சித்தர் வழியில் 8 திருமூல நாயனார்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

சித்தர் வழியில்…, திருமூலர் நாயனார்

Indexதிருமூலர்.jpg

திருமூலர் நாயனார் வேளாண் குலத்தை சார்ந்தவர். கிருஸ்து பிறப்பதற்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் நாட்டில் வாழ்ந்த திருமூலர் நாயனார் இருபத்தொரு தலைமுறைகள் வரை வேளாண் குலத்தவர் என்று அறியப்பட்டு இருக்கிறார்.இன்றைய மருத்துவ உலகம் கூறும் தாய் தந்தையின் மரபணுவை சார்ந்து பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியம் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே திருமூலர் நாயனார் கண்டறிந்து சொல்லி இருக்கிறார். இவரது கண்டு பிடிப்பு ஒவ்வொன்றும் மனிதனின் [ உயிர் ]வாழ்தலுக்கு மிகவும் இன்றி அமையாததாகும்.திருமூலர் நாயனார் சிவயோகி ஆவார் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான [இவர் நந்தியின் அருள் பெற்றவர்]. சித்தர்களில் இவர் முதன்மையானவர்.


மூலிகை மகத்துவத்தை முதன்முதலாக உலகிற்கு தெரிவித்தவர்.சதுரகிரியின் அடர்ந்த காட்டுப் பகுதியில் திருமூலர் நாயனார் தவம் புரிந்திருக்கிறார்.அப்பொழுது அவர் உடலிலிருந்து ஒரு ஞான ஒளி, நுண்ணலை அப்பகுதியில் வியாபித்து அந்த காந்த சக்தியால் ஈர்க்க பட்டு ஆன்மீக தேடலையும்- உலக நன்மையையும் விரும்புபவர்களும் அவர் இருக்கும் இடத்தை தேடி அவரின் சீடராகும் பாக்கியம்
பெற்றிருக்கிறார்கள்.இவர் எட்டாயிரம் பாடல்கள் பாடியுள்ளார். இதில் நாலாயிரம் பாடல்கள் வாதம் பற்றிய செய்திகளை உள்ளடக்கியவை. உபதேசம் முப்பது, மந்திரம் முந்நூறு, தமிழ் மூவாயிரம் என்னும் நூற்களை இயற்றியுள்ளார். காவியம் 8000, சிற்ப நூல் 1000, ஜோதிடம் 300, மாந்திரிகம் 600, கல்லியம் 1000, கருக்கிடை 600, வைத்திய சுருக்கம் 200, சூக்கும ஞானம் 100, பெருங்காவியம்1500, தீட்சை விதி 100, கோர்வை விதி 16, யோக ஞான நூல் 16, விதி நூல் 24, ஆறாதாரம் 64, திருமந்திரம் 3000 போன்ற நூல்கள் திருமூலர் நமக்களித்த பொக்கிஷங்கள். அட்டமா சித்திகளில் வல்லவர்.


இவர் பொதிகை மலையில் இருந்து அகத்தியரைக் காண விரும்பிக் கைலாயத்திலிருந்து புறப்பட்டதாகவும், வழியில் பல சிவத்தலங்களைத்
தரிசித்து காவிரியாற்றில் நீராடி, திருவாடுதுறை இறைவனை வழிபடப் போன போது, வழியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த மூலன், பாம்பு
கடித்து இறந்து போகவே, அம்மாடுகள் மூலனை சுற்றி நிற்பதைக் கண்ட திருமூலர் நாயனார், மனமிரங்கி கூடுவிட்டுக் கூடு பாய்ந்து
அப்பசுக்களின் துயரை நீக்க எண்ணினார். தம் உடலை ஒருபுறம் கிடத்தி மூலனின் உடலினுள் புகுந்து, உயிர் பெற்று எழுந்தவராய், பசுக்களை வீடு நோக்கி ஓட்டிச் சென்றார். அவரை மூலனின் மனைவி தன் கணவன் என்று எண்ணித் தொட முயன்றாள். இவர் தள்ளி நின்று
“என்னைத் தொடுவது நீதியல்ல” என்று கூறினார்.மூலனின் மனைவி அவ்வூர் நீதிமானிகளிடம் முறையிட்டு வழக்கு தொடர்ந்தாள்.
நீதிமான்கள் மூலரைப் பெரிய சிவயோகி என்பதை அறிந்து கூறினார்கள். இது கேட்டு அவள் புலம்பி விலகிச் சென்றாள்.திரும்பி வந்த பார்த்த போது தம் சொந்த உடலைக் காணவில்லை. இதுவும் இறைவனது திருவிளையாடல் என உணர்ந்தார்.


