சிவஞான கற்பம்-6

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 சிவஞானகற்பம்: ஆறாம் தந்திரம்: விஞ்ஞானக்காட்சி

இதுவரை தன்வேதனைக் காட்சிகளின் பல்வேறு கூறுகளை விளக்கி அதன்வழி தற்கல்வியின் ஓர் கூறாக அமையும் அறப்பார்வையையும் விளக்கி அதனால் வரும் சத்து அசத்து என்றும் சுத்தம் அசுத்தம் என்றும் வரும் அறிவுபேதங்களையும் விளக்கிய பின்பு இப்பொழுது அறப்பார்வையின் பயனாக விளைகின்ற விஞ்ஞானக் காட்சியின் இயல்பினை விளக்கப் புகுகின்றார் ஆசிரியர். இதனை யோக நற்காட்சி என்றும் அழைப்பர் அருணந்தி போன்ற சைவ சித்தாந்திகள். சித்தர்கள் இஇதனைச் சுழிமுனையின் திறவுகோல் பெற்று அந்நாடிச் செலவில் செல்வதால் வரும் ஞானானுபவம் என்பர். இஇது எக்கல்விபாற் படுமெனின், இறைகல்விபாற் படுமென்க. எத்தகைய அறிவு வகையெனின் பெரும்பாலும் சத்தறிவும் சுத்தவறிவும் என்க. ஊன விழிகள் சுட்டும் சாதாரண மனோகரணங்களால் அறியக் கூடியதல்லா மறைவுருக்களை (the concealed objects) விஞ்ஞானக் காட்சிகளாலும் அதனை அடுத்துவரும் சிவஞானக் காட்சிகளின் வழியாகவும் தரிசனமாகப் பெறப்படுவதால் இவ்வாறு.

இவ்வகைக் காட்சிகள் உண்டென்பதை மறுப்பவர்களே இவ்வுலகில் அன்றும் இன்றும் அதிகம். ஆதலின் இவர்கட்கு இது புரியாத வொன்றாக இருக்க, அடங்கி இந்த ஞானவிழிக் காட்சி கைவந்த பெரியார்களை அண்டி அவர்களைக் கேட்டு அறிந்து கொள்வதே சிறந்ததாம்.

6.1

ஞானவிழி திறப்பிக்கும் நல்லாறு நயப்பார்க்கு
ஊனவிழி யோடுழல்வ தொடுக்கி

ஞானவிழி திறப்பதாவது, அந்தகரணங்கள் புறக்கரணங்கள் போன்ற பசுக்கரணங்களோடு இன்னும் அவற்றிற்கு மேலாகிய சிவகரணங்களைப் பெற்று இதுவரை காணமுடியாது கிடந்ததை அறிதுயில் வழியாகவும் அதனைப் போன்ற மேலான அவத்தைகள் வழியாகவும் கண்டு மகிழ்வதாகும். இவ்வாறு சிவகரணங்கள் எழுந்து அறிவினைப் பற்றுவது நல்லாறுவாகிய மெய்யான தவங்களைப் பயின்று மலநீக்கம் செய்து அதன்வழி வெளிப்படாது புதையுண்டு கிடந்த சிவகரணங்களைப் பெற்று அதன்வழி புதிய அறிவுத்திகளைப் பெய்து புதியன பல அறிவதாகும். ஊனவிழியாவது பசுக்கரணங்களாகிய அந்தகரணம் புறக்கரணம் எனும் இவற்றின்வழி காண்பதாகும். இவை முன்னின்று அறிவினை செலுத்துவது ஒழித்து கீழ்தள்ளி மேலான சிவகரணங்களே பெரிதும் செயல்படுமாறு உயர்வதே இங்கு நவிலப்படும் ஒடுக்கமாகும். இதன் விளக்கம் முன்பும் -- 4.2 ஆம் சூத்திரத்திலும் கண்டுகொள்க. திருமூலரின் மூன்றாம் ஐந்தாம் தந்திரங்களிலும் இன்னும் பல ஞானநூற்களிலும் இது மிக விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றது. கண்டு தெளிக. இங்கு சுருக்கமாகவே விளக்கப்படும்.
இனி அனைவர் உள்ளத்தில் இருந்தும் இதுவரை தோன்றாதிருந்து பிறகு சில தவங்களைச் செய்ய அது தோன்றும் வகையை அடுத்து விளக்கப் புகுகின்றார் ஆசிரியர் கண்கட்டியாரைப் பின்பற்றி.
  • 6.2

