கோவிலூர் ஆதீன வரலாறு
இன்றைக்கு ஏறக்குறைய இருநூறு ஆண்டுகட்கு முன்னர் செட்டிமார் நாட்டின் திலகமெனத் திகழும் காரைக்குடி நகரத்தில் நகரத்தார்களின் தவப்பயனாக அவதரித்தவர், "கோவிலூர் ஆண்டவர்" எனக் குவலயம் போற்றும் ஶ்ரீ முக்திராமலிங்க ஞான தேசிகர். இவர் கருவிலே திருவுடையாராக இருந்தமையின் தமது பால பருவமான பதின்மூன்றாம் ஆண்டளவிலேயே சிக்கல் பொருள்வைத்த சேரியில் சென்று ஞானாசிரியரை அடைந்து, முறைப்படி குருமுகமாக ஞான நூல்களைக் கற்று, பதினாறு வயது பூர்த்தியாகு முன்னே ஞானானுபூதிச் செல்வராகப் பல அற்புதச் செயல்கள் நிகழ்த்தலானார்.. அக்காலம், "நாட்டுக் கோட்டை நகரத்தார்' என வழங்கும் தன வணிகப் பெருமக்கள் கடல் கடந்து சென்று தங்கள் வாணிபத்தை வளமுறப் பெருக்கிய காலமாகும்.
"திரை கடலோடியும் திரவியம்" சேர்ப்பதிலேயே கருத்தூன்றிய நகரத்தார் சமூகம், தேடிச் சென்று திருத்தலங்களில் திருப்பணிகள் செய்யவும், அறக்கட்டளைகள் அமைக்கவும், என்றும் அழியா வரலாற்றுப் புகழ் மிகுந்து வளமுடன் வாழவும் வழி வகுத்த சிறப்பு, ஶ்ரீ சற்குரு முத்துராமலிங்க ஞான தேசிகருக்கு உண்டு.
ஶ்ரீ முக்திராமலிங்க ஞான வள்ளல் காரைக்குடியை அடுத்த கோவிலூரில் திருக்கோவில் கொண்டு விளங்கும் அம்பிகை திருநெல்லையிடம் ஈடுபாடு கொண்டிருந்து அடிக்கடி அம்பிகையின் அருட்காட்சி காணப்பெறும் பெரும்பேறு அவர் பெற்றிருந்தார். அம்பிகை அருள் பாலித்த வண்ணம் ஆலயத்தை நகரத்தார்களின் உதவி கொண்டு பெரும் அளவில் கலைத் திறன் பொதிந்த கருங்கல் திருப்பணியாக்கச் செய்யத் திருவுளம் கொண்டார்.
ஞானப் பேரொளியாக விளங்கும் சற்குரு முக்திராமலிங்க வள்ளலின் அருட்செயல்கள் நாடெங்கிலும் பரவலாயிற்று. பூர்வ ஜன்ம புண்ணிய வசத்தால் ஞானவேட்கை மிக்க நல்லறிஞர் பலரும் நாடி வந்து, ஞான நூல் கற்பாராயினர். தம்மைச் சரணாக வந்தடைந்த பக்குவர்கட்கு, "அஞ்சலென்ன அபயம் கொடுத்தருளி' பரமார்த்திகப் பேருண்மைகளைப் பலவாறாகத் தெளிய உணர்த்திப் பரமானந்தப் பேற்றை அருள் புரிந்தார் சற்குரு முத்துராமலிங்கர்..
நாளுக்கு நாள் பெருகி வரும் ஜாதி, இன வேறுபாடற்ற அடியார் குழாம் உணவுக்கும் உடைக்கும் இருக்கைக்கும் அலைந்து திரியாமல் அவர்கள் ஓரிடத்தில் தங்கி அமைதியாகத் தத்துவ விசாரம் செய்யவும், ஜபம், தபம், தியானம் முதலான ஆத்ம சாதனைகள் செய்து வரவும், திருமடம் ஒன்று அமைக்கத் திருவுளம் கொண்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்த வேளையில் அம்பிகை திருநெல்லையே காட்சி தந்து அருள் பிரசாதம் வழங்கியருளினாள்.