எல்லாக் காலமும் ககன மார்க்கத்தில் சஞ்சரிக்கும் திருமூலர் நாயனாருக்கு ஒரு சமயம் காற்று மண்டலத்தில் மனதை நெகிழ வைக்கும் அழுகுரலும், அதில் இனம் புரியாத உலுக்கும் சோகமும், சர்வ மனதினையும் அதிரவைக்கும்,அவல ஒலியும், எண்ணம் ஓட்டமும்கேட்டது.அழுகுரலும், ஒப்பாரியும் வந்த திசை நோக்கி தன் பார்வையை திரும்பி பார்த்தார். அழுகுரல் அரண்மனை அந்தப்புரத்திலிருந்து ஒலித்தது. மனிதர் கண்களுக்குப் புலப்படாத சூக்கும உடலோடு அரண்மனை சென்று பார்த்தார்.இராஜேந்திரபுரி மன்னன் வீரசேனன் அழகும், இளமையும் குன்றாத தோற்றமாய் மரணப் படுக்கையில் கிடந்தான். உயிர் பறிபோன மன்னன் அருகில் பரிதவிக்கும் பட்டத்து ராணி குணவதி நிலை குலைந்து கிடந்தாள்.அட்டமா சித்தி கைவரப்பெற்ற திருமூலர் நாயனார், ககனத்தில் பறந்து தமது
மலையிட இருப்பிடம் திரும்பினார் “குருராஜனே’’ என்று தமது அந்தரங்க சீடரை அழைத்தார்.


” குருராஜனே ! இளமையும் இல்லறமும் திடும்மென பறிபோக எவரும் இதயமும் பொறுக்க இயலாததுதான். திடும்மென இராஜேந்திரபுரி மன்னன் இறப்பு என்னுள்ளும் ஒரு சோகத்தில் அழுந்தியுள்ளது. பட்டத்து ராணி சோகம் கேட்கவா வேண்டும்! அவளால் எப்படி தாங்கிக்கொள்ள இயலும்? ஆகையால் நான் சிலகாலம் அந்த வீரசேனன் மன்னன் உடலுக்குள் பரகாயப் பிரவேசம் செய்து இந்த லெளகீக வாழ்க்கை வாழ விரும்புகிறேன். என்னுடைய பழைய உடலை இங்கு களைந்து விட்டுச் செல்கிறேன். நான் திரும்பி வரும் வரையிலும் குருராஜனே, நீதான்
பத்திரமாக பாதுகாத்து வரவேண்டும்.” “குருமகா முனிவெரே! தங்கள் கட்டளைப்படியே தங்களின் கல்ப தேகத்தினை நான் காத்து வருவேன்” என்றார் சீடர்.அதே கணத்தில் உயிரற்ற சடலத்தை சீடர் பத்திரமாய் மலைக் குகையில் வைத்தனர்.


திருமூலர் நாயனார் தமது கல்ப தேகத்தைக் களைந்த மறுகணத்தில் இறந்து கிடந்த மன்னன் வீரசேனன் உடலுக்குள் சர்ரென தீக்கொழுந்தாய் ஊடுருவியதும் திடுக்கிட்டு எழுந்தான்.தன்னுடைய உடம்பெல்லாம் பூமாலைகள் கனக்க ஒரு நிமிடம் தன்னைச் சுற்றிலும் பார்வையைச் சுழலவிட்ட மன்னன் விபரீதம் உணர்ந்தான்.“இதென்ன துர் அவலக் காட்சி.பூவும் மாலையும், தோரணமும் புகை மூட்டமுமாய் பிணம் போல்..., யார் என்னை இப்படி அலங்கரித்தது? என்று கோபக்கனல் பொங்கச் சீறினான்.மன்னன் உயிர்த்தெழுந்து விட்டான். அரண்மனையில்  உள்ள அனைவரும் நடப்பது கனவா நிஜமா என்று புரியாமல் வாயடைத்து நின்றனர். பட்டத்து ராணி இனம் புரியா மகிழ்ச்சியில் தன் கணவனைத் தொட்டுப்பார்த்து மகிழ்ந்தாள்.‘’வைத்தியரே ! நடப்பது உண்மையா.. இதென்ன அதிசயம். நாடி அறிந்த நீர் தரும் விளக்கம் என்ன ”? என்று மந்திரி வினவினார். “மந்திரியாரே! நான் அறிந்த நாடி சாத்திரம் பொய்யல்ல. மரணத்தின் தன்மையை மன்னனின் நாடி பேசியது.மூச்சின் வழி மரணத்தினை சோதித்தது போலவே, நாடித்துடிப்புகளையும் கணக்கிலெடுத்து மரணத்தை அறிவித்தேன்” என்றார் வைத்தியர்..