ஒடுங்கப் புலன்கள் மலமும் ஒதுங்க
அடங்கலுந் தோன்றுயோகத் தால்

இது சிவகரணங்கள் பெற்றவன்பால் விஞ்ஞானக் காட்சி எப்படி சித்திக்கும் என்று விளக்கியது. இருவகைக் கரணங்களையும் பெற்றிருக்க, தகுந்த யோகப் பயிற்சிகளால் புலன்கள்வழி அறிவு செல்வதை ஒடுக்கி, அதுபொழுது அகத்திலே செறிந்திருக்கின்ற ஞானதிரோதகமாகிய ஆணவமலத்தை இறையருள் பெற்று ஒதுக்கிட, மேலும் வெளிப்படும் ஒறையருளோடு அடங்கி அதுவேக் கண்ணாக கண்டறிய அதுபொழுது இத்தகையை ஊடுறுவுக்காட்சிகளாகிய விஞ்ஞானக் காட்சிகளும் (transductive perceptions) அதனைப் போன்ற பிறவும் சித்திக்கும் என்றவாறு. இத்தகைய செயன் முறையே சிவயோகம் என்பதாகும். திருமூலரும் இன்னும் பல சித்தர்களும், அறிவு இடகலை பிங்கலை நாடிகள் வழியாக செல்வதொழித்து சுழிமுனை நாடி வழியாக செலுத்துவதே இத்தகைய திறனைத் தரவல்ல உண்மையான சிவயோகம் என்பர். இதற்கு அளப்பரிய குண்டலினி ஈட்டமும் வேண்டுமென்பர். இதன் விரிவினை அருட்குறள் 'சிவயோக வழிபாடு" (1.2.4) என்ற படலத்திற் கண்டு தெளிக.
இன்னும் 'நிட்டானுபூதி'; போன்ற யோக நூற்களில் இது விரிவாக கூறப்பட்டிருக்கின்றது. சான்றாக:

19
நிட்டை சாதித்தான் நீங்கும் ஐம்பொறியொடு புலனும்
நிட்டை சாதித்தான் நெஞ்சமும் உளத்திடை ஒடுங்கும்
நிட்டை சாதித்தான் நினைப்பொடு கேவலம் ஒழியும்
நிட்டை சாதித்தான் நிமல வீடைவது நிசமே

என்று மெய்யான நிட்டை கூட ஐம்பொறிகள் வழி காண்டலும், மேலும் பல்வேறு தன்வேதனைக் காட்சிகளும் ஒடுங்கி அறியாமை ஒழியும் சிவஞானம் வளரும் என்றுங் கூறி, மேலும் இந்த நிட்டையில் இருப்போர்க்கு:

24
"சுத்தமா நாதத் தொனியும் பலவாத் தோன்றிடும்
மணி கடல் மேகம் மத்தளம் பேரிகை யாழொலி
சிலம்பு வளை யுளி தாளமென்று.....

சத்தம் சம்பந்தப்பட்ட விஞ்ஞானக் காட்சி அமைவதையும் இன்னும் இதுபோன்ற பலவற்றையும் விரிக்கின்றது
பல சிவயோகிகளின் மேலான சித்தர்களின் சிவஞானிகளின் மெய்யடியார்களின் அனுபவமாக இஇந்த விஞ்ஞானக் காட்சிகள் அமைந்திருப்பதை அவ்வவர் நூற்களிற் கண்டு மெய்யென்று தெளிக.

இப்படிப்பட்ட விஞ்ஞானக் காட்சியின் அமையும் பொருள் அனுபவங்களை அடுத்து விளக்குகின்றார் ஆசிரியர்.

