சித்தர் வழியில்! 10 ஆசைகள் அறுத்த பாக்கர்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பாக்கர் மிகச் சிறந்த சிவ பக்தராக இருந்தவர்.நடராஜப் பெருமானின் சிலம்புச் சத்தம் கேட்ட பிறகுதான் தியானத்தைக் கலைப்பார்.தினம் முறம் விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தினைக் கொண்டு வாழ்க்கை நடத்துபவர்.“அம்மா,இந்த முறத்துக்கான விலை ஒரு வெள்ளிப் பணம் இது இறைவன் வைத்த விலை.இதை விலை கொடுத்து உங்களால் வாங்க இயலாவிட்டால் இனமாக தருகிறேன்” என்று முதன்முதலாக அந்த ஊருக்குள் முறம் விற்பனைக்கு வந்த பாக்கர் கூவிச் சொன்னதைக் கேட்டு, அவர் பைத்தியக்காரரோ என்றுதான் அவ்வூர்மக்கள் முதலில் நினைத்தனர்.


ஆனால்,அவர் சொன்னதை நிரூபிக்கப்பதைப் போல் தான் கொண்டு வந்திருக்கும் பத்து முறங்களில் ஒரு முறம் நீங்கலாக ஒன்பது முறங்களை அவர்களுக்கு இனாமாகக் கொடுத்தபோது மிகவும் அதிசயித்துப் போனார்கள்.இருந்தபோதும் இப்படி கூவி விற்பது அவரது வாடிக்கையாக இருந்தது ஒரு வெள்ளிப் பணம் கொடுத்து யார் வாங்குவார்கள்? காலதேவதைதான் மனித உருவில் வந்து தினந்தோறும் எந்த பேரம்பேசாமல் பாக்கரிடம் ஒரு வெள்ளியைக் ஒரு முறத்தை வாங்கிச் செல்லும்.காலதேவதை கொடுக்கும் ஒரு வெள்ளி பணத்தை மனைவியிடம் கொடுப்பார்.கால் வெள்ளி பணத்தினை கொண்டு பாக்கரின் மனைவி மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தி வந்தாள்


கால் வெள்ளிக்கு முறம் செய்ய மூங்கில் வாங்குவார். எஞ்சிய அரை வெள்ளியை தெருவில் வீசி எறிந்து விடுவார்.மறுநாள் காலையில் வழக்கம் போல முறம் செய்து தெருவில் கூவி விற்பார். இல்லறத்தில் இருந்துக் கொண்டே தினமும் தியானத்தில் இருப்பார்.சிவபெருமானின் கால் சிலம்புச்சத்தம் கேட்ட பின்தான் தியானத்தை கலைப்பார். ஒருநாள் பாக்கரின் மனைவி, “ சுவாமி! என்னை மகிழ்ச்சிப் படுத்தக் கால் வெள்ளிபணம் போதும் என்றாலும், காலதேவதை கொடுத்த அரை வெள்ளிப் பணத்தைஏன் தினமும் வீசி எறிய வேண்டும்” என்று கேட்டாள்.


“தினமும் ஆசையைத் தூர வீசும் பயிற்சி என்று வைத்துக் கொள்ளேன். என்றாவது ஒருநாள்ஆசைக்கும், தேவைக்கும் வயப்பட்டு உன் பொருட்டோ, என் பொருட்டோ அந்த அரைவெள்ளிபணத்தை நான் எனக்கே வைத்து கொள்கிறேனா என்று காலதேவதை பரிசோதிக்கலாம்.இதோ என் முன்னால் இருப்பது என்ன என்று கூறு பெண்ணே,” என்று கேட்டார் பாக்கர்.


‘புகையிலையும் கஞ்சாச்செடியும்’


’இதற்கு மற்றொரு பெரும் உண்டு. புகையிலை பிரம்ம பத்திரம்,கஞ்சா கோரக்கர்  மூலிகை. இவையிரண்டும் அடங்காத ஆசையின் அடையாளங்கள். சித்தர்களின் சாப மூலிகைகள்”


”எனக்கு ஒன்றும் புரியவில்லையே சுவாமி, ”“ஆசையின்பாற்பட்டு பிரம்மமுனி, கோரக்கர் ஆகிய சித்தர்களால் சாபம் பெற்று தங்கள் சிவசக்தியை இழந்து விட்ட தேவகன்னிகைகள்” என்று கூறியபாக்கர்,அந்த சித்தர்களின் வரலாற்றை மனைவிக்குச் சொல்லானார்.

