ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில் - திருச்சி.

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 


* அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில் - திருச்சி.


                                                                                                
T 500 299.jpg


மூலவர் : ஞீலிவனேஸ்வரர்
அம்மன்/தாயார் : விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி
தல விருட்சம் : கல்வாழை
தீர்த்தம் : 7 தீர்த்தங்கள்
ஆகமம்/பூஜை : காமீகம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : வாழைவனநாதர், சுவேத கிரி, லாலிகெடி
ஊர் : திருப்பைஞ்ஞீலி
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

சம்பந்தர், சுந்தரர், அப்பர்

தேவாரப்பதிகம்

தூயவன் தூயவெண் நீறு மேனிமேல் பாயவன் பாயபைஞ் ஞீலி கோயிலா மேயவன் வேய்புரை தோளி பாகமா ஏயவன் எனைச் செயுந் தன்மை என்கொலோ.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 61வது தலம்.

தல சிறப்பு:

பங்குனி, புரட்டாசி மாதங்களில் மூன்று நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளிக்கதிர் விழுகிறது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இரட்டை அம்பாள் தலம்

இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் பத்ர விமானம் எனப்படும். இத்தல விநாயகர் வசந்த விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

ஐந்து பிரகாரங்களுடன் உள்ள இக்கோயிலில் விசாலாட்சி, எமன், கல்யாண, அக்னி, தேவ, அப்பர், மணியங்கருணை என மொத்தம் ஏழு தீர்த்தங்கள் இருக்கிறது.

பிரகாரத்தில் உள்ள விநாயகர் சிவன் மற்றும் செந்தாமரைக் கண்ணன் எனும் பெருமாளுடன் சேர்ந்தபடி இருப்பதும், தெட்சிணாமூர்த்தியின் கீழ் நந்தி இருப்பதும் வித்தியாசமானதாகும். கொடிமரத்திற்கு அருகில் சுயம்பு நந்தி இருக்கிறது.

தலபெருமை:

தல விருட்சம்: இங்கு வாழை மரமே தலவிருட்சம். திருமண தோஷம் உள்ளவர்கள் வாழை மரத்திற்கு தாலி கட்டி பரிகார பூஜைகள் செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

தர்மராஜா சன்னதி: திருக்கடையூரில் எமனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் சிவன். இதனால், உலகில் இறப்பு என்பதே இல்லாமல் உயிர்கள் அனைத்தும் நீண்ட ஆயுளுடன் இருந்தது. பாரம் தாங்காத பூமாதேவி சிவனிடம் முறையிட்டாள்.

ஒரு தைப்பூச தினத்தன்று சிவன், இத்தலத்தில் எமனை தன் பாதத்தின் அடியில் குழந்தையாக எழும்படி செய்தார். தர்மம் தவறாமல் நடக்கும்படி அறிவுறுத்தி அவருக்கு மீண்டும் பணி கொடுத்தார்.

இதன் அடிப்படையில் இங்கு பிரகாரத்தில் எமனுக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இச்சன்னதியில் சிவன் அம்பாள் மற்றும் முருகனுடன் சோமாஸ்கந்தராக இருக்க, சுவாமியின் பாதத்தின் கீழ் குழந்தை வடிவில் எமன் இருக்கிறார்.

இச்சன்னதி குடவறையாக அமைந்திருப்பது சிறப்பு. இங்கு அறுபதாம் கல்யாணமும், ஆயுள் விருத்தி ஹோமமும் அதிகளவில் நடத்துகின்றனர்.

எமன் சனிக்கு அதிபதி என்பதால் இங்கு நவக்கிரகங்கள் இல்லை. நந்திக்கு முன்புறம் உள்ள தீபங்களையே கிரகங்களாக எண்ணி வணங்குகின்றனர்.

கோயில் ராஜகோபுரத்தை "ராவணன் வாயில்' என்கின்றனர். இக்கோபுரத்திற்கு கீழே சுவாமி சன்னதிக்கு செல்ல ஒன்பது படிக்கட்டுகள் இருக்கிறது. இந்த படிகள் ராவணனிடம் அடிமையாக இருந்த நவக்கிரகங்களை குறிப்பதாக சொல்கிறார்கள்.