”மந்திரியாரே! பொறுமை காக்கவும். நாம் இறந்ததும் உண்மை, இப்போது உயிர் பிழைத்ததும் உண்மை. இன்று நான் நந்தவனம் சென்றபோது ஒரு அழகிய மலரை முகர்ந்தேன். அந்த மலரில் கொடிய கார்கோடன் விஷம் உமிழ்ந்து உள்ளது போலும்.அது தெரியாது நான் முகர்ந்ததும் மரணம் என்னை தழுவி விட்டது. பாவம் வைத்தியர் என்ன செய்வார் “ என்றார் மன்னன்.பட்டத்துராணி மெளன சாட்சியாய் யாவற்றையும் பார்த்துக்கொண்டு இருந்தாள்.திருமூல வீரசேன மன்னனிடம் அன்று முதல் அன்றாட நடவடிக்கை, அந்தப்புரச் செயல் யாவற்றிலும் நிறைய மாற்றமும் தென்பட்டது , புதிராக இருந்தது. அது மற்றவர்களுக்கு வேண்டுமானால் மிகச் சாதாரண செயலாக இருக்கலாம். ஆனால், இவள் மனைவியானவள். மன்னனின் உடலைப் பகிர்ந்து கொள்ள உரிமையானவள். அங்கு நிறைய மாற்றம், நெருடல். துல்லியமாய் மன்னனிடம் அந்த லெளகீக எண்ணமில்லை. மஞ்சன அலட்சியம் உணர்ந்தாள். திரி கால ஞானி உள்ளிருக்கும் போது பொங்கும் கருணையும்,பொறுமையும் வார்த்தைத் தெளிவும் வெளிப்பட்டது...., அந்த வேற்றுமையை அறிந்தாள்! அதனை மன்னனிடமே கேட்டாள்.

Imagesமந்திரப்பாடல்.jpg

இந்த நாட்டு மக்களைக் காட்டிலும், ஒரு படி மேலாக தங்களின் அந்தரங்கம் அறிவேன்.தங்களுக்குள் ஒரு ஊடகம் நிழலாடி வருவதை உணர்கிறேன்.என்னைத் தெளிவுப்படுத்த வேண்டும். தாங்கள்...., உண்மையில் யார்? “நெஞ்சத்து துடிப்புடன்,பரிதவிக்கும் விழிகளோடு திருமூல வீரசேன மன்னனைக் கேட்ட போது திணறிப்போனார். இனியும் மறைப்பது மனைவி என்ற உறவுக்குள் சாத்தியமில்லை என்பதைப் புரிந்துகொண்டார். “பெண்ணே, உண்மையை வெகு நாட்களுக்கு மறைக்கவியலாது. நான் இப்போது கூறும் இரகசியம் அறிந்து நீ அச்சப்பட வேண்டாம்.பட்டத்து ராணியான நீ அரசாங்கம் சம்பந்தப்பட்ட இரகசியங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு உனக்கு அதிகமாகவே உள்ளது. நிழலுக்குள் நிஜம் ஊடுருவியதைப் போல உன் கணவன் வீரசேனன் உடம்புக்குள் திருமூலர் எனும் சித்தராகிய நான் ஒளிந்திருக்கிறேன். இறந்து போன உன் கணவன் உடலை இயக்கும் சக்தியாக என்னுடைய ஆன்மா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நான் உன்னோடு இரண்டறக் கலப்பது குற்றம் என்று உணர்கிறாயா.. உன் கற்பு களங்கப்பட்டதாக் நினைக்கிறாயா” ? என்று அவளது விழிகளை ஊடுருவிப் பார்த்தார்.


