சோழ நாகராஜன்
படங்கள் - லெனின்
நன்றி:- தினமணி கதிர்
தமிழ்நாட்டில் நடக்கும் பல திருமண விழாக்களில் இப்போது பிரபலமாகி வருகிறது ஒரு புது இசை.அது செண்டா மேளம்!
"என்ன இது புதுசா இருக்கே?" பெரிசுகள் முகஞ்சுளிக்க, அந்தப் புதிய இசைவெள்ளத்தில் இளைஞர்கள் அடித்துச் செல்லப்படுகிற காட்சியை மதுரையில் நடக்கும் திருமணங்களில் நீங்கள் பார்க்க முடியும்.
ஆம். கேரளத்தின் பாரம்பரிய இசைகளில் தனித்துவமான செண்டா மேளம்தான் இப்போது தமிழ்நாட்டுத் திருமணங்களில் புகுந்து கலக்கிக் கொண்டிருக்கிறது.
இந்த இசை கேரளத்தின் ஆலயங்களில் ஆரவாரமாக ஒலித்துக் கொண்டிருந்த ஒன்று.
இப்போது தமிழ்நாட்டின் பல பகுதிகளில் களை கட்டியிருக்கிறது.
மதுரையில் நடந்த ஒரு திருமண விழாவில் செண்டா மேளம் இசை நிகழ்ச்சியை நடத்த வந்திருந்த அந்தக் குழுவின் தலைவர் உதயகுமாரிடம் பேசினோம்.
மதுரையில் நடக்கும் திருண விழாக்களில் செண்டா மேளம் வாசிக்கும் பழக்கம் எப்படி வந்தது?
மதுரையில் மட்டுமில்லை.
தமிழ்நாட்டில் பல இடங்களில் செண்டா மேளம் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.
பொள்ளாச்சி
திருச்சி
ஆகிய ஊர்களில் நிறைய வாய்ப்புகள் வருகின்றன.
திண்டுக்கல்லில் நடைபெறும் திருமணங்களில் மிக அதிகமாக எங்களுடைய செண்டா மேளத்தைப் பயன்படுத்துகிறார்கள். அங்கே மேடைக் கச்சேரி வாய்ப்புகளும் நிறையக் கிடைக்கின்றன.
முன்பெல்லாம் தமிழகக் கோயில்களில் நடக்கும் கும்பாபிஷேகம் போன்ற விழாக்களில் தான் எங்களை வாசிக்க அழைப்பார்கள். இப்போது கொஞ்சம் வசதி படைத்தவர்கள், முக்கியப் பிரமுகர்களின் இல்லத் திருமணங்களில் செண்டா மேளம் வாசிக்க அழைக்கிறார்கள். நாங்கள் 2003 ஆம் ஆண்டிலிருந்து செண்டா மேளம் வாசிக்கத் தமிழ்நாட்டிற்கு வருகிறோம். முதலில் எல்லாம் கோயில்களில் வாசிக்கவே வந்தோம். இப்போது அதிகமாகத் திருமண விழாக்களில் வாசிக்க வருகிறோம்.
நாங்கள் மட்டுமில்லை, கேரளாவில் உள்ள பல செண்டா மேளக் குழுக்களுக்கும் நிறைய வாய்ப்புகள் வருகின்றன. இதனால் கேரளத்திலுள்ள பல செண்டா மேளக் குழுவினர் தமிழ்நாட்டில் அலுவலகமே திறந்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இன்னும் சொல்லப் போனால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல,
- மகாராஷ்டிரா
- குஜராத்
- ஆந்திரா
போன்ற மாநிலங்களிலும் எங்களை அழைக்கிறார்கள்.
எவ்வளவு காலமாக இந்த செண்டா மேளம் இசையை வாசித்து வருகிறீர்கள்?<span id="fck_dom_range_temp_1263335862781_307" />
இது எங்களுடைய பரம்பரைக் கலை. எங்கள் தாத்தா காலத்திலிருந்து இந்தக் கலையில் எங்கள் குடும்பம் ஈடுபட்டு வருகிறது. எங்கள் தாத்தா பொன்னுவின் மறைவிற்குப் பிறகு அப்பா சந்திரன் இதை வாசித்து வந்தார். அவர்தான் எனக்குக் குரு.