6.3

கற்பம்நிரு விகற்பம் கடந்தறி திறத்தினாகும்
நிற்பவை அங்குநிரு வுருவாய்

: பசுகரணங்களுக்கு ஓர் பொருள் இருளிலிருந்து வெளிப்படுத் தோன்ற, அது நிருவிகற்பமாய் , ஆதிசித்தாகத் தோன்றி பின் மானதக் காட்சிகளை தோற்றுவிக்கும் மனோகரணங்களால் சவிகற்பக் காட்சிகளாக மலரும் என்று கண்டோம். இனி இத்தகைய மனோகரணங்களைக் கடந்து, தோன்றுபவற்றைப் பற்றி ஊடுறுவிச் சென்று அங்கு மறைவாகக் கிடப்பதைக் காணும் திறனே கடப்புருகாண் திறனாகிய கடந்தறி திறனாகும். ஊனக் கண்களுக்கு எவ்வகையும் புலப்படாதிருப்பதை எக்ஸ்-கதிர்களை வீசி அதன்வழி உள்ளீடுகளைக் காண்பது போன்ற ஓர் திறன் இது. அதுபொழுது பொருட்களோடு வேறற, ஆனால் சாதாரண பசுகரணங்கட்கு எட்டாத ஆகவே நிருவுருவாய் நிற்கின்ற அவற்றின் புலப்பாடு என்றவாறு. தோன்றுவதைப் பற்றி நிருவிகற்பமாய் இருப்பதை சவிகற்பமாகத் தெளிதலிலேயே முயற்சி அடங்கிவிட்டால், இத்தகைய கடப்புரு காண் திறன் சமையாதென்றும் ஆகவே மின்காந்த அலைகளைப் போல எங்கும் யாவற்றிலும் வேறற நிற்கும் நிருவுருக்களை காணவொல்லாது என்பதாயிற்று.

  • இனி இந்நிருவுருவங்களை மந்திரத் திருமேனிகளென்றும், அத்திகாயங்கள் என்றும் பெருவடிவு என்றும் தெய்வங்கள் (archetypes) என்றும் இன்னும் பலவாறும் உலகெலாம் பரந்துள்ள சித்தர்களும் ஞானிகளும் கூறுவர். இவையே கனவுகளுக்கும் புராணகதைகளுக்கும் கருக்களாக அமைவனவாம். ஓர் நிருவுருவின்றி பல சேர்ந்து இயங்கி கதையாக நிகழ்ச்சியாக நாடகமாக இவை ஞானவிழிகட்குத் தோன்றுவதை அடுத்து விளக்க முற்படுகின்றார் ஆசிரியர்.

6.4
தூரநூல் துன்னத் தோன்றுமே யங்கு
பார்மூடு பரத்தின் பயிற்சி

தூர நூலாவது எல்லார் அகத்திலேயும் இருக்கின்ற நூல் போல்வதொன்று. எவ்வாறு நாடக நூலொன்று நடிக்கப்படும் போதே நாடகம் பிறக்கின்றதோ, ஓர் பாடல் பாடப்படும்போதே பண்ணோடு உயிர் பெற்று உழல்கின்றதோ அவ்வாறே அகத்திலே இருக்கும் இந்த தூரநூலொன்றினைத் துன்னுவான் - பொருந்துவான் - தனக்கு நாடகம் போன்ற கனவோ காட்சியோ தோன்றும் என்றவாறு.
இப்படிப்பட்ட தூரநூற்களைக் கண்டு அவற்றின் உள்ளீடுகளை அறிவார்க்கு, இதுவரை இந்த உலகத்து பொருட்களை வாயிற்காட்சி மானதக்காட்சி போன்றவற்றின் வழியாகக் கண்டு மகிழ்ந்த நிலையில், பார்வையிலிருந்து மூடப்பட்டிருந்த நிருவுருக்கள் அறிவிற்பட அதன்வழி அவற்றிற்கு அப்பாலாகி அவற்றை ஆளுகின்ற இறைவன் நிதரிசனமாகத் தோன்றுவான் என்பதொடு, அவன் எவ்வாறு எவ்வாறெல்லாம் உலகத்தை ஆட்டிப்படைகின்றான் , அவனது திருக்கூத்தாகிய பயிற்சிதான் என்ன என்பதுவும் தெளிவாகும் என்றவாறு.

இப்படிப்பட்ட கடப்புருகாண்திறத்து அனுபவங்களால் வரும் இறைக்கல்வியைப் பற்றி அடுத்து விரிக்கின்றார்.