“ இறந்து போன என் கணவன் இறந்தே போய்விட்டார் என்பது நிஜம். என்னை மீண்டும் தவிப்புக்கு உள்ளாக்கிவிட்டது ஒரு இளம் மனைவியின் தவிப்பை நிறைவு செய்ய எப்பேர்ப்பட்ட மகான் நீங்கள் மனம் ஒப்பி ஈடுப்பட்டிருக்கிறீகள். என்னையும் பற்றுகொண்டு ஒரு காப்பாக
இருப்பது குற்றமாகாது” என்றாள். மிக்க நன்றி பெண்ணே. இது போதும் எனக்கு. என் உறுத்தல் இன்றோடு நீங்கியது.என்றார் திருமூல வீரசேன மன்னர்.  ”சுவாமி!, தங்களையே எனது எல்லாமாக ஏற்றுகொண்ட எனக்கும் உமக்கும் நடுவே  இனியும் எந்த இரகசியமும்  இருக்கவேண்டாம். தாங்கள் செய்தது பரகாயப் பிரவேசம் தானே.அப்படியானால் தங்களது பழைய கல்ப தேகம் என்னவாயிற்று என்பதை என்னிடம் கூறுவதில் தங்களுக்குத் தயக்கமில்லையே?”என்றாள்.  “எனது கல்ப தேகம் மலைக்குகையில் பத்திரமாக உள்ளது. எமது பரம சீடன் குருராஜன் காவல்
காத்து இருக்கிறான்”என்றார் மன்னரான திருமூலர். 


“சுவாமி தாங்கள் இங்கு வந்து நீண்ட காலமாகிறது. உடலை எரித்திருப்பார்களா?””பட்டத்து ராணி இரகசியம் அறியும் ஆவலில் வார்த்தைகளைக் கொட்டினாள்”


”அவ்வளவு எளிதில் என் தேகத்தைச் சாதாரண நெருப்பால் தீண்ட இயலாது. வெடியுப்பும் குங்குலியம்,பொரி காராமு போட்டு, விராலி இலை போட்டு மூட்டி, அகில் கட்டைகளை அடுக்கி நெருப்பு மூட்டினால் தான் எனது கல்ப தேகம் தகனமாகும் தேவி....” என்று கூறி விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றார்.பட்டத்துராணி இப்போது கற்சிலையானாள். வீரசேனன் உருவுக்குள் தன் கணவன் இல்லை. சித்தம் போக்கு சிவன் போக்கு என்று எத்தனை நாட்கள் இந்த சரீரத்தில் இருப்பார். என்றாவது ஒருநாள் சித்தர் விடைபெற்றால் தான் ஒரு விதவை. மறுகணம் தனது சிற்றன்னையின் மகன் ஆட்சிக்கு வந்தால்..., நம் கதி என்ன ... என்று சிந்திக்க தொடங்கினாள். திருமூலரின் கல்ப தேகம் இருக்கும் வரை நமக்குப் பாதுகாப்பு இல்லை. என்றாவது ஒருநாள் வீரசேனனின் உடலை உதறிவிட்டு அந்தப் பழைய கல்ப தேகத்திற்குள் திருமூலர் திரும்பி
விடுவார். அவர் கூறிய சாஸ்திரப்படி எரித்து விட்டால், வீரசேனனின் உடம்பே அவருக்கு நிரந்தரமாகிவிடும்.