எங்களுடைய குழுவில் அப்பாவும் இப்போது வாசிக்கிறார். இந்தக் கலையை அவ்வளவு எளிதில் யாரும் கற்று விட முடியாது. நான் என்னுடைய ஏழு வயதிலிருந்து கற்கத் துவங்கினேன். இப்போது கேரளத்தில் நான் நடத்தும் பள்ளியில் 50 மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறேன்.
செண்டா மேளம் என்றால் இப்போது நீங்கள் இங்கே வாசிக்கிறீர்களே, அது ஒன்றுதானா?
இல்லை. செண்டா மேளத்தில் நிறைய வகைகள் உள்ளன. முக்கியமாக,
- பாண்டி மேளம்
- தாயம்பகா
- சிங்காரி மேளம்
எனப் பலவகைகள் உள்ளன.
இதில் "தாயம்பகா மேளம்" பெண்களும் வாசிக்கக் கூடியது.
"சிங்காரி மேளம்" என்பது தமிழ்நாட்டில் உள்ள "நையாண்டி மேளம்" போன்றது. இதில் தாளத்தோடு, ஆட்டமும் சேர்ந்திருக்கும். இதை அரசியல் கட்சியினர், வியாபார நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் விரும்புகின்றனர். இந்த வகை செண்டா மேளத்திலும் பெண்களின் பங்கேற்பு உள்ளது.
பெண்கள் இந்தக் கலைக்கு அதிகமாக வருவது போலத் தெரியவில்லையே?
உண்மைதான்.
இந்தக் கலைக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பெண்கள் வருகின்றனர். இதில் தொழில்முறைக் கலைஞர்களாகப் பெண்கள் வருவதில் நிறையச் சிரமங்கள் இருக்கின்றன.
பெண்களும், மாணவர்களும் மேடை நிகழ்ச்சிகள் நடத்தவே இதைக் கற்கிறார்கள். நாங்கள் கேரளாவில் நடத்தும் பள்ளியில் வெறும் 2 மாணவிகள் மட்டுமே இதைக் கற்க வருகிறார்கள். கேரளத்தில் அக்டோபர் முதல் மே மாதம் முடிய கோவில்களில் விழாக் காலமாகும். இந்தக் காலங்கள் தவிர மற்ற நேரத்தில்தான் நாங்கள் பிறருக்குக் கற்றுத் தர முடியும்.
இந்த செண்டா மேளக் குழுவில் எவ்வளவு பேர் இடம் பெற முடியும்?
இந்தக் குழுவில் குறைந்தது 30 பேர் இடம் பெறலாம். 50 பேர் இடம் பெறலாம். ஏன் 100 பேர் கூடப் பங்கேற்கலாம்.
சிறிய குழுவென்றால் அதில்,
- 15 செண்டா
- 7 இலக்தாளம்
- 7 கொம்புகள்
- 5 குழல்கள்
என்ற அளவில் வாத்தியக் கருவிகள் இடம் பெறும்.
ஆனால் இது கடுமையான உடல் உழைப்புத் தேவைப்படும் வாத்தியமாகும். மிகவும் இரசிக்கத் தக்க இந்த இசையை மிகவும் சிரமப்பட்டுத்தான் வாசிக்க முடியும். அதனால் இதை அசுர வாத்தியம் என்றும் அழைப்பார்கள்.
கேரளாவில் இதைக் கற்றுக் கொள்வதற்கு எந்த அளவுக்கு வசதியுள்ளது?
எங்களைப் போன்ற தனிப்பட்டவர்கள் நடத்தும் பள்ளிகளில் செண்டா மேளம் கற்றுத் தரப்படுகிறது. அதுமட்டுமல்ல, கேரள அரசு நடத்தும் "கலா மண்டலம்" ஷோரணூரில் உள்ளது. அங்கே இதைக் கற்றுத் தருகிறார்கள். அங்கு சேர்வதற்கு வயது, படிப்பு போன்ற தகுதிகளை வைத்திருக்கிறார்கள். சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள், கேரளாவின் வைக்கத்தில் தமிழ்நாட்டு நாதஸ்வரத்தைக் கற்றுக் கொள்ள பள்ளி இருக்கிறது.
கேரளத் திருமணங்களில் நாதஸ்வரம்தான் முக்கியம். இங்கேயோ எங்களுடைய செண்டா மேளம் முக்கியமாகி வருகிறது.