கோவிலூர் ஆதீனப் பதிவுகள் பதிவு 11

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
யாழ்ப்பாணம் மகாவித்துவான் ஆறுமுக நாவலர் அவர்களும் கோவிலூர் மடமும்

கோவிலூர் மடத்தில் இரண்டாவது தலைவராகப் பட்டம் ஏற்று விளங்கியவர்கள் அருணாசல ஞான தேசிக சுவாமிகள்.  இவர்களைத் துறவு ஆண்டவர் என்ற பெயரால் குறிப்பிடுவது வழக்கம்.

அடைமொழி இன்றி, கோவில் என்ற சொல்லால் சுட்டப்படும் தலம் சிதம்பரம்.  அத்தலத்தில் துறவு ஆண்டவர் மிக்க ஈடுபாடு கொண்டு பல ஆண்டுகள் அங்குள்ள கேணி மடத்தில் தங்கியிருந்தார்கள்.  சின்னத் துறவு சுவாமிகளும் உடன் இருந்தார்கள்.

யாழ்ப்பாணம் மகாவித்துவான் ஆறுமுக நாவலர் (1822--1872) அப்போது சிதம்பரத்திற்குத் தல யாத்திரை வந்திருந்தார்.  நடராசப் பெருமான் வீதி உலா நிகழ்ந்தபோது கோவிலூர் சுவாமிகள் இருவரும் அடியார் குழுக்களுடன் நின்று நடராசப் பெருமானை வழிபட்டுக்கொண்டிருந்ததை ஆறுமுக நாவலர் கூர்ந்து கவனித்தார்.  அவர்களைத் தொடர்ந்து அவரும் கேணி மடத்துக்குச் சென்று அங்கு அவர்களை வணங்கினார்.

"தாம் யார்?" என்று துறவு சுவாமிகள் வினவ,

"யான் வசிப்பது யாழ்ப்பாணத்து நல்லூரில், என் பெயர் ஆறுமுகம்.  நடராசப் பெருமானை வழிபடும் பொருட்டு இங்கு வந்தேன் என்று ஆறுமுக நாவலர் மறுமொழி கூறினார்.

பிறகு இவரைப் பற்றி விவரமாக அறிந்து துறவு ஆண்டவர் தக்க மரியாதை செய்தார்கள்.  ஆறுமுக நாவலர் நாள் தோறும் கேணி மடத்திற்கு வந்து போகலாயினார். ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3 மணி முதல் கந்தபுராணத்தை எடுத்துச் சொல்ல ஏற்பாடாயிற்று.

ஒருநாள் துறவு சுவாமிகள், ஆறுமுகத்திடம் 'இன்று முதல் புராணங்களையே எடுத்துச் சொல்லி மக்களிடம் அதைப் பரவச் செய்ய வேண்டுமேயன்றிப் பாதிரியார்களுக்குப் பாடம் சொல்லலாகாது.' என்று ஆணையிட்டார்கள்.

அவ்வாறே பாதிரியார் தொடர்பை நிறுத்திப் புராணச் சொற்பொழிவுகளை நிகழ்த்துவதிலும், சைவ, ஆகம நூல்களை இயற்றுவதிலும் ஆறுமுக நாவலர் ஈடுபட்டார்.

--Geetha Sambasivam (பேச்சு) 09:58, 22 ஜனவரி 2014 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 22 ஜனவரி 2014, 10:00 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,140 முறைகள் அணுகப்பட்டது.