வடமொழியில் உள்ள வேதாந்த சித்தாந்த உண்மைகளை வடமொழிப் பயிற்சியில்லாத தமிழ்ப் பெருமக்களும் உணர்ந்து, உய்யும் நெறி நிற்கும் வகையில் தமிழில் "நாநாஜீவ வாதக் கட்டளை" தொடங்கி, "ஞான வாசிட்டம்" ஈறான பதினாறு நூல்கள் கிரமப் பாடமாக வகுத்தது, கோவிலூர் திருமடாலயத்தின் சிறப்பான பணியாகும்.
ஞானப் பேரொளியாக விளங்கிய ஶ்ரீ ஆண்டவரை அடைக்கலமாக அடைந்து குருபரன் குற்றேவல் செய்து ஞான அநுபூதி பெற்ற அடியார்கள் அனந்தம். அவர்களில் பலர் ஆங்காங்கு தமக்குற்ற தலங்களில் திருமடம் அமைத்துக் கொண்டு கோவிலூர் மரபினை விளங்கச் செய்து வருகின்றனர். கோவிலூர் மரபின் வழிவழியாக அமைந்துள்ள திருமடங்கள் தற்போது தமிழகத்திலும் அண்டை மாநிலங்களிலும் சுமார் 100-க்கு மேல் உள்ளன.
ஶ்ரீ ஆண்டவரின் வியத்தகு மாண்பினை,
கார்கொண்ட புயல் வண்ணன் மலரயன் வருந்தியும்
காணாத பெரு வாழ்வெனும்
கறைமிடற்றிறை ராச கட்கபர மேசுவரன்
கருணையுருவோ டமர்ந்து
கனவெழில்கொள் மணிமாட நிலவுசமி வனமெனக்
கழறுமுயர் பதியில் வாசன்
கனதனமறு சீடர் தம(து) அகவிருள் துரத்தவரு
கருதரிய ஞாநதபனன்
போர் கொண்ட காமக் குரோதரே பாதியம்
புகல் குற்றம் நீங்கு புனிதன்
பொறையறி(வு) அடக்கம் அருள் முதலநற் குணமொடு
பொருந்திவளர் உற்ற முதல்வன்
புவனம் மூன்றிலும் இவன் புகழ் சென்றிடற்கிடம்
போதா(து) எனச் சிறந்தோன்
பொருளிலர்(து) உயர்சுத்த வேதாந்த சாத்திரம்
போதம் மிக்கு உள் நிபுணன்
போர் கொண்ட நிர்மல சமாதி சாட்சாத்கஅர
பிரதாப மிகு சிரேஷ்டன்
பெருமை நிறை தருமுத்து ராமலிங்கக் குரு"
என்று சைவப் பெரியார், யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் பெருமான் போற்றிப் பாராட்டுகிறார்.
வடமொழி தெரியாதவர்கள் வேதாந்தம் படிப்பதற்கு வகை செய்த மடம் என்ற அளவில் கோவிலூர் ஆதீனம் வேதாந்த தத்துவ வரலாற்றில் தனி இடம் பெற்று மிளிர்கிறது. கலயத்தில் கஞ்சி ஏந்திக் கொண்டு கோவிலூருக்கு வந்து மாணாக்கர் பலர் வேதாந்தம் படித்தனர் என்பதிலிருந்து படித்தவர்களுடைய ஆர்வமும் படிப்பித்தவர்களுடைய தனிச் சிறப்பும் புலனாகும். இந்த ஆதீனத்தில் பயின்ற மாணாக்கர் பட்டியல் இவ்வெளியீட்டில் கொடுக்கப் பெற்றிருக்கிறது. இதை ஊன்றி ஆராய்ந்தால், ஆண்டவர் முக்திராமலிங்க ஞான தேசிகர் கோவிலூரில் வேதாந்தப் பல்கலைக் கழகம் ஒன்றை நிறுவியுள்ளார் என்ற உண்மை உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிய வரும். கோவிலூர் மண்டலி என்று கூறிக்கொண்டு துறவிகள் வடநாட்டு யாத்திரை சென்று, மரியாதையுடன் எங்கும் வரவேற்கப்படுவது மரபு.