பட்டத்துராணி குணவதி பளிங்கர் இனத்து மலைவாசிகளை இரகசியமாக அழைத்து, ”நீங்கள் செய்யப்போகும் வேலை அரசாங்க வேலை. இராஜங்க வேலை. எச்சரிக்கையாகச் செயல் படவேண்டும்.மலைக்குகையிலுள்ள தேகத்தை எரித்துவிட்டு எனக்கு தகவல் கூறவும்” என்றாள்.அதன்படி பளிங்கர் கச்சிதமாக பணியை முடித்தனர்சித்தர்களுக்கும், யோகிகளுக்கும் காடு ஒரு நந்தவனம், ஒருநாள்   திருமூல வீரசேன மன்னன் காட்டுக்குள் சென்று கொண்டிருந்த போது தமது சீடன் குருராஜனை பார்த்து வியப்பு அடைந்தார்.இது சமயம் தனது குருவான திருமூலர் போகத்தில் திளைத்துவிட்டார் போலும் என நினைத்த குருராஜர் , திரும்பவும் நினைவூட்டி அழைத்து செல்லும்  நோக்கில் அரண்மனைக்குக் காட்டின் வழி சென்று கொண்டு இருந்த போது இந்த சந்திப்பு நிகழ்ந்தது. ’தங்களுக்கு நினைவூறுத்தி அழைத்துச் செல்லவே அடியேன் வந்துள்ளேன்’ என்றான் சீடன். “சித்தர் கடமை நினைவூட்டுவது சீடர் கடமை. மிக்க மகிழ்ச்சி குருராஜா.என்னுடைய கல்ப
தேகத்தை காப்பதை விட்டுவிட்டு இங்கு வந்துவிட்டாயே..., வா, முதலில் குகைக்குச் செல்வோம்”என்றார்.


இருவரும் விரைந்து குகைக்குச் சென்று பார்த்தபோது திருமூலரின் கற்ப தேகம் அங்கு இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.முக்காலமும் அறிந்த ஞானி திருமூலர் நடந்த நிகழ்வுகளை ஞான திருஷ்டியின் மூலம் அறிந்தார்.இதயத்தினை தியானம் செய்தால் மனம் பற்றிய அறிவும் தெளிவும் காணக்கிடைக்கும். மார்புப் பகுதியில் தலைகீழாகத்தொங்கும் தாமரை மொக்கு போல கிடக்கும் இதயத்தினை தியானம் செய்தால் பூர்வ வாசனை சித்திக்கும். மனம் தூய நிலையில் சாத்வீகமாக உள்ளவர்களுக்கே இந்நிலை கூடும். ராணி குணவதியின் துரோகம் நஞ்சின் ரசமாய் திருமூலர் இதயத்தில் இறங்கியது. ’’குருவே, பெண்ணின் துயர் துடைக்கப் போய் அவளது துரோகத்தை சம்பாதிக்க வேண்டியதாயிற்றே..’’என சீடன் கேட்க, குருவோ, ‘’என்ன செய்வது குருராஜனே! கடல் போல காமம்.இனி அவளை கரையேற்றுதல் பாவம். வேடம் களைந்தது; நான் போகிறேன். இனி என்னைத் தேடாதே’’என்று கால் போன போக்கில் நடந்தார்.


மனித வாழ்க்கையில் பசியும், தாகமும் இன்றியமையாத ஒன்று.இவ்விரண்டையும் தேடியே மனித உயிர் நாடுகிறது, நடுங்குகிறது. கபாலத்தின் உச்சியிலிருந்து அமுதம் வயிற்றுக்கு நேரடியாக சென்று சீரணமாகிறது. வயிற்று ஜராக்னியும் விழுந்து ஆவியாக விடுவதால் பசி, தாகம் உண்டாகிறது. திருமூலர் சித்தர் இதனை அறியாதவரா? கழுத்துப் பகுதியில் கண்ட கூபே எனும் உள்நாக்கின் அடியின் மனதை சம்யமம் செய்து
கபாலத்திலிருந்து சொட்டும் அமுத்தைக் கீழே போகாமல் நாக்கை வளைத்துத் தொண்டைக்குள் திருப்பி நுனியால் அமுதம் சொட்டும் துளையை அடைத்து விட்டால் நாட்கணக்கில் பசி, தாகம் உணராது கேவரி முத்திரையில் சமாதியில் ஆழ்ந்து விடலாம். இத்தருணத்தில் திருவானைக் காவலை சம்புகேசுரவன் என்னும் அந்தணன் தான் ஒரு சிவனின் அவதாரம் எனும் நினைப்பில் தனக்குத்தானே குருவென எண்ணி போக ஞான மார்ககங்களை பிராணாயாமம் முதலிய யோகங்களை தானாகவே செய்து வந்தான். சதுரகிரி மலையில் அதிகாலை மூச்சைக் கட்டுப்படுத்திக் கும்பகம் செய்த நிலையில் சரியான குருவின் கீழ் பயிற்சியில் இல்லாமையால் உயிர் பிரிந்து மரணத்தைத் தழுவினான். ’’இட்டும், தொட்டும், சுட்டிக்காட்டவும் ஒரு குரு தேவை.குரு இல்லா வித்தை பாழ்” என்பதை இதன் வழி அறியலாம்.


