சில தீபாவளி பக்ஷணங்கள்! தேன்குழல்கள்மரபு விக்கி இருந்துஇப்போ உளுத்த மாவுத் தேன்குழல் எப்படிப் பண்ணறதுனு பார்ப்போமா! இதை இருவிதமாகப் பண்ணலாம். பாரம்பரிய முறை ஒண்ணு. நாங்களாய்க் கண்டு பிடிச்ச முறை இன்னொண்ணு. இந்த இன்னொரு முறையிலேயே இந்த வருடம் பண்ணினேன். பாரம்பரிய முறையில் அரிசியை ஊற வைத்துக் களைந்து கொஞ்ச நேரம் நிழலில் உலர்த்திப் பின்னர் மெஷினில் மாவாக்கி/அல்லது இடித்து/அல்லது மிக்சியில் அரைத்து, உளுத்தம்பருப்பைச் சிவக்க வறுத்து மாவாக்கி அதையும் போட்டுப் பண்ணுவாங்க. இப்போப் பண்ணுவது ஒரு கிலோ அரிசிக்கு ஒரு ஆழாக்கு/200கிராம் உளுந்தை அதிலேயே போட்டு மிஷினில் அரைத்துக் கொண்டு வந்துவிடுகிறோம். அதிலே தேன் குழல் பண்ணினாலும் நன்றாக வருகிறது. மாவு மீந்து போனாலும் கவலையில்லை. இன்னொரு நாள் பண்ணிக்கலாம். அல்லது ரவா தோசை, கோதுமை தோசை, கேழ்வரகு தோசைகளுக்குப் போட்டுக்கலாம்.
முதல் முறையில் செய்வது.
இடித்துச் சலித்த மாவு அல்லது ஊறவைத்துக் காய வைத்து மெஷினில் அரைத்த அரிசி மாவு. இவற்றில் ஏதேனும் ஒன்று இரண்டு கிண்ணம், இரண்டு டேபிள் ஸ்பூன் உளுத்த மாவு, உப்பு, ஜீரகம், பெருங்காயம் தேவையானால், (நான் சேர்ப்பேன்.) வெண்ணெய், பிசைய நீர். பொரிக்க சமையல் எண்ணெய். மாவில் உளுத்தம் மாவு, உப்புச் சேர்த்து வெண்ணெயையும் ஜீரகத்தையும் போட்டு முதலில் நன்கு சீராகக் கலந்து கொள்ளவும். உடனே நீரை விட்டுப் பிசைய வேண்டாம். வெண்ணெயோடு மாவு எல்லாம் நன்கு கலந்து கைக்குக் கொஞ்சம் கரகரப்பாக மாவு வரும். அப்போது நீரை விட்டுப் பிசையவும். நன்கு குழைவாகப் பிசையவும். கடாயில் எண்ணெயைக் காய வைக்கவும். எண்ணெயில் புகை வரும்போது அடுப்பைத் தணிக்கவும். இப்போது தேன்குழல் படியில் தேன்குழல் அச்சைப் போட்டு மாவால் நிரப்பிக் காயும் எண்ணெயில் பிழியவும். பரவலாகப் பிழிய வேண்டும். மொத்தமாகப் பிழிந்தால் நடுவில் இருப்பவை உள்ளே வேகாது. நன்கு வெந்ததும் ஓசை அடங்கி வரும். அப்போது எடுத்து வடிதட்டில் போட்டு வடிகட்டவும். இம்மாதிரி எல்லா மாவையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பிசைந்து கொண்டு பிழிந்து எடுக்கவும். எல்லா மாவையும் மொத்தமாகப் பிசைய வேண்டாம். நேரம் ஆனால் தேன்குழல் நிறம் மாற ஆரம்பிக்கும். ஆகவே இரண்டு கிண்ணம் பிசைந்து கொண்டு அது முடிந்ததும் திரும்ப இரண்டு கிண்ணம் பிசையலாம்.
ஒருகிலோ பச்சரிசி, ஒரு ஆழாக்கு அல்லது கால் கிலோ உளுந்து. இவை இரண்டையும் மெஷினில் கொடுத்து நல்ல நைசாக மாவாக்கிக் கொள்ளவும். இந்த மாவு இரண்டு கிண்ணம், வெண்ணெய், உப்பு, ஜீரகம், பெருங்காயம், பிசைய நீர். முன் போலவே மாவில் உப்பு, ஜீரகம், பெருங்காயம், வெண்ணெய் போட்டு நன்கு கலக்கவும். நன்கு கலந்து விட்டது என்பது தெரிந்ததும் நீரை விட்டுப் பிசையவும். இதற்கு நீர் கூடப் பிடிக்கும். வறட்டு அரிசி மாவு என்பதால் நீர் வாங்கும். நன்கு பிசைந்ததும், முன்போல் எண்ணெயைக் காய வைத்துத் தேன்குழல் அச்சில் போட்டுப் பிழியவும். இதுவும் வெள்ளை வெளேர் என நன்றாகவே வரும்.
முள்ளாய்க் குத்தாத தேன்குழல்! :))
அரிசி ஒரு கிலோ என்றால் ஒரு ஆழாக்கு கடலைப் பருப்பு, ஒரு ஆழாக்கு பாசிப் பருப்பு. பருப்பு வகைகளை வெறும் வாணலியில் பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் அரிசியோடு கலந்து நன்கு நைசாகவே அரைக்கவும். இந்த அரைத்த மாவு இரண்டு கிண்ணம், வெண்ணெய் தேவையான அளவு, உப்பு, பெருங்காயம், பிசைய நீர். சிலர் வீடுகளில் எள் சேர்ப்பார்கள். அவங்க எள்ளையும் சேர்த்துக்கலாம். நான் எள் போட மாட்டேன். அரிசி மாவோடு உப்புச் சேர்த்துப் பெருங்காயம் , வெண்ணெயும் சேர்த்து முன்னர் தேன் குழலுக்குச் சொன்னாப் போலவே நன்கு கலக்கவும். கைகளால் கலந்து கொண்டு அது கரகரப்பாகக் கைக்கு வந்ததும் நீர் விட்டுப் பிசையவும். பின்னர் அடுப்பில் வாணலியில் சமையல் எண்ணெயை வைத்துத் தேன்குழலைப் பிழிந்து எடுக்கவும்.
வெளிநாடுகளில் அரிசி மாவு ரெடிமேடாகக் கிடைப்பதில் மேலே சொன்னாப் போல செய்யலாம். தைரியமாகச் செய்யலாம். அங்கே இருந்த இரண்டு தீபாவளிகளில் நான் அப்படித் தான் செய்தேன். நன்றாகவே வருகிறது. அல்லது லாங் கிரெயின் அரிசி வாங்கி அதை ஊற வைத்து அரைத்து மாவாக்கியும் செய்து கொள்ளலாம். கடலைப்பருப்பை எல்லாம் வறுத்து அரைக்க முடியாது என்பதால் கடலைமாவு, பொட்டுக்கடலை மாவு போட்டுக் கொள்ளலாம். இந்த மாவிலேயே கொஞ்சம் காரப்பொடி, தேங்காய் பல் பல்லாகக் கீறிப் போட்டு, கடலைப்பருப்பு அல்லது வேர்க்கடலையை ஊற வைத்துச் சேர்த்துத் தட்டையாகவும் தட்டலாம். நல்ல கரகர தட்டைக்கு நான் காரன்டி.
--Geetha Sambasivam 09:15, 9 டிசம்பர் 2012 (UTC) |