சித்தர்களின் வழியில் அறிமுகம், முன்னுரை

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
Imagesசித்தன்.jpg

ரிஷி, சித்தர், முனிவர், ஞானி, மாதவர், யோகிகள் முதலிய சொற்கள் யாரைக் குறிக்கின்றன? அமானுஷ்ய ஆற்றல்களைப் பெற்ற அதிமனிதர்களை இச்சொற்கள் குறிக்கின்றன. தற்சமயத்துக்கு இச்சொற்களுக்குரியவர்களைப் பற்றி விவரிக்காமல், சித்தர்களைப் பற்றி மட்டுமே பார்க்கலாம். புலன்களை அடக்கி அகக்கருவிகளுள் ஒன்றாகிய ‘சித்தத்தைச்’ சிவப் பரம் பொருளிடம்  வைத்து மன ஓட்டத்தைத் தடுத்தவர்களே சித்தர்கள். சித்தர்களை  இங்கேயே சிவலோகம் தரிசித்தவர்கள் என்பர்.


திருமூலர் எட்டுவகை யோக நெறியில் பயின்று எண்வகை சித்திகளை அடையப் பெற்றவர். அவற்றை ‘அட்டமா சித்திகள்’ என்பர். இதனை உலக நன்மைக்கும் பொது மக்களின் மேன்மைக்கும் பயன் படுத்துவார்களே தவிர தங்களது சுய தேவைகளை நிறைவு செய்யவோ அல்லது தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளவோ முற்படமாட்டார்கள்.


மனித வாழ்வு நிலையற்ற ஒன்று. ஆயினும் இதனை நீண்டதாக ஆக்க வல்ல ‘ஊனினைச் சுருக்கி உள்ளொளி பெருக்கும்’ தன்மையினைக் கண்டு தெளிந்து போற்றுவார்கள் சித்தர்கள்.மனித யாக்கையில் வாழுகின்ற மாக்களை மனிதப் பண்பு மக்களாக மாற்றிய பின்னர் அவர்களுக்கு அமர நிலை தருதல் வேண்டும் என்ற பரந்த நோக்கம் கொண்டவர்களே சித்தர்கள்.இயற்கையோடு ஒன்றி வையத்தை வாழவைக்கும் குறிக்கோளே அவர்களுடையது.


சித்துக்களை அடைவதற்கு இறையருள் முக்கியமானது. பல சித்தர்கள் உபாசனைகளின் மூலம் சித்துக்களை அடைந்தார்கள்.இந்து சமயத்திலுள்ள சித்தர்கள் முக்கியமாக புவனேஸ்வரி, பாலா,வாராஹி போன்ற தெய்வங்களை வழிபட்டார்கள். பாலாவுக்கு சித்தேஸ்வரி, சித்தவித்யா, சித்தமாதா என்றெல்லாம் பெயர்கள் உண்டு.  அட்டமாசித்திகள் என்பவை அணிமா, மகிமா, லகுமா, கரிமா, பிராப்தி, பிராகாம்யம்,
ஈசத்துவம், வசித்துவம் ஆகியவற்றுள்  அடங்கும்


சித்தர் என்ற சொல்லுக்கு மூலம் எது என்பதில் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்கள் இருக்கின்றன. மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற அந்தக்கரணங்கள் வரிசையில் சித்தம் என்னும் சொல்லிலிருந்து தோன்றியது என்று சிலர் கருதுவர். எல்லாத் தத்துவங்களும் சித்தத்தின் சலனத்திலிருந்தே தோன்றுகின்றன. சுருங்கக்கூறின் பிராண வாயுவின் சலனத்தையும் பிராணனின் சலனத்தையும் பொருத்தது சித்தத்தின் சலனம். பிராணவாயுவின் அசைவுகூட சித்தத்தின் சலனம்தான் என்று கூறுவர்.ஆகவேதான் எத்தகைய சித்திகளுக்கும் யோகத்துக்கும் 'சிந்தையிலே தெளிந்திருப்பவன்; செகமெல்லாம் சிவமென்றே அறிந்தவன்; தத்துவத்தை உணர்ந்தவன்; இவன் சித்தன்', என்று சில சித்தர் பாடல்கள் கூறும். இன்னொரு அர்த்தமும் காண்பார்கள். 'சித்தி' என்றால் அடைவது என்று பொருள்.
Indexஆல்சித்தர்.jpg


'குறியான சிவயோகம் சித்தியாச்சு' போன்ற வரிகள் சித்தர் பாடல்களில். பெறற்கரிய பேறுதனைப் பெறுதல் சித்தி. அதனைக் கைவரப்பெற்றவர் சித்தர் என்பதும் ஒரு கருத்து. சத் சித் ஆனந்தம்' என்றவற்றில்'சித்'திலிருந்து சித்தர் என்ற சொல்லைப் பெற்று பொருள் காண்பார்கள் சிலர். சிவனுக்கே சித்தன் என்ற பெயரும் உண்டு. சிவனைச் சித்தனாகக் கண்டு சமயத்துக்கும் அப்பாற்பட்ட நிலையில் உணர்ந்த யோகிகள்தாம் சித்தர் என்றும் சொல்வார்கள். மொத்தத்தில் சிவயோக சித்தி கைகூடப்பெற்று, சிவானுபூதியைப் பெற்றவர்களையும் அட்டமாசித்தி போன்ற ஆற்றல்களைக் கைவரப் பெற்றவர்களையும் சித்தர்கள் என்பதே வழக்கம். இனி வரும் இழையில் ஒரு சில சித்தர்களின் அற்புதங்கள்,சமுதாயத்திற்கு அவர்கள் ஆற்றிய பணிகள் போன்ற சேதிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்


நன்றி, வணக்கம்


எழுதித் தயாரித்தது திரு சிங்கை கிருஷ்ணன்


--Geetha Sambasivam 08:38, 26 பெப்ரவரி 2011 (UTC)




பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 26 பெப்ரவரி 2011, 08:45 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,555 முறைகள் அணுகப்பட்டது.