தீபாவளிப்பலகாரங்கள்- இனிப்பு வகைகள்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

உக்காரை: இதைக் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, போன்றவற்றில் செய்யலாம். இரண்டையும் கலந்தும் செய்யலாம். இருவிதமான செய்முறைகளும் உள்ளன.

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு ஒரு கிண்ணம், கடலைப்பருப்பு ஒரு கிண்ணம், பாகு வெல்லம் அரை கிலோ, தேங்காய் நன்கு முற்றியது ஒன்று. உடைத்துக் கீறிக்கொள்ளவும், முந்திரிப்பருப்பு ஐம்பது கிராம், ஏலப்பொடி, நெய் ஐம்பது முதல் நூறு கிராம். ஒரு சிட்டிகை உப்பு.

 

பாசிப்பருப்பு, கடலைப்பருப்பை வெறும் வாணலில் வறுத்துக்கொண்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் மிக்சியில் போட்டு ஒரு சிட்டிகை உப்புச் சேர்த்து அரைக்கவும். ஒரு வாணலியில் நெய்யில் பாதி அளவு ஊற்றிக்கொண்டு அரைத்த மாவைப் போட்டு நன்கு வேகும்வரை கிளறவும். நன்கு மூடி வைத்துக்கிளறினால் நன்கு வெந்து கொள்வதோடு உதிர் உதிராகவும் வரும். நன்கு உதிராக வந்ததும் அதை எடுத்து ஒரு தாம்பாளத்தில் கொட்டிக் கொள்ளவும்.

 

இது ஒரு முறை எனில் இன்னொரு முறையில் அரைத்த மாவை இட்லித்தட்டில் போட்டு வேக வைத்து நன்கு உதிர்த்துக்கொள்ள வேண்டும். ரொம்பவே ஆசாரம் பார்ப்பவர்கள் இட்லித்தட்டில் வேக வைத்தால் சாப்பிடுவது இல்லை என்பதால் முதலில் சொன்னமாதிரி நெய் விட்டும் உதிர்க்கலாம். அவரவர் விருப்பம்போல் மாவை உதிர்த்துக்கொண்டதும், உருளி அல்லது கடாயில் வெல்லத்தைக் கரைத்து அழுக்கு நீக்கி விட்டுக் கொதிக்க விடவும். பாகு நல்ல முற்றிய பதமாக உருட்டினால் உருட்ட வரவேண்டும். தட்டில் போட்டால் "டங்" என்று சப்தம் வரவேண்டும். அந்தப் பதத்தில் வந்ததும் தாம்பாளத்தில் கொட்டி இருக்கும் மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கலக்கவும். மாவோடு பாகு நன்கு கலந்ததும், மிச்சம் உள்ள நெய்யை ஊற்றி அதில் முந்திரிப்பருப்பு, தேங்காய்க் கீறல்களைப் போட்டு வறுத்துச் சேர்க்கவும். ஏலப்பொடி சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். முதல் நாளை விட மறுநாள் மென்மை அதிகரித்து இனிப்பு நன்கு கலந்து சுவையாக இருக்கும். இது பெரும்பாலான தென்மாவட்டங்களின் மக்கள் தீபாவளிக்குக் கட்டாயமாய்ச் செய்யும் இனிப்புப் பலகாரங்களில் முதன்மையானது.

 

 

பூந்தி லட்டு:

தேவையான பொருட்கள்

 

: 2 கிண்ணம் கடலைமாவு, 1/2 கிலோ சர்க்கரை, ஏலக்காய், 50 கிமுந்திரிப்பருப்பு, 50கிகிஸ்மிஸ் எனப்படும் காய்ந்த திராக்ஷை, 5 கி கிராம்பு, ஒரு டேபிள் ஸ்பூன் சாரப்பருப்பு விருப்பமிருந்தால். வறுக்க ஒரு டேபிள் ஸ்பூன் நெய் பொரிக்க சமையல் எண்ணெய். ஒரு சிட்டிகை உப்பு, கரைக்க நீர் தேவையான அளவு.