6.5
தூரநூல் விரிக்கும் தூரன நாடகம்
காரிருள் தீய்க்குங்கதி ரொளி

இந்த தூரநூற்களை, பசுகரணங்கள் நீக்கி சிவகரணங்களோடு ஒன்றித்து அடைந்து நுவலப்படுவதை நோக்குங்கால், அதன் பொருள் கிடக்கை, அது நுதலுவது ஓர் வகையான நாடகம் போன்று ஞானவிழிகட்குத் தெரியும். கனவுகள் போன்ற அவத்தைகள் இத்தகைய தூரன நாடகங்களை ஞானவிழியால் பார்க்கும் அனுபவங்களாகும். இவற்றால் உலகத்து நிகழ்ச்சிகள் பலவற்றின் மறைகள், சூக்குமங்கள் அறிவிலாக, இஇவை அகத்திலே வலுவாக செறிந்திருக்கும் ஆணவயிருளை இன்னும் தீய்த்து இல்லாதுபோக்கும் கதிரொளியாம் என்றது. அரங்கத்தில் நடிக்கப்படும் நாடகம் போன்று, உலகத்து நிகழ்ச்சிகளை இஇந்த ஞானவிழிகாட்சி வழி அறியத் தருதலின், அக்காட்சிகளை தூரன நாடகம் என்றது. வேறு வகையில் அறியவாராத பற்பல உண்மைகள் இவற்றின் வழியே அறியப்படுதலினாலும், உலகத்து நிகழ்ச்சிகளை தெரியாததால் வரும் அப்பிரகாசத்தை போக்குவதாலும் இது கதிரொளி ஆயிற்று
தூரநூல் காட்டுபவை உலகத்து நிகழ்ச்சிகளேயாக பசுகரணங்களுக்கு எட்டாத மறைபொருட்களை இஇந்த ஞானவிழிக்காட்சித் தருவதால், உலக மூடத்தைப் போக்கும் கதிரொளி ஆயிற்று என்றலுமாம்.

* இதனையே இன்னும் சற்று விரிக்கின்றார் அடுத்து

6.6

மந்திர வுருக்களின் மாநட புராணம்
தந்திடுந் தூரநூற் றாழ்தல்

இப்படிப்பட்ட தூரநூற்களில் தாழ்ந்து நுழைந்து நுதலுவது அறிய, இதுவரையில் பசுகரணங்கட்கு புலப்படாத மந்திரசொரூபங்கள் புலப்படும் என்றாயிற்று. உருவங்களாகத் தோன்றும் அதேபொழுது அசுத்த மாயாத் தனுவினால் ஆகியவை அவை அல்லவென்றும், சாயை போன்று தோன்றுபவை என்றும், தோன்றி நின்று அழிவதாய் ஆனால் மீண்டும் வேண்டபடுங்கால் தோன்றி பல விசித்திர வடிவங்களாய் அவை தென்படுவதால் அவை அழியாது நிற்கும் மந்திரத் திருமேனிகள் என்றவாறு. இவை காட்டும் நாடகத்தை மாநடனத்தை புராணமென்றது இரண்டு காரங்கள் பற்றி. ஒன்று இவையே புராண இலக்கியங்களின் கருவாய் அமைவது என்பதால். ஆயினும் இவையேன் 'புராணம்' எனப் பெயர் பெறுதல் வேண்டுமெனின், இவை பண்டே இருப்பவை, யாண்டும் நிற்பவை -- நாடகம் முடிய அழிந்து போகாது யாதோ ஓர் வகையில் நின்று மீண்டும் மீண்டும் தோன்றவல்லவை என்பதால் புராணம் ஆயிற்று என்பதாம்.

இனி இவை 'பூர்' எனும் பூர்வ உலகத்திலிருந்து, முதன் முதலில் வெளிப்பட்டு நின்ற ஊழிக்காலத்திலிருந்து அழியாது அறிவில் வெளிப்படுவதாலும் புராணம் எனக் கூறுதல் அமைந்தது என்பதாம்.
இப்படிப்பட்ட காட்சிகளும் அதற்கு ஆதாரமாக நிற்கும் தூர நூற்களும் இல்லை என்பாரை நோக்கி அடுத்து சில சூத்திரங்கள். ஏன் இவை எனில் இப்படிப்பட்ட காட்சித் திறன் இல்லாரே உலகில் அதிகமாம் என்பதாலும் இவர்கள் இஇதுவெலாம் தமக்கு எட்டாதிருப்பதால் அவற்றை பெரிதும் மறுத்து இகனந்து ஒதுக்குவர் என்பதாலும் என்க