“இனபம் துய்க்க விழையும் இளமைக் காலத்தை யோக சாதனைகளுக்காக அர்ப்பணிக்க எண்ணம் பூண்டு இணை சேர்ந்த நண்பர்கள்தான் பிரம்ம முனியும் கோரக்கரும். துறவறம் கொண்டு அவர்கள் வரதமேடு என்னும் அடர்ந்த காட்டுக்குள் தவம் செய்ய, அங்கு சித்தர் பலரை கண்டு பல்வேறு சித்திகளைஅடைந்தனர். கோரக்கரும், பிரம்ம முனியும் இந்த உலகம் உய்வதற்கு வரங்களை நாம் பெறுவதற்குப் பாடுபடவேண்டும்.முனிவர்கள் செய்யும் யாகங்களை நாமும் செய்ய வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முனைந்தனர்.


மாசிமகம் பெளர்ணமி அன்று இரவு பத்துமணிக்கு மங்களகரமான நேரத்தில் யாகத்தை ஆரம்பித்துஅக்கினி வளர்த்து யாகத்தை முடித்து பூரணாஹூதி  கொடுக்கப்பட்டது. கோரக்கரும்,பிரம்மமுனியும் வளர்த்த யாகப்புகை வான மண்டலத்தை மறைத்தது. தெய்வம் செய்வதை மானுடர் செய்ய எண்ணியதன்காரணமாக செய்து கொண்டிருந்த யாகத்திலிருந்து சிவசக்தி கதிர்களில் இரண்டும் சிர்த்து வெளிவந்தன.இருள்மாயை, அருள்மாயை என்னும் அவை இரண்டும் பிரமாண்டமாக வளர்க்கப்பட்டிருந்த யாகத்தீயில் விழுந்த மறைந்தன.கோரக்கர் சாபத்தால் உருவான செடி கஞ்சா எனும் மூலிகையானது. பிரம்மமுனிவரால் சாபம் பெற்ற செடி பிரம்மபத்திரம் என்னும் புகையிலைச் செடியானது. பிரம்மமுனியும் கோரக்கரும் பெண்களுக்கு கொடுத்த சாபத்தின் காரணமாகத் தங்கள் தவ வலிமையை இழந்தார்கள்.


இதன் காரணமாக மனம் வாடிய நிலையிருந்த போது சிவபெருமான் அம்பிகையுடன் தோன்றினர். “முனிவர்களே! விதியின் பயனாக யாகம் நின்றது. எனினும் உங்களின் உழைப்பிற்கு பலன் உண்டு. அகாலத்தில் இறந்து போனவர்களைப் பிழைக்க வைக்கும் சக்தி உங்களுக்கு கிடைக்கும்.உங்கள் சாபத்தால் உண்டான இந்த இரு செடிகளும் கற்ப மூலிகைகளாகத் திகழும் என்று அருளினார்கள்.அன்று முதல் புகையிலையைப் பசுமையாகப் பறித்துத் தின்றும், கஞ்சா இலையைத் தண்ணீரில் ஈட்டு ஊற வைத்து நீரைக் குடித்தும் காயகல்பம் பெற்றனர்.


பாக்கர் கூறிய பிரம்மமுனி, கோரக்கர் சித்தர் மகிமையைக் கேட்ட அவரது மனைவி, “நம்மைப் போன்ற ஏழைகளுக்கு என்ன கொடுப்பினை இருக்கப் போகிறது.இந்த ஊர் முழுக்க பல வீட்டுப் பென்களுக்கும் இனாமாக முறம் கொடுத்து வந்திருக்கிறீகள். இப்போது நம் வீட்டில் நடக்கும் விஷேத்திற்குப் பாத்திரம் வேண்டி இருக்கிறது. யாரிடமாவது போய் வாங்கி வாருங்கள் பயன் படுத்தி வீட்டு திரும்பக் கொடுத்து விடலாம்” என்று கூறினாள் மனைவியின் கோரிக்கையை ஏற்று, ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பாத்திரங்களை கேட்டார் பாக்கர். முறம் விற்றுப் பிழைக்கும் பாக்கர் தங்களை விட கீழானவர்கள், மட்டமானவர்கள் என்ற எண்ணத்தில் அந்த வீட்டு பெண்கள் நல்ல பாத்திரங்கள் கொடுக்கத் தயங்கினர்.ஆனாலும் பாக்கர் தங்களுக்கு எப்போதும் இனமாக முறத்தை கொடுப்பவர் என்பதால் வீட்டில் உள்ள ஓட்டை, உடைசல் பாத்திரங்களைக் கொடுத்தனர். அந்த ஊரில் உள்ள பெண்களின் அன்பு உதட்டளவில் தான் என்பதும், மனத்தளவில் இல்லை என்பதை புரிந்து கொள்ள இந்த ஒரு சந்தர்ப்பம் ஏதுவாக அமைந்தது.