 

கடலைமாவை எடுத்துச் சலித்துக்கொண்டு ஒரு சிட்டிகை உப்பைச் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு நீர் விட்டுக் கரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயைச் சூடு செய்யவும். எண்ணெய் காய்ந்ததும், பூந்திக்கரண்டியை எண்ணெய்க்கு நேரே நீட்டியவண்ணம் இன்னொரு கையால் ஒரு கரண்டி கரைத்த மாவை அதில் விட்டுத் தேய்க்கவும். நிதானமாய்த் தேய்க்கவேண்டும். உருண்டையான முத்துக்கள் எண்ணெயில் விழும். ரொம்பக்கரகரப்பாக வேக விடாமல் முக்கால் பதம் வெந்ததும் எடுத்துத் தட்டில் போட்டு எண்ணெயை வடிக்கவேண்டும். இப்படியே மொத்த மாவையும் பூந்தியாகத தேய்க்கவும். பின்னர் வேறொரு உருளி அல்லது கடாயில் அரைகிலோ சர்க்கரையைப் போட்டுச் சர்க்கரை முழுகும் வரை நீர் ஊற்றிக் கொண்டு கொதிக்க விடவும். சர்க்கரையில் அழுக்கு இருந்தால் ஒரு கரண்டி பாலை விட்டால் அழுக்கு மேலே மிதந்து வரும். அதை எடுத்துவிடவும். பின்னர் சர்க்கரைப் பாகு இரட்டைக் கம்பிப் பதம் வரும்வரை கொதிக்கவிடவும். கெட்டிப் பாகு வந்ததும், கீழே இறக்கவும். பொரித்த பூந்திகளை அதில் போட்டு நன்கு கிளறவும். நெய்யில் முந்திரிப்பருப்பு, காய்ந்த திராக்ஷை, போட்டுப் பொரித்துச் சேர்க்கவும். கிராம்பையும் சாரப்பருப்பையும் அப்படியே சேர்க்கலாம் ஏலப்பொடி சேர்க்கவும் சற்று நேரம் ஊறவிட வேண்டும். ஊறியதும் உருண்டைகளாகப் பிடிக்க வேண்டும்.


ரவாலாடு;

தேவையான பொருட்கள்:

 

ரவை கால் கிலோ, சர்க்கரை அரை கிலோ, முந்திரிப்பருப்பு 25 கிராம். திராக்ஷை 25 கிராம். ஏலக்காய் தூள் செய்தது கால் டீஸ்பூன். நெய் கால் கிலோ.

 

ரவையை நன்கு வறுத்து மெஷினில் கொடுத்து மாவாக்கவும். சர்க்கரையையும் மெஷினில் பொடி செய்து கொள்ளலாம். அல்லது வீட்டிலேயே மிக்சியில் பொடித்துக்கொள்ளலாம். ரவைப் பொடியையும் சர்க்கரைப் பொடியையும் நன்கு கலந்து கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்துக் கொஞ்சமாக நெய்யை ஊற்றி முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் போன்றவற்றை வறுத்துச் சேர்க்கவும். ஏலப்பொடியையும் சேர்க்கவும். மீதம் உள்ள நெய்யைக் கடாயில் ஊற்றி நன்கு ஆவி வரும்வரை கொதிக்க விடவும். கொதிக்கும் நிலையிலேயே ரவை+சர்க்கரை கலவையில் கொட்டி நன்கு சேர்த்துக் கிளறவும். அரை மணி நேரம் ஆற வைத்துவிட்டு உருண்டைகள் பிடிக்கவும்.


பயத்தம் லாடு:  

தேவையான பொருட்கள்:

 

பயத்தம்பருப்பு கால் கிலோ, சர்க்கரை 300 கிராம், முந்திரி, திராக்ஷை தலா 25 கிராம், ஏலப்பொடி, நெய் கால்கிலோ,

 

பயத்தம்பருப்பைச் சுத்தம் செய்து வெறும் வாணலியில் வறுக்கவும். பின்பு மெஷினில் கொடுத்து மாவாக்கவும். சர்க்கரையையும் பொடிக்கவும். இரண்டையும் ஒன்றாய்க் கலக்கவும். கொஞ்சமாக நெய்யை வாணலியில் ஊற்றிக் காய வைத்து முந்திரிப்பருப்பு, திராக்ஷை வறுத்துப் போட்டுக் கொண்டு, ஏலப்பொடியைச் சேர்க்கவும். மீதம் உள்ள நெய்யைக் காய வைத்து ரவாலாடுக்குச் செய்த மாதிரியே இந்தக் கலவையிலும் கொட்டிக் கிளறவும். அரை மணி நேரம் கழித்து உருண்டைகள் பிடிக்கவும். 

 

  அதிரசம்:

பெரும்பாலான வீடுகளில் தீபாவளிக்குக்கட்டாயமாய்ச் செய்யப்படும். சிலர் பாகு வைத்துக்கொண்டு அப்பமாயும் செய்வார்கள். இங்கே இரண்டையுமே பார்க்கலாம்.


