கோவிலூர் ஆதீனமும் நகரத்தார் கடமையும்
மிகத் தொன்மையான காலத்திலிருந்தே நகரத்தார்கள் ஞான மார்க்கத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். பட்டினத்தடிகள் , காரைக்கால் அம்மையார் ஆகியோரது வாழ்க்கை வரலாறுகள் இவ்வகையில் நமக்குப் பெருமை தருவன.
இக்காலத்தில் இவ்வாறு ஞானமார்க்கத்தில் ஈடுபட்டு நகரத்தார்களை நல்வழிப்படுத்தும் பணியைச் செய்து வருவது கோவிலூர் ஆதீனம் ஆகும்.
இந்த ஆதீனம், இந்தியாவிலும் இலங்கையிலும் புகழ் பரப்பி இருக்கிறது. இதனுடைய குருபரம்பரை, புலமையும் சீலமும் செயல்திறனும் மிக்கது. இந்த ஆதீனத்தின் தலைமை இடம் செட்டிநாட்டின் நடுநாயகமான நகரான காரைக்குடிக்கு அருகே உள்ளது. கோவிலூர் என்னும் ஊர்ப்பெயரே கேட்கும் தொறும் இன்பம் பயப்பது.
இவ்வளவு புகழ்மிக்க ஓர் ஆதீனத்தைப் பற்றி நம்மவர் இன்னும் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்நோக்கத்தை நிறைவேற்றவே இந்த மலர் வெளியிடப் பெறுகிறது. நகரத்தார்கள் தங்களூடைய முன்னேற்றம் கருதியும், வாழ்க்கை முறையில் மாறுதல்கள் குறித்தும் முடிவு செய்ய 96 ஊர் நகரக் கூட்டங்களைக் கோவிலூரில் கூட்டுவது மரபு.
கோவிலூரில் ஆதீனகர்த்தர்களாகப் பட்டம் ஏற்று அருளாட்சி செலுத்திவரும் ஞானாசிரியர்கள், நம்மவர்க்கு நல்வழி காட்டி வந்திருக்கிறார்கள் இன்றைய நிலையும் இதுவேயாகும். இந்த அருளாளர்களின் அறிவுரைகளை மதித்தும், இப்பெரியவர்களுடைய வேண்டுகோள்களுக்குச் செவி சாய்த்தும் வருபவர்கள் எல்லா நலமும் பெற்றுச் சிறந்து செல்வாக்கோடும் வாழ்ந்து வருவது கண்கூடு. மாறுபட்டு நடந்து கொள்பவர் நிலை பற்றி எதையும் இங்கே குறிப்பிடத் தேவையில்லை.
தனிப்பட்ட அன்பர்களைப் பற்றி மேலே சொல்லியது நகரத்தார்கள் வாழும் ஊர்களுக்கும் பொருந்தும்.
ஒவ்வொரு நகரத்தாரும் கோவிலூர் ஆதீன கர்த்தரிடம் மரியாதை காட்டுவதும், அவர்களுடைய அறிவுரைக்குப் பணிந்து நடப்பதும் அவர்களுக்கு நன்மை தரும். இது போலவே ஒவ்வொரு ஊர் நகரத்தாரும் தேவையானபோது கோவிலூர் ஆதீனத்தோடு தொடர்பு கொள்வது அறிவுடைமை ஆகும். பிராமணர்கள் தங்கள் இனத்து நலன் கருதி ஆச்சாரியர்களாகவிருக்கும் சுவாமிகள் பலரிடத்திலும் எவ்வளவு ஈடுபாடு வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் சற்றுச் சிந்தித்துப் பார்ப்பது நலம்.
ஒன்பது நகர்க் கோவிலாரும் காரைக்குடி மேலமடத்தில் கூடி, கோவிலூர் ஆதீனத்துக்கு நன்கொடை எழுதும் பழக்கம் 1930 வரை இருந்து வந்தது. இதைப் புதுப்பிக்க வேண்டும்.
நகரத்தார்கள் தங்களுடைய ஊர்களில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளுக்கும், கும்பாபிஷேகம் முதலியவற்றிற்கும் கோவிலூர் ஆதீனகர்த்தர்களை அழைத்து, நகரக் கோயிலில் பூரண கும்பத்துடன் வரவேற்றுப் பாத காணிக்கை முதலியன வைத்து மரியாதை செய்ய வேண்டும். உலகியல் ஈடுபாடும் போலி நாகரிக முதிர்ச்சியும் நம்மை மயக்கியிருப்பதால் நாம் நமது பண்பாடுகளை நல்ல மரபுகளை அடியோடு மறந்துவிட்டோம்.