அதன்பின் மூன்று நாட்கள் கழித்து தான் வாங்கிய வந்த பாத்திரங்களை வாங்கிய வீட்டில் திரும்பக் கொடுத்தார். பாக்கர் திருப்பிக் கொடுத்த தங்களுடைய பாத்திரங்களில் இருந்த ஓட்டை உடைசல் எல்லாம சரி செய்யப்பட்டு புதுப்பாத்திரங்களாகவும், ஓவ்வொரு பாத்திரத்துடன் ஒரு சிறிய பாத்திரம் இருப்பதைக்கண்டு ஊரிலுள்ள அத்தனை பெண்களும் ஆச்சரியமும், ஆனந்தமும்அடைந்தனர். ’பாக்கர்..! எங்களுடைய பழைய பாத்திரங்களை எல்லாம் புதுப்பொலிவுடன் கொடுத்து உள்ளீரகள். ரொம்ப சந்தோஷம். ஆனால்,கூடவே நாங்கள் கொடுத்த பாத்திரத்துடன் சிறிய பாத்திரங்களும் உள்ளதே. அது எப்படி?’ என்று எல்லோரும் ஆவலாய் கேட்டனர்.


ஓ…, அதுவா, நீங்கள் கொடுத்த சமையல் பாத்திரங்கள் எல்லாம் பகலில் சமையலுக்கு மிகவும் உதவின. இரவில் அவை எல்லாம் குட்டி போட்டு விட்டன. அவை எல்லாம் எனக்கு சொந்தமில்லை. அவைகள் எல்லாம் உங்களுக்கு உரியவைதான்.” என்று கூறிவிட்டுப்  போய்விட்டார். பாக்கருக்குக் கொடுத்த பாத்திரங்கள் யாவும் குட்டி போட்ட கதை ஊர் முழுக்க பரவி, அதுவே பேச்சாக இருந்தது.திரும்பவும் ஒருநாள் பாக்கரின் வீட்டில் விசேஷம் வந்தது. பாத்திரங்களுக்காக அந்த ஊரிலுள்ள வீடுகளில் போய் அவர் கேட்டதும்  அந்தப் பெண்கள் இப்போது மிகவும் மகிழ்ச்சியுடன் வீட்டுக்குள் சென்று வீட்டிலுள்ள அனைத்து பாத்திரங்களையும் தங்கள் கணவர்மார்களுக்கு தெரியாமலேயே எடுத்துக் கொடுத்தனர். பாக்கர் பத்திரங்களை எல்லாம் வண்டியிலேற்றிக் கொண்டு போனவர்தான், போனவர்தான். திரும்ப வரவேயில்லை. இதனால் ஊர் மக்கள்எல்லோரும் பாக்கர் விட்டுக்கு படையெடுத்தனர்.


பாக்கர் விட்டில் அவரின் மனைவி மட்டுமே இருந்தாள். ‘பாக்கர் எங்கே” என்றுஅவளிடம் கேட்டனர். ‘அந்தக் கொடுமையை ஏன் கேட்கிறீர்கள்! உங்களிம் வாங்கிய பாத்திரங்கள் எல்லாம் திரும்பிக் கொடுக்கத்தான் நினைத்தார் என் கணவர். ஆனால், திடீரென்று பாத்திரங்களுக்கு எல்லாம் வியாதி வந்து இறந்து போய்விட்டன. என கணவர் வருத்தம் தாங்காது அழுது கதறினார். என்ன செய்வது,வேறு வழியின்றி இறந்துபோன எல்லா பாத்திரங்களையும் தகனம் செய்து விட்டார். நேற்றுதான் பால் தெளிப்பு கூட நடந்தது.இந்த கவலையிலேயே பைத்தியம் பிடித்து எங்கு போனாரோ, என்ன ஆனாரோ?நீங்கள்தான் எப்படியாவது என் கணவரை என்னிடம் சேர்ப்பிக்க வேண்டும்?’ என்று கண்ணீர் விட்டழுதாள் பாக்கர் மனைவி. இதனை கேட்ட ஊர்ப் பெண்கள்பாக்கர் மனைவி சொன்ன கதையைக் கேட்டு திடுக்கிட்டுப் போனார்கள்.


