கோவிலூர் ஆதீனப் பதிவுகள் 13

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
தத்துவராய சுவாமிகள் மடம், எறும்பூதூர்

தென் ஆர்க்காடு மாவட்டத்தில் விருத்தாசலத்திற்கும் சேத்தியாத் தோப்பிற்கும் இடையே உள்ள சிற்றூர் எறும்பூதூர்.   இது இப்போது இரும்பூர் என்று மக்கள் வழக்கில் குறிப்பிடப்படுகிறது.  எறும்பூர் என்றும் சொல்கிறார்கள்.

சிதம்பரத்திற்கு மேற்குத் திக்கில் உள்ள இவ்வூரில் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஶ்ரீ சொரூபானந்த சுவாமிகள், ஶ்ரீ தத்துவராய சுவாமிகள் என்ற பெயர்களைக் கொண்ட இரு பெரும் ஞானிகள் இருந்தனர். அவ்விருவருள் ஶ்ரீ சொரூபானந்த சுவாமிகளிடம் அநுக்கிரகம் பெற்று வடமொழி தென் மொழி இரண்டிலும் வல்லுநராய், சித்தராய், ஞானியாய் விளங்கி விதேக கைவல்யம் அடைந்தவர் ஶ்ரீ தத்துவராய ஞான தேசிக சுவாமிகள்.

தத்துவராய சுவாமிகள் ஈசுவர கீதை, பிரம கீதை என்னும் நூல்களை வடமொழியிலிருந்து தமிழில் செய்யுள் வடிவாய் இயற்றியும் குரு பக்தியின் மிகுதியினால் அடங்கன் முறை (தாலாட்டு முதலிய பதினெட்டுப் பிரபந்தம்) பாடு துறை என்னும் இரு நூல்களையும் இயற்றியுள்ளார்ர்.

சசிவன்ன போதம், அஞ்ஞவதைப் பரணி, மற்றும் சில வேதாந்த சாத்திரங்களையும், சித்தாந்த நூல்களையும் தத்துவராய சுவாமிகள் தாமாகவே இயற்றியுள்ளார்கள்.  பல நூல்களிலிருந்து பெருந்திரட்டு, குறுந்திரட்டு என்ற பெயர்களில் திரட்டு நூல்கள் இரண்டை உலகுக்கு வழங்கியுள்ளார்கள்.  இந்நூல்கள் முழுவதையும் படித்துப் பார்த்து இவற்றின் நயங்களைச் சுவைத்து மகிழ்ந்த சிதம்பரம் கோ.சித. மடாலயத்து அதிபர் ஶ்ரீ பொன்னம்பல ஞான தேசிகர், ஶ்ரீ தத்துவராய ஞான தேசிக சுவாமிகளின் அருமை பெருமைகளை நன்கு உணர்ந்தார்.  ஶ்ரீ தத்துவராய ஞான தேசிக சுவாமிகளின் சமாதிக் கோயிலின் முன் மண்டபம் பிரகார மண்டபம், பாவுக்கல் வரிக்கல் முதலியவற்றை வெள்ளாற்றில் அணை கட்டுவதற்கு அக்காலத்தில் ஆங்கிலேய அரசு எடுத்துக் கொண்டு போனபோது அதைப் பொன்னம்பல சுவாமிகள் ஓரளவு தடுத்து நிறுத்தினார்கள்.   சுவாமிகள் இவ்வாறு தடுக்கும்போது கருநாகம் இருந்து சீற ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அந்த முயற்சியை அந்த அளவில் கைவிட்டனர்.

பொன்னம்பல சுவாமிகளுக்கு, தத்துவ ராயரின் நூல்களில் ஈடுபாடு இருந்ததால் அவருடைய சமாதி எங்கு உள்ளது என வினவி, எறும்பூருக்குச் சென்று பார்த்தபோது மேற்கண்டவாறு சமாதிக்கோயில் அழிந்தும், அழிக்கப்பட்டும், இலைக்கள்ளி புதர்களுக்குள் மறைந்தும் இருப்பதைக் கண்டார்.

அதைத் திருப்பணி செய்ய முடிவு செய்தபோது உய்யக்கொண்டான் சிறுவயல் சுப்பிரமணியன் செட்டியார் என்பார் கண் நோய் வாய்ப்பட்டிருந்தார்.   மருத்துவம் செய்யாமலே பொன்னம்பல சுவாமிகள் அருளால் மேற்படி சுப்பிரமணியன் செட்டியார் மீண்டும் கண்ணொளி பெற்றார்.  அவர் பர்மாவுக்குச் சென்று தாமே பெரும் பொருள் ஈட்டி அதைப் பொன்னம்பல சுவாமிகளுக்கு அனுப்பினார். சுவாமிகள் இவ்வாறு செட்டியார் பர்மிய நாட்டிலிருந்து அனுப்பிய பணத்தைக் கொண்டு தத்துவராயருக்குக் கருங்கற் கோயில் கட்டி முடித்தார்.  கோயில் காரியங்கள் முட்டின்றி நடைபெறுவதற்காக, அவ்வூரில் விளை நிலங்களும் வாங்கினார்.  ஆடி மாதத்துச் சதய நட்சத்திரத்தில் தத்துவராயர் குரு பூசை சிறப்பாக நடைபெறுவதற்கு ஏற்பாடுகளையும் செய்தார்.

