சித்தர் வழியில் 17 கருவூர்ச் சித்தர் 2

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
Indexதவம்.jpg
“ஏ… தாசிப்பெண்ணே… இந்த இரத்தினப் பதக்கம் உன்னிடம் எப்படி வந்தது?.

’’எனக்கு ஒருசித்தர் கொடுத்தார்”

’’இது முழுப்பொய். இது பெருமாளுடைய இரத்தினப் பதக்கம். யாரும் அறியா வண்ணம் நீ திருடிவிட்டு பொய்யான நாடகம் ஆடுகிறாய்?

’ சித்தர் பெருமானே! இதென்ன எனக்கு சோதனை.’’ என்று தாசி நினைத்த மாத்திரத்தில் கருவூர் சித்தர் அங்கு வந்தார்.

‘’ இதோ இவர்தான் எனக்கு இந்த இரத்தினப் பதக்கம் அளித்தார்.” என்று கருவூர்ச் சித்தரை அடையாளம் காண்பித்தாள் தாசி


கோயில் அதிகாரிகள் இப்போது கருவூரார் பக்கம் திரும்பி அவரை ஏற இறங்கப் பார்த்தனர். “ உனக்கு எப்படி இந்த இரத்தினப் பதக்கம் கிடைத்தது? என்று அவரைக் கடுமையாக விசாரித்தனர்.“ அதோ அந்தப் பெருமாளிடமே கேட்டுக் கொள்ளுங்கள் “ என்று கருவூரார் ஆகாயத்தைக் காண்பிக்க ஆகாயத்தில் பெருமாள் தரிசனம் தந்து, “நாமே அந்த இரத்தினப் பதக்கத்தை அவருக்கு தந்தோம்” என்று கூறி மறைந்தார்


சிறந்த சிவ பக்தனாக இருந்த சோழ மன்னனுக்கு அப்போது ஒரு சங்கடம் ஏற்ப்படிருந்தது. அந்தச் சோழ மன்னன் கனவில் ஒருநாள் நடராஜ தரிசனம் கிடைத்தது. அந்த நாளிலிருந்து கனவில் தரிசனம் கண்ட நடராஜரைப் போன்றதொரு சிலையைப் பொன்னால் செய்து தர
வேண்டும் என்று சிற்பிகளை வரவழைத்து ஒரு தூலம் பொன்னை நிறுத்திக் கொடுத்தான்.  ஏனோ தெரியவில்லை சிலை செய்யும் பணியில் சிக்கல் ஒன்று முளைத்துக் கொண்டே  இருந்தது.பொன் வார்ப்பு நிலைத்து நிற்காது இருந்தது. அதனை கண்ட சிற்பி மனம் நொந்து
போய் இறைவனை வேண்டி நின்றனர். ”நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது நான் சொன்ன கெடு தேதிக்குள் நடராஜர் சிலை
தயாரித்திருக்க வேண்டும். இல்லை யெனில் எல்லோரையும் கழுவில் ஏற்றிவிடுவேன்’’ என்று மன்னன் ஏற்கனவே கட்டளையிட்டிருந்தான்.


அதன் காரணமாகவே சிற்பிகள் மனம் நடுங்கி புலம்பிக் கொண்டிருந்த போது அங்கே கருவூர் சித்தர் வந்து சேர்ந்தார். ”ஏன் இப்படி நெஞ்சம் பதைபதை நிற்கிறீர்கள்? உங்கள் கலக்கத்தை நான் போக்குகிறேன். நீங்கள் எல்லோரும் சற்று வெளியே சென்று இருங்கள்.நான் சிலையை வார்த்துத் தருகிறேன்.” என்று கருவூரார் சொன்னதும் யாவரும் வெளியே சென்றனர். கருவூரார் பொன்னை உருக்கி அதில் ஒரு துளி செந்தூரத்தைப் போட்டார். அதன் பிறகு அதனை அச்சில் வார்த்தார். அச்சிலிருந்து வார்த்து எடுக்கப்பட்ட நடராஜர் சிலையைக் கண்டு எல்லோரும் வியப்பெய்தினர்.சோழ மன்னன் செய்தியறிந்து ஓடோடி வந்து பார்த்தான்.தான் கனவில் கண்ட நடராஜர்
தரிசனத்தை அந்தச் சிலையின் ஒளியிலும் வார்ப்பிலும் கண்டு திகைத்துப் போனவன் முகம் கருத்துப் போனது.”நான் பத்தரை மாற்றுத் தங்கம் அல்லவா கொடுத்திருந்தேன். நீங்கள் அதனைத் திருடி எடுத்துக் கொண்டு செம்பால் சிலை செய்து விட்டிருக்கிறீகள்...., அப்படித்தானே?” என்று சிற்பிகளை சினம் கொண்டு பார்த்த போது அவர்கள் பயந்து நடுநடுங்கிப்போனார்கள்.