நல்லவன் போல் நடித்து நம் எல்லோரையும் ஏமாற்றி விட்டானே, இனியும் தங்கள் கணவன்மார்களுக்குத் தெரிவிக்காமல் இருக்ககூடாது என்று நடந்தஅனைத்தையும் கூறிவிட்டனர். தங்கள் மனைவிமார்களின் பைத்தியக்காரத்தனம்கேட்டு ஆத்திரம் கொண்டு மன்னனிடம் சென்று முறையிட்டனர்.திருவஞ்சைக் களத்தை தலைநகரமாகக் கொண்டு மலைநாட்டை ஆண்டு வந்த,சேரமான் பெருமான் அவர்கள் சொல்வதை பொறுமையாகக் கேட்டறிந்தார்மன்னன் சிறந்த சிவபக்தர். பாக்கரைப் பற்றி உண்மைகளை அவர் அறிவார்.இருப்பினும் மக்களைத் திருப்தி செய்ய விசாரணைக்கு உத்தரவிட்டார்.


மன்னனரின் பணியாட்கள் பாக்கரை சபைக்கு வந்தனர்.பாக்கர் உள்ளே நுழைந்ததும் அரசர் எழுந்து மானசீகமாக அவரை வணங்கினார்.‘பாக்கரே, உண்மை விபரம் என்ன என்று கூறுங்கள். பாத்திரங்கள் எல்லாம் கோபமாக இருக்கிறதே’ என்று சூசகமாகக் கேட்டார். மன்னர்.“அரச பெருமானே, இவ்வூர் மக்களிடம் முன்பு ஒரு தடவை பாத்திரம் வாங்கினேன். வாங்கிப் பாத்திரங்களை பத்திரமாக திரும்பக் கொடுத்தது உண்மையா, இல்லையா என்று கேளுங்கள்.அரசரும் ஊர் மக்கள் நோக்கி, “இது உண்மையா?” என்று கேட்டார்.“ஆம் அரசே! பாக்கர் முன்பு கொடுத்த பாத்திரங்களைத் திருப்பிக் கொடுத்தார்.கொடுத்த பாத்திரத்துடன் கூடுதலாகப் பாத்திரங்களையும் கொடுத்தார். என்னஇது என்று கேட்டதற்கு பாத்திரங்கள் போட்ட குட்டி இவை என்று கூறினார்.ஆனால்,நாங்கள் இரண்டாம் தடவையாக கொடுத்த பாத்திரங்கள் திரும்பக் கொடுக்கவே இல்லை.அவற்றை திருமபக் கேட்டபோது அந்தப் பாத்திரங்கள்எல்லாம் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டன என்று பொய் கூறுகிறார். பாக்கரின்ஏமாற்றுச் செயலை தண்டிக்க வேண்டியது மன்னர் பொறுப்பு” என்றனர்.


அதனை கேட்டுக் கொண்டு இருந்த மன்னன் பாக்கர் பக்கம் திரும்பினார்.“ அரசர் பெருமானே இவையெல்லாம் தகாத வார்த்தைகள்.மோச எண்ணம். பிறப்புத்தொகை அதனைத்துக்கும் இறப்புத்தொகை உண்டு. பிறந்தவை இறக்கும்.இறந்தவை பிறக்கும். இது உலகறிந்தானே. பாத்திரங்கள் அன்று குட்டி போட்டன.பிறப்பும் இறப்பும் இயற்கைதானே.பாத்திரங்கள் குட்டி போட்டதை நம்பிய மக்கள்இறந்து போனதை நம்ப மறுக்கிறனர்” என்றார் பாக்கர்.


பாக்கர் சொன்னதைக் கேட்ட மன்னருக்கு உண்மை விளங்கி சிரிப்பு வந்ததது.“பாக்கர்! சித்தர் பெருமானே! தங்களைப் போன்ற அனுபவபூர்வ சித்தர் பக்குவப்படாத இந்த அரைவேக்காட்டு மனிதர்களிடம் முற்றிலும் குறையில்லாத மனதை எதிர்பார்க்கலாமா?இந்தப் பேதைகளால் ஞானிகளைப் பின் தொடர இயலுமா?ஆகையால் தயவு செய்து தாங்கள் இவர்களுகெல்லாம் நல்லாசி வழங்க வேண்டும்” என்று பணிவுடன் பாக்கரைப் பார்த்து கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.


“ அழுக்குப் பாத்திரங்களை எல்லா நல்ல தூய்மையான பாத்திரங்களாக மாற்ற நினைத்தது என் தவறுதான்.” என்று…., பாத்திரங்களை ஞான திருஷ்டியால் வரவழைத்து கொடுத்துவிட்டு, யார் கண்ணிலும் படாமல் திடீரென்று மறைந்துவிட்டார் பாக்கர் !


எழுதித் தயாரித்தது திரு சிங்கை கிருஷ்ணன்


--Geetha Sambasivam 13:52, 2 மார்ச் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 2 மார்ச் 2011, 13:52 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 5,420 முறைகள் அணுகப்பட்டது.