கர்ப்பக்கிரகம், விமானம், அர்த்த மண்டபம், நந்தி மண்டபம், பிராகார மண்டபம் ஆகியவற்றைக் கட்டி முடித்து ஶ்ரீ பொன்னம்பல சுவாமிகள் கி.பி. 1895 அளவில் ஶ்ரீ தத்துவராய ஞான தேசிக சுவாமிகளின் அதிஷ்டானக் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் செய்து வைத்தார்கள். அதன் பிறகு, கோயிலைக் கோவிலூர் ஆதீனத்தில் ஒப்படைத்தார்கள்.  அதிஷ்டானத்துக்கு அன்று முதல் நித்திய பூஜை, குரு பூஜை முதலியன கோவிலூர் ஆதீனத்தின் வாயிலாக நடைபெற்று வருகின்றன.

மேற்படி கோவிலில் விமானம், முன்மண்டபம், பிராகார மண்டபங்களில் சில பகுதிகள் ஆகியவை பழுது பட்டிருந்ததைச் சீர் செய்து சர்வதாரி ஆண்டு ஆனித் திங்கள் 11 ஆம் நாள் (24--6--1948) கோவிலூர் ஆதீனம் எட்டாவது குருமூர்த்தியான ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர ஞான தேசிகர் அருளாட்சியில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.

சிதம்பரம் கோ.சித. மடாலயத்தார் தத்துவராய சுவாமிகள் அருளிச் செய்த பாடுதுறை என்னும் அந்நூலை 1953இல் வெளியிட்டுள்ளார்கள்.  இந்நூலில் சுவாமிகளின் சரித்திரச் சுருக்கம்  உள்ளது.

கோவிலூர் ஆதீனம் ஒன்பதாவது குருமூர்த்திகளான ஶ்ரீலஶ்ரீ இராமநாத ஞான தேசிகர் அவர்களுடைய அருளாட்சியில் ஶ்ரீ தத்துவராய சுவாமிகளின் அதிஷ்டானம் நன் முறையில் பாதுகாக்கப் பெற்று குரு பூஜை முதலியன மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வந்தன.

இப்போது  கோவிலூர் மடாலயத்தின் நேரடி பார்வையில் உள்ளது.  சமீபத்தில் 2007 மே மாதம் 4 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

எறும்பூர் ஶ்ரீமத் தத்துவராய சுவாமிகள் திருக்கோவில் 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாலஸ்தாபனம் செய்யப் பெற்றுத் திருப்பணி தொடங்கப் பெற்றது.

கர்ப்பக் கிரஹத்தைத் தவிர மற்ற அர்த்த மண்டபம், மஹாமண்டபம், திருமதில் போன்ற எல்லாவற்றையும் முழுதுமாக இடித்துப்  புதிய கல் உத்திரங்கள், தூண்கள் செய்து முற்றும் புதிய கல் திருப்பணியாக ஏறக்குறைய 28 லட்சம் செலவில் இரண்டாண்டுக்கு மேல் திருப்பணி செய்து முடிக்கப் பெற்றது.  மேற்படி திருப்பணியை அனுபவம் மிக்க சிற்பக் கலாமணி பத்மஶ்ரீ முத்தையா ஸ்தபதிகளைக் கொண்டு மிக நேர்த்தியாகச் செய்யப் பெற்றுள்ளது.

2007 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதி ஆறுகால யாக சாலை பூஜைகளுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.  சிதம்பரம் நடராஜர் கோவில் தீக்ஷிதர்களால் கும்பாபிஷேஹம் நடத்தி வைக்கப்பட்டது.  வேதாந்த இலக்கியக் கருத்தரங்குகள் இன்னிசை நிகழ்ச்சிகளுடன் ஏறக்குறைய 6 லட்சம் செலவில் கும்பாபிஷேகம் செய்யப் பெற்றது.  மேற்படி கும்பாபிஷேஹம்  நம் குருமகா சந்நிதானம், ஜகத்குரு பூஜ்யஶ்ரீ தயானந்த சரஸ்வதி மற்றும் பல ஞானத் துறவிகள் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருவருளும் குருவருளும் பெற்றார்கள்.  தற்போது எறும்பூர் திருக்கோவிலுக்கு பக்தர்கள் வருவது மிக அதிகரித்துள்ளது.


--Geetha Sambasivam (பேச்சு) 08:49, 25 ஜனவரி 2014 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 25 ஜனவரி 2014, 08:49 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,680 முறைகள் அணுகப்பட்டது.