”அரசே! இந்த சிலையைச் செய்தது நாங்கள் இல்லை.இந்தக் கருவூரார்தான் செய்தார்” என்று அவரை சுட்டிக்காட்டினர். ‘அப்படியானால் அந்தக் கருவூராரைச் சிறையில் தள்ளுங்கள்’என்று சோழ மன்னன் ஆணையிட்டு சிறையில் தள்ளினான். திருமூலர் சோழ மன்னன் செய்த அபாண்டச் செயலினை கேள்வியுற்று அங்கு வந்து சேர்ந்தார். ” கருவூரார் பெருஞ்சித்தர். உனக்கு தங்கத்தின் மீதுள்ள ஆசையால் அவர் மீது வீண்பழி சுமத்தி விட்டாய். நீ கொடுத்த எடைக்குச் சமமாக வெள்ளியைக் கொண்டு வந்து உருக்கு’ என்று திருமூலர் கூறியதும் மன்னன் அவ்வாறே செய்தான். அப்போது உருக்கிய வெள்ளி மீது ஒரு துளி செந்தூரத்தைத் தூவப்  பத்தரை மாத்துத் தங்கமாக மாறியது. .‘’மன்னா நீ ஆசை என்ற பெரிய மாயையில் வாழ்கிறாய். ஆசை போய்விட்டால் உண்மையான பரவெளியை உணர்ந்து கொள்வாய். செல்வம் யோகியை வசப்படுத்த முடியாமையால் யோகிக்கு செல்வம் வசப்படுகிறது” என்று திருமூலர் உபசேதம் செய்தார்.


இதனால் கருவூரார் புகழ் பரவப் பரவ அவர் மீது பொறாமையும், பகைமையும் கொண்டோரின் எண்ணிக்கையும் ஏராளமாய்  முளைத்தது. வேதியர்கள் அவர் மீது எண்ணற்ற குற்றச்சாட்டுகளையும் புகார்களையும் மன்னனிடம் தொடர்ந்து உரைத்தனர். மன்னன் அறிவான் மகான் அவரென்று. எனவே புகார் பலன் தரவில்லை. மன்னன் அவரைத் தண்டிக்க எண்ணாததைப் புரிந்து கொண்ட வேதியர்கள் ஒருநாள் கருவூராரைக் கொல்வதற்கு ஆயுதங்களுடன் துரத்த,அவரோ ஓடிச்சென்று சிவலிங்கத்தைத் தழுவிக்கொள்ள சிவபெருமானுடன் ஜோதியில் கலந்தார். இவரின் கதை அபிதான சிந்தாமணி நூலில் காணப்படுகிறது.


இவர் பூஜை விதிமுறைகளையும் ஆதி பராசக்தியை வாலைப் பெண்ணாக முன் வைத்து அவளது மாயை முதலான கூறுகளைப் பல வடிவங்களாக்கி, அவளைச் சிறுபிள்ளைக் கன்னியாகவும், சித்தர்களின் மனவடக்கத்தையும் சோதிக்கும் சிவகாமி ரூபியாகவும்
விளையாட்டு வம்பியாகவும் சித்தரித்துக் காட்டி பூஜை செய்யும் விதியைப் பாடலாகப் பாடியுள்ளார். இவர் போகரிஷியின் மாணவர் என்றும் சொல்வர். பல வைத்திய நூல்களும் எழுதியுள்ளார்.


தெளிவுதனில் தெளிவுதரு மருளுங் காணும்
செணத்திலே சிவமயமுஞ் சேரத் தோணும்
வழியதனில் நல்லவழி ஞானம் கூடும்
மகத்தான் வேதகாந்தம் சித்தி காட்டும்.


கருவூர்ச்சித்தர் பல தல தரிசனம் செய்துள்ளார். ஒரு சமயம் இவர் திருநெல்வேலி சென்று நெல்லையப்பரையும் காந்திமதி அம்மையையும் தரிசித்துவிட்டு மானூரில் தங்கியிருந்தார். அப்போது இவருக்கு அப்பரும், அம்மையும் நடனக்காட்சியைக் காட்டி அருளியதாக நெல்லை தல புராணம் கூறுகிறது. அந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஆவணி மூலத்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.கருவூரார் திருவிசைப்பா பாடிய ஒன்பது பேர்களுள் ஒருவர். திருக்கோயில் வழிபாட்டிற்கென தனி மதிப்பு கொடுக்கும் வகையில் பத்துத் தலங்களின் சிவ மூர்த்தங்களைத் துதிக்கும் 103 பாடல்கள் இயற்றியுள்ளார் அவற்றுள் இராஜராஜேச்வரம் குறிப்பிடத்தக்கது.


உலகெலாந் தொழு வந்தெழு கதிர்பரிதி

ஒன்று நூறாயிரங் கோடி

அலகெலாம் பொதிந்த திருவிடம்பச்சோ

அங்ஙனே அழகிதோ வரணம்

பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்

பருவரை ஞாங்கர் வெந்திங்கள்

இலைகுலாம் பதணத் திஞ்சி வழ் தஞ்சை

இராசராசேச் சரத்திர்க்கே”



இவர் சித்த மருத்துவத்திற்கென நிறைய நூல்கள் இயற்றியுள்ளார். அவற்றுள்,

1. கருவூரார் வாதகாவியம்
2. கருவூரார் பலதிரட்டு
3. கருவூரார் அட்டகன்ம்ம் நூறு

4. கருவூரார் பூசா விதி

போன்றவை குறிப்பிடத்தக்கவை. கருவூர்த் தேவர்க்கெனத்  தஞ்சைப் பெரிய கோயிலின் மேல் பிரகாரத்தில் மத்தியில் தனி கோயில் உள்ளது. வியாழன் தோறும் இவரைத் தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் அவரின் மகிமையை இன்றும் நமக்கு உணர்த்துகிறது


Imageskarurar samadhi.jpg

[துணை உதவிக் குறிப்பு:”இந்திய சித்தர்கள்’’ - சித்தர் பாடல்கள்,பதினென் சித்தர்கள்]


எழுதித் தயாரித்தது திரு சிங்கை கிருஷ்ணன்


--Geetha Sambasivam 15:28, 16 மார்ச் 2011 (UTC)



பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 23 மார்ச் 2011, 05:05 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,646 முறைகள் அணுகப்பட்டது.