6.7
கண்டார்க் குண்டுக்கருதி காணார்க் கில்லை
கன்னிக் காணாட்காம வின்பம்

: முற்பிறவிகளில் செய்த தவத்தாலும், இப்பிறவியில் அமைந்த சூழல்களாலும் இந்த தூரநூல் துன்னலால் வரும் காட்சிகளை மெய்யாக மயக்கமின்றி அனுபவித்துக் கண்டார்க்கு அவை மெய்யேயாம்-- ஐயமும் மருட்கையுமின்றி தானே கண்டு மகிழ்தலால். இவை உண்டு எனக் கருதி, செய்ய வேண்டிய தவங்களையும் பக்குவ முதிர்ச்சித் தரும் பயிற்சிகளையும் செய்யவேண்டிய முறையொடு செய்து முயலாதார்க்கு ஞானவிழி திறக்காது போக, பசுகரணங்களை நீங்கி சிவகரணங்களைப் பெறுவது மெய்யாகாது போக, இத்தகைய ஞானக்காட்சிகளும் இல்லாவாகும் -- அனுபவப் பொருளாக அமையாது. எவ்வாறு எனின் காமக் கலவி செய்து அந்த காமவின்பத்தை சுகித்தால் அல்லது அது இன்னது என்று அறியவாரா போகும். இஇத்தகைய மெய்யுறு புணர்ச்சி அனுபவம் இல்லாத கன்னியொருத்திக்கு இஇந்த காமவின்ப அறிவு யாதென்று புலனாகாது போல இஇதுவென்க. இதனால் காமவேட்கை யாதென்று அறிந்தும் காமவின்பம் யாதென்று அறியாது கன்னி ஒருத்திக் கிடப்பதுபோல், அறிந்தும் அறியாதுக் கிடப்பர் இத்தகையோர் என்றவாறு.

இப்படி இதுவென்ன, அதனை இன்னும் விளக்கப் புகுகின்றார் ஆசிரியர்.

6.8

ஏரணக் கரணங்கள் எட்டாதார்க் கில்லையே
ஆரணமெய் களளந் தறிதல்

ஏரணக் கரணங்களாவது, பசுகரணங்களைப் போக்கி, மந்திர திருமேனிகளாகிய நிருவுருக்களை காணுந்திறத்தினை தரும் கரணங்களாகும். ஏர்+அணம் என்பது ஏரணம் என்றாயிற்று. 'அணம்' என்பது தெய்வவுலகு, மந்திரவடிவங்கள் நிலவும் உலகு எனும் கருத்துடை பண்டையச் சொல். 'ஏர்' என்பது பொருந்தல் உறல் என்றெல்லாம் பொருள்படும். ஆரணம் என்பதும் இதுபோன்று ஆர்+அணம் என்றாகிய, மிகப் பிரகாசமான, ஒளியுமிழும் திறத்து, கதிரவ வடிவ தெய்வநிலை என்றாயிற்று. ஆக மேலான மந்திர வடிவங்களை அறியத்தரு சிவகரணங்களாகிய ஞானக் கரணங்களை, மலத்தினை வாட்டி போக்கி அவற்றை வெளிப்படுத்தி அறிகரணங்களாகக் கொண்டாலொழிய மேலான சிவப்பிரகாசப் பண்பின் மெய்களை இற்று, இன்ன தன்மைற்று என்றெல்லாம் அளந்தறிதல் இயலாவென்றது. இத்தகைய உலகின் நுழைவு தரும் கரணங்களைப் பெற்றாலன்றி அவ்வுலகு விரிக்கும் ஆரணமெய்களை கண்டு மகிழ முடியாதென்றவாறு

இனி இது இவ்வாறென, அத்தகு பொருளுலகில் உண்மை என்பது எவ்வாறு அறியப்படும் என்ற வினா எழுகின்றது. புறவுலகில் பொறிகட்குப் புலனாகும் பொருட்களை இயல்நெறி வழாது காண உண்மை அறிவு சித்திக்கும். ஆயினும் நிருவுரு உலகில் இஇது கூடாதென, இந்தக் கேள்வி எழுகின்றது. அதனை விளக்குதற்கு முயல்கின்றார் ஆசிரியர் அடுத்து.

6.9

அளப்ப திங்குவறி கரணங்களல அரனின்
அருளுத யமேத்தகு அளவை

ஐம்பொறிகட்கு ஆளாகி காலம்-இடமாகிய முதற்பொருட்கள் சார்ந்து இவை நின்றிலங்காது போக, பசுக்கரணக்களாகிய அறிகரணங்கள் வழி பல்வேறு வகையில் அளந்து சோதித்து மெய்யென பொய்யெனக் காண்டல் ஒவ்வாது போக ' அளப்பதிங்கு அறி கரணங்கள் அல்ல" என்றாயிற்று. அப்படியிருந்தும் மெய்யென்றும் பொய்யென்றும் இங்கும் உண்டாகுவது எவ்வாறெனின், அங்கும் அவற்றோடு பிரிந்திராதும், ஆன்மாவின் எல்லா அவத்தை நிலைகளிலும் வேறாகியும் உடனாகியும் நிற்கின்ற இறைவனது போதகத்தால் இங்கு மெய்மை பொய்மை எனும் உணர்வுகள் சித்திக்கும் என்றாயிற்று.