அதிரசம் செய்யத் தேவையான பொருட்கள்:


அரிசி மாவு, இரண்டு கிண்ணம், வறுத்த உளுத்த மாவு கால் கிண்ணம், எள் விருப்பப்பட்டால், சிட்டிகை உப்பு, வெண்ணெய் ஐம்பது கிராம், ஏலப்பொடி, பிசையக் கொஞ்சம் போல் நீர். , பாகு வெல்லம் அரை கிலோ, பொரிக்க எண்ணெய் அல்லது நெய்.


அடுப்பில் உருளி அல்லது கடாயை வைத்துக்கொண்டு பாகுவெல்லத்தைத் தூளாக்கி நீரில் கரைத்துச் சுத்தம் செய்து கொண்டு கொதிக்க விடவும். பாகு ரொம்ப முற்றக் கூடாது. பாகை கொஞ்சம் கையில் எடுத்துப் பார்த்தால் கையால் உருட்டும் பதம் வரவேண்டும். அப்போது பாகைக்கொஞ்சம் கொஞ்சமாய் அரிசி மாவில் ஊற்றிக் கலக்கவும். ஏலப்பொடி கலந்து வைக்கவும். இதைக் கூடியவரை என்று அதிரசம் செய்கிறோமோ அதற்கு ஒரு நாள் முன்னர் பாகை மாவில் கலந்து ஊற வைத்தால் அதிரசம் மிருதுத் தன்மை கூடும். மறுநாள் பாகில் கலந்திருக்கும் மாவை எடுத்து உளுத்தமாவு, எள் போன்றவற்றைச் சேர்த்து கொஞ்சம் வெண்ணெயும் போட்டு நன்கு பிசையவும். மாவு கட்டியில்லாமல் பிசையவேண்டும். தளர இருக்கக் கூடாது. கல் போல் கெட்டியாகவும் இருக்கக் கூடாது.


வாணலியில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றிக்கொண்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். எண்ணெய் புகை வரும் அளவு காய்ந்ததும் அடுப்பைத் தணித்துக்கொண்டு, அதிரசமாவைச் சின்னச் சின்ன உருண்டைகளாகி அதை ஒரு இலை அல்லது ப்ளாஸ்டிக் பேப்பரில் வட்டமாய்த் தட்டிக் கொண்டு எண்ணெயில் போடவும். எண்ணெய் கொண்ட மட்டும் போட்டால் அதிரசங்கள் உடைந்துவிடும். உதிர்ந்து மாவும் எண்ணெயும் ஒன்றாகும். ஆகவே கூடியவரையில் இரண்டிரண்டாகப் போட்டுப் பொரித்து எடுக்கவும். அதிகப்படி எண்ணெயை ஒரு இலையை அதிரசத்தின் மேல் வைத்துக் கரண்டியால் அமுக்கினால் வெளியே வந்துவிடும். பின்னர் வடிதட்டில் போட்டுவிட்டு ஆறியதும் ஒரு டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாது.


இனி அப்பம் பாகு செலுத்திச் செய்யும் வகை: முதலில் சொன்னது போலவே இதற்கும் அரிசிமாவில் வெல்லப்பாகு காய்ச்சிச் சேர்த்து முதல்நாளே ஊற வைக்கவும்.

தேவையான பொருட்கள்:


அரைக்கிண்ணம் கோதுமை மாவு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தமாவு, தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், கனிந்த வாழைப்பழம் இரண்டு. ஏலப்பொடியைப் பாகோடு சேர்த்து மாவில் கலக்கவும்.

பாகு கலந்த மாவில் உளுத்தமாவு, கோதுமைமாவு, கனிந்த வாழைப்பழங்கள், தேங்காய்த்துருவல் போன்றவற்றைச் சேர்த்துக்கொண்டு நன்கு பிசையவும். இது கொஞ்சம் தளர இருக்க வேண்டும். தளர இல்லை எனில் கொஞ்சம் போல் நீர் சேர்க்கலாம். பின்னர் அப்பக்காரை எனப்படும் நான்கு குழி, ஐந்து குழி உள்ள பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றிக் காயவிடவும். காய்ந்ததும், மாவில் ஒரு சின்னக்கரண்டி எல்லாக் குழிகளிலும் விடவும். நன்கு வெந்ததும், அதுவாகவே திரும்பும். இல்லை எனில் நாம் திருப்பி விடலாம் இரண்டு பக்கமும் வெந்ததும் ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.

 



--Geetha Sambasivam 20:28, 23 அக்டோபர் 2011 (UTC)<span id="fck_dom_range_temp_1319401709562_295" />

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 24 அக்டோபர் 2011, 16:55 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,899 முறைகள் அணுகப்பட்டது.