அப்போது அவ்வழியே கனகமார்கத்தில் சென்ற திருமூலர், சம்பு கேசுவரனின் உயிர் பிரிந்த சடலத்தைத் தொட்டுப் பார்த்தார்.உடலில் இலேசான சூடு இருந்தது.சற்று முன்தான் உயிர் பிரிந்திருக்க வேண்டும்.ஆயுள் என்பது உயிரானது தான் எடுத்த இந்த பஞ்ச பூத சரீரத்துள் நீங்காமல் இருக்கின்ற கால அளவாகும். பஞ்ச பூத உடல் வீழ்ச்சியடையும் போது சூக்கும உடலும் அதனை விட்டு நீங்குகிறது. இதுவே மரணமாகும்.வீரசேனனின் அரசரின் உடலை துறக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்பதை உணர்ந்தார். இறந்த உடம்பின் கூடுவிட்டுக் கூடு பாய்தலும், அதன் மூலம் காரியமாற்றுதலும், உடன் இருப்போர் உடம்புக்குள்ளே நுழைந்து அவரின் மனதை இயங்கவிடாமல் செய்து அவர் மூலம் தான் இயங்குதலும் ‘’பரகாய பிரவேச” வித்தையாகும்.மூச்சு எனும் உடலுடன் உள்ள பந்தத்தை கட்டுப்படுத்தி அத்தனை நாடிக்குள்ளும் ஓடும் பிராணனை இதய சூக்மன நாடிக்குள் ஒன்று கூட்டி நாடி சம்யமம் செய்தார் திருமூலர். உடலிருந்து தளர்ந்து விலகி எழுந்து சம்புகேகர அந்தணன் குறிப்பிட்ட நாடி வழியே புகுந்தார்‘’


தனது ஆன்மா சுகவாசம் செய்து இன்பம் துய்த்த சரீரம் மதிப்பு மிக்க அந்த சரீரத்தை அங்கு வான் அளவு வளர்ந்த மிகப்பெரிய விருக்ஷத்தின் நடுப்பாகத்தில் இருந்த ஒரு பொந்தில் வீரசேன மன்னனின் உடலை அதில் வைத்து இலை, தழைகளை போட்டு மூடினார். ”அரசனின் உடலை உன்னுள்ளே வைத்துப் போற்றுவதால் இன்று முதல் நீ அரசமரம் எனப் போற்றப்படுவாய்” என்று வாழ்த்திவிட்டு, சதுரகிரி மலையின் அடர்ந்த காட்டுப்பகுதியில் சென்று கடுந்தவம் புரிந்தார்.

“உடம்பின் முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுள்ளேயுறு பொருள் கண்டேன்
உடம்புள்ளே உத்தமன் கோயில் கொண்டேன் என்ற
உடம்பினை யானிருந்தோம்புகிறேன்...”

என்ற காலவரை தாண்டிய கவிதை திருமூலரீடமிருந்து வெளிப்பட்டது. அந்த கவிதையின் காந்த வெளிச்சத்தில் திருமந்திரம் கேட்டு ஆவலாய் பல்லாயிரக்கணக்கான சீடர்கள் திருமூலர் முன் கூடி வணங்கி நின்றனர்.


[[துணை உதவி குறிப்பு:”இந்திய சித்தர்கள்’’ - சித்தர் பாடல்கள்,ப்தினென் சித்தர்கள்]


Imagesதிருமந்திரம்.jpg

எழுதித் தயாரித்தது திரு சிங்கை கிருஷ்ணன்


--Geetha Sambasivam 13:08, 2 மார்ச் 2011 (UTC)





பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 2 மார்ச் 2011, 13:16 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 5,195 முறைகள் அணுகப்பட்டது.