மேற்கண்டவாறு நாம் நடந்து கொள்வது நம் நன்மைக்காகவே ஆகும். ஞானச் செல்வர்களை மதிப்பதாலும் போற்றுவதாலும் அவர்கள் ஒரு பயனும் பெறப் போவதில்லை. கங்கை புனிதமாக இருப்பதால் தான் நாம் போய் அதில் ஆடுகிறோம்.
வயதான காலத்தில் ஓர் ஊன்றுகோல் தேவைப்படுகிறது. ஓர் ஊன்றுகோல் தனி ஒருவனுக்குச் செய்யும் உதவிகளை, அருளாளர்கள் சமுதாயம் முழுமைக்கும் செய்கிறார்கள்.
இந்தியாவின் பல பகுதிகளிலும் இன்று நம்மவர் உள்ளனர். கடல் கடந்த மலேசியா முதலிய நாடுகளிலேயே பிறந்து வளர்ந்து, அந்த நாட்டுக் குடிமக்களாக உரிமை பெற்றும் நகரத்தார் பலர் உள்ளனர். எனவே முன் போல நாம் செட்டி நாட்டில் மிகுதியான எண்ணிக்கையிலோ மிகுதியான நாட்களிலோ காணப்படுவதில்லை. ஒவ்வொருவரும் குடும்பத்தோடு அவரவர் வசதிப்படி இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவிலூர்க்குச் செல்வதை ஒரு கடமையாகக் கொள்ள வேண்டும். அவ்வாறு செல்லும்போது அங்குள்ள சிவன் கோயிலிலும்,கோவிலூர் ஆண்டவர் முதலியவர்களின் சமாதிக் கோயில்களிலும் வழிபடுவதும் ஆதீனகர்த்தரைக் கண்டு வணங்குவதும் நமது கடமையாகும்.
ஆதீனங்களுக்கு அளவு கடந்த சொத்தும் வருமானமும் இருப்பதாகவும், எனவே அவற்றிற்குப் பணம் தேவையில்லை என்றும் ஓர் எண்ணம் நிலவி வருகிறது. இது முற்றிலும் தவறு. செய்யப்படும் அறங்கட்கு நாம் தரும் நன்கொடை பெரிதும் உதவும். வளர்க்கப் பயன்படும்.
அரசின் சட்டங்களால் இனாம் நிலங்கள் ஒழிக்கப்பட்டு விட்டதால், கோவிலூர் ஆதீனம் தன் சொத்துக்களின் வருமானத்தை இழந்து விட்டது. மலேசியா, பர்மா முதலிய நாடுகளிலிருந்து நன்கொடையாகக் கோவிலூர் மடத்துக்குப் பணம் அனுப்பும் வழக்கமும் இப்போது நின்றுவிட்டது.
தற்போது மடத்திற்கென வருவாய் மிகக் குறைந்து விட்டது. நடந்து வரும் தர்மங்கள் யாவும் குருமகா சந்நிதானம் சீர் வளர் சீர் நாச்சியப்ப சுவாமிகளின் பொருள் உதவியால் தான் நடைபெற்று வருகின்றன. அந்த அறங்களில் நம் நகரத்தார் பங்கும் சேர வேண்டும். அறங்கள் வளர்ந்து பயன் யாவர்க்கும் கிட்ட நம்முடைய உதவியும் ஒத்துழைப்பும் மிக மிக அவசியம்.
நகரத்தார்கள் தாங்கள் வாழும் ஊர்களுக்கும் கோவிலுர் ஆதீன கர்த்தர்களை அழைத்து, அவர்களுடைய அருளுரைப்படி நடப்பது, அவர்களுக்கு நன்மை தரும். குறிப்பாக இளைஞர்கள் இந்த ஆதீனத்தைப் பற்றி எல்லா விபரங்களையும் தெரிந்து கொள்ளவும் இந்த ஆதீனத்துடன் தொடர்பு கொள்ளவும் வேண்டும்.
ஆன்மிக ஈடுபாடு உடையவர்கள் துறவு பூண விரும்பினால் அவர்களை ஒருவரும் தடுக்க வேண்டுவதில்லை. அறிவும் ஆற்றலும் பண்பும் சீலமும் உடைய நகரத்தார்கள் ஒரு சிலராவது துறவு நிலையை மேற்கொண்டால் தான் கோவிலூர் ஆதீனம் சீருடனும் சிறப்புடனும் வாழையடி வாழையாக வளர்ந்து வர வாய்ப்பு இருக்கும். கோவிலூரில் நகரத்தார்கள் மட்டுமே பட்டத்திற்கு வர உரிமையுடையவர்கள் என்பது நம் சிந்தனைக்கு உரியது.
புதிய வரலாறு படைப்போம்
கோவிலூருடன் நம் உறவைப் புதுப்பித்துக் கொள்வோம். ஆதீனகர்த்தர்களின் அருமையையும் பெருமையையும் போற்றி வாழ்த்துவோம். வாழ்த்துவது நாம் வாழ்வதற்கே.