார் என்றும் தென்கலை அல்லது ப்ரப்ந்த மார்க்கத்தார் என்று மற்றொன்றும் ஆக இரு பிரிவுகள் தோன்றி வளர்ந்தன.


சாதீய ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்தும் வருணாசிரம நூல்களுக்கு வடகலையாரும் அவற்றை எதிர்க்கும் வகையில் தென்கலையாரும் ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு முக்கியத்துவம் தந்தனர். வடகலையார் ராமானுஜரின் தத்துவத்தை தரும சாஸ்திரங்களின் அடிப்படையில் விளக்கினர்.தென்கலையார் சாதிக்கு ஒரு நீதி போதிக்கும் தரும சாஸ்திரங்களை எதிர்த்தனர். ‘கடையேனுக்கும் கடைத்தேற்றம் என்ற கொள்கையைத் தென்கலையார் கடைப்பிடித்தனர்.


தரும சாஸ்திரங்களில் வற்புறுத்தப்படும் வருணாசிரம அமைப்பு முறை பண்டைக் காலம் தொடங்கி மத்திம காலம் ,ஏன் இன்றும் கூட தொடரும் உற்பத்தி முறையே எனில் தவறில்லை.ஆனால் இத்தரும சஸ்திரங்கள் இம்முறையைக் கட்டிக் காப்பதற்காக ஏற்படுத்திய சாதி முறையும்----அதாவது தொழிலைப் பிறப்போடு தொடர்பு படுத்தி,சாதிகளிடையே ஏற்றத்தாழ்வுகள் கற்பித்ததும்,சாதிக்கொரு நீதியை நிர்ணயித்ததும் அருவெறுக்கத் தக்கது ஆகும். இது இந்தியப் பண்பாட்டுக்கே உரியது என்பதும் விந்தைக்குரியதாகும். அத்தோடு மட்டுமன்றி இத்தகைய ஏற்றத் தாழ்வுகளை சமய அடிப்படையோடு இணைத்தது,அதற்கு இறை அங்கீகாரம் வழங்கியது,இந்நாட்டிற்கே உரிய சாபத்தீடு ஆகும்.


இத்தரும சாஸ்திரங்கள் சமூதாய அமைப்பு முறையையும் ஏற்றத் தாழ்வுகளையும் தோற்றிவித்தன.பின்னாளில் நிலவுடைமை அமைப்பு வேரூன்றியதும் மன்னர்கள் இவ்வருண முறையைக் கட்டிக்காக்க முற்பட்டனர்.பிராமணர்களும் மன்னர்களும் இன்ன பிறரும் மேல் தட்டு வர்க்கத்தாராக விளங்கியபோது உழைப்பில் ஈடுபட்டோர் சூத்திரர் என்றழைக்கப்பட்டனர்.


இத்தகைய சாதீயக் கொடுமையை எதிர்த்துப்ம் பல்வேறு கட்டங்களில் குரல்கள் எழுந்தன். அவற்றில் உன்னதமான குரல் ராமானுஜருடையது.ராமானுஜரைப் பின்பற்றிய தென்கலையார் அவர்களது இக்கொள்கையை மேலும் முன்னெடுத்துச் சென்று அதற்கு ஒரு தத்துவரீதியான அடிப்படையை அமைத்துக் கொடுத்தனர்.


வடகலையார் மேல்தட்டு வர்க்கத்தாருக்கேயுரிய வருண தரும முறையை வலியுறுத்தினார்கள்.தரும சாஸ்திரம் பயிற்சி,வடமொழிக் கல்வி ஆகியவை பிராமணர்களுக்கே இயல்பாக உரியதாக இருந்தது.உழைக்கும் மக்களுக்கு அவை எட்டாக் கனிகள்.அத்தோடு மட்டுமின்றி அவர்களது நலனுக்கும் அது எதிரானது.அடிமைகளாக வாழ்ந்த அம்மக்களிடம் ‘நீங்கள் இறைவனுக்கே அடிமை’ அதாவது சேஷிக்கு மட்டுமே நீங்கள் சேஷர்கள்’ என்று கூறி அவர்களை ஓரணியில் திரட்டிய பெருமை தென்கலையாருக்கு உண்டு.


இரு கூறாகப் பிரிந்திருந்த சமூகத்தில் மேல் வர்க்கத்தாருக்கும் உழைக்கும் வர்க்கத்தாருக்கும் இடையே வர்க்க முரண்பாடு இருத்தல் இயல்பே.சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் தென்கலை வைணவத்தார் இவ்வருணாசிரம தருமத்தை எதிர்த்ததானது இவ்வர்க்க முரண்பாட்டின் சமய ரீதியான வெளிப்பாடு என்று கூறலாம்.தவறில்லை.


ஆனால் மணவாள மாமுனிகள் காலத்துக்குப் பின்னால் இவ்விரு பிரிவினரிடையேயான வேறுபாடுகள் சித்தாந்த மட்டத்தைத் தாண்டி அன்றாட வாழக்கையில்; அனுஷ்டிக்க வேண்டிய நடைமுறை வேறுபாடுகளை வலியுறுத்துவனவாக மாறின.உதாரணமாக நாமங்களில் வேறுபாடுகள்,அவை தொடர்பான வழக்குகள் போன்றவற்றில் சிக்குண்டன. அவைகுறித்து நாம் இங்கே ஆராயவில்லை.


அதே போன்று சாதி அமைப்பில் ஏற்பட்ட,மேல் நோக்கிய பெயர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் முற்றிலும் நின்று,மீண்டும் பிராமணர் மேலாதிக்கமே வைணவத்திலும் நிலைபெற்றது.இதன் காரணத்தை மேலும் ஆராய்வதும் அவசியமாகும்.


மேற்கோள்களும் சான்றுகளும்


1. Patricia Y Mumme---- The SriVaishnava Theological Dispute--- New Era publications Madras.


2. N .Jagadeesan Hostory Of Sri Vaishnauism in the Tamil Country--- Post Ramanuja P. 181


3. வாசிஷ்ட தரும சூத்திரம் VI.24 மேற்கோள் R.S சர்மா Sudras in Ancient times P 154.
4. அதே புத்தகம் p 305
5. ஆசாரிய ஹ்ருதயம் P. B. அண்ணங்கராசாரியார் -பதிப்பு -1972.காஞ்சீபுரம்.
6.. S Gurumoorthy Education In South India (Ancient and Medievai Pviods)
7. Patricia Y. Mumme The Srinivaishnava Theological Dispute P. 7
8. K. V . Raman SriVaradharaga Swami Temple Kanchi Art and Architecturc New Delhi P .75

--Ksubashini 15:49, 6 மே 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 6 மே 2011, 15:50 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 6,869 முறைகள் அணுகப்பட்டது.