தூரநூற்களும் அவை விரிக்கும் புராண நாடகங்களும் மெய்யே, வெற்று கற்பனைகள் அல்ல, பிராந்தியல்ல என்னும் அறிவு, இத்தகைய தூரியக் காட்சிகள் உள்ளேயே அவற்றின் கூறுகளாக இறைவனது அருளுதயமாக உடன் வருகின்றது.
ஓர் கனவினை அல்லது காட்சியினைக் காண்பான், அதுபொழுது தான் கனவு காண்கின்றேன் காட்சியாகக் காண்கின்றேன் என்று உணரானாயினும், சிற்சத்தியாவது அந்த அவத்தை நிலையினின்று அவனை அகற்றி, அதே பொழுது ஆங்கு நடந்ததை ஒழித்துப் போக்காது நினைவில் இருத்தி நினைத்து மீக்கூர வைப்பதால், தான் கண்டது கனவென்றும் காட்சியென்றும் அவ்வளவில் அதுமெய்யே பொய்யலவென்றும் உணர உதவுகின்றது. இதனால் கண்டது தூரநூல் காட்சியே என்று இறையருளே விளக்கியதாயிற்று. இவ்வாறு வேறுபடுத்தி காணமுடியாத வகையில் சிற்சத்தி உதவவில்லை யாயின், இவர்கள் சித்தப்பிரமையெனும் மனோவியாதிக்கு ஆளாகுவர் என்றறிக

இனி கடப்புரு காண் திறத்தோடு எதிர்நிகழ்வதை முற்கூட்டியே காணும் திறம் வந்தமையும், அது மெய்யறிவாய்வின் ஓர் நோக்கம் என்றெல்லாம் பல சான்றோர்கள் கூறியதற்கு ஏற்ப, பாயிரத்தில் விரிக்கப்பட்டது. சிவயோகிகள் இதனை பூரண ஆரூடம் என்று வேறுவகை ஆரூடக்கலைகளிலிருந்து பிரித்துப் போற்றியுள்ளனர் என்றும் கண்டோம். அது எவ்வாறு என்பதை இஇன்னும் சற்று விரிவாக விளக்குகின்றார் அடுத்து வரும் சூத்திரத்தில்.

6.10

அடுக்குமுறை தூரநூலில் ஆழத்த வுற்றிட
கடுக்கிவரு மெதிரைக்கா ணலாகும்

ஞானவிழியால் காணப்படுகின்ற தூரநூற்கள் தனியாக இஇருக்காது - கொத்துக் கொத்தாகவும் அடுக்கடுக்காகவும் இருக்கின்றனவென்று ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. இவற்றில் மேலன நடந்தவற்றின் நூற்களாக, நடுவன நடக்கின்றவற்றின் நூற்களாக, இவற்றிற்குக் கீழே கிடப்பவை நடக்கவிருப்பதின் நூற்களாக இருப்பது அறியப்படுகின்றது. இவை நிமித்தம் என்றும் சாத்தியமென்றும் ஓர் வகை முறைமைபாற்பட்டு விளங்கவும் செய்கின்றன. நடந்துவிட்டதின் நிமித்தமாக நடந்துகொண்டிருப்பது, நடந்து கொண்டிருப்பதின் நிமித்தமாக நடக்கவிருப்பது என்றவாறு இவை காரண-காரிய முறையில் பிணிக்கப்பட்டும் இருக்கின்றன. எதற்கு ஒன்று நிமித்தமாக நிற்கின்றதோ அதுவே சாத்தியமென (possibility) என உணரப்படுகின்றது.