இறைவனின் திருவிளையாடல்: திருத்தலயாத்திரை சென்ற திருநாவுக்கரசர் ஞீலிவனநாதரை தரிசிக்க வந்து கொண்டிருந்தார். வழியில் அவர் பசியால் களைப்படைந்து ஓரிடத்தில் நின்றார். அப்போது, அர்ச்சகர் ஒருவர் அவர் முன் சென்று, சோறு (அன்னம்) கொடுத்து அவரது பசியை போக்கினார். பின் நாவுக்கரசர் அவரிடம் திருப்பைஞ்ஞீலி தலம் எங்கிருக்கிறது? எனக் கேட்டார்.

தான் வழிகாட்டுவதாகச் கூறிய அர்ச்சகர் அவரை இங்கு அழைத்து வந்தார். வழியில் அவர் திடீரென மறைந்துவிடவே கலங்கிய நாவுக்கரசர் சிவனை வேண்டினார். சிவன் அவருக்கு காட்சி தந்து தானே அர்ச்சகராக வந்ததை உணர்த்தினார். அவரது வேண்டுதலுக்காக லிங்கமாக எழுந்தருளினார்.

இவர் "சோற்றுடைய ஈஸ்வரர்' என்ற பெயரில் கோயிலின் முன்புறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். சித்திரை மாதம், அவிட்டம் நட்சத்திரத்தில் இச்சன்னதியில் சோறு படைத்த விழா நடக்கிறது.

ஓவிய நடராஜர்: வசிஷ்ட முனிவர் சிதம்பரம் நடராஜரை தினமும் அர்த்தஜாம நேரத்தில் தரிசனம் செய்யும் வழக்கம் உடையவர்.

ஒருசமயம் அவர் இத்தலத்திற்கு வந்தபோது இரவில் இங்கேயே தங்கிவிட்டார். அவர் நடராஜரிடம் தனக்கு நடனக்காட்சி தரும்படி வேண்ட சுவாமி இங்கே நடனக்காட்சி தந்தருளினார்.

இதனை உணர்த்தும் விதமாக சுவாமி சன்னதிக்கு முன்புறம் நடராஜர் சித்திர வடிவில் வரையப்பட்டு இருக்கிறார். எதிரே வசிஷ்டர் ஓவியமும் இருக்கிறது. இத்தலத்திற்கு மேலச்சிதம்பரம் என்ற பெயரும் உள்ளது.

தல வரலாறு:

பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னிகளும் தங்களது திருமணத்திற்கு முன்பு இத்தலம் வந்து அம்பாளின் தரிசனம் வேண்டி தவம் செய்தனர்.

அவர்களுக்கு அம்பாள் காட்சி தந்து, தகுந்த காலத்தில் நல்ல வரன்கள் அமையப்பெற்று சிறப்புடன் வாழும்படி வரம் தந்தாள். சப்தகன்னிகள் அம்பாளை இங்கே எழுந்தருளும்படி வேண்டினர். எனவே அம்பாள் இங்க எழுந்தருளினாள்.

அவள் சப்த கன்னிகளிடம்,""நீங்கள் வாழை மரத்தின் வடிவில் இருந்து நீண்டகாலத்திற்கு என் தரிசனம் காண்பீர்கள்,என்றாள். அதன்படி சப்த கன்னிகள் வாழை மரங்களாக மாறி இங்கேயே தங்கினர்.

பிற்காலத்தில் வாழை வனத்தின் மத்தியில் அம்பாள் இருந்த இடத்தில் சிவனும் சுயம்புவாக லிங்க வடிவில் எழுந்தருளினார்.

திருவிழா:

சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், அப்பர் குரு பூஜை, தைப்பூசத்தில் எமனுக்கு சிறப்பு பூஜை.

திறக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.





பவள சங்கரி திருநாவுக்கரசு

தேதி - 07/04/2011

நன்றி - தின மலர்

பங்களிப்பாளர்கள்

Ksubashini மற்றும் Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 10 மே 2011, 14:56 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,093 முறைகள் அணுகப்பட்டது.