முனைவர் கா.கிருஷ்ணசாமி
குறுந்தொகை, ஆசிரியப்பாவினால் ஆக்கப்பட்டுள்ளது. பொருள்நெறி மரபு பற்றி அடிவரைகளால் சான்றோர் இவற்றைப் பகுத்துள்ளனர். இதனைப் பாடிய புலவர்கள் 205 பேர்.10 செய்யுள்களைப் பாடியவர்கள் இன்னார் என அறிய இயலவில்லை.அகம் பற்றிய கருத்துகளை உள்ளடக்கியது குறுந்தொகை.மனித வாழ்வியல் நெறிசார்ந்த மன உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடியவை.இப்பாடல்கள் தமிழ்ச் சமுதாய வரலாற்றைப் பதிவு செய்கின்றன.
"அகம்" என்பதற்கு,
"மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்
சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்". (தொல்.பொருள் - 1000)
என்று தொல்காப்பியம் கூறுகிறது.
மேலும் அதற்கு உரையாசிரியர்கள் விரிவாக விளக்கம் கூறுகின்றனர்.ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் பலனாக இவ்வாறு இருந்ததென கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்ப முறுவதொரு பொருளாதலின் அதனை "அகம்' என்றனர்.அத்தகைய உணர்ச்சி ததும்பும் பாடல் ஒன்றினைக் கூடலூர்க்கிழார் செவிலித்தாய் கூற்றாகக் கூறுகிறார்.
ஓர் அன்னை செல்லமாக வளர்க்கப்பட்ட தன் மகளை மணம் முடித்துத் தலைவனோடு அனுப்பி வைக்கிறாள்.நாள்கள் செல்லச்செல்ல தாய்க்கு மகளைப் பற்றிய ஏக்கமும், கவலையும் ஏற்படுகிறது.மகளைச் செல்லமாக வளர்த்தோமே! சமையல்கட்டுப் பக்கம் அவள் வந்ததேயில்லையே; எப்படிக் குடும்பம் நடத்துகிறாளோ?கணவனுடன் மகிழ்ச்சியாக இருக்கிறாளா? கணவனின் மனம் அறிந்து நடந்துகொள்கிறாளா?என்று தாய்க்கு மனம் கலங்குகிறது.ஒரு வழி போய்ப் பார்த்துவிட்டு வரலாமா என எண்ணுகிறாள்.தன் ஆசையைச் செவிலித்தாயிடம் (வளர்ப்புத்தாய்) கூறுகிறாள்.செவிலித்தாய் அன்னைக்கு ஆறுதல் கூறிவிட்டுத் தானே மகளைப் பார்க்கப் போகிறாள்.அவ்வாறு போய் வந்தவள், மகள் குடும்பம் நடத்தும் பாங்கையும், அடுக்களையில் நிகழும் செயல்பாடுகளையும் அன்னைக்குக் கூறி அவளை
மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறாள்.
"கட்டித் தயிரைப் பிசைந்த செங்காந்தள் மலரின் இதழ்போன்ற மெல்லிய விரல்களை நீரால் கழுவாமலேயே தோய்த்துத்
தூய்மையான இடையில் இருந்து நழுவுகின்ற ஆடையைச் சரி செய்து உடுத்துக்கொண்டு, குவளை மலர்போன்ற மையுண்ட கண்களிலே தாளிப்பாலுண்டான புகை நிறைந்து நிற்கும்படியாக, தானே சமைத்த இனிய புளிப்பை உடைய குழம்பை "இது சுவையாக இருக்கிறது" என்று தன் கணவன் உண்ணுகிறபடியால், ஒளி பொருந்திய நெற்றியை உடைய நம் மகளினது முகம் நுண்ணிதாக மகிழ்கின்றது",என்று மகள் குடும்பம் நடத்தும் பாங்கை செவிலித்தாய் எடுத்துக் கூறுகிறாள்.
இக்காட்சியை கூடலூர்கிழார் குறுந்தொகைப் பாடல் ஒன்றின் வாயிலாக ஓவியமாகத் தீட்டிக் காட்டுகிறார்.
"முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே! (குறு - 167)
தமிழரின் வாழ்வியல் பண்பின் கூறுகளாகக் காணக்கிடக்கும் சங்கப்பாடல்களைத் தமிழர் கற்று இன்புறுதலும் அதன் வழி வாழ்தலும் வேண்டும்.
நன்றி:- தினமணி