'கடுகி வரும்' என்பது ஓசைநயம் கருதி "கடுக்கி வரும்" என்றாயிற்று -- விரைந்து வந்து கொண்டிருக்கும் நடக்கப் போகின்ற விடயம் இதுவே. ஓர் சாத்தியமாக மனதில் படுவதும் இதுவே.
இவ்வாறு கூறுதற்குச் சான்று யாதெனின் கனவுகளும் காட்சிகளும் பெரும்பாலும் நடக்கவிருப்பதை கூறுவதும், விருட்சத் தேர்வில் எழுதப்படும் நாங்கு விருட்சங்களில் கடைசியாக எழுதப்படுவது இத்தகைய கீழான, ஆழத்த துரநூற்களாக இருப்பதுவும் ஆகும். இதனை ஆகமவுளவியல் நூற்களில் இன்னும் விரிவாக அறிந்துகொள்க. "திருநெறித் தெளிவு" எனும் நூலிலும் ஓரளவு விரிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு ஆழத்த தூர்நூற்களை கனவு, காட்சிகள் வழியாக அல்லது அதற்கு ஒப்பான விருட்சத்தேர்வின் வழியாக நடக்கவிருப்பதை முன்னறிந்து தெரிவிப்பதே மெய்யான ஆரூடம் என்பதாயிற்று -- இறைவனையே ஒன்றித்து அறிந்து இந்த ஆரூடம் கூறப்படுவதென்பதால். இதுவே சிவஞானிகள் போற்றும் பூரண ஆருடமுமாம்.

இனி இதகைய அறிவுகள் பந்தங்களை துமித்து இல்லாதுபோக்குகின்ற சிவஞானத்தோடு உற்றுள்ள தொடர்புகளை அடுத்து விளக்குகின்றார் ஆசிரியர்.

6.11

பந்தனை அறுத்திடும் பகலவன் பாராட்டம்
வந்திடும் வாய்மையறி வாய்

சிவஞானமாவது யாவருக்கும் உரியதாய் , என்றும் அழியாத சத்தறிவாய் , யார் எல்லாக் கட்டுகளையும் கழன்று அனைத்தொடும் அந்நியமின்றி சுட்டுணர்வு இறந்து நின்று காண்கிறார்களோ அவர்களால் அனுபவிக்கக் கூடியதாக நிற்கின்றது. இவ்வாறான தூரநூற்களைத் துன்னி, உற்று நோக்கிட, புறத்து வெளிப்படாது ஆனால் அனைத்திலும் ஊடுறுவி நின்று செயல்படுத்துவதாய் நிற்கின்ற அத்திகாயங்களாகிய மந்திரத் திருமேனிகளை அவை எவ்வாறு சித்துவிளையாடல்கள் போன்றும் திப்பியங்கள் (miraculous) போன்றும் விளையாடி உலகத்து நிகழ்ச்சிகளை எல்லாம் மெய்யாக்குகின்றது என்று அறிந்தால், ஞானசொரூபியாக, ஞானக் கதிரவனாக , கோடிப் பிரகாசத்து பகலவனாக இறைவன் திகழ்வதும் தெரிய வரும். மேலும் அதுபொழுது எவ்வாறு எவ்வாறெல்லாம் இந்த உலகத்தை ஆட்டிப் படைக்கின்றான் என்றும், எவ்வாறு எல்லாமே அவனது செயலாக இஇருக்க அறியாமையின் காரணமாக எனது செயல் என்றெல்லாம் உரிமை கொண்டாடி அவதியுறுகின்றோம் என்றெல்லாம் பொய்யின்றி மெய்யாக காணவருவோம் என்றவாறு. இதனைப் பற்றிய தெள்ளறிவு இல்லாதார் மிரண்டு அஞ்சி இவையெல்லாம் மாயாசாலங்கள் என்றெல்லாம் பிழையாகக் கொண்டு சித்துவிளையாட்டுகளிலும் மோடி வித்தைகளிலும் இஇறங்கி ஏழை எளியோரை வஞ்சிக்கவும் செய்வர் என்பதாம். இப்படிப்பட்டார் இன்னும் சித்தமாயையிலேயே கிடக்க, அவர்கள் மாட்டு சிற்சத்தி எழுந்து இவற்றை தெளிவாக்கி அவற்றின் மெய்வடிவினை காட்டவில்லை என்றே துணிய வேண்டி இருக்கிறது.

மெய்யாக இறைவனே உலகை ஆட்டிப்படைப்பதை -- பிரபஞ்சப் பெருங்கூத்தாகிய பார் ஆட்டத்தை -- கண்டால்தான் உலகப் பற்று படிப்படியாக நீங்கும் என்றவாறு. ஆட்டுவிக்க ஆடுகிறோம் என்று மெய்யாக உணர்ந்தாலன்றி, உலகத்தோடுற்ற வலுவான பந்தத்தை , பற்றினை அறுக்கமுடியாதென்றவாறு. மெய்யறிவு பெறும் பொழுதே துணிந்து இது உலகில் இவ்வாறு நடக்கின்றது , இதன் காரணமாக இவ்வாறு என்றெல்லாம் தெளிவாக அறிகின்றபொழுதே கழற்சி சித்தித்து பந்தனை பைபைய, எந்தவொரு வேதனையும் இன்றி, அறும் என்றவாறு.

வேதாந்திகள் போற்றும் முத்திநிலை, வெற்று வைராக்கியத்தாலும் நிராசையாலும் சம்பவிக்கும் அது, உயிரோடு இருந்தும் இல்லாதுபோன்ற ஓர் செத்த நிலையே; அன்பு மேலிட அனைத்தொடும் அந்நியம் போக்கி நிற்கின்ற சித்தாந்த முத்தி அல்ல என்பது.

இனி விஞ்ஞான காட்சியின் வரும் அறிவுகட்கும் அக்கரசக்கரங்களால் எழும் எந்திரங்கட்கும் உள்ள தொடர்புகளை அடுத்து விரிக்கின்றார் நம் ஆசிரியர்

6.12

எட்டுவார்க் குண்டே யாண்டும் எந்திரத்தில்
பட்டுழல் பொருளின் பண்பு

தூரநூற்களாவன மந்திர சொரூபங்களை, உலகத்து நடக்கின்ற பற்பல திருவிளையாடல்கள் கனவுகள் காட்சிகள் போன்ற அவத்தைகளின் வழி அறியத் தருவதால், அவையும் மந்திரசொரூபங்களே யாகும். எந்திரங்களாவன இந்த மந்திரசொருபங்கள் அக்கரசக்கரங்களாக ஓர் அமைப்பினைப் பெற்று உலகத்தில் ஒன்றினை நிகழ்ச்சியாக்கும் வாகனங்களாகும் (machineries) வகையில் உருவ அமைப்போடும் ஆற்றலோடும் ஒழுங்கோடும் விளைகின்ற நிலைகளே யாகும். ஒவ்வொரு உலகத்து நிகழ்ச்சியும் ஆகவே ஒவ்வொரு பொருளும் இத்தகைய எந்திரங்கள் வழியாகவே ஆட்டிவைக்கப்படுகின்றன. இதன் வழியே அவற்றிற்கு பற்பல இயல்புகளும் வந்தமைகின்றன --- நெருப்பு சுடுவதும் நீர் உறைந்து சீதமாகுவதும் மண்ணில் விதைகள் செடிகொடிகளாக வடிவெடுப்பதும் வளர்வதுமாக அனைத்தும் இப்படிப்பட்ட எந்திரங்களான் தான் மெய்யாகின்றன.
ஆக விஞ்ஞானக் காட்சிகளை மகிழும் வகையில் மந்திரவடிவிற்றாகிய தூரநூற்களை எட்டி அவற்றுள் கிடக்கின்ற மெய்களை அறியுங்கால், கனவுகள் காட்சிகள் போன்ற யோகக்காட்சிகள் விஞ்ஞானக் காட்சிகள் சித்திக்க, அதன்வழி உலகத்துப் பொருட்களையும் நிகழ்ச்சிகளையும் ஆட்டிப்படைக்கின்ற மந்திரசொரூபங்களின் செயல் நிலைகளாகிய எந்திரங்களைக் காணலாமென்றும், அத்தோடு எந்தெந்த எந்திரங்கள் எவ்வெவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் காணலாம் என்றவாறு.

இத்தகைய உலகறிவு பொருளறிவு தூரநூற்களை எட்டி விஞ்ஞானக் காட்சி பெறும் திறனுடையார்க்கன்றி பிறர்கில்லை என்பதுவுமாம்.
இவற்றின் விரிவு "திராவிட மெய்யறிவு வரலாறு" என்பதில் முதல் நூலாகிய 'ஆகமீயம்' என்பதில் கிடைக்கும். கண்டு தெளிக.

சிவஞானகற்பம் : ஆறாம் தந்திரம் முற்றும்.




பங்களிப்பாளர்கள்

Ulagankmy

"https://marabuwiki.org/index.php?title=சிவஞான_கற்பம்-6&oldid=10957" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 23 மே 2012, 08:09 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,804 முறைகள் அணுகப்பட்டது.